வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,30. கண்ணீரின் காரணம் )

பாகம் 2 ,30. கண்ணீரின் காரணம் 


இளங்கோவையும் அவனுடைய வீரர்களையும் ஏற்றிச் சென்ற
படைக்கலம் தென்திசைக் கடலைக் கிழித்துக் கொணடு மிதந்தபோது,
அருள்மொழியின் சிந்தையும் அதே திசையில் சிறகடிக்கத் தொடங்கியது.
அந்தப்புரத்துப் பூங்காவில் பயமின்றித் திரிந்த வெண்புறாக்களின்
கூட்டத்துக்கு மத்தியில் அவள் நினைவிழந்ததுபோல் நடந்து கொண்டிருந்தாள்.

அருள்மொழியின் மனமும் அழகியதொரு புறாவாக மாறி கடலுக்குக்
குறுக்கே பறந்து அவன் கப்பலை எட்டிப் பிடித்தது. அதன் கொடி மரத்து
உச்சியில் அமர்ந்துகொண்டு கீழே அங்குமிங்கும் நோக்கித் தன் அன்பனைத்
தேடியது. பிறகு கப்பலைச் சுற்றிப் பலமுறை வலம் வந்தது. ஆனால் சிறகுகள் வலியெடுத்தனவே தவிர, அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் எங்கே எந்த மூலையில் என்ன செய்து கொண்டிருந்தானோ?

தேடிக் களைத்தும் காணாமல் கனத்த நெஞ்சோடு கடல் நீரில்
தலைகுப்புற விழுந்துவிட்ட உணர்ச்சியுடன் அருள்மொழியிடமே தத்தளித்துத் திரும்பி வந்தது அவள் மனப்புறா. அதை வாரி அணைத்து ஆறுதல் கூற விரும்பியவள்போல், அருகில் பறந்த புறா ஒன்றை எடுத்து அன்போடு அணைத்துக் கொண்டாள் அருள்மொழி. யாரிடமும் எதையும் வெளியிடாதவள் அந்தப் புறாவிடம் தன் மனச்சுமையை இறக்கினாள்.

“ஒரு வகையில் நீ என்னைவிட எவ்வளவோ பாக்கியசாலி! போருக்குச் செல்வதற்காக யாரும் உன்னிடம் அடிக்கடி விடை பெற்றுப் போக வரமாட்டார்கள். சிரித்துக் கொண்டே அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, அவர்கள் போனபிறகு நீ தேம்பித் தேம்பி
அழமாட்டாய், இல்லையா?’’

தன் தலையைச் சாய்த்து அவளைப் பார்த்துவிட்டு அவளைப் புரிந்து
கொண்டது போல் தலையாட்டி வைத்தது அந்தப்புறா. “ஆமாம்!
போகிறவர்கள் திரும்பவேண்டுமே என்று தினந்தினம் ஏங்க வேண்டும். நம்
பிரார்த்தனைக்கு மனமிரங்கித் தெய்வமாக அவர்களை அனுப்பி வைத்தால், அவர்கள் பெரிய பெரிய விழுப்புண்களுடன் வந்து சேருவார்கள். காயங்கள் ஆறிவிட்டாலோ திரும்பவும் அவர்களுக்கு மற்றொரு போர்க்களம் காத்திருக்கும்! திரும்பத் திரும்ப நாம் அவர்களுக்காகச் சிரிக்க வேண்டும்; அவர்களுக்காக அழவேண்டும். சோழர் குலப்பெண்களுக்கு இருதயமே இருக்கக் கூடாது!’’

புறாவுடன் பேசிக்கொண்டே நடந்தவளுக்கு எதிரில் மரத்தின்மீது
சாய்ந்தபடியே கண்ணீரை வழியவிட்டு நின்ற ரோகிணியின் உருவம் முதலில் தெரியவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவுடன் திகைப்படைந்தனர். அருள்மொழியின் கண்கலங்கி அதுவரை ரோகிணி பார்த்ததில்லை; ரோகிணியையும் அருள்மொழி அந்தக் கோலத்தில் கண்டதில்லை.

சட்டென்று தங்கள் தங்கள் கண்களைத் துடைத்துக் கொண்டு இருவரும்
ஒரே சமயத்தில் சிரிக்க முயன்றனர். அந்த முயற்சி ஒருவர் தோல்வியை
மற்றவருக்கு எடுத்துக் காட்டுவதாக இருந்ததே தவிர, இருவருக்குமே
வெற்றியளிக்கவில்லை. ரோகிணி தன் தந்தையார் தன்னிடம் இரகசியமாகச் சொல்லியிருந்த செய்தியை நினைத்துக் கலங்கிக் கொண்டிருந்தாள்.

‘எப்படியாவது இந்தக் கொடும்பாளூரானின் கொட்டத்தை அடக்கி,
அவனுக்கொரு முடிவு கிடைக்க வழி செய்துவிடுகிறேன், பார்’ என்று உறுதி
கூறியிருந்தார் அவள் தந்தை. அந்தச் சொற்கள் அவளை உறுத்திக் கொண்டேயிருந்தன. அபாயத்திலிருந்து தப்புவதற்கு அவனுக்கு வழிகளைச் சொல்லி அனுப்பிய பின்னரும் அவள் மனம் அமைதியடையவில்லை.

“என்ன ரோகிணி! கண்ணீருடன் உன்னை நான் ஒரு நாள் கூடப்
பார்த்ததில்லையே? இப்போது உனக்கு என்ன வந்துவிட்டது?’’ என்று
கேட்டாள் அருள்மொழி.

“இளவரசியாரிடமும் நான் இதே கேள்வியைக் கேட்கலாமோ?’’

கைப்புறாவைப் பறக்க விட்டுவிட்டு, அவளை அணைத்த படியே,
“சொல்லமாட்டாயா, ரோகிணி!’’ என்று கேட்டாள் அருள்மொழி.

“நீங்கள் சொல்லமாட்டீர்களா, இளவரசி?’’ என்று திருப்பிக் கேட்டாள்
ரோகிணி.

உடனே இருவரும் சிரித்துக் கொண்டார்கள். அந்தச் சிரிப்பில்
மலர்ச்சியில்லை. மீண்டும் தங்களது வேதனையை மூடி மறைக்கத்தான்
பார்த்தார்கள்.

“ரோகிணி, எந்த நேரத்தில் என் தந்தையார் இந்த சாம்ராஜ்யத்துச்
சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டார்களோ; தெரியவில்லை.
அவர்களுடைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு
என்னவோ செய்கிறது. எப்போதும் எங்கேயவாது போர் நடந்து
கொண்டேயிருக்கும் அல்லது வேறு ஏதாவது துன்பங்கள் அடுக்கடுக்காக
வந்துகொண்டேயிருக்கும். அமைதியாக அவர்கள் அரண்மனையில் தங்கிய
நாட்கள் மிகவும் குறைவு. எங்களுடன் இன்பமாகப் பேசி மகிழ்ந்த நாட்களை எண்ணிப் பார்த்துச் சொல்லிவிடலாம், ரோகிணி! இப்போதுகூட அவர்கள் மீண்டும் எங்கோ வடக்கே போகிறார்களாம்.’’

ரோகிணி அருள்மொழியின் பேச்சை உண்மையென்றே நம்பிவிட்டாள்.
மேலைச் சளுக்க நாட்டைப் பற்றிய வதந்திகள் ஏற்கனவே அரண்மனைக்குள் உலவிக் கொண்டிருந்தபடியால், ரோகிணிக்கு அருள்மொழியை நம்ப வேண்டியிருந்தது. “சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின் குமாரத்தியாகிய நீங்களே இதற்கெல்லாம் கலங்கினால், என்னுடைய நிலைமையில் நான் உயிரோடு இருக்கலாமா, இளவரசி?’’ என்று குமுறினாள் ரோகிணி.

அருள்மொழியின் அன்பணைப்பு ரோகிணியின் மனத்துக்குள்ளே
குமுறிக்கொண்டிருந்த உண்மைகளை வெளியில் கொண்டுவந்து கொட்டிவிடும் போலிருந்தது. இருவரும் புல்தரையில் ஒன்றாக உட்கார்ந்திருந்தார்கள். அருள்மொழி தன் துன்பத்தை அறவே மறந்துவிட்டு ரோகிணியைப் பரிவோடு பார்த்தாள். அவள் தலையைத் தன் மடிமீது கிடத்திக்கொண்டு மெல்லத் தன் தளிர் விரல்களால் அவள் கேசத்தை அன்புடன் கோதிவிட்டாள்.

“பெண்களாய்ப் பிறந்தாலும் அரசகுலத்தில் பிறக்கவே கூடாது, ரோகிணி!
எப்படியோ நாம் பிறந்துவிட்டோம். பிறந்த பிறகு நடப்பதை நினைத்து என்ன பயன்...? ஆமாம்! திடீரென்று நீ இன்றைக்கு எதை நினைத்துக் கொண்டு கண்கலங்கினாய்?’’ என்று கேட்டாள்.

ரோகிணிக்கு அங்கே வேங்கி இளவரசன் விருந்தினராக வந்திருப்பது
தெரியும்; அவன் வந்திருக்கும் சமயத்தில் அருள்மொழி அவனோடு பேசி
மகிழாமல் தனித்து நின்று கலங்கியது விந்தையாகத் தோன்றியது.
இல்லாதிருந்தால் தன் மனத்தில் இருந்ததை ரோகிணி அவளிடம்
மறைத்திருக்க மாட்டாள்.

“என் தம்பி காசிபனையும் ரோகணத்தையும் நினைத்துக் கொண்டேன்,
அக்கா!’’ என்றாள் ரோகிணி.

“உன் தம்பிக்கு ஒரு குறைவும் வராது’’ என்று தேற்றினாள்
அருள்மொழி. “எங்கேயிருந்தாலும் அவன் பத்திரமாக இருப்பான். ஒருவேளை அவன் எங்கள் வீரர்களிடம் அகப்பட்டாலும் அவனைக் கவனமாகக் கொண்டு வந்து இங்கே சேர்ப்பார்கள்.’’

அருள்மொழியின் மெய்யான அன்பு ரோகிணியின் உள்ளத்தைத் தொட்டது. என்றாலும் அது நெகிழ்ந்து கொடுத்து உண்மையை
வெளியிடவில்லை.

“அக்கா, உங்களுடைய தமிழ் வருடப் பிறப்பின்போதுதான் எங்களுக்கும்
புத்தாண்டு பிறக்கிறது; அதை நாங்கள் எங்கள் நாட்டில் எவ்வளவு
குதூகலமாகக் கொண்டாடுவோம், தெரியுமா? பெரிய பெரிய தென்னை
மரங்களிலும் கமுகு மரங்களிலும் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வோம்.
புத்தாடைகள் உடுத்திச் சென்று, புத்தர்பிரானின் திருவடிகளுக்குப் புதுமலர்கள் தூவுவோம். நாடு நகரமெங்கும் ஒரே ஆடலும் பாடலும் கேளிக்கையுமாக இருக்கும். இந்தப் புத்தாண்டு நெருங்கும்போது எனக்குச் சென்ற ஆண்டின் நினைவுகள் வந்துவிட்டது. காசிபனை ஊஞ்சலில் வைத்து நான் என் கை ஓயுமட்டும், கால் ஓயுமட்டும் ஆட்டிவிட்டேன், அக்கா!’’

ரோகிணி கூறியதும் உண்மைதான். ஓர் உண்மையைக் கொண்டு
மற்றொரு உண்மையை அவள் மறைத்தாளே தவிர பொய்யைக் கொண்டு
மறைக்கவில்லை. மேலும் அவள் புத்தாண்டின் புதுச்சோற்றுச் சுவையையும், தேன்பாகு, தயிர்க்கட்டி, ரபனா என்ற வாத்தியத்தோடு கலந்த மெல்லிசை இவற்றைப் பற்றியும் குழந்தைபோல் சொல்லத் தொடங்கிவிட்டாள்.

இவ்வளவையும் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி, “இந்த
ஆண்டுக்கு உன் தம்பி இங்கில்லை என்பதால் விழாவை நிறுத்திவிடாதே!
அவனுக்குப் பதிலாக அம்மங்கையும் நானும் உன்னுடன் இருப்போம்’’
என்றாள்.

“இப்படிச் சொல்ல எனக்கொரு தமக்கையார் கிடைத்தது என் பாக்கியம்!’’
என்று மனம் நிரம்பிச் சொன்னாள் ரோகிணி.

“இதெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கே பணியாட்களிடம் சொல்லி
ஊஞ்சல் அமைத்துவிடச் சொல்கிறேன். அங்காடி வணிகர்களைப்
புத்தாடைகளுடன் அரண்மனைக்கு வரவழைக்கிறேன். உனக்கும் வீட்டாருக்கும் வேண்டியவைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள். நானும் அம்மங்கையும் அன்றைய விருந்துக்கு உன்னிடம் வந்து விடுவோம். பிறகு நீ ஊஞ்சலில் அமர்ந்துகொள். நானும் அம்மங்கையும் ஆளுக்கொரு புறமாக நின்று பாட்டிசைத்துக்கொண்டே உனக்கு அலுக்கும் வரை ஊஞ்சலாட்டுகிறோம்!’’

அருள்மொழியின் மடியில் படுத்துக் கிடந்ததே ரோகிணிக்கு மலர்
ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் இன்ப உணர்வைக் கொடுத்தது. சற்றுநேரம்
மெய்மறந்துவிட்டு, “ஏனக்கா! வேங்கியிலிருந்து யாரோ இளவரசர்
வந்திருக்கிறாரே, அவர்கூட உங்களுக்கு...’’ என்று இழுத்தாள் ரோகிணி.

“என்ன சொல்கிறாய், ரோகிணி’’ என்று சிறு பதற்றத்துடன் கேட்டாள்
அருள்மொழி.

“இல்லை அவர் உங்களுடைய அத்தையாரின் புதல்வர் என்று யாரோ
கூறினார்கள். அதனால்...!’’ என்று பேச்சை முடிக்காமலே மழுப்பிச் சிரித்தாள் ரோகிணி.

“அத்தையாரின் புதல்வர் தாம், அதனால் என்ன?’’

அருள்மொழியின் குரலில் தென்பட்ட பரபரப்பு ரோகிணியின்
உற்சாகத்தைக் குறைத்தது. என்றாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்,
“உங்களுக்கும் அவர்களுக்கும் திருமணம் நிகழக்கூடும் என்று நினைக்கிறேன்’’
என்று மென்று விழுங்கிக்கொண்டு கூறி முடித்தாள்.

“நீயாக அப்படி நினைத்துக் கொண்டிருந்தாலும் சரி, யாராவது உனக்குச்
சொல்லியிருந்தாலும் சரி, அது தவறு. நாடு இருக்கும் நிலைமையில் இப்போது என்னுடைய திருமணத்துக்குத்தானா அவசரம் வந்துவிட்டது?’’

“அப்படியானால் வேறு யாரையோ நீங்கள் உங்கள் மனத்துக்குள்
நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது.’’

“ஒருவரையுமே நினைக்கவில்லை. எப்போதும் என் தந்தையாரைப்
பற்றிய நினைப்புதான் எனக்கு.’’

ஒரு பெரிய பாரம் தன் நெஞ்சியிலிருந்து இறங்கியது போல் நீண்ட
பெருமூச்சு விட்டாள் ரோகிணி. “எனக்கும் அப்படித்தான் அக்கா! என் தம்பி காசிபன் என் கனவிலும் நினைவிலும் என்னை விட்டு அகலமாட்டேனென்கிறான்.’’

நேரம் சென்றது. தனது மாளிகைக்குச் சென்ற ரோகிணி மகிந்தரிடம்
அடுத்தாற்போல் வரப்போகும் புத்தாண்டுத் திருவிழாவைப் பற்றி
மகிழ்ச்சியுடன் பேசலானாள். மகிந்தரும் அவளிடம் மற்றொரு புதுச்செய்தியைக் கூறினார்.

“ரோகிணி புத்தாண்டைவிட நமக்குப் புத்தர் பிறந்த புனித தினம்
மிகவும் முக்கியமானது. அதை நாம் நாகைப்பட்டினத்தின் சூடாமணி
விஹாரத்தில் கொண்டாடப் போகிறோம். அதற்காக நாம் அடுத்த மாதம்
பிறந்தவுடனேயே ஆனைமங்கலத்துக்குச் செல்ல வேண்டும், சக்கரவர்த்தியிடம் அனுமதியும் பெற்றுவிட்டேன்!’’

“சக்கரவர்த்தி எங்கோ புறப்படப் போகிறாராமே?’’

“அதற்காகத்தான் இப்போதே கூறி அனுமதி பெற்றிருக்கிறேன். பெரிய
வேளாரிடம் சொல்லி நாம் விரும்பியபோது நம்மை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறாராம். அவர்களுடைய ஆனைமங்கலம் சோழ மாளிகையிலேயே நாம் தங்கியிருக்கலாம்.’’

ரோகிணி தன் தந்தையின் கண்களைக் கூர்ந்து நோக்கினாள்.
நாகைப்பட்டினத்துக்கு அவர் புறப்பட விரும்பியதன் காரணத்தை அவள்
நம்பவில்லை.

“இங்கேயே அதைக் கொண்டாடலாமே, அப்பா! நமக்கு வேண்டிய
வசதிகளையெல்லாம் அவர்கள் தாராளமாகச் செய்து தருவார்களே!’’

“நல்ல காலம் வரும்போது அதைத் தடுத்துப் பேசாதே ரோகிணி!
அவர்களுடைய தாராளத்திலிருந்துதான் நாம் நம்முடைய நல்ல காலத்துக்கு வழி தேடிக்கொள்ள வேண்டும்’’ என்று கூறினார் அவர்.

ரோகிணி பதிலளிக்காது மகிந்தரிடமிருந்து விலகிச் சென்றாள்.

தொடரும்


Comments