இந்து மதம் எங்கே போகிறது?மெய்யியல் - பாகம்11- 16.




நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்.

வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான், சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் க்ஷத்திரியன்தான்.

-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்.

அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன் என்றாகுமே. உண்மையில் பிராமணர்களுக்கு இன்னது தான் தொழில் என சாஸ்திரம் ஏதாவது சொல்லியிருக்கிறதா? என்ற கேள்விதான் அது.

இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ‘படம் பார்த்து தெரிந்துகொள்’ என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன்.

‘என்னடா... ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கும் சொல்லிக் கொடுக்கிறாரே இந்த ஆள்’ என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்து தான் பதிலை ஆரம்பிக்கவேண்டும்.

சொல்லிக் கொடுத்தவுடனேயே ‘பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல’; ‘பற்றிக்கொள்ளும் கற்பூரம் போல கிரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா சொல்லிக் கொடுக்கப்பட்டது -

அந்த புத்தகத்தில்? க்ஷத்திரியன் (ராஜா போல் படம்) நாட்டை ஆள்பவன் வைசியன் (ஒரு வியாபாரி படம்), வியாபாரம் செய்பவன் சூத்திரன் (ஏர் உழுவது மாதிரி படம்), விவசாயம் செய்பவன் அய்யர் (ஒரு பிராமணர் படம்) நல்லவர். இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள் மேலும் மேலும் படித்திருப்பீர்கள். ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான தொழிலாக ‘நல்லவர்’ என எழுதப்பட்டிருக்கிறது

ஏன்? பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன் ப்ரம்மத்தின் அவதாரம்.

பிராமணன் தெய்வம் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான். லோக சாந்திக்காக வாழ்வான். இவனால் தான் அரசர்கள் முதற் கொண்டு அனைவரும் சமாதானமாக சேமமாக வாழ்கிறார்கள் என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத் தான் நமது பாட நூல் அய்யர் - நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித் திரட்டி தந்திருக்கிறது.

சரி... நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள் கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம் வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.

அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமர வைத்து விடுவார். ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல, பிராமணர்களின் கடமைகள், வேலைகள் என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரக்காரர்கள்.

“அய்யர் - நல்லவர்” மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான் யஜனம். யாஜனம் அப்படி என்றால்? யஜனம் – பண்ணுவது யாஜனம் - பண்ணுவிப்பது பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.

எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவது போல ஒரு நாளில் இன்னின்ன சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்ரமப்படி கர்மாக்கள் வகித்துள்ளது சாஸ்திரம்.

என்னென்ன என்று பார்ப்போம்! காலை 4.30-இல் இருந்து 5 6 மணிக்குள் அதாவது சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.

சிறுநீர் கழிக்கச் செல்லும் போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள வேண்டும். காலைக் கடன்கள் கழித்த பின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில மந்திரங்களைச் சொல்லவேண்டும்.

பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.சூரியோதயத்துக்கு முன்னரே செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.

(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால் ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத் தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள் ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கும் ஒரு திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள்.

இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள் பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப் பயிற்சிதான்.

அடுத்ததாக யஜனம், யாஜனம். இரண்டும் தான் அன்று முழுக்க பிராமணர்களின் பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும். பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்து வைத்து தட்சணைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ர உள்ளிட்ட மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும். சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்ச நேரம் சயனம் அதாவது தூக்கம்.

பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும் வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.

இது தான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம்.

இப்படி இருந்துகொண்டு மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.

தொடரும்

0000000000000000000000000

12 பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு.

பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை.

பிராமணர்களிடையே பிளவா? லோக சேமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக வாழ்பவர்கள் எப்படி பிளவுபடுவார்கள். இதற்கான பதில் அறிவதற்கு முன்பு தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்வோம்.

உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்.... கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும் உருவகித்து “நாயக- நாயகி - பாவ”த்தை காட்டியது தமிழ் வழிபாடு.

பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக - நாயகி பாவ வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம் தான் லிங்கம்

இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில் கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம்.

வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல. அது ஒரு சின்னம்.ஆமாம்... காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம்.

ஆணும்... பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.

தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால்

லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின் மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.

இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன் சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான்.

விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த தேசிகர்.‘நசூத்ரஜா பகவத் பக்தாஜாலிப்ரா பாகவதா’என போகும் ஸ்லோகத்தில்தான் இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.

ஆரிய மதம் - வேத மதம் - ப்ராமணமதம் - வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம் தழைத்திருந்த அந்த நேரத்தில்...ஒரு குரல் எழுந்தது.

இன்றைய வடாற்காடு மாவட்டத்தில் இருக்கும் அடையப்பலம் எனும் ஊரைச் சேர்ந்த அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.

“வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப் பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான். விஷ்ணுவை அல்ல...” என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் ‘ஷிவோத் கிருஷ்டம்’ என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர் - சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள். வேதத்தில் சிவன்தான் மையப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட விஜயம் எனும் நூல் உள்பட பல புஸ்தகங்களை எழுதினார்.

தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும், சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன.

வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.

இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.

நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்‘நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம் நாராயணா பரஹா...’என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன் தான். அவன் தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். ‘அதனால் நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப் பெறுங்கள்’ என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.

“மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது” என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.

சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள...

வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட...

சைவ... வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர்.

தொடரும்.....

000000000000000000000000000000

13. ஆதிசங்கரர் யார்? ‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’

எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’ ஆதிசங்கரர். இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன?

விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன? செய்தது என்ன?-உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது.

இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள் மட்டுமல்ல கோஷங்களும்கூட, எழுந்து கொண்டிருக்கின்றன.

யார் இவர்? கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே... அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர். அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான் காலடி... தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழும்பியிருக்கும் ‘பெரியாறு’ நதி அழகாக காலடி வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இயற்கை செழிப்பான இந்த காலடியில்...ஷிவகுரு எனும் பிராமணர் இவருக்கு ஆரியம்பாள் எனும் பத்தினி இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை பூமியில் தன் மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக் குதித்தது. ‘அழகான குழந்தை... கண்ணைப் பாருங்கள். ஞானம் சிரிக்கிறது. காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது.’ என பார்த்த ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.

அப்பாவும்... அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க.. ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார்.

அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்... கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில் விழுந்தது.ஆனாலும்... சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அவனது அப்பா.

அவனது வயிற்றுப் பசியையும் போக்கி... அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளூர் பண்டிதர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே செய்து வைத்தார்கள்.இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது.

அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான். “அம்மா... உள்ளூர் பண்டிதர்களிடம் படித்தது போதும் அம்மா... நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே...” அம்மாவிடம் சொல்லி விட்டு...பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம் செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம் அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்... அங்கே பல விடயங்களைத் தெரிந்து கொண்டார்.அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார்.

சங்கரர் கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம் பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்... அப்போது புத்தரையும் வாசிக்க ஆரம்பித்தார்.

அதுவரை அவர் படித்த வேதம்.. பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம் சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.

புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். மறுபடியும் மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர்.. இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார்.

புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய்... அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.

நம் பிறப்பு பொய்.. வாழ்வு பொய் இவ்வுலகத்தில் ஞானம். அக்ஞானம் ஆகிய இரண்டும்தான் உண்டு, மற்ற எதுவுமே கிடையாது” என தனக்கு கிடைத்த ஞானத்தை ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.

வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் கடவுளைத் தவிர... என சங்கரர் மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.

இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய் என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார். அம்மா எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார். தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற இளைஞர்களை திரட்டினார் சங்கரர்.

அவருக்கு முதன் முதலில் கிடைத்தவர்கள் நான்குபேர். ஆனந்தகிரி, சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம். இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு ஊராய் சென்றார்.

உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே... தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்...‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’ என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம் அழுத்தமாக உலுக்கியது.

00000000000000000000000000000

14. சந்யாசிகள் எப்படிஎப்படி வாழவேண்டும், வாழக் கூடாது.

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்...

வேதம், கர்மாக்களை பொய் என்று சொல்லி பிரச்சாரம், உபந்யாசம் என அருளிக் கொண்டிருந்த ஆதிசங்கரரை அழுத்தமாகப் பாதித்த சம்பவம். இளமைப் பருவத்திலேயே - அவரது தாயாரும் இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்ற போதும் அன்னையின் இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.

வைதீகர்கள் வந்தார்கள். ‘பாரப்பா உன் அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை நீதான் செய்யவேண்டும். வழக்கம்போல அது பொய், இது பொய் என உளறாதே...’ என அவர்கள் பலவந்தப்படுத்தியதை அடுத்து தன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துகளுக்கு மாறாக இருந்தபோதும் செய்து முடித்தார் சங்கரர்.

‘இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை...’ என்ற நிலைமை அன்னையின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர். மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.

சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான ஸ்லோகங்கள் மூலம் பரப்பினார்.

பிற்பாடு கேரளாவைத் தாண்டியும் சங்கரர் பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும் சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில் தகவல்கள் வழிகின்றன.

சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும் என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு... தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.

சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருள்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்றபோது... மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு.

சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்கவேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்ற சங்கரர்... சந்யாச ஸ்மிருதி வகுத்த விதிகளை கடுமையாக பின்பற்றினார்.

சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது? ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்தது தான் சந்யாச ஸ்மிருதி.

‘பததீ அஸோவ் ஸ்வயம்பிக்க்ஷஹீ யஸ்ய ஏததுத்வயம் பவேது...’ -- சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்...என்று சொன்ன சந்யாச ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது.

எங்கு போனாலும் சந்யாசி கால்நடையாகத்தான் செல்ல வேண்டும். அல்லது பல்லக்கில் போகவேண்டும்.

இதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக் கூடாது என்பதை பின்வரும் ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்.

“வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வாசஜேஸ ஸ்நான மாசரேது...”

என போகும் இந்த ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா?

சந்யாசியானவன் எத்தனை மாற்றங்கள் உலகியலில் வந்த பன்னாலும் தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும். கால்நடையாக திரிந்து உன் உபதேசங்களைப் பரப்பவேண்டும். அதை விட்டுவிட்டு வண்டி வாகனங்களை தேடிக் கொண்டிருக்காதே. அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்காதே. அதைவிட மிகப்பெரிய பாவம் வேறெதும் இருக்க முடியாது.

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது.

பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத துரதிருஷ்டவசமாக சந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து அப்பாவத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும் என ‘வாகன’த் தீட்டு பற்றி சந்நியாசிகளுக்கு அப்போதே அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.

இத்தனைக் கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன் சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.
இந்த இடத்தில் நானொரு விஷயத்தைச் சொல்வது மெத்தப் பொருத்தமாகயிருக்கும். மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த வாகனத் தீட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார்.

தான் இருக்கும்வரை எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை. (பல்லக்குகளில் தான் ஏறிச் சென்று கொண்டிருந்தார்).

இளமையிலேயே இவ்வாறு சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர் இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும் சாஸ்திர நூலையும் இயற்றினார்.

மூடமதே... அதாவது மூட மடனமே என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் - ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி புருஷர்களுக்கும், சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக் கூடியதாக... அறிவூட்டக் கூடியதாக அமைந்திருக்கின்றன.

பணத்தாசை பிடித்தால் என்ன நேரும்? பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்? என பல சூடான கருத்துகளை பஜகோவிந்தத்தில் (பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக் காட்டியிருக்கிறார்

ஆதிசங்கரர். அதில் சில தேவையான ஸ்லோகங்களைப் பார்ப்போம். அவை சொல்லக்கூடிய விதத்தில் இன்றைய சந்யாசிகள் இருக்கிறார்களா என்றும் அந்த ஸ்லோகங்களின் ஜன்னல்கள் திறந்து தரிசிப்போம்.

0000000000000000000000000

15. பணத்தை தேடித் தேடி அலையாதே. பெண்களை நம்பாதே – சங்கரர்.

பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். ‘பெண்களை நம்பாதே’ பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் திவலை அளவு கூட நன்மையில்லை. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும். சங்கரர் அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்

பஜ கோவிந்தத்தில் ஆதி சங்கரர் சொன்ன சேதிகளை யெல்லாம் அவரைப் பின்பற்றக் கூடியவர்கள் நிஜ கோவிந்தமாக காதில் வாங்கினார்களா? கடை பிடிக்கிறார்களா? பானை சோற்றுக்கு பதச் சோறாக சில ஸ்லோகங்களை மட்டும் பார்க்கலாம். .

‘அர்த்தம் அனர்த்தம் பாவைய நித்யம் நாஸ்தி தகஹா சுக வேஸஹா சத்யம்’

இதுவும் “பண” பக்தி பற்றிய ஸ்லோகம் தான். பணம் என்பதற்கு ஒன்றுமில்லை என்று தான் பொருள். பணத்தால் திவலை அளவுகூட நன்மையில்லை. பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும்.

உனக்குள்ளேயே கலகங்கள் நடக்கும். பணம் சம்பாதிப்பதைவிட அதைக் காப்பாற்றுவது கஷ்டம். நீ பணக்காரன். ஆனால், மித்ரன்கூட சத்ரு ஆகி விடுவான். அதாவது நண்பன் கூட பகைவன் ஆகிவிடுவான் என்ற ஆதிசங்கரர்,

‘புத்ராதபி தனபாஜாம் பீதிஹி’ என்றும் சொல்லுகிறார். இதற்கென்ன அருஞ்சொற் பொருள்? பணக்காரனுக்கு தன் மனைவி மக்களால் கூட ஆபத்து, பீதி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு, மண்ணாசை, பொன்னாசை உள்ளிட்ட ஆசைகளுக்கு அடித்தளமான, பணத்தை பற்றி குறிப்பிட்டுக் காட்டி எச்சரிக்கும் ஆதிசங்கரர் அடுத்து முக்கியமாக... பெண்ணாசையைப் பற்றி பொட்டில் அறைந்தாற் போல ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

“நாரீஸ் தனபர நாபீதேசம்த்ரிஷ்டவா மாதாமோஹாவேஸம்...” என்று போகிற இந்த சமஸ்கிருத கவிதையின் சாராம்ஸமே. ‘பெண்களை நம்பாதே’ என்பதுதான்.

பெண்கள் தங்களது பாவங்களையும், பாகங்களையும் காட்டி உங்களை மயக்கப் பார்ப்பார்கள். அவள் இருண்ட கேஸத்தில் சிக்கிக் கொண்டு நீ மோசம் போய்விடாதே. அந்த சிரிப்பு என்ற நெருப்பில் மாட்டிக் கொண்டு மாய்ந்து போய்விடாதே.

முக்கியமாக பாவி, பெண்களின் மேல் பாகங்களைப் பார்த்து மயங்கி விழுந்து விடாதே. பின்னர் அதிலிருந்து நீ எழுந்திருக்கவே முடியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள். உலகில் யாவும் பொய். பொண்ணு பொய். அவளது மெய் (உடம்பு) யும் பொய்.- என எச்சரிக்கை விடுக்கிறார் அன்றே ஆதிசங்கரர்!

இன்று நாம் சகஜமாக செய்தித்தாளில் படிக்கிற பல செய்திகளையும் வைத்துப் பார்க்கிறபோது, சந்யாசிகள் முதல் கொண்டு சினிமாப்பட ரசிகர்கள் வரைக்கும் சங்கரரின் அறிவுரை மற்றும் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?

ஒரு பக்கம் தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தை தழுவிக் கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார்.

அதற்காக... தான் சந்யாசியான க்ஷணத்திலேயே தலையை மொட்டை அடித்துக் கொண்டார்.

இதைவிட முக்கியமாக பிராமணர்களுக்கு வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபிதம் அதாவது பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். வேதம் பொய். அதன் கர்மாக்கள் பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் பூணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில் தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும் தான் சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சிகை (குடுமி) யக்ஞோபிதம் (பூணூல்) ஆகிய இரண்டும் கர்மாக்கள் செய்கையிலே பிராமணர்களுக்கு பிரதானம் என சாஸ்திரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில்...

சங்கரர் தடாலடியாக குடுமியை மழித்து, பூணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது.

சங்கரரின் இந்த செய்கைகள் ஏற்படுத்திய கோபத்தின் மீது இன்னொரு கோப அடுக்கை ஏற்படுத்தின - . அவரது உபதேசங்கள்.இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியிலே நான் குறிப்பிட்டுக் காட்டியதை போல... குழந்தாய்.. இந்தா பால், இதைக் குடித்து வளமோடு வாழு என்கிறது வேதம்.

உனக்கென உன்னை நம்பும் பெண்ணோடு இணைந்து வாழ்க்கையைச் சுகமாக நடத்துவாயாக. இதெல்லாம் கூடாது என சந்யாசம் பேசி வருபவர்களைச் சமூகத்துக்குள்ளேயே விடக்கூடாது. அவர்களை விரட்டியடியுங்கள் என சொல்கிறது வேதசாரம்.

இன்னும் உபநிஷது சொல்வது என்னவென்றால் ஜானாதீ இச்சதீ யததே...? அதாவது நாம் பார்ப்பதன் மேல் அறிவானது ஆசை கொள்ளும். ஆசையின் மிகுதியால் அந்த பொருளை அடைய பிரயத்தனம் செய்யும். பிரயத்தனம் செய்து அந்த ஆசைப்பட்ட பொருளை அடைந்தால் அதுதான் ஆனந்தம். இந்த ஆனந்தமே வாழ்க்கை. ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவது தான் அறிவு -என்கிறது உபநிஷது.

ஆனால் சங்கரரின் அத்வைதம்... இவைகளுக்கு எதிரானவையாக இருந்ததால் வேதக்காரர்கள் சங்கரர் மீது சரமாரியாக கருத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில் தான் சங்கரரை பின்பற்றியவர்களிலேயே இரண்டாக சிறு பிளவு ஏற்பட்டது.

உலகமே மாயம் என்று மாயாவாதத்தை ஒரு பிரிவினரும், மாயம் அல்ல, அது நம் அக்ஞானம் என்று ஒரு பிரிவினரும் முளைத்தனர்.சங்கரர் முழுக்க முழுக்க தன் தத்துவத்தை “Educated Class” அளவிலேயே கூறி வந்ததால், இந்த பிளவும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

மாறாக, வேதபககாரர்களின் எதிர்ப்பை சமாளிக்க சங்கரரே ஒரு முரண்பாட்டை சூடிக்கொண்டார். “வேதோ நித்யமதிய தாம்ததுஉதிதம் கர்ம ஸ்வனுஷ்டேதாம்காம்யே மதிஹி” அஃதாவது சித்த சுத்தியுடன் வேதம் சொன்ன கர்மாக்களை செய்தால் மோட்சம் எளிதில் பெறலாம் என்ற ரீதியில் சங்கரர் சொல்லி அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்.

தொடரும்

00000000000000000000000000000

16. கர்மா,வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...?

வேத கர்மாக்களை செய்தால் எளிதில் மோட்சம் பெறலாம் - என சங்கரர் சொல்லி அத்வைத குட்டையை குழப்பிவிட்டார் என்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

குட்டைதான் குழம்பியது. அதில் குளித்தெழுந்த சங்கரர் குழம்பவில்லை. தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.

இது ஒரு பக்கம் இருக்க... ஆதிசங்கரருக்கும், ஆகமக்காரர்களுக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது.

ஆகமக்காரர்களா...? முதலில் ஆகமம் என்றால் என்ன? கடவுளை எப்படி வழிபடவேண்டும். என்னென்ன சம்பிரதாய சடங்குகள் விக்ரகத்துக்கு செய்யவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும் மேலும் பிறப்புக்குப் பிறகிலிருந்து இறப்புக்குப் பிறகுவரை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டிய சடங்குகளையும் பற்றி சொல்வது தான் ஆகமம்.

ஆக மொத்தம் ஆகமம் என்பதற்கு வழிமுறை என்று பொருள்.இதில் வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்களும் இருக்கின்றன.

வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம்.

பெருமாளை எப்படியெல்லாம் ஆராதனை செய்யவேண்டும். அர்ச்சிக்க வேண்டும்... ஆகியவற்றை ‘விகனசர்’ என்பவர் வகுத்தார். எனவே, இது வைகானச ஆகமம் ஆயிற்று.

அடுத்ததாக... பெருமாளே இறங்கி வந்து ‘என்னை இப்படி இப்படியெல்லாம் பூஜிக்கவேண்டும். புனஸ்காரம் பண்ண வேண்டும், அர்ச்சிக்க வேண்டும், அலங்காரம் பண்ணவேண்டும்’ என தன்னை வழிபடும் முறைகளை அந்தப் பெருமாளே சிலரிடம் கூறியதாக ஒரு கருத்துரு காணப்படுகிறது. இதுவே பாஞ்சராத்ர ஆகமம் எனப்படுகிறது.

சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்கள். அவற்றில் பலவற்றை இப்பொழுது புழக்கத்தில் பார்ப்பதே அபூர்வமாகி விட்டது.

சரி... இவைதான் ஆகமங்கள். அதாவது விக்ரக வடிவிலான தெய்வத்தை எப்படி ஆராதனை செய்யவேண்டும் என போதனை செய்த மந்திரங்கள் தான் ஆகமங்கள். இதையெல்லாம் சொன்ன ஆகமங்கள்... இதோடு இன்னொன்றையும் கூறின.

‘இப்படியெல்லாம் க்ரமங்களோடு பகவானை வழிபட்டால் தான் மோட்சம் கிட்டும்’ என்பது தான் அது. இங்கே தான் ஆதிசங்கரர் குறுக்கிட்டார். கண்டித்தார் என்றுகூட சொல்லலாம்.

கடவுள் மட்டும் தான் நிஜம். மற்ற அனைத்தும் மாயம், பொய். ஆகமங்கள் பொய்களை திரட்டி வந்து உண்மையை பூஜிக்கச் செய்கின்றன. அந்த உண்மையைக் கூட விக்ரகம் என்னும் பொய் வடிவமாகவே பார்க்கின்றன. இப்படியெல்லாம்... ஆகமக்காரர்களின் அறிவுரைகளை நம்பிக் கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது. கடவுளின் கடாட்சமும் கிட்டாது. ஆகமங்கள் தவறு. அது அடியொற்றுவதும் தவறு என வாதிட்டார் ஆதிசங்கரர்.

அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...?

சொன்னார்.“சத்ஸங்கத்வே நித்ஸங்கத்வம் நித்ஸங்கத்வே நிர்மோகத்வம் நிர்மோகத்வே நித்ஸலசித்தம் நித்ஸலசித்தே ஜீவன்முக்தி...” இந்த வரிகளுக்குள் வாழும் பொருள் என்ன?

சந்யாசிகள், சாதுக்கள், ஞானிகளின் தொடர்பு கிடைக்கும் போது உனக்கு உலகியல் மீதான நாட்டம் குறைகிறது. உலகியல் பற்று குறையும் போது உன் மனம் மோகத்தை முழுமையாக விட்டு விடுகிறது. மோகத்தை நீ விட்டுவிட்ட போது உனக்கு சலனம் இல்லாத சித்தம் வாய்க்கிறது. சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே உனக்கு மோட்சம் கிடைக்கும். இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.

இப்படியாக வாழும் முறையிலிருந்து, மோட்ச தத்துவம் வரை பல இடங்களுக்கும் தன் காலடியால் கடந்து பரப்பிய ஆதிசங்கரர். தனது 32 வயதிலேயே மோட்சம் அடைந்ததாகச் சொல்கிறார்கள்.

அவர் பிறந்த இடம் காலடி என உறுதிபடச் சொல்வதுபோல்... அவர் இன்ன இடத்தில் தான் இறந்தார் என்பதற்கு எவ்வித தகவல் ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இமயமலைப் பக்கம் சென்றவர் திரும்பவேயில்லை என உறுதியற்ற தகவல்தான் நிலவுகிறது.

ஒருவேளை கிடைத்திருந்தால்... அவருக்கு அங்கே அவரை பின்பற்றியவர்கள் நினைவுச் சின்னம் அமைத்திருப்பார்களே அதுவும் இல்லை. அதனால்... ஆதிசங்கரர் இங்குதான் உயிர் நீத்தார் என்பதும் எங்கே எனத் தெரியவில்லை.

இந்த யூகங்கள் ஒருபுறம் இருக்க... சங்கரரின் காலம் பற்றியும் பல கணிப்புகள்! தனது “Discovery of India” என்னும் வலுவான வரலாற்று நூலில் ஆதிசங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நேருஜி கூறுகிறார்.

இன்னும் சிலர்... நான்காம் நூற்றாண்டு, ஆறாம் நூற்றாண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். இவர்களைத் தூக்கி சமைக்காமலே சாப்பிடுவதுபோல் இன்னும் சிலர் சங்கரர் இரண்டாயிரத்து அய்நூறு வருடங்களுக்கு முற்பட்டவர் என்கிறார்கள் சகஜமாக.

இப்படி சில கணிப்புகள் திணிக்கப்பட்டாலும் பொதுவாக சங்கரர் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்காரர் தான். அதாவது இன்றைய காலத்திலிருந்து 1,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது தான் வரலாற்றை வடிகட்டிப் பார்க்கும்போது கொடிகட்டி நிற்கும் நிஜம்.

என்ன இது சங்கரர் அவதரித்தது முதல் முக்தியடைந்தது வரை சொல்லி முடித்துவிட்டாரே? சங்கரர் என்றால் மடங்கள் தானே ஞாபகம் வரும். அவற்றை ப்பற்றி ஒருவரி கூட சொல்லவில்லையே? என நீங்கள் கேட்பது என் செவிகளில் தீர்க்கமாக தெறிக்கிறது.

சங்கரமடங்கள் அனைத்தும் சங்கரருக்குப் பிறகு தானே ஆரம்பிக்கப்பட்டவை. அதை எப்படி சங்கரர் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல முடியும்.

தொடரும்


Comments