வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,31. வீரமல்லன்

பாகம் 2 ,31. வீரமல்லன்


பொதிகைமலைச் சாரலில், பெரும்பிடுகு முத்தரையர் வசித்து வந்த
வீட்டுக்குக் கூப்பிடுகிற தூரத்தில், ஒருமலைப் பிளவின் மறைவில் சுந்தர
பாண்டியரின் அந்தரங்க மாளிகை அமைந்திருந்தது.

யாரோ எதற்காகவோ பல ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பி வைத்த
பாழடைந்த கட்டடம் அது. பௌத்தர்களுடைய பழம்பெரும் விஹாரைகளில்
ஒன்றாக இருக்கலாம். அல்லது வழிப்போக்கர்களுக்கு உணவும் உறைவிடமும்
கொடுப்பதற்காகச் சமணர்கள் கட்டி வைத்த ‘அஞ்சினோர் புகலிட’மாகவும்
இருக்கலாம். ஒருவகையில் இப்போது அஞ்சி ஒதுங்கியவர்களின்
புகலிடமாகத்தான் பயன்பட்டது.

அதன் சற்றுச் சுவர்களின் சுதைப்பூக்கள் உதிர்ந்து, சுவர் வெடிப்புகளில்
செடி கொடிகள் மண்டிக்கிடந்தன. காற்று, மழை, கதிரொளி, கடும்பனி
யாவுமாகச் சேர்ந்து அதைக் கலகலக்க வைத்திருந்தன. என்றாலும் புகலிடம்
தேடி வந்தவர்களின் தலைகளை நசுக்கிப் புதைத்துவிடக் கூடிய அளவுக்கு
அது அவ்வளவு மோசமாக இல்லை.

சுந்தர பாண்டியர் தமது தற்காலிக ‘அரண்மனை’யான அந்த
மாளிகைக்குள் சுட்டெரிக்கும் கண்களுடன் குறுக்கு நடைபோட்டுக்
கொண்டிருந்தார்.

அவரைப் பின்பற்றி ஒருபுறம் பெரும்பிடுகு முத்தரையரும் மறுபுறம்
வீரமல்லனும் முன்னும் பின்னும் போய் வந்து கொண்டிருந்தனர். சட்டென்று
சுந்தரபாண்டியர் அங்கிருந்த உடைந்த திண்ணையில் உட்கார்ந்தார். மற்ற
இருவரையும் உட்காரச் சொல்லிப் பணித்தார்.

“சேனாபதி! ஈழத்தில் இருக்கும் நமது படைகளுக்கு ஆபத்து
வந்திருக்கிறது. கொடும்பாளூர்ப் பெரிய வேளார் மகன் மீண்டும் அங்கே
போகிறானாம். மைத்துனர் கீர்த்தி நமக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்.’’

பெரிய முத்தரையர் பேசுவதற்கு முன்னர் சிறிய முத்தரையன்
கொதித்தெழுந்தான். ‘பெரிய வேளாளர் மகன்’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அவனுடைய மீசை துடித்து முகம் சிவந்தது.

“அரசே! எனக்கு அனுமதி கொடுங்கள். இப்போது நம்மிடம் இருக்கும்
வீரர்களை அழைத்துக்கொண்டு இன்றைக்கே கிளம்புகிறேன். என்னுடைய
முதற் பகைவன் கொடும்பாளூரான் தான். அவனை அழிக்காமல் நான் இங்கே
திரும்புவதில்லை என்று சபதம் செய்து கொடுக்கிறேன், அரசே!’’

வீரமல்லனின் கண்களிலும் பேச்சிலும் பொங்கியெழுந்த ஆத்திரத்தை
சுந்தரபாண்டியர் கூர்ந்து கவனித்துக்கொண்டார். தனிப்பட்ட முறையில்
அவர்களுக்குள் பகை இருக்க வேண்டுமென்று அவர் முன்பே ஊகித்தது
இப்பொழுது உறுதிப்பட்டது.

“வீரமல்லா! பொறு, அவசரப்படாதே’’ என்று அவனைத் தட்டிக்
கொடுத்துவிட்டு “சோழர்கள் உன்னை ஈழத்துக்கு அனுப்பவில்லை
என்பதனால் அங்கிருந்து ஆத்திரப்பட்டு இங்கு வந்து சேர்ந்தாய். அதேபோல்
நானும் உன்னை அனுப்பாவிட்டால் நீ இங்கிருந்து அவர்களிடம் போய்
விடுவாய் போலிருக்கிறதே!’’ என்று சொல்லிச் சிரித்தார்.

இதைக் கேட்டவுடன் வீரமல்லன் பெட்டிப் பாம்பாக அடங்கிவிட்டான்.
பெரும்பிடுகு முத்தரையருக்குக்கூட அரசரின் இந்தக் கேலிப்பேச்சு ‘சுருக்’
கென்று தைத்தது.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அரசே! நமக்கு அபாயம்
வந்திருக்கும்போது நாம் அதைத் தடுத்துக் கொள்ளவேண்டும் என்ற
துடிப்பால் அப்படிக் கூறினேன். அது தவறானால் என்னை மன்னித்துக்
கொள்ளுங்கள். தங்கள் கட்டளை எதுவோ அதன்படி நடக்கச்
சித்தமாயிருக்கிறேன்.’’

பேச்சை மாற்றி, அவனைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற
எண்ணத்தோடு, “சோழர்களிடம் உனக்குள்ள பகைமைக்கு வேறு என்ன
காரணம்?’’ என்று கேட்டார் பாண்டியர்.

பொறாமை உணர்ச்சிக்கு வேறு எந்தக் காரணமுமே தேவையில்லை
என்பதும் தனக்கு உப்பிட்டு வளர்த்தவர்களையே அது உறிஞ்சச் சொல்லும் என்பதும், தனக்கு வழி
காட்டியவர்களுக்கே அது வினைதேடச் சொல்லும் என்பதும்
சுந்தரபாண்டியருக்குத் தெரியாமல் இல்லை. அப்படிப்பட்டவனைத் தனது
அந்தரங்க மனிதனாக வைத்துக் கொள்வதிலுள்ள அபாயங்களையும் அவர்
ஓரளவுக்கு உணர்ந்திருந்தார். அதனால்தான் அப்படிக் கேட்டு வைத்தார்.

“அரசே! எங்களுடைய பழையகால வரலாறு தங்களுக்குத்
தெரியாததல்ல. விஜயாலய சோழர் காலத்துக்கு முன்பிருந்தே தஞ்சை
மாநகரில் ஆட்சி செலுத்தியவர்கள் நாங்கள். சந்திரலேகையிலும் தஞ்சையிலும்
நாங்கள் தலைநகர்களை அமைத்துக்கொண்டு அரசாட்சி செய்து வந்தோம்.
அப்படிப்பட்டவர்களை வென்றுவிட்டு இவர்கள் எங்கள் ஆட்சியைக்
கைப்பற்றிக் கொண்டார்கள். அன்றிலிருந்து எங்களுக்குச் சோழநாட்டில்
பெருமையில்லை; வாழ்வில்லை; சலுகைகள் இல்லை. வேண்டுமென்றே
அவர்கள் எங்களை வெறுத்து ஒதுக்கி வருகிறார்கள்’’ என்று நெஞ்சம்
கொதித்தான் வீரமல்லன்.

கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தார் சுந்தரபாண்டியர். வீரமல்லனின்
கூற்றை அவர் சிறிதும் நம்பவில்லை என்பதை வெளிப்படையாகவே காட்டிக்
கொண்டார்.

வீரமல்லனின் முகம் சிறுத்து தன் பேச்சை மெய்யாக்க
விரும்பியவன்போல், “கொடும்பாளூர் வேளிர்களுக்குத்தான் இப்போதெல்லாம்
அரண்மனையில் நிறைந்த செல்வாக்கு; பெரிய வேளார் வைத்ததுதான்
நாட்டில் சட்டமாக நடைபெறுகிறது’’ என்று மேலே தொடர்ந்து கூறினான்.

“வீரமல்லா! நீ முத்தரையர்கள் குலத்தில் பிறந்தவன் என்பதால் பழைய
அரசர்கள் பரம்பரையைச் சேர்ந்தவன் என்று சொல்லமுடியாது. அந்தப்
பரம்பரையைச் சேர்ந்த பல வீரர்கள் இப்போது சோழநாட்டில் பெரும்
பதவிகளில் இருக்கிறார்கள். ‘கண்டோர் நடுங்கும் காலன்’ என்று பெயர்
பெற்ற அரையன் ராஜராஜன் அவர்களுடைய வடதிசைச் சேனாபதியாக
விளங்குகிறார்; ஈராயிரம் பல்லவரையரோ காவிரி நாட்டைக் காக்கும் மத்திய
படைத்தலைவராக உயர்ந்திருக்கிறார். இன்னும் எத்தனை எத்தனையோ முத்தரையர்களை நம்பி அவர்களிடம் பல்வகையான ஆட்சிப்
பொறுப்புக்களையும் கொடுத்திருக்கிறார்கள். சோழர்கள் என்னுடைய
பகைவர்கள் என்றாலும் அவர்களுடைய பரந்த ராஜதந்திரப் போக்கில் நான்
குறை சொல்லமாட்டேன். பழி வாங்கும் தன்மையை விட, அவர்களிடம்
வீரத்தையும் தகுதியையும் பாராட்டும் பண்புதான் அதிகம். வேறு ஏதாவது
காரணங்கள் இருந்தால் சொல். என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு!’’

வீரமல்லன் தலை குனிந்தான். பெரும்பிடுகு முத்தரையரும்
இரண்டுங்கெட்டான் தொல்லையில் வந்து அகப்பட்டுக் கொண்டவர்போல்
விழித்தார்.

“என்ன யோசிக்கிறாய் வீரமல்லா? சாம்ராஜ்யத்துச் சக்கரவர்த்திகூடக்
கேட்பதற்குத் தயங்கும் கேள்விகளை இந்த நாடிழந்த பாண்டியர் கேட்கிறாரே
என்று பார்க்கிறாயா? இங்கே வந்ததைவிட அங்கேயே தங்கியிருக்கலாம்
என்று யோசனையா?’’

தன் இனத்தவன் என்ற காரணத்தால் பெரும்பிடுகு முத்தரையரின்
கண்களை மறைத்திருந்த அன்புத் திரை, எங்கே பாண்டியரின் பேச்சால்
கிழிந்துவிடுமோ என்று பயந்தான் வீரமல்லன்.

“அரசர் பெருமானின் நம்பிக்கைக்கு இன்னும் நான் பாத்திரமாகவில்லை
என்று தெரிகிறது; அதுவும் என் துரதிர்ஷ்டம்தான்.’’

“துரதிர்ஷ்டமில்லை, வீரமல்லா! நீ அதிர்ஷ்டம் செய்தவன். நீ,
உன்னுடைய அதிர்ஷ்டம் என்ற ஒரே காரணத்தால் பெரிய முத்தரையரின்
அன்பைப் பெற்றிருக்கிறாய். அவர் வாயிலாக என்னிடம் நெருங்கியதால் நீ
இன்னும் உயர்ந்து விட்டாய். அதைத்தான் இப்போது சொல்ல வருகிறேன்’’
என்றார் சுந்தரபாண்டியர்.

பெரும்பிடுகு முத்தரையருக்கோ திடீரென்று எதையோ மனத்தில்
வைத்துக்கொண்டே அரசர் இப்படிப் பேசுவதாகத் தோன்றியது.
காரணமில்லாமல் அவர் எதையும் பேசுவதில்லை.

காரணமும் இருக்கத்தான் செய்தது. சுந்தரபாண்டியரிடம் தொடர்பு ஏற்பட்ட சிலதினங்களுக்கெல்லாம் அவன் அவரிடம்
நெடுநாட்களாகப் பணியாற்றி வந்த வீரர்களைப் பற்றிக் குற்றம் குறை
சொல்லத் தொடங்கிவிட்டான். விசுவாசமாக உழைத்தவர்கள் மீது
அவதூறுகளைச் சுமத்தினான். தொடக்கத்தில் சிரித்துக்கொண்டே
சுந்தரபாண்டியர் அவனுக்குச் செவி சாய்த்ததால் அவன் துணிவு எல்லை மீறி
வளர்ந்துகொண்டே வந்தது.

மற்றவர்களை மிதித்து முன்னேறிப் பாண்டியருக்கு மதியமைச்சராகப்
பார்த்தான் வீரமல்லன். பெரிய முத்தரையரின் ஆதரவை மட்டும் கொண்டு
வாய்ப்புக் கிடைத்தபோது அவன் பாண்டியரையே ஆட்டுவிக்க முயன்றான்.

பாண்டியர் விழித்துக்கொண்டார். தமது பதவியையும் அவனுடைய
தகுதியையும் அவனிடம் சுட்டிக்காட்ட வேண்டிய தருணம் அவருக்கு
வந்துவிட்டது. அதைப் பெரிய முத்தரையரின் முன்பாகவே செய்ய
விரும்பினார்; செய்தும் காண்பித்தார்.

“வீரமல்லா, உன்னுடைய நண்பன் என்று முன்பு சொன்னாயே, அந்த
இளங்கோவைப்போல் நீயும் எதிர்காலத்தில் முடிசூடி நாடாள விரும்புகிறாய்.
உனக்கு அரச பதவியும், செல்வமும், செல்வாக்கும், கட்டளையை நிறைவேற்ற
வீரர் கூட்டமும் தேவைப்படுகின்றன. அவனோடு பழகியதால் நீ அரச
வாழ்வின் சுவையைக் கண்டுவிட்டாய். அவனைப் போலவே மாற
விரும்புகின்றாய்- அவ்வளவுதானே?’’

வீரமல்லனுக்கு வந்த ஆத்திரத்தில் சுந்தரபாண்டியரையே இரண்டு
துண்டுகளாக வெட்டி வீழ்த்தி விடலாமா என்று தோன்றியது. ‘முதல் பகைவன்
இளங்கோவல்ல! நீங்கள் தான் என்று நினைத்துக்கொண்டான் அவன்.

அடுத்தாற்போல் அவர் வேறு ஏதாவது கூறியிருந்தால் அவன்
அங்கிருந்து சரேலென்று வெளியில் கிளம்பிப் போயிருப்பான், திரும்பி
வருவதுகூட சந்தேகந்தான்.

ஆனால் அவர் அவன் கண்களைப் பார்த்துக் கொண்டே சிரித்தார்.
மெல்ல இழுத்து அணைத்துக் கொண்டார்.

“நீ விரும்புகிறபடியே நான் உன்னை அரசனாக்குகிறேன், என்
கையாலேயே நான் உனக்கு முடிசூட்டி விடுகிறேன். அதுவும் நீ எந்தக்
கொடும்பாளூரைப் பற்றி நினைத்துப் பொருமுகிறாயோ, அந்தக் கொடும்பைக்
கோனாட்டையே உன்னுடையதாக்குகிறேன்-என்ன சம்மதந்தானா?’’

புண்பட்ட உணர்ச்சி கலந்த புன்முறுவல் வெளிப்பட்டது வீரமல்லன்
முகத்திலிருந்து.

“நன்றாக நினைவில் வைத்துக்கொள்; ஒன்றுமில்லாத உன்னை ஒரு
நாட்டின் தலைவனாக்கப் போகிறேன். என்னுடைய நாட்டை நான் திரும்பவும்
கைப்பற்றிய பிறகு அடுத்தாற்போல் செய்யவிருக்கும் முதற்காரியம் அதுதான்.
உன்னுடைய தகுதியாலல்ல, உன் அதிர்ஷ்டத்தால். நீ இங்கு வந்திருக்கிறாய்.
வீணாக அச்சம் கொண்டு வீரர்களிடம் பிளவை ஏற்படுத்தாதே. இனத்தை ஒரு
காரணமாகச் சொல்லிப் பெரிய முத்தரையரை வளைக்கப் பார்க்காதே,
என்னிடமாவது நீ நன்றியோடு இருந்தால் அது உனக்குப் பலன் அளிக்கும்.’’

“எனக்கு ஒன்றிலுமே ஆசையில்லை! தங்கள் அன்பிருந்தாலே போதும்’’
என்று தணிந்து பேசினான் வீரமல்லன்.

“நானும் உனக்கு நாளைக்கே முடிசூட்டிவிட முடியாது. இடையில்
இன்னும் எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நமக்குக் காத்திருக்கின்றன.
என்னுடைய கடைசி வெற்றியில் உனக்கு நல்ல பங்கு உண்டு என்பதைத்தான்
இப்போது சொல்லி வைத்தேன். இப்போது நீ போய்த் தெற்கே உள்ள
சாலையில் சில வீரர்களுடன் காத்திரு. நம்முடைய மதிப்புக்குரிய விருந்தினர்
ஒருவரை இன்றையப் பொழுதுக்குள் எதிர்பார்க்கிறேன்; சகல மரியாதைகளுடன்
அழைத்து வா.’’

“விருந்தினரின் அடையாளங்கள்...?’’

“மூன்று பேர் வருவார்கள். அவர்களிடம் சிங்க இலச்சினைகள்
இருக்கும்.’’

அமைச்சர் கீர்த்தி வரப்போகிறார் என்ற மகிழ்ச்சியுடன் வேகமாக
வெளியில் விரைந்தான் வீரமல்லன். ஏற்கனவே அவர் அவனுக்கு
அறிமுகமாயிருந்ததால் அடையாளத்தைப் பற்றிக் கேட்டிருக்கவே
வேண்டாமென்று தோன்றியது. மதுரைப் புது மாளிகை விழாவின் போது அவன் அவரைச் சந்தித்திருக்கிறான்.
தஞ்சையிலிருந்த தன் தாயாரின் பொறுப்பையும் அவரிடமே விட்டிருந்தான்.

அவன் சென்றபிறகு பெரும்பிடுகு முத்தரையர் மெல்லத் தமது
தொண்டையைக் கனைத்தார்.

“உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பதற்காகத் தான் அவனை
இப்போது எச்சரித்து வைத்தேன். நேர்மையானவன் என்று நம்ப முடியாது.
தந்திரசாலி. ஓரளவு பேராசைக்காரன். என்றாலும் இவனைப் போன்றவர்களின்
துணையும் நமக்குத் தேவையாக இருக்கிறதல்லவா?’’ என்றார்.

“நம்முடைய வீரர்களைப் பற்றி அவன் என்னிடம் குறை
சொல்லவில்லையே!’’

“எங்கு கூறவேண்டுமா அங்கு கூறினான். என்னிடமே சொல்லிக்
கொண்டிருந்தான். நம்முடைய துணைச் சேனாபதியையே குறைகூறும்
அளவுக்கு வந்து விட்டான். குறைகளில்லாதவர்களை நாம் எங்கே
காணமுடியும்? இவனுக்காக நாம் அவரையே பகைத்துக்கொண்டால், நாளைக்கு
இவன் செய்ததுபோல் அவர் நம்முடைய பகைவர்களின் பக்கம் சேர்ந்து
கொண்டால் நம்முடைய நிலைமை என்ன ஆவது? அதற்காகத்தான்
அவனுடைய குறைகளை அவனுக்குக் குத்திக் காட்டுகிறேன்.’’

“சிறு பையன்தான். நான் அவனுக்குப் புத்திமதிகள் கூறி
வழிப்படுத்திவிடுகிறேன்’’ என்றார் பெரும்பிடுகு முத்தரையர்.

“பயமுறுத்தி வழிக்குக் கொண்டு வருவதைவிட ஆசை காட்டி வழிக்குக்
கொண்டுவதுவது நல்லது. அவனிடமும் நான் பொய் கூறவில்லை. நமது
கனவுகள் நிறைவேறினால் அவன்தான் கொடும்பாளூருக்கு அரசன். உங்கள்
பெண் திலகவதியும் அதிர்ஷ்டக்காரியாக இருக்க வேண்டும்.’’

பெரிய முத்தரையருக்கு ஆனந்தம் தாங்கவில்லை.

சற்று நேரம் சென்றபிறகு, “அமைச்சர் கீர்த்தி இங்கு வரப்போகிறாரா?’’
என்று கேட்டார். “கீர்த்தி இப்போது இந்த நாட்டிலேயே இல்லை. இதற்குள் அவர்
ஈழத்துக்குப் போய்ச் சேர்ந்திருப்பார். அதனால்தான் நம்முடைய படைகளுக்கு
அபாயம் ஏதும் நேராதென்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.’’

‘அப்படியானால் இங்கு வரப்போகும் ஈழத்து விருந்தினர் யார்?’ என்று
கேட்க நினைத்தார் பெரும்பிடுகு முத்தரையர். சுந்தரபாண்டியரே அதைக்
கூறாமல் விட்டுவிட்டதால், அவரிடம் அதைப்பற்றிக் கேட்கும் துணிவு
முத்தரையருக்கு ஏற்படவில்லை.

தொடரும்

Comments