வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,28. தேடி வந்தவன் )

பாகம் 2 ,28. தேடி வந்தவன் 


ரோகணத்துக்குப் புறப்படுவதற்கு முன்பு மாமன்னரிடம் கட்டளைகளைப்
பெற்றுக் கொள்வதற்காக அவருடைய அரண்மனைக் கூடத்துக்குச் சென்றான்
இளங்கோ. அப்போது சக்கரவர்த்தி தமது புதல்வி அருள்மொழியோடு
உரையாடிக் கொண்டிருந்தார். இளங்கோவைக் கண்டவுடன் அங்கிருந்து
எழுந்து செல்ல முற்பட்டாள் அருள்மொழி.

அவளையும் தம்மோடு இருக்கச் சொல்லிவிட்டு, இளங்கோவுக்கு ஓர்
ஆசனத்தைச் சுட்டிக் காட்டினார் இராஜேந்திரர். சிறிது நேரம் ஏதோ
யோசனை செய்தார். பிறகு பேசலானார்.

“இளங்கோ! உன்னுடன் ரோகணத்துக்கு இப்போது பெரும்படையை
அனுப்பி வைப்பது சாத்தியமில்லை. ஆயிரம் வீரர்களை மட்டிலும் நீ
அழைத்துச் சென்றால் போதும். அவர்களையும் கலவரம் நடக்கும் பகுதிகளில்
அங்கங்கே பிரித்து நிறுத்தி விடு.

“பாண்டியர்கள் பதுங்கியிருக்கும் மறைவிடங்களைத் தேடிக் கண்டு
பிடித்து அவர்களை நிர்மூலமாக்கி விட்டுத் திரும்பவேண்டும். நமது
படைநிறுத்தச் செய்தி கேட்டால் பதுங்கியவர்கள் வெளியில் வரமாட்டார்கள்.
அவர்களைக் கண்டு பிடிப்பதென்பது மிகவும் தொல்லை பிடித்த வேலை
தான். அதை விட்டால் நமக்கு வழியுமில்லை.’’

“சக்கரவர்த்திகளே! எனக்கென்னவோ இதை எளிதில் முடித்து விடலாம்
என்றே தோன்றுகிறது’’ என்றான் இளங்கோ.

“இளவரசர் எதையுமே எளிதாகத்தான் கருதுகிறார்’’ என்று குறுக்கிட்டுக்
கூறினாள் அருள்மொழி, “ரோகணத்து மலைக் காடுகள் காலங்காலமாக
நம்மை ஏமாற்றி வந்திருக்கின்றன. அவ்வளவு எளிதாக அவை நமக்குப்
பாண்டியர்களைக் காட்டிக்கொடுக்கப் போவதில்லை. மிகமிகக் கடுமையான
பொறுப்பு இது!’’

சக்கரவர்த்தி சிரித்துக்கொண்டே அருள்மொழியைப் பார்த்துக் கூறினார்: “எத்தனையோ வீரர்கள் இருக்கும்போது எதற்காக இளங்கோவைத்
தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்; கடுமையான கடமைகளை எளிதென்று
நினைத்துச் செய்பவன்தான் வீரருக்குள் வீரன். மறைத்து வைத்திருந்த மணி
முடியையே தேடிக் கண்டுபிடித்துக் கைப்பற்றி வந்தவனுக்கு இந்த வேலை
எம்மாத்திரம்?’’

அருகில் தன்னை வைத்துக்கொண்டே சக்கரவர்த்தி இவ்வளவு தூரம்
தன்னைப் புகழ்ந்துரைத்தது இளங்கோவுக்கு என்னவோ போலிருந்தது. நன்றிப்
பெருக்கால் நாத்தழுதழுக்க, “எல்லாம் தங்களது ஆசியின் துணையால் நன்கு
நிறைவேறிவிடும், சக்கரவர்த்திகளே!’’ என்றான்.

அடுத்தாற்போல் இராஜேந்திரர் “அருள்மொழி கூறியதும் உண்மைதான்,
இளங்கோ!’’ என்று தொடங்கினார். “நாட்டிலும் நகரத்திலும் நாம் போராடி
வெற்றிபெறுவது பெரிதல்ல. காடுகளுக்குள்ளேயும் மலைகளுக்கிடையேயும்
நாம் பகைவர்களைத் தேடித் திரியவேண்டும். எந்தச் சமயத்தில் எந்தப்
பக்கத்திலிருந்து தாக்கப்படுவோம் என்பது நமக்கே தெரியாது. மரத்துக்கு
மரம், மலைக்கு மலை மனிதர்கள் மறைந்திருந்தாலும் அதில் வியப்பில்லை.’’

அருள்மொழியின் கண்கள் கலங்கின. பின்புறம் திரும்பி யாருமறியாவண்ணம் அவற்றைத் துடைத்து விட்டுக் கொண்டாள் அவள்.

“சாதாரண ஒற்றர்களின் திறமை இதில் பலனளிக்காது. அமைச்சர்
கீர்த்தியின் நடமாட்டங்களைப் பற்றி ஓரளவு அறிந்தவர்களின் துணை உனக்கு
வேண்டும். மகிந்தர் தெரிந்து வைத்திருப்பார். அவரது குடும்பத்தாரும்
அறிந்திருக்ககூடும். ஆனால் வெளியிடமாட்டார்கள்’’ என்று கூறி, மேலே
ஒன்றும் சொல்லாமல் இளங்கோவின் முகத்தை உற்று நோக்கினார் மாமன்னர்.

அவன் முகத்தில் மாமன்னரின் கூர்மையான விழிகளுக்கு மட்டிலும்
புலப்படும் அளவுக்கு ஒளிபடர்ந்து மறைந்தது. அதை நன்றாகக் கவனித்துக்
கொண்டார் சக்கரவர்த்தி. “உன் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நீ வெற்றி பெறுவாய்’’ என்று கூறிமுடித்தார் அவர்.

மேலும் சில விவரங்களைச் சக்கரவர்த்தியிடம் கேட்டுக்கொண்டு,
கூடத்தைவிட்டுப் புறப்படுவதற்காக மெல்ல எழுந்தான் இளங்கோ. பணியாள்
ஒருவன் பரபரப்புடன் வந்து, “சக்கரவர்த்திகளே! வேங்கி நாட்டிலிருந்து
இளவரசர் வந்திருக்கிறார்’’ என்று மகிழ்ச்சியோடு செய்தியை அறிவித்தான்.

“யார் நரேந்திரனா!’’ என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டே
ஆசனத்தினின்று எழுந்தார் இராஜேந்திரர். வரவேற்பதற்காக வாயிற் பக்கம்
விரைந்து சென்றார். இளங்கோவும் அருள்மொழியும் அவரைப்
பின்பற்றினார்கள். எல்லோருக்குமே மகிழ்ச்சிக்குரிய செய்தி அது.

வணக்கம் கூறிவிட்டு, “மாமா’’ என்று உரிமையோடு மாமன்னரைத்
தழுவிக்கொண்டான் நரேந்திரன். மற்ற இருவரையும் பார்த்துப் புன்னகை
பூத்தான். பிறகு சக்கரவர்த்திகளும் அவனும் ஒன்றாக அமர்ந்து குடும்ப
நலன்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

“சிறிய குந்தவையும் விமலாதித்தரும் நலமாயிருக்கிறார்களா?’’ என்று
தமது தங்கையையும் மைத்துனரையும் பற்றி விசாரித்தார் சக்கரவர்த்தி.

அருள்மொழியும் அவனுடன் கலகலப்பாகப் பேசினாள். இளங்கோவும்
அவர்கள் பேச்சில் கலந்து கொண்டான். ஆனால் அருள்மொழியிடம் முகம்
கொடுத்துப் பேசிய அளவுக்கு அவன் இளங்கோவைப் பொருட்படுத்தியதாகத்
தெரியவில்லை.

ஆண்களில் அழகன் நரேந்திரன். வேங்கி நாட்டுக்கே இயல்பான
சந்தன நிறமும் அந்த மண்ணுக்கேற்ற உயரமும் உடல் வலிமையும்
பெற்றிருந்தான் அவன். அவனுடைய சொற்களில் மிடுக்கும் கண்களில்
செருக்கும் கலந்திருந்தன. இளங்கோவுக்கு எதிரில் அவன் சக்கரவர்த்தியிடம்
உறவு கொண்டாடிப் பழகிய விதம், ‘உன்னைவிட நான்தான் உரிமை
பெற்றவன்’ என்று இளங்கோவிடம் சொல்லாமல் சொல்லிக் காட்டியது
போலிருந்தது. “வடக்கே நிலைமை எப்படியிருக்கிறது?’’ என்று கேட்டார் மாமன்னர்.

“காஞ்சியிலிருந்து உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
வேங்கி நாட்டிலுள்ள கடைசி வீரன் வரையில் எல்லோரும் சோழ
சாம்ராஜ்யத்துக்காக உயிர் துறக்கச் சித்தமாயிருக்கிறார்கள்’’ என்று
பெருமையோடு கூறினான் நரேந்திரன்.

இராஜேந்திரர் அவனைத் தட்டிக் கொடுத்துவிட்டு இளங்கோவை
நோக்கிப் புன்னகை பூத்தார்.

“ரோகணத்துக்குப் புறப்படும் வேளையில் தம்பியாரைப் பார்க்க
முடிந்தது நல்லதொரு வாய்ப்புத்தான்’’ என்றான் இளங்கோ.

“ரோகணத்துக்கா?’’ என்று வியப்புடன் கேட்ட நரேந்திரன், “அங்குதான்
ஏற்கெனவே போய்க் கிடைக்கக்கூடிய எல்லாப் புகழையும் நீங்களே
திரட்டிக்கொண்டு வந்துவிட்டீர்களே! வேங்கி நாட்டுக்காரர்களுக்குச் சிறிதுகூட
வாய்ப்புக் கிடைக்காதபடி செய்து விட்டீர்களே?’’ என்று சிரித்துக்கொண்டே
கூறினான். அவனுடைய சிரிப்புக்குள்ளேயிருந்த மனப்புழுக்கத்தை
இளங்கோவால் உணராதிருக்க முடியவில்லை.

மாமன்னர் குறுக்கிட்டு, “கொடும்பாளூரும் வேங்கி நாடும் நமது
சாம்ராஜ்யத்தின் இரு கண்கள். தெற்கே இருப்பதால் ரோகணத்துப் பங்கை
இளங்கோ பெறுகிறான். வடக்கில் கிடைக்கப்போகும் புகழெல்லாம்
உனக்குத்தானே, நரேந்திரா?’’ என்று ஆறுதல் கூறினார்.

“என்ன இருந்தாலும் கொடும்பாளூர், தலைநகரத்துக்கு அருகில்
இருக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறதல்லவா?’’

“அப்படியென்றால் தம்பியாரும் என்னோடு ரோகணத்துக்கு வரட்டுமே!’’
என்று அனுமதி கேட்பதுபோல் மன்னரைப் பார்த்தான் இளங்கோ.

“இல்லை, நீங்களே சென்று வாருங்கள். வெகு நாட்களுக்குப் பிறகு
இப்போதுதான் தஞ்சைக்கு வந்திருக்கிறேன். கிடைக்கும் விருந்துகளை விட்டுவிட எனக்கு விருப்பமில்லை’’ என்று கூறிச் சிரித்தான்
அவன். சிரிப்போடு சிரிப்பாக அவன் விழிகள் அருள்மொழியை நாடின.

இளங்கோவுக்குத் திடீரென்று ரோகிணியின் நினைவு வந்துவிட்டது.
ரோகணத்துக்குப் புறப்படுவதற்குள் கிடைக்கும் சொற்பப் பொழுதில் ஒரு
துளியையாவது அவளுடன் கழிக்கலாமல்லவா? சட்டென்று எழுந்து
நரேந்திரன் முதலானவர்களிடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தான்.

அவன் புறப்பட்ட சில விநாடிகளில் அருள்மொழியும் அங்கிருந்து
கிளம்பி விட்டாள்.

“உங்களையெல்லாம் பார்க்க நான் வந்திருக்கும்போத நீங்கள் எங்கே
போகிறீர்கள் இளவரசி?’’ என்று கேட்டான் நரேந்திரன்.

“தந்தையாரிடம் பேசிக்கொண்டிருங்கள். இதோ வந்து விடுகிறேன்’’
என்று சொல்லிவிட்டு, துரிதமாக நடந்து இளங்கோவின் பின்னால் வந்தாள்
அருள்மொழி.

இவற்றையெல்லாம் கண்டும் காணாதவர் போல் கவனித்தும்
கவனியாதவர்போல் நடந்து கொண்டார் இராஜேந்திரர். பரம்பரை
உறவினர்களான வேளிர்களின் பயபக்தியும் வீரமும் தன்னடக்கமும்
அவருக்குத் தெரிந்துதான் இருந்தன. அதேபோல் புதிய உறவினர்களான
வேங்கி நாட்டாரின் கலகலப்பையும், வீரத்தையும், வெகுளித் தன்மையையும்
அவர் அறிந்துதான் இருந்தார். என்ன செய்வது? மாபெரும் சாம்ராஜ்யத்தைக்
கட்டியாள வேண்டுமென்றால், பலவித சக்திகளையும் ஒன்றுதிரட்டித்
தீரவேண்டியிருக்கிறதே!

வெளித் தாழ்வாரத்தில் ஏதோ யோசனையோடு மெதுவாக நடந்து
சென்று கொண்டிருந்தான் இளங்கோ. நரேந்திரன் சின்னஞ்சிறு குழந்தையாக
இருந்தபோது தஞ்சை அரண்மனையில் செல்லமாக வளர்ந்தவன். அந்தச்
செல்லத்தையும் அதனால் பெற்ற உரிமையையும் அவன் இன்னும் மறக்க
இயலவில்லை.

அதற்காக் கொடும்பாளூர்க்காரர்களைக் குத்திக்காட்ட வேண்டுமென்பதில்லையே! ஈழத்துக்குப் போய் மணிமுடியை எடுத்துக் கொண்டு வந்ததுகூட அவனுடைய கண்களுக்குக் குற்றமாகவா படவேண்டும்? வெகுநாட்களுக்குப் பிறகு ஏற்பட்ட முதற் சந்திப்பின்போது அவன் இப்படிப் பேசியிருக்க வேண்டாம்!

“இளவரசே!’’ என்ற குரல் குழலோசைபோல் அவனுக்குப் பின்னால்
ஒலித்தது. திரும்பிப் பார்த்தான் இளங்கோ. ஓட்டமும் நடையுமாக அவனை
நெருங்கிக் கொணடிருந்தாள் அருள்மொழி.

“நங்கையாரே! என்ன இது! புதிய விருந்தினரை உபசரிக்க வேண்டிய
வேளையில் நீங்கள் இங்கு வந்தால் தம்பியார் ஏதும் நினைக்க மாட்டாரா?’’

“வேங்கி இளவரசர் விருந்துக்கு வந்திருப்பவர்; இன்னும் சில தினங்கள்
இங்கேயே தங்கப்போகிறவர். ஆனால் நீங்கள்... நீங்கள்...’’

அருள்மொழியின் குரல் தழுதழுத்தது. அவனை ஏறிட்டுப் பார்க்காமல்
தன் காலின் பெருவிரலையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்றாள்.

“நான் மட்டும் என்ன? ரோகணத்துக்குப் போனால் திரும்பி வராமல்
இருந்துவிடப் போகிறேனா?’’ இளங்கோ இலேசாகச் சிரித்தான்.

“முன்னொரு நாள் கொடும்பாளூர்த் தோட்டத்தில் நான் சொல்லியதை
எப்போதும் மறந்துவிடாதீர்கள் இளவரசே! ரோகணத்துக்குள் எங்கு
போனாலும் தனியே போக வேண்டாம். சில வீரர்களையாவது துணைக்கு
வைத்துக் கொள்ளுங்கள்.’’

“இளவரசியார் இவ்வளவு தூரம் கலக்கமுறுவதை நான் இப்போதுதான்
முதன்முறையாகப் பார்க்கிறேன்’’ என்றான் இளங்கோ. நரேந்திரனுடைய
செருக்கான சொற்களால் சிறிது புண்பட்டிருந்த அவன் மனதுக்கு,
அருள்மொழியின் அன்பு மருந்தாக இருந்தது. “நான் கலங்கவில்லை. வெற்றியுடன் திரும்பி வாருங்கள்’’ என்று அவனைப் பார்த்துக் கண்ணீர் பொங்கச் சிரித்தாள் அருள்மொழி.

அந்த ஒரு சிரிப்பு அவனுக்கு ஓராயிரம் மலைகளைத் தகர்த்தெறியக்
கூடிய உள்ளவலிமையைக் கொடுத்தது.

“வருகிறேன்’’ என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக விரைந்து
சென்றான் இளங்கோ. அவன் மகிந்தரின் மாளிகைக்குச் செல்வது
அருள்மொழிக்குத் தெரியாது. அவனுடைய உருவம் அரண்மனையின் நீண்ட
தாழ்வாரத்திலிருந்து மறையும்வரை அவனையே பார்த்து கொண்டிருந்து விட்டு,
பிறகு அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“இளவரசியாரே!’’ என்று பின்புறமிருந்து வந்த பரிகாசக் குரல் அவளை
என்னவோ செய்தது. திடுக்கிட்டுத் திரும்பியபோது அவளறியாமல் அவள்
அருகில் வந்து நின்று கொண்டிருந்த நரேந்திரன் அவள் முகத்தையும்,
தாழ்வாரத்தின் விளிம்பையும் மாறி மாறிப் பார்த்தான்.

பிறகு ஏதுமறியாதவன் போல், “விரைவில் வருவதாகக் கூறினீர்களே;
காணோமே என்று தேடிக்கொண்டு வந்தேன்’’ என்றான்.

தொடரும்

Comments