கொட்டாவி விட்ட காக்கை!-இலக்கிய ரசம்.



அஃறிணை உயிரினங்களை அதிகமாக உற்றுநோக்குபவர்கள் கவிஞர்கள் தான் என்பது என் கருத்து. இதோ ஒரு கவிஞனின் ஒப்பீட்டைப் பாருங்களேன்..

அழகியதொரு கடற்கரைச் சோலை..
ஆங்கே வலிமையான காற்று வீசுகிறது..
அதனால்..

கண்டல் மரத்திலிருந்து பசுமையான காய்கள் நேராகக் கீழிருக்கும் நீர்நிலையில் வளர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களின் மீது வீழ்கின்றன...

அதனால் ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெண்ணிறக் காக்கை கொட்டாவி விட்டது போல வெண்ணிறமாய் மலர்ந்து நிற்கும்.

என்கிறார்....

இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

பாடல் இதுதான்..


கானற் கண்டல் கழன்று உகு பைங்காய்
நீர் நிற இருங்கழி உட்பட வீழந்தென
உறுகால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ! என்றும்
அளிய பெரிய கேண்மை நும்போல்
சால்பு எதிர் கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!

நற்றிணை – 345
நம்பிகுட்டுவனார்

கூற்று – தெளிவிடை விலங்கியது

சூழல்...

பிரிவிடை ஆற்றாது வருந்திய தலைவியிடம் தலைவன் “விரைவில் மணம் புரிவேன்“ என்று அவள் மனதைத் தெளிவிக்க வருகிறான்.

அப்போது தோழி தலைவனிடம்..
தலைவ! நீ தலைவியைத் தெளிவுறுத்தியது போதும்!
விரைவில் மணம் முடிக்கும் வழியைப் பார் என்கிறாள்.

தலைவனின் மனம் நோகமாலும், தலைவியின் சூழ்நிலையையும் தோழி எடுத்தியம்பும் பாங்கு பாராட்டுதலுக்குரியது.

தோழியின் உரையாடல் நுட்பம்.

தலைவா..
நீ அருளுடையவன்!
பெரிய நட்புடையவன்!
சான்றோர் ஒத்த பண்படையவன்!
உன் பிரிவால் வாடும் தலைவிக்கு உடனடித்தேவை உனது ஆறுதல் மொழியல்ல..
நீ விரைந்து அவளை மணமுடிக்கவேண்டும்! என்பதே..
அதை நீ முதலில் உணர்வாயாக என்கிறாள்.

பாடல் வழியே..

ஆம்பலின் அரும்பு அவிழ்தலை வெண்காக்கை கொட்டாவி விட்டதுபோல என்று பாடிய புலவரின் உவமை நயம் மிகவும் நுட்பமுடையதாகவுள்ளது.
“தெளிவிடை விலங்கியது“ என்னும் அகத்துறை அழகாக விளக்கப்பட்டுள்ளது.

தலைமக்கள் மீது மிகுந்த அன்புடைய தோழி இருவருக்கும் ஏற்பட்ட மனப்போராட்டத்தைப் போக்கி நல்லதொரு திருமண வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்தும் பாங்கு நட்பின் சிறந்த அடையாளமாக உள்ளது.

தலைமக்களின் காதலை அலர் (புறம்பேசும்) தூற்றும் ஊர்மக்களின் பழிமொழியால் நாணம் கருதி அமைதிகாக்கும் தலைவி தற்போது வாய்விட்டுப் புலம்புகிறாள் என்னும் அகவாழ்வியலை...

பருவம் அல்லாத காலத்து ஆம்பல் சூழல் காரணமாக
வருந்தி மலரும் என்ற உள்ளுறை வழியே புலவர்
புலப்படுத்திய பாங்கு உளம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.

தமிழ்ச் சொல் அறிவோம்:

உகுதல் – உதிர்தல்
ஆவித்தல் – கொட்டாவி விடுதல்
தேய்க – தீர்க
நீடின்று – நெடுங்காலம் 

நன்றி : http://www.gunathamizh.com/2011/11/blog-post_15.html

Comments