வேங்கையின் மைந்தன் ( பாகம் 3 , 3. அருள்மொழியின் தங்கை

பாகம் 3 , 3. அருள்மொழியின் தங்கை 


சோழபுரத்தில் மாலைப்பொழுது, கோயிலின் பிரகாரத்துக்குள்ளிருந்த
சிங்கமுகக் கிணற்றின் மேடை மீது கொடும்பாளூர்ப் பெரிய வேளார் மன
மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் படிக்கட்டில் உட்கார்ந்து
அவருடன் ஏதோ உரையாடிக் கொண்டிருந்தார் சிற்றம்பலச் சிற்பியார்.

அவர்களைச் சுற்றிலும் உருவாகிக் கொண்டிருந்த புதிய நகரமும்
அருகில் எழும்பிக் கொணடிருந்த கோயில் கோபுரமும் அவர்களிடம் அமைதி நிறைந்த ஆனந்த உணர்வைத் தூண்டிய வண்ணம் இருந்தன.

வருங்கால மக்களுக்காக அவர்கள் நகரெங்கும் நட்டு வைத்திருந்த மரக்
கன்றுகளின் பசுமைபோல் அவர்கள் உள்ளத்திலும் பசுமை பொங்கியது. புதிய
வீடுகள், புதிய மாளிகைகள், புதிய மதிற்சுவர்கள், புதிய கோயில்கள்-புதிய
வாழ்வின் அடித்தளங்கள் அங்கே மேலெழும்பிக் கொண்டிருந்தன. தங்களது
முதுமைப் பருவத்தையும் தங்களுக்குள்ளிருந்த பிற வேற்றுமைகளையும் மறந்து
இரு இளைஞர்களைப் போன்று அவர்கள் மிக மிக உற்சாகமாய்ப் பேசிக்
கொண்டிருந்தனர்.

கோயிலின் மற்றொரு பிரகாரத்தின் வழியே சிற்பங்களையும்
சிற்பியர்களையும் வேடிக்கை பார்த்தவண்ணம் நடந்து வந்தனர், நரேந்திரனும்
அம்மங்கை தேவியும். அம்மங்கை தேவியின் கண்களில் அளவற்ற குதூகலம்
குடிகொண்டிருந்ததால், அவள் நரேந்திரனுக்கு ஒவ்வொரு சிற்பமாகக் காட்டிக்
குதிக்கத் தொடங்கினாள். அவன் அருகிலிருந்ததால், அவள் பார்த்த
ஒவ்வொரு காட்சியிலுமே அவளுக்கு இன்பம் ததும்பிக் கொண்டிருந்தது.

நரேந்திரனோ, ‘நல்ல விளையாட்டுப் பெண் இவள்!’ என்று
நினைத்தபடியே அவளுடைய மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறவன்போல்
நடித்துக்கொண்டு வந்தான். துடுக்கு மிக்க சிறுமிகளுடன் பொழுது
போக்குவதில் ஒரு தனி உற்சாகம் பிறக்கத்தான் செய்கிறது. அதே
உற்சாகம்தான் அப்போது நரேந்திரனுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

தஞ்சையிலிருந்து நரேந்திரன் பழையாறைக்குக் கிளம்பியவுடன்
அருள்மொழியும் அவனுடன் வரக்கூடுமென்று எதிர்பார்த்தான்.
அருள்மொழிக்குப் பதிலாக அம்மங்கை தேவி புறப்பட்டாள்.
பழையாறையிலிருந்துவிட்டு அவர்கள் இப்போது புதிய நகரத்தைப்
பார்ப்பதற்கு வந்திருந்தார்கள்.

பழையாறையிலிருந்தபோதே அம்மங்கை தேவியிடம் ஒரு முக்கியமான
செய்தியைத் தெரிவிக்க விரும்பினான் நரேந்திரன். ஆனால் பல முறைகள்
முயற்சி செய்தும் அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. விவரம்
தெரிந்துகொள்ள முடியாத சிறுமி அவள் என்ற எண்ணம் அவனுக்கு! மேலும் அவள் அவனிடம் கலகலப்பாகப் பழகியதாலேயே அவனுக்கு அதைச் சொல்ல மிகவும் தயக்கமாக இருந்தது.

விஷயத்தைக் கேட்டுவிட்டு அவள் கைகொட்டிச் சிரித்தால் என்ன
செய்வது? எல்லோரிடமும் சொல்லி அவனைப் பரிகாசப்படுத்தினால் என்ன
செய்வது?

“தேவி! நம்மோடு நங்கையாரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக
இருந்திருக்கும்’’ என்றான் நரேந்திரன்.

“ஏன், இப்போது மட்டிலும் நன்றாக இல்லையா?’’ என்று கேட்டு
நகைத்தாள் அம்மங்கை.

“உங்களுடைய சிரிப்பும் கலகலப்பும் அவர்களிடம் கிடையாது. நானும்
ஊரிலிருந்து வந்ததிலிருந்து பார்க்கிறேன், பழைய நாட்களைப் போல்
அவர்கள் என்னிடம் நெருங்கிப் பழகுவதே இல்லை.’’

“அந்தக் கவலை இப்போது உங்களுக்கு எதற்கு? அவர்களை
நினைத்துக் கவலைப்படவா நாம் இங்கு வந்திருக்கிறோம்?’’

இப்படி விளையாட்டாய்ப் பேசுகிறவளிடம் எப்படி வினயத்துடன்
பேசுவதென்று தெரியாமல் தவியாய்த் தவித்தான் நரேந்திரன். துடுக்குத்தனம்
இவ்வளவு மிகுதியாக இல்லாமல், ஓரளவு குறைந்திருக்கக்கூடாதா என்றும்
ஏங்கினான்.

சிங்கக் கிணற்றுக்குப் பின்புறமாக அவர்கள் வந்து கொணடிருந்ததைப்
பெரிய வேளாரோ, சிற்பியாரோ கவனிக்கவில்லை. வந்தவர்கள் இருவரும்
சட்டென்று நின்றார்கள். பெரிய வேளாரிடம் பறந்து செல்லத் துடித்தவளைத்
தடுத்து நிறுத்தினான் நரேந்திரன். சைகை செய்து அவளை மௌனமாக
இருக்கும்படி வேண்டினான்.

“தெய்வத் திருவருள் எப்படி இருக்கிறதோ தெரியாது! ஆனால் நான்
என் குமாரனுக்கு மகுடம் சூட்டிவிட்டு, சோழபுரத்துக்கே வந்துவிட
நினைக்கிறேன்’’ என்று சிற்பியாரிடம் கூறிக்கொண்டிருந்தார் பெரிய வேளார்.

இளங்கோவை அந்த நாடு முழுவதும் புகழ்வதைச் சொல்லிச் சிற்பியார்
வேளாரிடம் பெருமைப்பட்டுக்  கொண்டிருந்தார். தாம் கேள்வியுற்ற அவனுடைய வீரதீர பராக்கிரமச் செயல்களைச் சொல்லி, “இப்போது இளவரசர் எங்கே இருக்கிறார்!” என்று
கேட்டு வைத்தார்.

பெரிய வேளார் பெரியதொரு பொய்யைச் சொல்லவேண்டிய கட்டம்
வந்துவிட்டது. “அவனா? அவனைப் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி
வைத்திருக்கிறேன்’’ என்று ஏதோ கூறி மழுப்பி வைத்தார்.

“ஊரெங்கும் பரவியுள்ள செய்தி என் செவியிலும் விழுந்தது.
சக்கரவர்த்திகளின் மூத்த புதல்வியாரைத்தானே இளவரசர் மணம்
செய்துகொள்ளப் போகிறார்?’’

பெரிய வேளார் சிறிது நேரம் யோசித்தபின்பு, “இருக்கலாம்.
என்னுடைய எண்ணமும் அதுதான். ஆனால் சக்கரவர்த்திகளின் கருத்து
எப்படி இருக்கிறதோ? தெய்வத்திருவுள்ளம் எப்படி இருக்கிறதோ?’’ என்று
முடித்தார்.

இதுவரையில் உற்றுக் கேட்டுக்கொண்டிருந்த நரேந்திரன் இதற்குமேல்
கேட்க விரும்பாமல், பரபரவென்று அம்மங்கை தேவியை வேறு ஒரு பக்கம்
இழுத்துக்கொண்டு சென்றான். மரநிழலில் செதுக்கிக் கிடந்த கருங்கற்பாறை
மேல் இருவரும் உட்கார்ந்தார்கள். அருகில் யாருமில்லை. சிறு தொலைவில்
சுற்றிலும் கூட்டமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

“தேவியாரே! இத்தனை பேர்கள் கூட்டத்துக்கு மத்தியில் நமக்குக்
கிடைத்த தனிமையில், நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியைச்
சொல்லப் போகிறேன்’’ என்று மெதுவாகத் தொடங்கினான் நரேந்திரன்.

திடீரென்று அவன் அவளிடம் காண்பித்த பற்றுதலும் பரபரப்பும்
அம்மங்கை தேவிக்குப் பெருவியப்பைத் தந்தன. ‘தமது குமாரனின்
திருமணத்தைப் பற்றிப் பெரிய வேளார் பேசிய பேச்சு இவருக்குத் தமது
திருமண நினைவை ஏற்படுத்திவிட்டது போலும்!’ என்று நினைத்தாள்.

‘பல நாட்கள் தனிமை கிடைத்தும் அதைச் சொல்லாமலிருந்துவிட்டு,
இப்போது தொடங்குகிறாரே - என்றாலும் இப்போதாவது மனம் வந்ததே’
என்று எண்ணி அவனருகில் மிகவும் நெருங்கி உட்கார்ந்தாள் அம்மங்கை.

“சொல்லுங்கள்!” என்றாள் தலையைக் குனிந்து கொண்டு.

“மிகவும் முக்கியமான விஷயம். மிகவும் இரகசியமான விஷயம்.
எத்தனையோ முறை உங்களிடம் பேச நினைத்தேன். ஆனால் ஏனோ எனக்கு
மனம் துணியவில்லை.’’

முகத்தை உயர்த்தி நரேந்திரனை ஆவலுடன் நோக்கினாள் அம்மங்கை.
அளுடைய கண்கள் அவனை ஆவலுடன் கேட்டன. பிறகு, ‘என்ன சொல்லப்
போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்’ என்று அவைகளே
சொல்லிக்கொண்டன.

“வேறு யாரிடமும் இதைச் சொல்ல மாட்டீர்களே! கேட்டுவிட்டு
என்னைப் பரிகாசம் செய்யமாட்டீர்களே!”

“ஊஹு ம்’’ என்று தலையாட்டினாள் அம்மங்கை.

அதற்குப் பிறகும் அவன் சொல்வதற்குத் தயங்கவே, அவன்மீது
அவளுக்குச் சினம் பொங்கிக்கொண்டு வந்தது. ‘நீங்கள் வேங்கியிலிருந்து
தஞ்சைக்கு வந்தது முதல் இது போன்ற ஒருநாளைத்தான் எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறேன். இனியும் என்னைத் தவிக்க விடாமல் உங்கள் மனதில்
இருப்பதை வெளியிட மாட்டீர்களா?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்
அவள்.

“உங்களுக்கும் வயதாகிறது; நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள்...’’

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துப் பொறுமையிழந்த அம்மங்கை,
“நீங்கள் சொல்ல விரும்புவதை நான் கிழவியான பிறகு சொல்கிறீர்களா?’’
என்று வினயத்தோடு கேட்டாள்.

துணிவு பிறந்துவிட்டது நரேந்திரனுக்கு. இரண்டு மூன்று முறை
தொண்டையைக் கனைத்துக்கொண்டே, “நான்...நான்...வந்து...வந்து...’’ என்றான்.

“நீங்கள் வந்து...?’’

பரிதாபமாக அவன் விழித்தான்; தடுமாறினான்.

“நானே சொல்லி விடட்டுமா?’’

“உங்களுக்கே தெரியுமா, தேவி?’’

“பாவம்! ஒன்றும் தெரியாத சிறுமி என்றா என்னை நினைத்துக்
கொண்டீர்கள்? நீங்கள் வந்து... நீங்கள்.... வந்து... உங்களுடைய தந்தையாரின்
அடிச்சுவட்டைப் பின்பற்றப் பார்க்கிறீர்கள். அவர் என்னுடைய அத்தை சிறிய
குந்தவியாரைத் தமது நாட்டுக்கு அரசியாக்கியது போல் நீங்களும் செய்ய
விரும்புகிறீர்கள்.’’

சொல்ல முடியாமல் சொல்லிவிட்டு, நாணித் தலை கவிழ்ந்தாள்
அம்மங்கை.

“ஆஹா! என் மனத்திலிருப்பதை எப்படியோ கண்டு பிடித்து
விட்டீர்கள்’’ என்று குதித்தான் நரேந்திரன். “அதற்கு நீங்கள் ஓர் உதவி
செய்ய முடியுமா?’’

“இளவரசே! என்னிடம் உதவி கேட்கலாமா நீங்கள்? என்னிடம்
உங்களுக்கில்லாத உரிமை வேறு யாருக்குமே கிடையாது இளவரசே!”

“தேவியாரே! மிகவும் நன்றி! மிக மிக நன்றி!” என்று சொல்லி விட்டு,
“நீங்கள்தாம் எனக்காக உங்கள் தமக்கையாரிடம் தூது செல்ல வேண்டும். என்
மனதில் இருப்பதை நீங்கள் தாம் அவர்களிடம் எடுத்துச்சொல்லவேண்டும்’’
என்று கூறினான் நரேந்திரன்.

கீழே கிடந்த கற்பாறை வானத்தில் எழும்பி அம்மங்கையின் தலையில்
படீரென்று விழுவது போலிருந்தது. அவள் பொறி கலங்கிப் போனாள்.

நரேந்திரன், அவள் தன்னைப் பரிகசிப்பாள், தன்னைப் பார்த்து
நகைப்பாள், கைகொட்டிச் சிரிப்பாள் என்றெல்லாம் எதிர்பார்த்தான். அவள்
ஒன்றுமே செய்யவில்லை. சரேலென்று தன் தலையை மட்டிலும் வேறுபுறம்
திருப்பிக் கொண்டாள்.

“என்ன சொல்கிறீர்கள், தேவி?’’

ஒரே ஒரு விம்மல் அவள் இருதயத்தைப் பிளந்து கொண்டு வெளியே
வந்தது.

“தேவியாரே!” என்று பதறினான் நரேந்திரன்.

“தமக்கையாரிடம் கூறி விடுகிறேன், இளவரசே! கட்டாயம்
கூறிவிடுகிறேன்’’- சிறுமியாக இருந்த அம்மங்கை அதே கணம் சிவனடி
சேர்ந்து, மறுபிறவியும் எடுத்து விட்டாள்.

தொடரும்

Comments