சிங்கிணி நோனாவும் ஆத்தாடி பாவாடையும்...!-பத்தி.



எமது குழந்தைப் பருவத்தை யாராலும் மறக்க முடியுமா? இல்லைத் தானே! நாம் சிறுவர்களாக இருக்கும் போது நாம் செய்த குறும்புகள் எவையுமே என்றுமே எம் மனதை விட்டு அகலாது! அது போல, நாம் உடுத்திய உடைகள், பழகிய நண்பர்கள், பாடிய பாடல்கள் என்று எவையுமே மறக்க முடியாதவை! இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்வது நாம் சிறிய வயதில் பாடித் திரிந்த பாடல்கள் பற்றி!

நான் சிறுவனாக இருக்கும் போது, எங்கள் வீட்டில் நிற்பதில்லை! அம்மம்மா வீட்டில்தான் போய் நிற்பேன்! அங்கு மாமாக்கள், சித்திமார், அத்தைமார் எல்லோரும் நிற்பார்கள்! என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர்கள், மச்சாள்மார், மச்சான்மார் என்று எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம்! அப்போது நாங்கள் பல பாடல்கள் படிப்போம்!வட்டமாக சப்பாணி கட்டிக்கொண்டு கீழே இருந்து ஒருவரது தோளில் கைபோட்டுக்கொண்டு சாய்ந்து சாய்ந்து ஒரு பாட்டு பாடுவோம்! வலப்பக்கம் தீபா மச்சாளும், இடப்பக்கம் கௌரி மச்சாளும் இருக்க, நான் நடுவிலே இருந்து, அவர்களது தோளிலே கைபோட்டுக்கொண்டு ( ஹி ஹி ஹி சின்ன வயசில மட்டும்தான்! ) ஒரு பாட்டுப் படிப்போம்!

“ சிங்கிணி நோனா சந்தனக் கட்டி
அப்போ டிப்போ யார் கோ”

இந்தப் பாடலை பின்னர், கை மடக்கி விளையாடும் ஒரு விளையாட்டுக்கும் பயன்படுத்துவோம்!

இன்னொரு பாடல்!

“ குமார் குமார் லைட் அடி
கோழிக் குஞ்சுக்கு லைட் அடி
எத்தினை ரூபா சம்பளம்
பத்து ரூபா சம்பளம்”

இதுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாது! ஆனால் படிப்போம்! அதுபோல இன்னொரு பாட்டு, பாடப்புத்தகத்திலே இருந்தது,

“ என்ன பிடிக்கிறாய் அந்தோனி
எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே
பொத்திப் பொத்திப் பிடி அந்தோனி
பூறிக்கொண்டோடுது சிஞ்ஞோரே”

இப்படியே பாடிப் பாடி விளையாடிக் கொண்டு இருக்கும் போது, யாராவது வெடி விட்டு விடுவார்கள்! நாங்கள் எல்லோரும் மூக்கைப் பொத்துவோம்! விட்டவர் மூக்கைப் பொத்தினால், மூக்கிலே கட்டி வரும் என்று வெருட்டி வைத்திருப்போம்! அதனால் விட்டவர் மூக்கைப் பொத்துவதா விடுவதா என்ற குழப்பத்தில் இருப்பார்! உடனே நாம் அவரை இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம்! இதற்கும் ஒரு பாட்டும் வைத்திருக்கிறோம்! அதாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் ( வெடி விட்டவர் ). அதற்கு அடையாள அணிவகுப்பு நடத்துவது போல, நாமும் எல்லோரையும் அருகில் அழைத்து, அதில் ஒருவர், பின் வருமாறு பாடுவார்,

“ சுட்ட பிலாக்காய் வெடிக்க வெடிக்க
சூடும் பாலும் வத்த வத்த
நானும் கடவுளும் சிரிக்கலாம்!
மற்றவர்கள் சிரிக்க கூடாது!”

இப்படிச் சொன்னவுடன் யாருமே சிரிக்காமல் வாயைப் பொத்திக்கொண்டு, இருப்போம்! இதில் வெடி விட்டவருக்கு சிரிப்பை அடக்க முடியாமல் இருக்கும்! பெரிய கஷ்டப்பட்டு அடக்குவார்! அல்லது சிரித்தே விடுவார்! உடனே நாம் அவரை மிக இலகுவாகக் கண்டு பிடித்து விடுவோம்!
மேலும்,

“ நெய் நெய் நெய்
அரைப்போத்தல் நெய்
கட்டப்பொம்மன் சொன்னதெல்லாம்
பொய் பொய் பொய்”

என்று ஒரு பாட்டுப் பாடுவோம்! இதிலே கட்டப்பொம்மன் என்பது யாரைக் குறிக்கும்? ஒருவேளை வீரபாண்டிய கட்டப்பொம்மனைக் குறிக்குமோ? ஹா ஹா ஹா எங்களுக்கு விபரம் தெரியாது! ஆனாலும் பாடுவோம்!


இந்தப் பாடல்கள் எல்லாம் பாடி முடிந்து ஓரளவு வளர்ந்து 7 , 8 வயது வந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக சினிமாப் பாடல்கள் பக்கம் எமது கவனம் திரும்பும்! சினிமாவிலே வரும் வேடிக்கையான பாடல்கள் முதலில் எம்மைக் கவரும்! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது!

“ ராதே என் ராதே வாராதே” என்று ஒரு பாட்டு! அதிலே ஒரு பொம்மையும் சேர்ந்து பாடும்! நாங்கள் அந்தப் பொம்மை போலப் பாடி மகிழ்வோம்! எப்போது வானொலியில் அந்தப் பாடல் வரும் என்று காத்திருந்துவிட்டு, ஓடிப்போய் கேட்போம்! அது ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் இடம்பெற்ற பாடல் என்றும் அதில் நடித்தவர் கமல்ஹாசன் என்றும் அப்போது எமக்குத் தெரியாது!

இன்னொரு பாடல் “ ஆத்தாடி பாவாடை காத்தாட” என்று ஆரம்பிக்கும்! அந்தப் பாடல் காட்சி இன்றும் நன்றாக நினைவிருக்கிறது! கதாநாயகி குளிப்பார்! கதாநாயகன் எட்டி எட்டிப் பார்த்து பாட்டுப் படிப்பார்! நான் அம்மாவிடம் போய் “ அம்மா... அந்த அன்ரி குளிக்கிறத அந்த மாமா எட்டிப் பார்க்கிறார்” என்று முறைப்பாடாகச் சொன்னேனாம்! அம்மா சொன்னாராம் .

“ அந்த மாமாவுக்கு அப்பா அடிபோடுவார்! நீங்கள் போய்ப் படியுங்கோ” என்று! பெரியவனாக வளர்ந்த போது, அந்தப் பாடலில் நடித்தவர் முரளி என்று தெரிய வந்தது! முரளியையும் பிடித்துப் போனது !

அந்தக் காலத்தில் இந்தப் பாட்டு வானொலியில் போனால் நாம் மிகவும் ரசித்துக் கேட்போம்! கூடவே சிரிப்பும் வரும்! பின்னொரு நாளில் எனது மச்சாள் குளிக்கும் போது நான் எட்டிப்பார்த்து, அம்மம்மாவிடம் அடி வாங்கியதை இன்று வரை மறக்கவில்லை!

பாருங்கள் அந்தக் காலத்திலேயே சினிமா சிறுவர்களாகிய எம்மை எந்தளவு பாதித்துள்ளது என்று! நடிகர் முரளி காலமானபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தது இந்தப் பாடலும், மச்சாளை எட்டிப் பார்த்த அந்த சம்பவமும் தான்! இப்பாடலில் முரளியுடன் வருபவர் நடிகை குயிலி!

நன்றி : http://www.eelavayal.com/2011/12/blog-post_19.html 

கோமகன்
06 கார்த்திகை 2012








 

Comments