வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 , 24. மல்லனின் மறுபிறவி )

பாகம் 2   , 24. மல்லனின் மறுபிறவி


முன்னே மதுரைப் புதுமாளிகையிலும் பிறகு திருமயில் குன்றத்திலும்,
அடுத்தாற்போல் கொடும்பாளூர் மூவர் கோயிலிலும் ரோகிணியின் கண்களில்
பட்டு மறைந்த காளமுகன், இப்போது தன்னந்தனியாகத் தென்பாண்டி நாட்டுக்
காட்டு வழியில் தெற்கு நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

நெடுவழி நடந்த பின்னரும் அவனுடைய உடல் தளர்ச்சியடையவில்லை.
கால்கள் வலு குன்றவில்லை. கல்லையும் முள்ளையும் கடந்து காற்றென
விரைந்து சென்றான்.

அவனுடைய நடைஉடை பாவனைகளும், அவனுடைய துறவித்
தோற்றமும் அவனுக்கே ஒரு தனிச் செருக்கையும் அலட்சிய சுபாவத்தையும்
கொடுத்தன. இடையில் புலித்தோல், கழுத்தில் உருத்திராட்சம், கையில்
திரிசூலம். இடதுபுறக் கட்கத்தில் திருவோடு, கால்களில் பாதக்குறடு இவை
யாவும் ஒன்று சேர்ந்தால் அவனுடைய தோற்றம் பார்ப்பவர்களிடம் பய
பக்தியை எழுப்பக் கூடியதாய் இருக்கிறது.

பாதக் குறடுகளின் ஓசைக்குத் தக்கவாறு திரிசூலத்தில் இணைந்திருந்த
சதங்கைகள் தாளம் இசைத்தன. மலைச் சிகரங்களிலும் உயர்ந்த ஆசைக்
கனவுகளை நெஞ்சில் வளர்த்தவனாக அவன் வீறுநடை போட்டான்.

எதிரே தொலைதூரத்தில் பொதிகை மலைச் சிகரம் பச்சைப் பசேல்
என்று தோன்றி அவன் கண்களுக்குக் குளிர்ச்சி தந்தது! அந்த மலைக்கே
உரிய மூலிகைகள் நிறைந்த நறுமணக்காற்று அவனை நோக்கி வீசியது.
மனங்கொண்ட மட்டும் நன்றாக அந்தக் காற்றை இழுத்து சுவாசித்துக்
கொண்டே அவன் தனது நடையை மேலும் துரிதப்படுத்தினான்.

பாதை மிகவும் குறுகலான பாதை. திருடர்களும் கொள்ளைக்காரர்களும்
தங்களுடைய நடமாடத்துக்கெனத் தனியாக அமைத்துக்கொண்ட குறுக்கு
வழிப் பாதையாக அது தோன்றியதே தவிர, மற்றபடி அதில் ஜன சந்தடியே
இல்லை. திரிசூலத்தின் சதங்கை ஒலி கேட்டுக் காட்டுப் பறவைகள் குறுக்கும்
நெடுக்கும் பறந்தன. குள்ள நரிகள் வளைக்குள் பதுங்கின. அகத்தியன் இருந்து முன்னொரு காலத்தில் அருந்தமிழ் வளர்த்த பொதிகைமலை. அதற்குப் பின்னர் இளங்கோவின் முன்னோர்களான வேளிர்களின் ஆட்சியிலும் இருந்தது. பற்பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அது எத்தனை எத்தனையோ மாறுதல்களைக் கண்டுவிட்டது. மலைய மலை என்ற பெயரில் இப்போது இது சுந்தரபாண்டியருக்கும் அவருடைய ஆட்களுக்கும் மறைவிடம் தந்து கொண்டிருந்தது.

காட்டைக் கடந்து, மலையடிவாரத்தை அந்தக் காளமுகன் நெருங்கிக்
கொண்டிருந்தபோது திடீரென்று பாதையின் இருபுறங்களிலும் வளர்ந்து நின்ற
மரங்களின் மீதிருந்து இரண்டு வீரர்கள் கீழே குதித்தனர். ஓடோடியும் வந்து
தங்களது வேற்கம்புகளை குறுக்கே நிறுத்தி அந்தக் காளமுகனை
வழிமறித்தனர். ஒரு பேச்சும் பேசாது அவனைச் சடை முடியிலிருந்து பாதக்
குறடுவரை ஏற இறங்கப் பார்த்தனர்.

அலட்சியப் புன்னகையோடு அவர்களை அரைக்கண்களால்
நோக்கிக்கொண்டே, “சிவோஹம்! சிவோஹம்!’’ என்றுகூறி அவர்களை
ஆசீர்வதிக்கும் பாவனையில் தன்னுடைய இடக்கரத்தை உயர்த்திக்
காட்டினான் காளமுகன். கட்கத்தில் இடுக்கி வைக்கப்பட்டிருந்த திருவோடு
எதேச்சையாக நழுவி விழுவதுபோல் கீழே விழுந்தது. அதற்குள்ளிருந்து
தரையில் உருண்டோடிய தங்க இலச்சினையைக் குனிந்து எடுத்து உற்றுப்
பார்த்தான் வீரர்களில் ஒருவன்.

பிறகு, பணிவுடன் இலச்சினையை அதற்குள் போட்டு, தன் இரு
கரங்களாலும் பயபக்தியோடு காளமுகனிடம் நீட்டினான். மகர மீன்கள்
பொறித்த அந்தப் பாண்டிய இலச்சினை மற்றொரு வீரனின் கண்களுக்கும்
நன்றாகத் தெரிந்தது.

அதைப் பெற்று முன்போல் இடுக்கிக்கொண்டே, வீரனிடம் எதையோ
இரகசியமாகக் கேட்டான் காளமுகன். சிறிதுதூரம் இருவரும் காளமுகன்
பின்னே நடந்து சென்று மேடான ஒரு பாறையில் நின்றுகொண்டு,
மலையடிவாரத்தில் மரங்களால் சூழப் பெற்றிருந்த ஒரு திடலைச் சுட்டிக்
காட்டினார்கள்.

தொலைவில் நின்று பார்த்தபோது மரங்களாகவே தோன்றிய அந்தச்
சூழலுக்குள் நெருங்கிய பின்பு அழகானதொரு கூரை வீடு தென்பட்டது. சற்றுநேரம் நின்று நிதானித்து எதையோ நிச்சயம் செய்து கொண்டவுடன், அதன் வாசலுக்குச் சென்று திருவோட்டைக் கையில் எடுத்தான் காளமுகன்.

அவனுடைய பாதக் குறடுகளும் திரிசூலமும் எழுப்பிய ஒலி, அவனுக்கு
முன்பாக அந்த வீட்டுக்குள் எட்டிவிட்டதால், ஒரு வயதான பெண்மணி வந்து
கதவோரம் நின்று பார்த்துவிட்டு, அலறிப் புடைத்துக்கொண்டே உள்ளே
ஓடினாள். ஓடிப்போய் எதிரில் வந்து கொண்டிருந்த இளம்பெண்ணைக்
கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

அதற்குள் வீட்டின் வாசற்புறத்திலிருந்து எழுந்த காளமுகனின்
கரகரப்பான குரல், பயங்கரமாக அந்த வீட்டையே ஊடுருவியது.

“தாயே! திரிபுரசுந்தரி! ஜகன்மோகினி...’’

வீட்டுக்குள்ளிருந்த இளம்பெண் அந்த முதியவளிடமிருந்து தன்னை
மெல்ல விடுவித்துக்கொண்டு, “பசிக்கு உணவு தேடி வந்திருக்கும் துறவியைக்
கண்டு ஏன் அத்தை இப்படி அஞ்சுகிறீர்கள்!’’ என்று கேட்டாள்.

“திலகவதி! இந்த இடத்தில் நாம் இருப்பது நம்மவர்களைத் தவிர மற்ற
யாருக்குமே தெரியாதே! உன் தந்தையார் வெளியில் சென்றிருக்கும்போது,
நாம் யாவரையும் சுலபத்தில் நம்பிவிடக் கூடாது அம்மா!’’

பெரியவள் தடுத்ததையும் கேளாமல் உள்ளே சென்று
வெண்பொற்கலத்தில் அன்னமெடுத்துக்கொண்டு வாயிலுக்கு வந்தாள் திலகவதி.
காளமுகன் திருவோட்டை ஏந்தினான். அதில் அப்போது அந்த
இலச்சினையைக் காணோம்.

அன்னத்தை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டே துறவி, “பெண்ணே உன்
முகத்தைப் பார்த்தால் அதில் ஏதோ துன்பத்தின் சாயல் படிந்திருப்பதாகத்
தோன்றுகிறதே? நீ யாரையோ நினைத்துக்கொண்டு ஏங்குகிறாய். யாருடைய
வரவையோ எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாய். என் கூற்று மெய்தானா?’’

“இதை நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள்!’’ என்று அவனையே
திருப்பிக் கேட்பதுபோல் தலைதூக்கிப் பார்த்தாள் அவள். காளமுகனின் முகம்
பயத்தை ஊட்டுவதாக இருந்தாலும் அவன் கூறிய செய்தியும் அவன் சிரித்த
சிரிப்பும் அவள் அச்சத்தை அகற்றிவிட்டன. ஆனால் அவள் பேசவில்லை.

“பெண்ணே, உன்னுடைய அன்புக்குப் பாத்திரமான ஒருவன் உன்னைப்
பிரிந்து போய்விட்டான் என்று நீ நினைத்துக் கொண்டிருந்தாய். ஆனால் உன்
தந்தையார் அவன் திரும்பிவிட்டதாகவும் விரைவில் உன்னைத் தேடி
வரக்கூடும் என்றும் கூறியிருக்கிறார். என்றாலும் நீ அதை நம்பவில்லை.’’

“மெய்தான் அடிகளாரே!’’ என்று அவனைத் திண்ணையில் அமரச்
சொல்லிவிட்டுப் பிரமாதமாக உபசரிக்கத் தொடங்கி விட்டாள் திலகவதி.

“காரணமில்லாமல் அந்த நல்ல இளைஞன் மீது அப்படிச்
சந்தேகப்படலாமா? உன்னை மீண்டும் வந்து காண்பதற்காக அவன்
எத்தனையோ துன்பங்களைத் தாங்கியிருக்கிறான். எந்த நேரமும் உன்னுடைய
நினைவுதான் அவனுக்கு. அவனைப் பற்றி நீ தவறாக எண்ணலாமா?’’

திலகவதி உடனே தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டாள். தன்
முன்னால் அமர்ந்திருந்தவனின் பொய் வேடத்தை அவளால் அதன் பிறகும்
கண்டுகொள்ள முடியவில்லை. உருவத்தைப் போலவே குரலும் மாறியிருந்தது.

“அடிகளாரே! அவர் மேல் இனி எனக்குச் சிறிதும் கோபமில்லை.
எப்படியாவது அவர் திரும்பி வந்தால் போதும். தினமும் அவருக்காகக்
காத்திருக்கிறேன். எப்போது அவர் வருவார் என்பதை மட்டும்
சொல்லிவிடுங்கள்.’’

தன்னுடைய மாறுவேடத் திறமையில் அளவற்ற நம்பிக்கை
கொண்டவன்போல் புன்னகை பூத்தான் அந்த வேடதாரி. காதலிக்கும்
பெண்ணின் கண்களையே ஏமாற்றக்கூடிய திறமை தனக்கு இருப்பது கண்டு
அவன் மனம் பூரிப்படைந்தது. சடை முடிகளை மெல்ல அகற்றிக்கொண்டே, மிகவும் உருக்கமானகுரலில்,

“திலகவதி! உனக்கு என்னை இன்னும் தெரியவில்லையா?’’ என்று
கேட்டான் வீரமல்லன்.

திலகவதிக்கு ஒன்றுமே பேசத் தோன்றவில்லை. ஆனந்தக் கண்ணீர்
அருவிபோல் பொங்கியது. மகிழ்ச்சி நிறைவால் மயக்குற்றவள்போல் அவன்
காலடியில் சாய்ந்துவிட்டாள்.

நேரம் சென்றது. பிரிவுத்துயராலும், துயர் தீர்ந்த இன்பப் பெருக்காலும்
திலகவதி அவனிடம் உளறிக் கொட்டித் தன்னுடைய பொய்யன்பை அவளை
நம்பச் செய்தான்.

“முன்பு மதுரையில் உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு ஓடி
ஒளிந்தேனல்லவா? எப்படியோ சோழர்கள் என் இருப்பிடத்தைத்
தெரிந்துகொண்டு வந்து என்னைப் பிடித்துக் கொண்டார்கள். என்னுடைய
வெறுப்புக்குக் காரணம் கேட்டார்கள். அடுத்தாற்போல் நடந்ததையெல்லாம்
உன் தந்தையார் கூறியிருப்பார்.’’

“கூறினார், கூறினார்!’’ என்று குதூகலத்துடன் தொடங்கினாள் திலகவதி.

“சுந்தர பாண்டியரைத் துரத்தி வரும் பாவனையில் நீங்கள் அவரைப்
பின்பற்றி நெடுந்தூரம் வந்தீர்களாம். பிறகு அவர் திரும்பிக் கொண்டு உங்கள்
மீது பாய்ந்தபோது நீங்கள் மறைத்து வைத்திருந்த மகிந்தரின் ஓலையை
அவரிடம் நீட்டினீர்களாம். உடனே உங்களுக்கிருந்த அபாயத்தையும்
அதிலிருந்து தப்புவதற்கு வழியும் கூறினீர்களாம். செத்துக் கிடந்த ஒரு
பாண்டிய நாட்டு வீரனின் உடல் உங்களுக்குத் தக்க சமயத்தில் உதவி
செய்திருக்கிறது. ஆமாம் எப்படிப் பகைவர்கள் அவ்வளவு எளிதாக
ஏமாந்துவிட்டார்கள்?’’

“தலையில்லாத உடலைக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்வது
அவ்வளவு சிரமமில்லை, திலகவதி! மேலும் எனக்குக் கொடும்பாளூர் பெரிய
வேளாரின் சுபாவம் நன்றாகத் தெரியும். வீரமும் துணிவும் இருந்துவிட்டால்
போதுமா? பெரிய முன்கோபக்காரர். நான் அவருடைய கட்டளையை மீறி
வந்ததற்கு அவர் என்னையே கொன்று போட்டாலும் போட்டிருப்பார். அந்த முன் கோபத்தில் அவருடைய நிதானம் அவரிடமே இருந்திருக்காது. நேரமோ இருட்டு நேரம்!’’

“பிறகு அந்த உடலை என்ன செய்தார்களாம்?’’ என்று கேட்டாள் திலகவதி.

“நம்முடைய ஒற்றர்களைப் பின்னாலேயே அனுப்பி வைத்தார்
சுந்தரபாண்டியர். நான் நினைத்தபடியே காரியம் நடந்திருக்கிறது. என்னுடைய
உடைகளையும் இடுப்பில் சொருகியிருந்த வளை எறியையும் மட்டும்
பார்த்துவிட்டு, வைகை ஆற்றில் இழுத்துவிடச் சொல்லிவிட்டாராம் பெரிய
வேளார்.’’

“எப்படியோ நீங்கள் பத்திரமாகத் திரும்பி வந்து சேர்ந்தீர்களே.
அதுவே போதும் எனக்கு!’’ என்று கண்ணீர் உகுத்தாள் திலகவதி.

“திரும்பி வந்தால் போதுமா? எவ்வளவோ காரியங்கள் இன்னும்
இருக்கின்றனவே’’ என்று கூறி நீண்ட பெருமூச்சு விட்டான் வீரமல்லன்.

“அதனால் என்ன எல்லாக் காரியங்களும் இனி நாம் நினைப்பது
போலவே நடந்துவிடும்! நீங்கள் எதற்கும் அஞ்ச வேண்டாம்’’ என்று கூறிச்
சிரித்தாள் திலகவதி.

அவள் சிரிப்பையும் நம்பிக்கையையும் கண்டு வீரமல்லன் அஞ்சினான்.
‘நாம் நினைப்பது போலேவே’ என்று திலகவதி கூறினாலும், அவள்
நினைத்தது வேறு, அவன் நினைத்தது வேறல்லவா?

தொடரும்


Comments