தாலாட்டுப் பாடத்தெரியுமா?-பத்தி.




தாயின் கருவறையில் இருக்கும்போது அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது. குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை!

நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்.. நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது.

முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்..
அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி...
என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும் தாலாட்டுக்கு இதுவே பரவாயில்லை' என்று எண்ணித் தூங்கிப்போகின்றன.

இதோ நானறிந்த தாலாட்டு..

ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..

ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே, என் கண்மணியே

அடிச்சாரைச் சொல்லி அழு
ஆராரோ ஆரிராரோ

என் கண்ணே உறங்கு..

கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு

ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..

இப்படி ஒரு தாலாட்டு என்பது தன் உறவுகளையும், நல்லபழக்கவழக்கங்களையும், பண்பாடுகளையும்,மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும்.

மேலும் சில ......................

01 காடு வெட்டி நாடாக்கி...

ராராரோ ராராரோ
ராரி ரேரோ ராராரோ

காடு வெட்டி நாடாக்கி
கழனியெல்லாம் கதிராக்கி
நாடுபெற்று வருவார்கள்
ராசாவோ உங்களய்யா
வெற்றி பெற்று வருவார்கள்
வீமரரோ உங்களய்யா
செம்பொன் வெட்டி தூண் நிறுத்தி
சீனி கொண்டு கால் நாட்டி

கம்ப மகள் சேனையர்க்கு- என் அய்யா நீ
கைக்குதவ வந்தவனோ
கொம்பனையா வாசலுக்கு என் அய்யா நீ
கொண்டுவிக்க வந்தவனோ
கண்ணான கண்ணே
கண்மணியே கண்ணுறங்கு

ராரா ரோ! ராரி ரரோ!
ராரி ரரோ! ராரா ரோ!

02 ராராட்டத் தூணசைய...

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிரேரோ ராராரோ

ராராட்டத் தூணசைய
ராமர் கையில் அம்பசைய
அம்பு முழுதசைய
ஆளப்பிறந்தவனோ

வில்லு முருகசைய
விளங்கப்பிறந்தவனோ
சங்கு முழங்க சமுத்திரத்தில்
மீன் முழங்க
எங்கும் முழங்கவென்று
எழுந்தருளி வந்தவனோ

சரியாய் முழங்கவென்று
தாயிடத்தில் வந்தவனோ
பிள்ளைக்கலி தீர்க்க வந்த
பெருமானும் நீ தானோ

மனக்கவலை தீர்க்க வந்த
மாமணியும் நீதானோ
எங்கள்குறை தீர்க்க வந்த
இந்திரனும் நீ தானோ

ராராரோ! ராரிரரோ!
ராரிரரோ! ராரோ!

03 ஏலம்பூ வாய் நோக..

ராரா.. ரோ ராரா.. ரோ
ராரி.. ரேரோ... ராரா ..ரோ..

ஏலம்பூ வாய் நோக
ஏனழுதான் என்னரியான்
பாலுக்கழுதானோ
பவள வாய் பொன் சொரிய

தேனுக்கழுதானோ
செம்பவள வாய் நோக
கரும்புக்கழுதானோ
கற்கண்டு வாய்நோக

அரசோ நவமணியோ
உன் அங்கமெல்லாம் தங்க மயம்
கனிமொழிந்த வாயாலே
உன் கண்ணிலிட்ட மை கரைய

ஆளப்பிறந்தவனே அழுகிறதும்
உன் முறையோ
அழுதால் அமுதுண்கான்
ஆட்டினால் கண் துஞ்சான்

மசன்டையில அமுதிடுங்கள்
மகராசா பேரனுக்கு

பகலோடு அமுதிடுங்கள்
பாண்டியனார் பேரனுக்கு
பொழுதோடு அமுதிடுங்கள்
புண்ணியவார் பேரனுக்கு

தாங்கத் தடுக்கிருக்கு உனக்கு
தங்கத்தால் ஆன தொட்டில்
ஏந்தத் தடுக்கிருக்கு உனக்கு
ஏந்திழையார் தாலாட்ட

கண்ணோ கமலப்பூ
உன் காதிரண்டும் தாமரப்பூ
மேனி மகிழம்பூ என் கண்ணே
மெல்ல நீ கண்ணுறங்கு

ராரோ ராரோ என் கண்ணே
ராரி ராரோ ராரோ

04 அச்சடிக்கப்பொன் விளைய...

ராராரோ ராராரோ என்னய்யா
ராரிரேரோ ராராரோ

அச்சடிக்கப்பொன் விளைய
ஆதிச்சார் உன் தேசம்
வைத்திருக்கத் தந்தமகன்
நீ.. ஆளுவாய் நூறு குடி

பூப்பூத்த கோயிலிலே
பொன்னூஞ்சல் ஆடுதுன்னு
மாற்றுயர்ந்த பூ முடியான்
மாலைக்கழுதாயோ

ஆறாரும் அந்தணரும்
அப்போ வருங்கிளையும்
தாயாரும் சேனைகளும்
தழைக்கவென்று வந்தாயோ!

பெத்தாரும் சேனைகளும்
பெருகவென்று வந்தாயோ!
மாதாவும் சேனைகளும்
மகிரவென்று வந்தாயோ!

செம்பொன் நல்ல தேரேறி
சேர நல்ல பொன் கொண்டு
மாலை நல்ல நேரத்தில்
வருவார் மருமகனோ (ராராரோ…)

05 தேனோ திரவியமோ...

ராராரோ ராரிரேரோ
ராரிரேரோ ராராரோ

தேனோ திரவியமோ
தெவிட்டாத தெள்ளமுதோ
கட்டிக்கரும்போ
கற்கண்டோ சக்கரையோ
மாசி வடுவோ
வைகாசி மாம்பழமோ

கோடைப்பலாச்சுளையோ
குலை சேர்ந்த மாங்கனியோ
கொஞ்ச வந்த ரஞ்சிதமோ
குறையில்லா சித்திரமோ

சங்கரா உன் காவல்
சங்கடங்கள் நேராமல்
சாத்தையா உன் காவல்
காத்திடுவாய் எங்கள் குலம்

வேலவா உன் காவல்
வேறு வினை வாராமல்
சொக்கையா உன் காவல்
சொப்பனங்கள் தட்டாமல்

கருப்பையா உன் காவல்
கண்ணேறு வாராமல்
கண்ணேறு வாராமல்
கற்பூரம் சுத்திடுங்கள்

வெண்ணீறு இட்டிடுங்கள்
விளக்கெடுங்கள் திட்டி சுத்த
சுண்ணாம்பும் மஞ்சளுமாய் திட்டி
சுத்திடுங்கள் சுந்தரர்க்கே

06 தூங்காத கண்ணுக்கு.........

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ

கண்ணுக்கோ கண்ணெழுதி
கடைக்கண்ணுக்கோ மையெழுதி
தூங்காத கண்ணுக்கு
துரும்புகொண்டு மையெழுதி

உறங்காத கண்ணுக்கு
ஓலை கொண்டு மையெழுதி
அன்னம் எழுதி என் கண்ணே
அதன் மேல் புறாவெழுதி
தாரா எழுதி என் கண்ணே
தாய் மாமன் பேரெழுதி

கொஞ்சு கிளியெழுதி என்கண்ணே
குட்டி அம்மான் பேரெழுதி
அஞ்சு கிளி எழுதி என்கண்ணே
அய்யாக்கள் பேரெழுதி
பச்சைக் கிளி எழுதி என் கண்ணே
பாட்டன்மார் பேரெழுதி

ராராரோ ராராரோ என் கண்ணே
ராரிராரோ ராராரோ…

07 நாழிச்சிறு சலங்கை ..........

நாழி சிறு சலங்கை
நல்லபவுன் பொன்சலங்கை
ஒழக்கு சிறு சலங்கை
ஒசந்த பவுன் பொன்சலங்கை
பதக்கு சிறு சலங்கை
பழைய பவுன் பொன்சலங்கை

வெள்ளி சிறு சலங்கை
வெலை மதியா வீரதண்டே
சொல்லிச் சமையுதங்கே
சோழரோட வீரதண்டே

பண்ணிச் சமையுதங்கே
பாண்டியனார் வீரதண்டே
ஆருக்கிடுவோமுன்னு
தேடித்திரிகையிலே

எனக்கிடுங்கள் என்று சொல்லி
எதிர் கொண்டு வந்தா(ளோ)னோ
தனக்கிடுங்கள் என்று சொல்லி
தானோடி வந்தா(ளோ)னோ

ராராரோ ராராரோ
ராரிராரோ ராராரோ


நன்றி : http://thalatu.blogspot.in/

Comments