வேங்கையின் மைந்தன் ( பாகம் 2 ,32. கதிர்காமச் சூழலில்

பாகம் 2 ,32. கதிர்காமச் சூழலில் 

கந்தவேள் உறையும் கதிர்காமக் கோயிலுக்குச் செல்லும் காட்டுவழி.
கோயில் அரைக்காத தூரத்துக்கப்பால் மாணிக்க கங்கையின் கரையில்
இருந்தது. நேரமோ பிற்பகல்.

பாதையின் இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்து நெருங்கி நின்றன.
கானகத்துக்கே உரித்தான பச்சிலைக் காற்று புழுக்கத்தோடு அவ்வப்போது
தலை நீட்டியது. பகற்பொழுதாக இருந்தாலும் பயங்கரப் பொழுதுதான் அது.

காட்டுக்குள் எங்கோ தொலை தூரத்தில் யானைகள் பிளிறும் ஓசை
எழுந்தது. காட்டு எருமைகள் சில வழியோரத்தில் நின்று எட்டிப்
பார்த்துவிட்டு, வால்களை முறுக்கி விட்டுக்கொண்டு ஓட்டம் பிடித்தன.

அந்தக் கானகத்துத் தனிமையில்தான் தமிழ்நாட்டு வேலன்
காலங்காலமாகக் குடியிருந்து வருகிறான். கன்னித்தமிழ் பேசுவோரின் கடவுள்,
கற்பனையில் பிறந்த அற்புதச் செல்வன் அவன்.

முருகன் அழகன்; தமிழர்கள் அழகு வழிபாடு கொண்டவர்கள். அவன்
இளைஞன். தமிழர்கள் அவனைக் குமரனென்று போற்றினார்கள். அவன்
வெற்றிவேலன்; வேல் கொண்டு வெற்றி பெற்ற அவனது வீரத்தை
வணங்கினார்கள். அவன் துள்ளித் திரியும் புள்ளி மயிலோன்; தமிழர்கள்
தங்களது கலை உணர்வின் பெருமிதத்தால் அவனுடன் ஆடும் மயிலை
ஒன்றாக இணைத்தார்கள். இன்று நேற்று ரோகணத்துக்குச் சென்ற இளைஞனா அவன்! முன்பு எப்போதோ சூரபத்மனுடன் போர் தொடுப்பதற்கு மாணிக்க கங்கைக் கரையில் அவன் கூடாரம் அமைத்தானாம். போரில் வெற்றியும் பெற்றாகிவிட்டது.
உடனே அவன் அங்கிருந்து திரும்பிவிடவில்லை.

அந்தக் கானகத்தில் திரிந்த மலைநாட்டு வேடுவப் பெண் ஒருத்தி
அவன் மீது கண்வலை வீசிவிட்டாள். வெற்றிபெற்ற மாவீரன். அந்த வள்ளி
என்ற கள்ளியிடம் தோற்றுப் போய்விட்டான். பிறகு என்ன?- ரோகிணியிடம்
அகப்பட்ட இளங்கோவின் கதிதான் அந்த இளங்குமரனுக்கும்!

அவளை மணந்துகொண்டு அதே இடத்தில் தங்கிவிட்டான் அவன்.
காலையிளம் காற்றும் கானகத்துத் தனிமையும், கையில் ஒரு வேலும்,
காதலிளம் பெண்ணும் அருகில் இருக்கும்போது வேறு என்ன வேண்டும்
அவனுக்கு? பக்தர்கள் கூட்டம் கூட்டமாக அவனை நாடிச் சென்றார்கள்.
வழியில் குறுக்கிட்ட இன்னல்களையெல்லாம் கடந்து சென்று அவனுடைய
இன்னருள் பெற்றார்கள். இராஜேந்திர சோழரின் ஆட்சிக் காலத்தில்
கதிர்காமத்துக்குச் செல்வதென்றால் அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.
மனிதனின் வாழ்க்கைப் பாதையை ஒத்திருந்தது அது.

அதன்மூலம் உலக யாத்திரைப் பாதையில் மனிதன் கடந்து
செல்லவேண்டிய மேடுகளையும் பள்ளங்களையும் பயங்கரத் திருப்பங்களையும்
மனிதனுக்குச் சுட்டிக் காட்டினான் முருகன். தன்னம்பிக்கையும், நெஞ்சுறுதியும்
அருளுணர்வும் இருந்தால் எப்படியும் வாழ்க்கையில் முன்னேற முடியும்
என்பதையும் அவன் மனிதனுக்கு உணர்த்தினான். இன்னும் உணர்த்திக்
கொண்டேதான் இருக்கிறான்.

அவனுடைய கோயிலுக்குச் செல்லும் காட்டுவழிப் பாதையில், யாரோ
சிலர் கள்வர்களைப் போல் திருட்டு விழி விழித்துக்கொண்டு
இருமருங்குகளிலும் ஒளிந்து நிற்கிறார்களே அவர்கள் யார்? மரத்துக்கு மரம்
கிளைக்குக் கிளை தாவும் வானரங்களைப்போல தொத்திக்
கொண்டிருக்கிறார்களே யார் அவர்கள்?

வழிபாட்டுக்கு வருகிறவர்களை வழிமறித்துக் கொள்ளையடிப்பவர்களா? அல்லது கொலைக் கூட்டத்தைச் சேர்ந்த கொடியவர்களா? அவர்களுக்கு இந்த இடத்தில் இப்போது என்ன வேலை?

ஒரே மரக்கிளையில் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் பேச்சை, மறைந்திருந்து கவனித்தால் நமக்குச் சிற்சில விஷயங்கள் புலனாகின்றன. அவர்களும் தமிழர்களே! பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர்கள்; முன்பு சுந்தரபாண்டியரின் படையில் இருந்தவர்கள்.

அவர்கள் கண்ணிமைக்காமல் காவல் புரிவதிலிருந்து அவர்களுடைய
மறைவிடம் எங்கோ இந்தக் கானகத்தை அடுத்துத்தான் இருக்க
வேண்டுமென்று ஊகிக்க இடம் இருக்கிறது. அவர்கள் காவல்தான்
புரிகிறார்களா? அல்லது ஒரு வேளை வருபவர்கள் மீது திடீரென்று பாய்ந்து
தாக்குவதற்காகப் பதுங்கியிருக்கிறார்களா?

அவர்கள் பேச்சிலிருந்து மேலும் சில விவரங்கள் கிடைக்கின்றன:

இளங்கோ தனது வீரர்களுடன் முன்பே ரோகணத்துக்கு
வந்துவிட்டானாம். கொள்ளை - கொலைகள் நடந்த ஊர்களிலெல்லாம்
இப்போது அவனுடைய வீரர்களின் நடமாட்டம். மிகுந்துவிட்டதால், அவன்
வந்ததிலிருந்து ஒருவிதத் தொல்லையும் மக்களுக்குக் கிடையாது. அவனுடைய
பெயரைக் கேட்ட மாத்திரத்தில் மக்கள் வாழ்த்தொலி எழுப்புகிறார்கள்.

வியப்புக்கும் திகைப்புக்கும் உரிய மற்றொரு விந்தைச் செய்தியை
வெளியிடுகிறார்கள் அவர்கள். ஒரே சமயத்தில் இளங்கோ பல ஊர்களில்
காணப்படுகிறானாம்! ஒரு மனிதன் எப்படி ஒரே சமயத்தில் ஒன்றுக்கு
மேற்பட்ட இடங்களில் தோன்ற முடியும்? சித்தர்களிடம் வித்தை பயின்ற
மந்திரவாதி என்கிறான் ஒருவன்; மற்றவன் அதை மறுக்கிறான்.
அவர்களுக்குள் குழப்பம் ஏற்படுகிறது.

ஆமாம். இவை யாவுமே இளங்கோவின் ஏற்பாடுகள். கூடியவரையில்
தன்னையொத்த உருவமுள்ளவர்களாகத் தேர்ந்தெடுத்து அவன் மூன்று நான்கு
இடங்களுக்கு அனுப்பிவிட்டான். மக்களில் பலர் இளங்கோவின் வீரத்தை
அறிந்திருந்தார்களே தவிர, அவனை நேரில் பார்த்ததில்லை. அதை இளங்கோ
நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான்.

அமைச்சர் கீர்த்தியின் வீரர்களும் ஒற்றர்களும் அவனுடைய அந்த
ஏற்பாட்டினால் ஒன்றும் புரியாமல் குழம்பிப் போனார்கள். வந்தவர்களில்
உண்மையான இளங்கோ யார்? அந்த இளங்கோக்களில் எவனைக் குறி
வைத்துப் பிடிக்க முயல்வது, எவனைப் பின்பற்றுவது? எவனை விட்டுவிடுவது?

மரத்தின்மீது பேசிக்கொண்டிருந்தவர்களில் ஒருவனுக்கு இளங்கோவைப்
பற்றிய பேச்சு முற்றியவுடன் கை கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன.
சித்தர்களிடம் இளங்கோ வித்தை பயின்றவன் என்று நம்பியவன் அவன்.

“அண்ணே! இப்படியெல்லாம் செய்கிறவன் ஞான திருஷ்டியால்
நம்முடைய இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது?
திடீரென்று இங்கே வந்து தொலைத்தாலும் தொலைத்து விடுவான்.
எனக்கென்னவோ பயமாக இருக்கிறது’’ என்றான் மிகுந்த பதற்றத்தோடு.

இதைக் கேட்டு மற்றவன் பரிகாசத்தோடு சிரித்தான். “சித்துமில்லை;
விளையாட்டுமில்லை; உன் சித்தத்தை ஒரு நிலையில் வைத்துக்கொள்’’
என்றான்.

அவன் இப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள் வடக்குத் திசையில் வெகு
தூரத்திலிருந்து, “அரோஹரா’’ என்று சிம்மக் குரல் ஒன்று எழுந்தது. அதைத்
தொடர்ந்து பல குரல்கள், “அருள் முருகா’ என்று கிளம்பின.

பயந்தவன் மரக்கிளையைப் பத்திரமாகப் பற்றிக் கொண்டு குரல் வந்த
திசையில் திரும்பினான். பயந்தவனைப் பரிகசிக்கத் துணிந்தவனோ,
“ஐயையோ!’’ என்று அலறிக்கொண்டே மரத்திலிருந்து கீழே விழுந்தான்.

பச்சை மரச் சோலைக்குள்ளிருந்து இருபது பேர்களுக்கு
மேற்பட்டவர்கள் வில், வேல், வாட்களுடன் வெளிப்பட்டார்கள். கீழே
விழுந்தவனைத் தூக்கி நிமிர்த்தி, அவனுடைய பயத்தைத் தெளிவித்து,
அவனையும் வெளியில் கொண்டு வந்தான் பயத்தை வெளியிட்டுக்
கொண்டவன். மரத்தின் உச்சியிலிருந்து மெதுவாக இறங்கி வந்த அவர்களுடைய
தலைவன், “காவடிக்கூட்டம் கதிர்காமத்துக்குப் போகிறது; பகைவர்கள்
யாருமில்லை’’ என்றான். பிறகு “வருகிறவர்களின் கண்களில் பட்டுவிடாமல்
முன்போலவே மறைந்து கொள்ளுங்கள்’’ என்று கட்டளையிட்டான்.

“இதுவும் இளங்கோவுடைய சித்து விளையாட்டாக இருந்தால்...?’’ என்று
இழுத்தான் சித்தர்களின் பக்தன்.

“எப்படியிருந்தாலும் நாம் மெதுவாய்ப் போய்க் கவனிப்போம்.
கதிர்காமத்துக்கு வரும் பக்தர்களுக்கு எந்தத் தொல்லையும் தரக்கூடாதென்பது
அமைச்சரின் கட்டளை. நம்மைப் போலவே இந்த நாட்டுப் பௌத்தர்களுக்கும்
இது கண்கண்ட தெய்வம். வருகிறவர்களுக்குத் தொல்லை கொடுத்தால்
அமைச்சர் நம்மைத் தண்டிக்காமல் விடமாட்டார்.’’

அடுத்த சில விநாடிகளில் அந்தக் கானகம் முன் போலவே மனித
சந்தடியற்றது போல் தோன்றியது. வீரர்கள் எல்லோருமே தங்களை எவ்வளவு
அதிகமாக மறைத்துக்கொண்டு பதுங்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு
அதிகமாக மறைத்துக் கொண்டு பதுங்கினார்கள்.

பக்தர்களின் ஊர்வலம் இதற்குள் அந்த இடத்தை நெருங்கிவிட்டது.
‘அரோஹரா!’ முழக்கமும், ‘அருள்முருகா!’ குரல்களும் அந்தப் பிரதேசத்து
மரங்களையே கிடுகிடுக்க வைத்தன. ஆனால் பதினைந்து இருபது பேர்களே
அந்த ஊர்வலத்தில் காணப்பட்டார்கள். வந்தவர்களில் பெரும்பாலோருடைய
தோள்கள் பெரிய பெரிய காவடிகளைச் சுமந்துகொண்டிருந்தன. வழக்கமாக
உள்ள அளவை விட இரு மடங்கு பெரிய காவடிகள்.

வன விலங்குகளிலிருந்து தப்புவதற்காக அவர்களிடம் சில வேல்களும்
இருந்தன.

கூட்டத்தின் மத்தியில் வந்து கொண்டிருந்த ஒருவனுடைய கண்கள்
மட்டிலும் ‘அரோஹரா’ குரலுடன் சுற்றி எதையோ கண்டு கொண்ட
ஆனந்தத்தில் முருகனுடைய தரிசனத்தையே பெற்றுவிட்டவன்போல், அவன்
காவடியோடு ஆடிப்பாடிச் சுழன்றான். அவனுக்கு அருகில் வந்து கொண்டிருந்த மற்றொருவன் கண்களும் அவன் கண்களும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொண்டன.

சிறிது தூரம் சென்றபிறகு அந்தக் கூட்டத்துக்குப் பின்னால் இருவர்
மறைந்து தொடர்ந்தனர். அவர்கள் தொடர்ந்து வருவதைக் கண்டும்
காணாதவன் போல் நடந்து கொண்டான் கூட்டத்துக்குள் இருந்தவன்.

பொழுது சாயும் வேளையில் பூசனைகள் முடிந்தன. பக்தர்கள்
ஆடினார்கள். பாடினார்கள். வெற்றிக்காக முருகன் அருளை வேண்டினார்கள்.

இரவில் அங்கேயே தங்கி உறங்கிவிட்டு, மறுநாள் காலையிலி
புறப்படவேண்டுமென்று பேசிக் கொண்டார்கள். கொண்டு சென்ற காவடிகள்
அனைத்தும் எங்கோ ஒரு புதருக்குள் மறைந்தன. பிறகு கோயிலுக்கு
அருகிலேயே வெளியில் உறங்கினார்கள்.

உறக்கத்தோடு உறக்கமாக, காதும் காதும் வைத்தபடி எதேதோ
செய்திகளைத் தங்களில் ஒருவனிடம் கூறினான் அந்தப் பக்தர்களின்
தலைவன். தங்களைத் தொடர்ந்து வந்தவர்கள் அடிக்கடி தங்களைக்
கவனிப்பதையும் கவனித்துக் கொண்டான். பிறகு அவர்கள் தங்கள்
உதடுகளைப் பிதுக்கிக் கொண்டு சொல்வதையும் பார்த்து விட்டு, மெல்லக்
கூட்டத்திலிருந்து நழுவினான். அவனைத் தொடர்ந்து மற்றொருவனும்
சென்றான்.

மறுநாள் காலையில் பக்தர்களின் கூட்டம் வந்தவழியே திரும்பியது.
அவர்களின் எண்ணிக்கையில் இருவர் குறைந்ததை யாருமே
பொருட்படுத்தவில்லை. அவர்களைக் கண்காணித்தவர்களும் காணத்
தவறிவிட்டார்கள்.

திரும்பும் வழியில் வழிப்போக்கர்களைப் போல் இரு பாண்டிய
ஒற்றர்களும் அவர்களுடன் கலந்து கொண்டு சிறிது தூரம் வந்தார்கள்.
“உங்கள் பூசையெல்லாம், முடிந்ததா!’’ என்று கேட்டான் அவர்களில் ஒருவன். “ஒரு பூசையை முடிக்க வந்தோம். ஆனால் கதிர்காம வேலனுக்கு இது
போதவில்லையாம்; இன்னொரு பூசை வேண்டுமென்கிறார்; சூரசம்ஹாரம்
செய்ய வேண்டுமாம்.’’

“அதைத்தான் அவரே முன்பு செய்து முடித்துவிட்டாரே!’’


இதைக்கேட்டுக் காவடி தூக்கி வந்தவர்களில் ஒருவனான சோழநாட்டு
வீரன் பாண்டிய நாட்டு வீரனைப் பார்த்துப் பரிகாசமாய்ச் சிரித்தான்.
“சம்ஹாரம் செய்துவிட்டால் போதுமா? தமிழ்நாட்டில் விழாக்
கொண்டாடுகிறார்களாமே, அதைப்போல் இங்கேயும் கொண்டாட
வேண்டாமா? நேற்று என் கனவில் தோன்றி இதைத்தான் கட்டளையிட்டுப்
போயிருந்தார்.’’

“நீங்கள் அதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?’’

“உங்களுக்குச் சொந்த ஊர் கதிர்காமம்தானே? பொறுத்திருந்து
பாருங்கள். பெரிய திருவிழா அது!’’

ஒற்றர்கள் இருவரும் மெல்லக் கூட்டத்திலிருந்து விலகிக் கொண்டார்கள்.
“நேற்றிலிருந்து நாம் வீணாக இவர்கள் பின்னால் அலைந்துதான் மிச்சம்’’
என்றான் ஒருவன்.

“இவ்வளவு தூரம் நாம் போயிருக்க வேண்டாம். யாரைக் கண்டாலும்
கொடும்பாளூரானின் ஆளாக நமக்குத் தோன்றுகிறது’’ என்றான் மற்றவன்.

கொடும்பாளூர் இளங்கோவும் மல்லர் தலைவன் மாங்குடி மாறனும்
அப்போது தாங்கள் கொண்டுவந்த காவடிகளை நன்றாகப் பத்திரப்படுத்தி
வைத்துவிட்டு, காட்டுக்குள் எங்கோ நெடுந்தொலைவு நடந்தார்கள். காவடிக்
கூட்டத்தின் தலைவனாக வந்த இளங்கோவும் அவன் துணைவனான மாறனும்
எப்படியோ தலைமறைவாய்ப் போய் விட்டார்கள்.

சந்தடி செய்யாமல் வெகுதூரம் நடந்த பிறகு, ஒரு மரத்துக்குப் பின்னால்
மறைந்துகொண்டு, மாறனுக்கு ஒரு சிறு குன்றிருந்த திசையைச்
சுட்டிக்காட்டினான் இளங்கோ. மாங்குடி மாறனின் கண்கள் வியப்பால்
விரிந்தன.

தொடரும்

Comments