வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு! -இலக்கிய ரசம்.



மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்..

மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம்
அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம் அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம். அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை.

இது சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் முன்னர்...

ஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை விளங்குகிறது. இச்சிந்தனை அக்கால மக்களின் அறிவுக்கு எட்டிய வேதியியல் சிந்தனையாகவே எனக்குத் தோன்றுகிறது.

கால காமாகவே பெண்கள் ஆண்களைத்தாக்கப் பயன்படுத்தி வரும்
ஆயுதம் - கண்கள்!


தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு (குறள் 120)
என்பார் வள்ளுவர்...

தீயினால் சுட்டபுண் , நாவினால் சுட்டவடு இவ்விரண்டோடும் ஒப்பு நோக்கத்தக்கதே இந்த வலியும்..

இதோ அடிபட்ட ஒரு ஆணின் புலம்பல்.. கண்களுக்கு மைபோடும் பெண்ணைப் பார்த்து சொல்லப்பட்ட கவிதை..


என்னைக் கொல்வதற்கு

உன் விழிகளே போதுமே

எதற்கு அதில் விசம் தடவுகிறாய்

கவிஞர் மீரா அவர்கள் எழுதிய மறக்கமுடியாத கவிதை


நீ முதல் முறை என்னை

தலைசாய்த்துக்

கடைக்கண்ணால் பார்த்தபோது

என் உள்ளத்தில்

முள் பாய்ந்தது

அதை இன்னும் எடுக்கவில்லைமுள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்

எங்கே

இன்னொருமுறை பார்..



சீனக் கவிதை ஒன்று..

“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்

முத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு

வீரன் கத்தியால் கொல்லுவான்

ஆனால் இப்பெண்கள் கண்களால்”

என்ன நண்பர்களே இந்தக் கவிதைகளுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை தெரிகிறதா? இது போன்ற கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது நம்ம வள்ளுவரின் குறள் தான்.

இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.
(குறள்110)

வள்ளுவரின் இந்தக் குறளைப் படிக்கும் போதெல்லம் நினைவுக்கு வருவது..
இந்தக் குறுந்தொகைப் பாடல் தான்.

பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லோரும் அறிய நோய் செய்தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்
பரிஇ வித்திய ஏனல்
குரிஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே! 


குறுந்தொகை -72
மள்ளனார்
தலைவியின் நினைவாலேயே வாடும் தலைவனின் உடலில் நிறைய மாற்றங்கள் அதனைக் கண்டு என்ன ஏது? என்று வினவுகிறான் பாங்கன். அதற்குத் தலைவன் சொல்கிறான்..

இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோள்களையும் உடைய பெண்ணொருத்திதான் எனது இந்த நிலைக்குக் காரணம. அவள் பெரிய மலைப் பகுதியில் குருவிகளை ஓட்டுபவள்.. குளிர்ச்சியைத் தருகின்ற பெரிய கண்களைக் கொண்டவள்.. அவளை நான் காண்கின்றபோது அவள் கண்கள் அழகான தாமரை மலர் போலக் காட்சியளிக்கும்! அதே நேரம் அவள் என்னைக் காண்கின்ற போது அவள்கண்கள் கொடிய அம்பைப் போலவே என்னைத் தாக்கி வருத்தும். அதனால் மலர் போன்ற கண்களால் அம்பு தைத்தது போன்ற நோயினை அவள் எனக்குத்தந்தாள் அதுதான் என் உடலில் இவ்வளவு மாற்றம் என்கிறான் தலைவன்.

இதோ இந்தச் சாயல் கொண்ட திரையிசைப்பாடல்..


நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

காணும் வரை நீ எங்கே நான் எங்கே

கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன

பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்

தாமரை மலரைக் கண்டேன்

கோவை போல் இதழைக் கண்டேன்

குங்குமச் சிமிழைக் கண்டேன்

வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று வரை) 

முனைவர் இரா.குணசீலன்




































Comments