வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 23. ஆணையிட்டாள் அபலை )

பாகம் 2   , 23. ஆணையிட்டாள் அபலை

தோற்றுப்போய் ஓடி ஒளிந்த சுந்தரபாண்டியர், ஏற்கனவே சோழ நாட்டுக்குத் தெரிந்தும் தெரியாமலும் படை வீரர்களைப் பற்பல இடங்களில் திரட்டி வைத்திருந்தார். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்துப் போர் முனைக்குக்கொண்டு வந்தால்கூடத் தம்மால் வெற்றி பெற முடியாது என்று கண்ட பிறகு அவருக்குப் பதுங்குவதைத் தவிர வேறு வழி புலனாகவில்லை, படையினருக்குப் படியளக்கவேண்டும்; அவர்களைப் பராமரிக்க வேண்டும். ஆகவே எஞ்சியவர்களில் பாதிப்பேரை, அமைச்சர் கீர்த்தியுடன் ரோகணத்துக்கு அனுப்பிவிட்டார் அவர்.

ரோகணத்துக் கடற்கரை முழுவதும் சோழநாட்டு வீரர்கள் காவல் காத்து
நிற்பதென்பது நடவாத காரியம். இரவோடு இரவாகத் தோணிகளிலும்,
கட்டுமரங்களிலும், மரக்கலங்களிலுமாகப் பாண்டியப் பகுதிகளிலிருந்து சுந்தர
பாண்டியரின் ஆட்கள் சென்ற வண்ணம் இருந்தனர். இயற்கை வளம் நிறைந்த
ரோகணத்துக் காடுகளில் அவர்களுக்கு மறைவிடம் தந்தார் கீர்த்தி.

திடீர் திடீரென்று தாக்குதல்கள் நடைபெற்றன. ரோகணத்தைச் சேர்ந்த
மக்களிடையே உணர்ச்சியைக் கிளறத்தொடங்கிவிட்டார் மதியமைச்சர்.
சோழசாம்ராஜ்யத்தைப் பலவீனப்படுத்த வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன்
தம்மைச் சார்ந்தவர்களிடமே அவர் பழிவாங்க முனைந்து விட்டார்.

இவ்வளவையும் தூதுவரிடமிருந்து அறிந்துகொண்ட மாமன்னர், “வருகிற
தொல்லைகள் அனைத்தும் தனித்தனியே வராதுபோல் தோன்றுகிறது.
ஆனாலும் நாம் பீதியுற வேண்டியதில்லை’’ என்றார்.

பிறகு அவர் சற்றுநேரம் எதையோ ஆழ்ந்து சிந்தித்து வருத்தத்துடன்
சிரித்துவிட்டுக் கூறலானார்:

“களைகளைப் பிடுங்கப் பிடுங்க அவை திரும்பவும் முளைத்துக்
கொண்டுதான் இருக்கும். நம்முடைய வீரர்களின் வாட்களும் உறைக்குள்
உறங்கிப் போய்விடக்கூடாதல்லவா? இன்னும் எவ்வளவு இடர்கள் வந்தாலும்
நாம் போராடித்தான் தீரவேண்டும். நான்கு எல்லைகளிலும் ஒன்றாக நம்மைப்
பகைவர்கள் சூழ்ந்து கொண்டாலும் நாம் மனம் தளரக்கூடாது. இப்போதுதான்
வடக்கு எல்லைக்குப் படைதிரட்டி அனுப்பியிருக்கிறோம். அதற்குள் தெற்குத்
தீவு திரும்பவும் தலை தூக்கப் பார்க்கிறது; தூக்கிப் பார்க்கட்டும்.’’

“நம்முடைய இரக்க சுபாவமும் பெருந்தன்மையுமே நமக்குத் தீங்காத
முடிகின்றன’’ என்றார் பெரியவேளார்.

“இரக்கமும் பெருந்தன்மையும் இருக்கத்தான் வேண்டும், வேளார்
அவர்களே! களை பிடுங்கும் ஆத்திரத்தில் பயிர்களை அழித்துவிடக் கூடாது. பயிர்களுடன் மறைந்து கொள்ளும் களைகளுக்காகப்
பயிர்களையே அழித்துவிடலாமென்கிறீர்களா?’’

இப்படிக் கூறிவிட்டு, “ஒரே சமயத்தில் ஒன்பது போர் முனைகளுக்கும்
ஈடுகொடுக்க நம்மிடம் வலிமை இல்லையா என்ன? போர்க்களங்களில் தலை
அறுத்துக் குவிப்போம்! நஞ்சைக் களங்களில் கதிரடித்து நெல் குவிப்போம்!
அத்துடன் சோழபுரத்தையும் ஒன்றாக உருவாக்கிவிடுவோம்!’’ என்று
உறுதியோடு கூறிமுடித்தார் இராஜேந்திரர்.

பின்னர் வல்லவரையரும் மாமன்னரும் தனித்து ஆலோசனை
நடத்தினார்கள். சிறிதுகூடக் கலக்கமுறாதவர் போல அவரிடம்
நடக்கவேண்டியவை பற்றித் திட்டம் வகுத்துக் கொடுத்தார் சக்கரவர்த்தி.
“இதற்கெல்லாம் நானோ, தாங்களோ நேரில் போகவேண்டியதில்லை. நாம்
எந்த வேளையிலும் காஞ்சிக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும்.
இளங்கோவை அனுப்பி வைத்தல் போதும்’’ என்றார். அத்துடன் “இந்தச்
செய்தியை அவனிடம் ரகசியமாகக் கூறவேண்டுமென்பதில்லை; மகிந்தரும்
அவர் குமாரத்தியும் அருகில் இருக்கும்போதே கூறலாம்’’ என்று சொல்லிப்
புன்முறுவல் பூத்தார்.

வல்லவரையரும் சக்கரவர்த்தியின் கூற்றிலிருந்த உட்பொருளை
உணர்ந்து கொண்டார்.

கொடும்பாளூரிலிருந்து திரும்பிய இளங்கோ தன் அன்னையார்
கொடுத்து அனுப்பிய பழங்களையும் பண்டங்களையும் சுமந்து கொண்டு நேரே
மகாராணியாரைக் காண்பதற்கு அந்தப்புரத்துக்குள் சென்றான். ரோகிணியும்
தன் மாளிகைக்குச் செல்லாமல் அவனைப் பின்பற்றித் தன் தோழிகளைக்
காண வந்தாள்.

“பிறந்த வீட்டிலிருந்து தங்களுக்குச் சீர்கொண்டு வந்திருக்கிறோம்,
அம்மா’’ என்று குதித்துக்கொண்டே ஓடி மகாராணியிடம் தங்கள் வரவை
அறிவித்தாள் ரோகிணி. அடுத்தாற்போல் அருள்மொழி நங்கையையும்
அம்மங்கை தேவியையும் ஒருங்கே அணைத்துக் கொண்டு ஆனந்தக்
கூத்தாடத் தொடங்கி விட்டாள்.

அம்மங்கை தேவி வியப்போடு ரோகிணியின் முகத்தைக் கூர்ந்து
நோக்கலானாள். ரோகிணியின் கன்னங்கள் முன்னை விடச் செழுமை
கண்டிருந்தன; கண்களின் கருவிழிகளில் புத்தொளி மின்னியது! அதரங்கள்
செம்பவளச் சிவப்புற்றிருந்தன.

“தங்கையாரே! ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?’’ என்று கேட்டாள் ரோகிணி.

“கொடும்பாளூர் உங்கள் அழகுக்கு மெருகிட்டிருக்கிறது ரோகிணி!
விருந்தோம்பலில் கொடும்பாளூர்க்காரர்கள் மிகவும் பொல்லாதவர்கள்.
உங்களை மிக நன்றாகக் கவனித்திருக்கிறார்கள்’’ என்றாள் அம்மங்கை.

“உபசரிப்பை ஏற்றுக்கொள்வதில் நானும் தயங்கவில்லை’’ என்று
இளங்கோவை ஓரக்கண்களால் பார்த்துக் கொண்டே கூறினாள் ரோகிணி.

“அது நன்றாய்த் தெரிகிறது, உங்கள் முகத்தில்!’’ என்று கூறிய
அம்மங்கையை அருள்மொழி செல்லமாய்க் கடிந்து கொண்டாள்.

ரோகிணியோடு ஒன்றாய்த் தங்கியதால், அவளிடம் தோன்றிய புது
மாறுதல்களைக் காணாதிருந்து விட்டான் இளங்கோ. ஆனால் அம்மங்கையின்
குறுகுறுத்த விழிகளுக்கு அந்த இரகசியம் எப்படியோ புலப்பட்டுவிட்டது.
விருந்தோம்பலால் வந்த புது மலர்ச்சியா அது? இளங்கோவுக்கு திருமயில்
குன்றத்தின் மாலைப்பொழுதும் மூவர் கோயிலின் நாட்டிய இரவும் நினைவுக்கு
வந்தன. கொடும்பாளூரில் குலுங்கி நின்ற இளவேனில் இன்பம் ரோகிணியிடம்
குடி கொண்டது போலும்!

ரோகிணி தன்னை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விட்டாள் என்ற
வெற்றி உணர்ச்சி அவனுடைய நாடி நரம்புகள் ஒவ்வொன்றிலும் இன்பகீதம்
பாடிக்கொண்டு பரவியது. தன்னால்தான் ரோகிணியின் கண்களில்
புத்தொளியும் கன்னங்களில் செழுமையும், நெஞ்சில் குதூகல நிறைவும்
ஏற்பட்டிருக்கின்றனவா!

அத்தையார் வீரமாதேவி, அவனுடைய அன்னையாரைப் பற்றி இளங்கோவிடம் கேட்க வந்தவுடன், ரோகிணி அவர்களிடம் சொல்லி
விடை பெற்றுக்கொண்டு தன்னுடைய மாளிகைக்குப் பறந்தோடினாள்.

அருள்மொழி கொண்டு வந்து வைத்த பழத்தட்டிலிருந்து தேனில் ஊறிய
பலாச் சுளையை எடுத்துச் சுவைத்தான் இளங்கோ. கண்களால் வரவேற்புக்
கூறி, புன்னகையால் நலம் விசாரித்துடன் அருள்மொழி அப்போதைக்கு
நிறுத்திக் கொண்டாள்.

தன்னுடைய மாளிகைக்குச் சென்ற ரோகிணி, உள்ளே மகிந்தரும்
கந்துலனும் கொடும்பாளூரைப் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டு
ஒருகணம் கதவருகில் தயங்கி நின்றாள்.

“நானும் ஊர் முழுதும் பலமுறை வலம் வந்து பார்த்து விட்டேன்.
எனக்கு அங்கே ஒரு ரகசிய வாயிலும் தென்படவில்லை’’ என்றார் மகிந்தர்.

“நானும் அரண்மனைக்குள் சித்திரங்களைக் கண்டு வியக்கும்
பாவனையில் சுற்றிச் சுற்றி வந்துவிட்டேன், என்னாலும் எதையும் கண்டுபிடிக்க
முடியவில்லை’’ என்றான் கந்துலன்.

“விருந்துண்டோம்; வீண்பொழுது போக்கினோம்; அவ்வளவுதான்
மிச்சம்’’ என்று வருத்தப்பட்டார் மகிந்தர்.

“அருமையான விருந்து!’’ என்று தன்னை மறந்து கூறி விட்டான்
கந்துலன்.

“முட்டாள்! நாம் எதற்காக அங்கு தங்கினோம் என்பதையே மறந்து
விட்டுப் போகிறாயா?’’

“இல்லை அரசே! ஆனால் அவர்களுடைய கண் காணிப்பும்
பலமாகத்தானே இருந்தது? வருகிற விருந்தினர்கள் எளிதில்
கண்டுக்கொள்ளக்கூடிய வகையிலா அவர்கள் இரகசியப்பாதை
அமைத்திருப்பார்கள்? தவிரவும் உண்மையில் அப்படி ஏதும் அங்கு
இருக்கிறதோ, இல்லையோ?’’

“காளமுகனை நீ சாதாரணமானவன் என்று நினைத்து விடாதே!
இல்லாத ஒன்றைப் போய் நம்மிடம் சொல்லக் கூடியவன் அல்ல அவன்.’’

“அப்படியானால் அவனுக்கே அந்த வழியும் தெரிந்திருக்க வேண்டுமே!’’

“இருக்கிறது என்ற வரையிலும் அவனுக்குத்தெரியுமே தவிர, எங்கே
எப்படியிருக்கிறது என்ற விவரம் தெரியாது. அவனுக்குத் தெரிந்திருந்தால்
இதற்குள் பற்பல அற்புதங்கள் நடந்திருக்கும்.’’

காளமுகனைப் பற்றித் தன் தந்தையார் குறிப்பிட்டவுடன், ரோகிணிக்கு
அவன் தன்னையும் இளங்கோவையும் திருமயில் குன்றத்தில்
சுட்டெரித்துவிடுவது போல் நோக்கிய நோக்குத்தான் நினைவுக்கு வந்தது.
கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். கந்துலன் ஏதும்
அறியாதவன் போல் அடுத்த அறை வழியாகப் பின்புறம் சென்று மறைந்தான்.

“அப்பா! இப்போதே எனக்குத் தங்களிடமிருந்து ஓர் உண்மை
தெரிந்தாக வேண்டும். யார் அந்தக் காளமுகன்? யார் அந்தப் பயங்கர
மனிதன்? அவனுடைய உருவமே எனக்கு அச்சத்தைத் தருகிறது, அப்பா!’’

“மகளே! மெய்யாகவே அவன் காளமுகனாக இருந்திருந்தால்
உன்னைவிட எனக்குத்தான் அவன் மீது அதிக வெறுப்பேற்பட்டிருக்கும்.
புலித்தோல் போர்த்த அழகான இளைஞன் அவன். உன் தந்தையாரிடமும்
உன்னிடமும் உன் தம்பியிடமும் அவனுக்கு அளவற்ற அன்பு உண்டு.
நம்மிடம் கொண்ட அன்புக்காக எதையும் செய்யக்கூடிய திட சித்தம் படைத்த
வீரன் அவன்.’’

“அவன் யாரென்பதை என்னிடம் கூறமாட்டீர்களா?’’

“காலம் வரும்போது கட்டாயம் கூறத் தவறமாட்டேன் ரோகிணி!
அதற்குள் நீ அவசரப்பட வேண்டாம்.’’

தந்தையாரின் பேச்சு அவள் மனதைத் தொடவில்லை.

“பெற்ற மகளிடமே உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இனி என்றுமே
என்னிடம் அவனைப் பற்றிக் கூற வேண்டாம்’’ என்ற சொல்லிச் சரேலென்று
எழுந்திருக்கப் போனாள் ரோகிணி. மகிந்தர் பரிதாபமாக அவள் கரத்தைப்
பற்றித் தடுத்து நிறுத்தினார்.

“ரோகிணி! என்னிடமே எனக்கு நம்பிக்கை இல்லாத போது இனி நான்
யாரையம்மா நம்புவது? சில சமயங்களில் நான் எல்லோரையும்
நம்பிவிடுகிறேன். இன்னும் சில சமயங்களில் யாரையுமே நம்பத் தயங்குகிறேன்.
ரோகிணி! நீ என்னக் கை விட்டுவிட மாட்டாயே?’’ மகிந்தரின் குரல் கம்மிக்
கரகரத்தது. எதற்காக அவர் இப்படிப் பேசுகிறார் என்று ரோகிணிக்கு
விளங்காவிட்டாலும் ஏதோ வேதனையால் நொந்து போயிருக்கிறார் என்ற
அளவுக்கு அவள் புரிந்து கொண்டாள்.

“வேண்டாம் அப்பா! உங்களுடைய நன்மைக்காகவே சொல்கிறேன். இனி
நீங்கள் என்னிடம் எந்தச் செய்தியையுமே கூறவேண்டாம். நான் உங்களிடம்
கேட்டதற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என்னை விட்டு
விடுங்கள்.’’

அவளை அவர் விடாமல், “நீ இதைத் தெரிந்து கொள்ளத்தான்
வேண்டும். உட்கார், சொல்கிறேன்’’ என்று பிடிவாதம் பிடித்தார்.

“வேண்டாமப்பா?’’

“நான் பெற்ற மகள்தானே நீ? என் சொல்லுக்கு நீ செவி சாய்க்க
முடியுமா, முடியாதா?’’ என்று ஆத்திரத்தோடு அவள்மீது சீறி விழுந்தார்
மகிந்தர். ‘பெண்ணுக்குப் பெண்ணாக ஆணுக்கு ஆணாக உன்னைத்தான்
நான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நீதான் எனக்கு இனி உற்ற சமயங்களில்
கைகொடுத்து உதவவேண்டும். இப்போது அவன் யாரென்பதைத்
தெரிந்துகொள்.’’

தெரிந்து கொள்ளாத வரையில் அவர் விடமாட்டார் என்பதால்
பெட்டிப் பாம்பாக அடங்கிப்போய் அவரருகே அமர்ந்தாள் ரோகிணி.

“இந்தச் செய்தியை நீ யாரிடமும் வெளியிடுவதில்லை என்று எனக்கு
வாக்கு தரவேண்டும் மகளே!’’

“நீங்கள் கூறவும் வேண்டாம்; நான் வாக்குத் தரவும் வேண்டாம். நான்
இனி உங்கள் வழியிலிருந்தே விலகிக்கொள்கிறேன். என்னை விட்டு விடுங்கள்!’’ என்று கெஞ்சிக் கதறினாள்
ரோகிணி.

“முடியாது ரோகிணி, முடியாது’’ என்று கூறிவிட்டு, திடீரென்று இடி
போன்ற குரலில், “நீ ஆணையிட்டுத் தருகிறாயா, இல்லையா?’’ என்று தம்
வலக்கரத்தை அவள் முன்பாக நீட்டிக் கவிழ்ந்திருந்த அவள் முகத்தைப் பற்றி
மேலே உயர்த்தினார்.

நீட்டிய கரம் நடுங்கியது. அவர் அங்கமே பதறியது. அவர்
கண்களிலிருந்து மின்னற் கீற்றுகள் பாய்ந்து வந்து ரோகிணியின்
கருவிழிகளைக் குருடாக்கின.

தன்னையறியாது தன் தந்தையின் கரத்தைப் பற்றினாள் ரோகிணி.
மகிந்தர் தமது விழிக்கோணங்களில் திரண்டு நின்ற ஆனந்தக் கண்ணீரைத்
துடைத்துவிட்டுக் கொண்டார்.

அவள் காதருகே அவர் முகம் குனிந்தது. செய்தியைக் கேட்டவுடன்
செவியில் தீக்குழம்பு பாய்ந்தவள் போல் துடிதுடித்துப் போய், தன்
இருதயத்தை இறுகப் பற்றிக் கொண்டாள் ரோகிணி. “அவன் தான் போரில்
இறந்துவிட்டானே, அப்பா?’’

“மாண்டவன் மீண்டுவிடும் அதிசயங்கள் நடப்பதில்லையா?’’ என்று
கேட்டு நகைத்தார் மகிந்தர். “அவன் இறக்கவில்லையம்மா, இறக்கவில்லை;
இறந்துவிட்டதாக அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்!’’

ரோகிணி தன்னுடைய பரபரப்புக்காகவும், தன் தந்தையாரிடம்
ஆணையிட்டு விட்டதற்காகவும் தன்னைத் தானே நொந்துகொண்டாள்.
வெகுநேரம் அவள் அந்த ஆசனத்தைவிட்டு எழுந்திருக்கவில்லை.
அவளுடைய உதட்டில் கண்ணீர்க் கறையின் உவர்ப்புத் தட்டியது.

முகத்தைத் துடைத்துக் கொண்டு அவள் வெளியே எட்டிப் பார்த்த
போது இளங்கோவும் வல்லவரையரும் ஒன்றாக அந்த மாளிகையை நோக்கி
வந்துகொண்டிருந்தார்கள்.

தொடரும்


Comments