தமிழர் வரலாற்ரில் கச்சதீவு-கட்டுரை.





ஆதித் தமிழன் வாழ்ந்த இடம் லெமுரியாக் கண்டம்.கடற்கோள் காரணமாக லெமுரியாக் கண்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கின.அதில் எஞ்சிய பன்னிராயிரம் தீவுகளில் ஒன்றே கச்சை தீவு. இத் தீவு கச்சை வடிவம் கொண்டதனால் கச்சை தீவு என்ற பெயர் வரலாயிற்று.

இத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்.இத் தீவானது யாழ்பாணத்திலிருந்து 70 கி.மீ லிலும்,நெடுந் தீவிலிருந்து 28 கி.மீ லிலும்,இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீ லிலும்,தலைமன்னாரிலிருந்து 25 கி.மீ லிலும் அமைந்துள்ளது.இராமேஸ்வரத்திலிருந்து கச்சை தீவுக்கு விசைப்படகு பயணம் 2 மணி நேரமே!

இத் தீவானது, 79° 41’ நெடுங்கோட்டிலும், 9° 14’ அகலக்கோட்டிலும் அமைந்துள்ளது.இத் தீவின் மேற்கே உயர்ந்த பாறைகள் தெரியும்.உட்பகுதியில் வெண்மணல் திட்டுக்களும்,ஆங்காங்கே குழிகளும் காணப்படும்.பசும் புல் தரைகளும் உண்டு.நடுப்பகுதி கல்லுமலை என அழைக்கப்படும்.இது கடல்மட்டத்திலிருந்து 20 அடி உயரத்தில் அமைந்துள்ளது.இதன் அருகே ஆழ்கிணறு ஒன்று உள்ளது.அதன் நீர் குடிப்பதற்க்கு நன்று.

ஆரம்பத்தில் இங்கு "டார்குயின்" என்னும் பச்சை ஆமைகள் இருந்த காரணத்தினால் பச்சை தீவு என அழைக்கப்பட்டது.இது பின்னர் மருவி கச்சை தீவு என அழைக்கப்படலாயிற்று.சித்த மருத்துவத்துக்கு தேவையான அனேக மூலிகைச் செடிகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.இதில் "உமிரி"என்னும் மூலிகை நோய்களுக்கு சிறந்த நிவாரணி.

கச்சை தீவை சுற்றியுள்ள கடலில் சங்கு குளிப்பர்.இதனால் இத் தீவுக்கு சங்கு புட்டித் தீவு,சங்கு புட்டித் தீடை என்ற புனைப் பெயர்களும் உண்டு.இதற்கு கண்ணகி அம்மன் பள்ளுப் பாட்டுகள் சான்றாக உள்ளது.மேலும் கச்சைத் தீவுக் கடலில் விலையுயர்ந்த இறால் வகைகள் கிடைக்கும்.சுருங்கக் கூறின் கச்சை தீவு சூழ் கடல் ஒரு மீன் அரங்கம்.

சோழர் ஆட்சிக் காலத்தில் கீழ் கடலும்,குமரிக் கடலும் சோழர்களுக்கே சொந்தம்.அக் கடற்பரப்பிலிருந்த அனைத்து தீவுகளும் சோழரின் ஆட்சியின் கீழே இருந்தது.சோழ மன்னர்களே முதன் முதல் உலகில் கடற்படை அமைத்தவர்கள்.சோழ குல வேந்தனான இராசராச சோழன் உலகம் வியக்கும் அளவுக்கு கடற்பேரரசை நிறுவி கடற்போரை நிகழ்த்தினான்.பத்தாம் நூற்றாண்டில் உலகக் கடலின் காற்பகுதியில் சோழர்களின் மரக்கலங்கலே மிதந்தது.இவற்றில் பொருத்தப்பட்ட ஒளிப்பெருக்காடி (லென்ஸ்) மூலம் கடலின் நெடுந்தொலைவை கண்டறிந்தனர்.இவ்வாறாக சோழ அரசு தென் கடல் தீவுகளை எல்லாம் கைப்பற்றி ஆட்சி செய்தது.

1480 ஆம் ஆண்டு சோழ மன்னர்கள் யாழ்ப்பாணம் சென்றனர்.இடையில் கச்சை தீவை அடைந்தனர்.அங்கு பாண்டிய மன்னர்கள் தங்கள் நாட்டு விளைபொருட்களான மிளகு,திப்பிலி,இலவங்கம்,சந்தனம்,யானையின் தந்தம்,விலையுயர்ந்த முத்துக்கள்,முதலிய பொருட்களை கச்சை தீவுக்கு ஏற்றுமதி செய்தனர்.

இருநாட்டு மன்னர்களும் கச்ச தீவு கடலில் முத்துக்குளித்தல்,சங்கு குளித்தல்,மீன் பிடித்தல் ஆகிய தொழில்களை நடத்தினர்.இது குறித்து அகநானூறு ,புறநானூறு,கலித்தொகை,சிலப்பதிகாரம் முதலிய சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது.

மேலும் எகிப்திய சுற்றுலாப்பயணியான தாஸ்மோஸ் இண்டிக்கோ யூலுயெஸ்டஸ்,ஆறாம் நூற்றாண்டில் தான் எழுதிய வரலாற்றுக் குறிப்பில் கூறியுள்ளார்.

11 ஆம் நூற்றாண்டில் இராசராச சோழன் பாண்டிய இராச்சியத்தை வென்றதோடு,இலங்கைத் தீவினையும் வென்றான்.அன்று இராமேஸ்வரம் கடற்பாதையை கண்காணிப்பதற்கு சோழ மறவர்களை அமர்த்தினான்.16 ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி நலிவுற்றது.பாண்டியரது ஆட்சி மறைந்தது.இராசராச சோழனால் அமர்த்தப்பட்ட தளபதிகள் தனி ஆட்சி நிறுவினர்.

ஆதாரம் :
வரலாற்றில் கச்சை தீவு
உணர்ச்சிக் கவிஞர் சிங்காரவேலன்









Comments