இந்து மதம் எங்கே போகிறது????????? (23- 28)

பகுதி 23. பிராமணர்களை திருத்த‌ வேத சாஸ்திர பரிபாலன சபை


“வாரும் தாத்தாச்சாரியார்... நன்னா இருக்கீரா? உம்மைப் பத்தி சிஷ்யாளெல்லாம் சொன்னா... தர்ம பிரச்சாரம் பண்ணிண்டே இருக்கீராமே... உடம்பை பார்த்துக் கோங்காணும்....”....என முதன் முதலாய் என்னிடம் வார்த்தைகளை மென்மையாக வீசினார்

சங்கராச்சாரியார்.சனாதனத்துக்கு நம்மளால முடிஞ்சதை பண்ணணுமே ஸ்வாமி... அதான் அங்க இங்கேன்னு அலைஞ்சாலும் விடாம தர்மப் பிரச்சாரத்துலேயே இருக்கேன். என நான் பதில் சொல்ல.... எங்களது சபை சமாச்சாரங்களைப் பற்றி ரொம்ப கேள்விகள் கேட்டார் மகா பெரியவர்.

நானும் சளைக்காமல் போன, வந்த இடங்கள், பிரசங்க அனுபவங்கள் பற்றியெல்லாம் ஏற்ற இறக்கங்களோடு அவரிடம் விளக்கினேன்.

எனது அனுபவங்களையெல்லாம் சிலாகித்துக் கேட்ட மகா பெரியவர்... ‘ரொம்ப நல்லது பண்ணின்டிருக்கீர்... இன்னோர் நாளைக்கு விஸ்தாரமா பேசுவோம்’ என விடை கொடுத்தார். அவரின் பல வினாக்களுக்கு விடை கொடுத்த நானும் கிளம்பி வந்தேன்.

நான் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வந்ததில் எங்கள் சமூகக்காரர்களுக்கிடையிலேயே ஒரு சின்ன சலசலப்பு.

என்ன ஓய்... நாமெல்லாம் சுத்த ஆச்சார்ய புருஷாள்... ஆனா இவர் சங்கராச்சாரியாரை பார்த்துட்டு வந்திருக்காரே... இதெல்லாம் நன்னா இருக்ககோ...” என என் காதுபடவே கும்பகோணத்தில் சில குரல்கள் புறப்பட்டன.இதெல்லாம் நன்னா இருக்கோ?... என பார்ப்பதற்கு முன்... ‘அதென்ன ஆச்சார்ய புருஷாள்?... என உங்களுக்குள் ஒரு கேள்வி முளைக்கும்.

ஒரு சமூகத்தில் அதாகப்பட்டது அந்த கால பிராமண சமூகத்தில் சமய தத்துவங்களை போதிக்க ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவை நிரம்பப் பெற்ற சிந்தன வாதிகளுக்குக்குத் தான் சிறப்புத் தகுதி இருந்தது. அதாவது அவர்களை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர்.

இதுபோல் அனைத்து சமய தகுதிகளும் வாய்க்கப் பெற்ற குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள் சிற்சிலர் தான் இருப்பார்கள். அவர்களை தேர்ந்தெடுத்து சகல மரியாதைகளையும் கௌரவத்தையும் கொடுத்து போற்றி வந்திருக்கிறார்கள். அப்படி போற்றப்பட்டவர்கள் தான் ஆச்சார்ய புருஷரின் வம்சா வழியான நானும் ஓர் ஆச்சார்ய புருஷன்.

அதே நேரம்... வெறும் வம்சத்தால் மட்டுமே இப்பெருமையை இப்போது பலர் பெற்றிருக்கிறார்கள். சிலர் தான் அந்த ஞானம் ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் இன்னமும் தங்கள் பரம்பரைப் புகழை காப்பாற்றி வருகின்றனர்.

உதாரணத்துக்கு சிறீராமானுஜர் அருளிய பாஷ்யத்தைப் பற்றி உபதேசிக்கவும் எடுத்துரைக்கவும் பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என சிலர் அவரது காலத்திலேயே நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் பரம்பரையில் பிறந்து வந்ததன் காரணமாகவே இன்றும் சிலர் தங்களை பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் ‘பாஷ்யம்’ பற்றி இவர்களுக்கு தெரிந்தது பூஜ்யம் என்றாலும் கூட இவர்கள் தான்

இன்று பாஷ்ய சிம்மாசனாதிபதிகள். அதுபோல... ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை. அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

அழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்கமுடியுமா?...அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.

அப்படி ஒரு தடவை சந்தித்தபோது... ‘முதலில் நாம் நம்மை சுத்தப்ப படுத்திக்கணும் இல்லையா?... இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்க தொடங்கி விட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும் அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்யவேண்டும். ஏதாவது சொல்லுங்களேன்...’ என்றார் மகா பெரியவர்.

நான் சொன்னேன் ‘நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் முலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். டி.கே. ஜெகந்நாதச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட ‘பிராமணன்’ ‘தார்மீக ஹிந்துனு’ பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம்’ என நான் சொன்னேன்.

பதிலுக்கு மகா பெரியவர்...‘அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரியார்... ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமையை மறந்துட்டா இல்லையா?அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு... ஒரு சபை ஆரம்பிக்கலாம்.

அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்.மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும்.

இந்த சபை நடத்தறத்துக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பத்தான்.. நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்” என்றார்.

இஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது.குளித்தலை அண்ணாத்ர அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு

செகரட்டரியானார்கள்.அன்றைய தஞ்சாவூர் ஜில்லா முழுவதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய, அவர்களோடு நானும் புறப்பட்டேன்.

“பிராமணர்கள் திருத்தினால் நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவார்கள்” நம்பிய மகா பெரியவர். இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார். அது என்ன பலனை கொடுத்தது?

தொடரும்

24 பெரியாரின் பரபரப்பு பிரசாரம். பிராமணிய பலத்துக்காக யாகம்.

மகா பெரியவரின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்கப்பட்ட வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை. அன்று எங்களைப் போலவே இளமையோடு வீரியமாக விஸ்தாரமாக செயல்பட ஆரம்பித்தது. “ வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல்லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா... அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (Vedic spirit) உண்டாக்கணும்.

நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்... பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார் இல்லையா?...” என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க எதற்கு ஆவஹந்தி ஹோமம்?... அப்படியென்றால் என்ன?...ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக்காகத்தான் அதாவது கோரிக்கைகளை (Demands) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ஆவஹந்தி ஹோமம்.. ப்ரம்ம தேஜஸ்க்காக நடத்தப்படுகிறது.

புனித கலசத்தை நிறுவி... அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றி துதி செய்து... அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம் இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம். அஃதாவது அன்னத்தை கொடுத்து வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து ‘ப்ரம்ம தேஜஸ்’ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும் இந்த ஹோமத்தில் ப்ரம்ம தேஜஸ்’ என்பது பிராமணீயத்தின் பலம் என குறிப்பிடப்படும்

ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.

இப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று.

இந்த ஹோமம் செய்து முடிந்ததும்... வேதத்தைப்பற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றையெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.

அப்போது... கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன் கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.

இந்த ‘வசதி’கள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது... மகாபெரியவரின் ஆசீர்வாதம். எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது.

இதன் முக்கியமான விளைவாக... தஞ்சாவூர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும்... ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமையர் பெரும் பொறுப்பு வகித்தார்.

இப்படியாக... இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி. தஞ்சாவூரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும் பண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலிருந்து அழைப்பு வந்தது.

யார் அழைத்தது? இங்கேயிருந்து போன பிராமணர்கள்தான் செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈடுபாட்டிலிருந்து விலகவில்லை.

அதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி... அகமதாபாத் டெல்லி, கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வட இந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.

அதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதம் வளர்க்க பயன்படுத்தினோம். இப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.. நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே. நீலமேகம். கும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும்போது..

“ஸ்வாமி... பார்த்தீரா... எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்” என்பார். கடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் நான் நகர்வேன்.

இந்நிலையில் பிராமணர்களை மட்டுமன்றி.. தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.

இது மகா பெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். தாத்தாச்சாரீ... நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.

அதுக்கு அடுத்ததா.. அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால... நாம் பூஜா தத்வத்தையும்... சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்... என்ன சொல்றீர்..” என்றார்.

“வாஸ்தவம்தான் ஸ்வாமீ... இந்த ‘அவேர்னஸ்’ (Awareness) பிராமணாளுக்கும் வரணும்... மத்தவாளுக்கும் வரணும்...” என்றேன். எங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு... உதித்தது ஆகம சிற்ப சதஸ்.

தொடரும்
25 தமிழில் பேசினால் தீட்டு கழிய‌ ஸ்நானம் பண்ணணும்.

அதென்ன ஆஹம சிற்ப சதஸ்? ஆஹமம் என்றால் என்ன என்பது பற்றி முந்தைய அத்யாயங்களிலேயே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.

விக்ரகங்களை... தெய்வ சிற்பங்களை எப்படியெல்லாம் வழிபடவேண்டும் என்கிற சூத்திரங்களைச் சொல்லிக் கொடுப்பதுதான் ஆஹமம் என்றும், இதனை ஆதிசங்கரர் எதிர்த்ததையும் கூட பார்த்தோம். ஆஹமத்தின் அர்த்தம் விளங்கிவிட்டது.

சிற்பம்? இன்றும் நாம் கோயில்களுக்குச் செல்கையில் கர்ப்ப கிரகத்தில் பார்க்கும் தெய்வச் சிற்பங்கள் தமிழ்நாட்டுக்கே உரிய தனிச் சிறப்பு. நீங்கள் வட இந்தியக் கோயில்களுக்கு சென்றால்கூட நமது தென்னிந்திய சிற்பங்களைப்போல நுட்பமும், அழகும் ஒரு சேர வாய்த்திருத்தல் கடினம். பழங்கால மன்னர்கள் ஆங்காங்கே பிரம்மாண்டமாக கட்டி வைத்த கோயில்களின் கோபுரங்களில்கூட சிறு சிறு சிற்பங்கள் தமிழர்களின் நுண்கலைத் திறத்தை எடுத்துக் காட்டும்.

இப்படிப்பட்ட சிற்பங்களையும், அவைகளை வழிபட வகுக்கப்பட்ட ஆஹமங்களையும் பற்றிய பெருமித உணர்வை எழுப்பிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆஹம சிற்ப சதஸ்.இந்த அமைப்பை நடத்த வேண்டியதற்கான பொறுப்பை காங்கிரஸ் முக்கியஸ்தரான சா. கணேசனிடம் ஒப்படைத்தார் மகாபெரியவர்.

ஆஹம சிற்ப சதஸ் அமைப்பு என்ன பண்ணியது? கோயில் கோயிலாக போவோம். ஆலய தத்துவ பிரச்சாரம். பூஜாதத்துவ பிரச்சாரம். இவை இரண்டும்தான் நோக்கம். கோயிலின் பிரகாரத்தில் தான் கூட்டம் நடக்கும். கோபுரத்தின் அழகு. பிரகாரங்களின் அழகு. மதில் சுவர்களின் அழகு. கோயிலின் படிகளில் படிந்த அழகு, கர்ப்பக்ரஹத்தில் தெய்வச் சிற்பத்தின் தேக அழகு இவற்றைப் பற்றியெல்லாம் விளக்குவோம்.

இந்த இடத்தில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் செய்தியை மகாபெரியவர் என்னிடம் சொன்னது போல நான் உங்களிடமும் சொல்கிறேன்.

“ஆதிகாலத்தில்... அதாவது சிருஷ்டிக்கு முன்னால் உலகம் உருவம் இல்லாமல் இருந்தது. அப்போது பகவான் ஒரு தச்சனாக வந்தான். உலகத்துக்கு உருவமும், வடிவமும் கொடுத்தான். பகவான் உலகத்தை ‘விஸ்வகர்மா’வாக வந்து வடிவமைத்ததுபோல... அவருக்கு நாம் சிற்பங்களைச் சமைத்து வைத்தோம்.

அதனால் சிற்பங்கள் எல்லாம் ‘விஸ்வகர்மா’வாக வந்து பகவான் செய்தவற்றின் தொடர்ச்சிதான். எனவே, நாம் சிற்பங்களை பகவானாக பார்த்து ஆராதிக்கவேண்டும்” என ஆஹம சிற்ப சதஸ்-ஸின் கூட்டங்களில் பேசினோம்.

நாங்கள் மட்டுமல்லாது ஆஹமங்கள் அறிந்த பட்டாச் சார்யார்களாகவும் அழைத்து வந்த அக்கூட்டங்களில் பேச வைத்தோம். இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது. சனாதன தர்மசபையில் ஆரம்பித்து... வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். “ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம்.

ஆனா... பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே...” என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.

நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி?

ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே!

ஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?”

திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

“இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும். ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?” என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.

நாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும்... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.

அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான்.

அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.

“ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?” என்று மகாபெரியவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.“உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்துகொள்...” என்றேன்.அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை. உங்களுக்கு...?

தொடரும்

26. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு.
 

நீங்களும் மகா பெரியவரும் ஏன் சமஸ்கிருத்திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்... ஸ்நானத்தை முடிச்சுப் போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்...?”...மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள்.

 சத்திரத்தில் இருந்த சிலர் அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்குச் சொல்வதற்கு முன்... மகாபெரியவர் திருப்பாவை ...திருவெம்பாவை என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்ட வழியில் சொல்கிறேன்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்குப் பொருள். (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்.!

தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.

தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாகவும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல் பொழுது விஸ்தாரமாகும்.

இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடிகாலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிலுசிலு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு ‘பாவை தெய்வம்’ பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.

இப்பண்பாடு நீட்சியாகி... தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள். இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து... ‘நமது கோரிக்கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம்.

Quote நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ அவரை முதலில் எழுப்ப வேண்டும்’ என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.கடவுளை மனித வழியில் அணுகுவது என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு... கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற ‘நாயக’ நாயகி பாவம்’ வரை வளர்ந்தது இந்தப் பண்பாடு. தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி... கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு, அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு, ஆதலால் ‘பாவை நோன்பு’ ஆயிற்று.

இத்தகைய தூய தமிழ் கலாச்சாரத்தைத் தான் சைவத்தின் மாணிக்கவாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள். திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள். இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத்துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.

Quote தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக்கியத்தை ‘பாவைமாநாடு’ என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகா பெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்திருக்கும்.

இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடை மருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன ‘ஸ்நான’ பதில் அவர்களுக்கு புரியவில்லை.அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக... மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன்.

அது...கும்பகோண மடம்... சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிறக் கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட ‘மடி’ அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளிக்கவேண்டும். அந்த வகையில் குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்... நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்... ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்..’ என்றேன்.

‘இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்’ என்றார் பக்தர்.எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார். போனேன். கேட்டார் சொன்னேன்.

‘இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே.

தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...” என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். நான் சொன்னதுதானப்பா... சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்.. என்றேன்.

‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’ என தாய்மொழியாம் தமிழில்’ மகாபெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.

27. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். ??

கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.

அதனால்... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்... விக்ரகம் வெறுங்கல்லாகி விடும்.

ஒருவேளை அப்படி நுழைந்து விட்டால்...?அதற்குப் பரிகாரம் தான் சம்ப்ரோக்ஷணம். அதாவது கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு... என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம்.

செட்டிநாட்டு அருணாசலம் போன்ற பல பக்தர்கள் மகாபெரியவரை பார்க்க வேண்டுமென்று கெட்டியான பிடிவாதத்தோடு வந்திருக்கிறார்கள், போயிருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, பாவை மாநாடு சீரும் சிறப்புமாக நடந்து கொண்டிருந்தது.

“சைவத்துக்கும், வைணவத்துக்கும் சண்டை வராம இருக்க ஒரு காமன் கடவுளை (Common God) கண்டுபிடிக்கணும் தாத்தாச்சாரீ” என என்னிடம் விருப்பத்தை சொன்ன மகாபெரியவர் பிராமணர் - பிராமணர் அல்லாதவர், சைவ - வைணவ துவேஷங்களை தீர்த்து வைக்க பாவை மாநாடு பெரிதும் உதவும் என நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை.

அரசியல் கட்சி மாநாடு அளவுக்கு பாவை மாநாடு பெரும் கூட்டத்தைக் கூட்டியது. மார்கழி மாதம் முழுதும்... தமிழ்நாடு பூராவும் இந்த பக்தி மாநாட்டை கூட்டி திருப்பாவை - திருவெம்பாவை உபன்யாசங்களை நிகழ்த்தினோம். ஒவ்வொரு ஊரிலும் பொது இடங்களைத் தேர்ந்தெடுத்து பந்தல் போடுவோம்.

பின்... விசேச மேடை தயார் செய்து அதில் ஆண்டாள் விக்ரகத்தையும், மாணிக்கவாசகர் விக்ரகத்தையும் நிறுவி வைப்போம். இதன் பக்கத்தில் நின்றுகொண்டு திருப்பாவை - திருவெம்பாவை ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள பகவத் விஷயங்களை பேசுவோம்.

எந்தெந்த ஊரில் மாநாடு போடுகிறோமோ அந்தந்த ஊரில் உள்ள கோயில்களில் இருந்து விக்ரகங்களை எடுத்துக்கொள்வோம். கிடைக்காத பட்சத்தில் படங்களை பயன்படுத்துவோம்.

கோயில்கள் அரசின் அறநிலையத்துறைக்கு உட்பட்டவையாக இருக்கும்போது... நீங்கள் எப்படி சிலைகளை எடுத்துக்கொண்டு வர முடியும்? ஆண்டாளையும், மாணிக்கவாசகரையும் கையைப் பிடித்து கூட்டி வருகிற காரியமா இது?

என நீங்கள் சந்தேகக் கேள்விகளை பிரசவிக்கலாம்.பாவை மாநாடு - வெற்றிகரமாக - விரும்பும் விதமாக அமைவதை உணர்ந்த அன்றைய அறநிலையத்துறை கமிஷனர் சாரங்கபாணி முதலியார்... இம்மாநாட்டை அரசே நடத்தும் என்று சொல்லி விட்டார்.

மகாபெரியவரின் ஆசீர்வாதத்துடன் தொடங்கப்பட்ட இம்மாநாடு... அரசாங்கமே எடுத்து நடத்துகிற அளவுக்கு பிரம்மாண்டம் பெற்றது. இதனால் மகாபெரியவருக்கு அரசியல் முக்கியத்துவமும் ஏற்பட்டுவிட்டது.

பாவை மாநாடா? நல்ல விஷயங்கள் நிறைய சொல்லுவார்களே... என பிராமணர்கள் பிராமணர் அல்லாத மற்ற சாதியினர் என அனைவரும் கூடினார்கள்.

நல்ல விஷயங்கள் நடக்கும்போது தடங்கல்கள் வராமல் இருக்குமோ? தமிழ்நாடு முழுவதும் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் என எல்லா ஜில்லாக்களிலும் மார்கழி மாதம் முழுவதும் நாங்கள் நடத்திய இம்மாநாட்டுக்காக...மன்னார்குடி வந்தோம். பொது வீதியில் மேடை போட்டோம்.

இந்தப் பக்கம் ஆண்டாள்... பக்கத்தில் மாணிக்கவாசகர். வைணவமும், சைவமும் பக்கத்துப் பக்கத்தில் இருப்பதை பார்த்து சிலரது கண்கள் அனல் கக்கின. அந்த அனலை அடக்க முடியாமல் என்னிடம் ஓடோடி வந்தார் மன்னார்குடி ராஜகோபால் தீட்சிதர்.

‘ஸ்வாமி... என்ன இப்படி பண்ணிட்டேள்?’ என மொட்டையாக ஆரம்பித்தார். ‘எதை எப்படி பண்ணிட்டேன். விவரமா சொல்லுங்கோ...’ என நான் பதில் உரைத்தேன்.

‘தெரிஞ்சுண்டே கேக்கறீளே...?’ மறுபடியும் மொட்டை மொழிகளையே பேசினார் ராஜகோபால் தீட்சிதர். “தீட்சிதரே... என்ன சொல்றீர்? நீர் கேக்கறது எனக்கு முன்கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?” மறுபடியும் உரைத்தேன். தீட்சிதர் அப்போது தான் தன் உள்ளக் கிடக்கையை உடைத்தார்.

“பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே.... ஆண்டாள் யாரு? மாணிக்க வாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்த சூத்திரன் மாணிக்க வாசகர் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்த சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா?”

மன்னார்குடி வாழ் சில கண்களின் கனலை தான் தீட்சிதர் தன் வாயால் ஊதி எரிய வைக்கிறார் என்று எனக்குப் புரிந்தது. இதுக்குத்தான் இவ்ளோ நேரம் இழுத்தேளா? இந்த பாவை மாநாடு நான் நடத்தறதோ... சங்கராச்சாரியார் நடத்தறதோ இல்ல... இப்படி இது அரசாங்கம் நடத்துறா... அவாள்ட்ட போய் கேளும்...” என எதார்த்த பதிலை எடுத்து வைத்தேன்.

தீட்டு பார்த்த தீட்சிதர் அதற்குமேல் என்னிடம் எதுவும் பேசாமல் கிளம்பினார்.

மன்னார்குடியில் இந்த தீட்சிதர் என்றால்... இதுபோல் பல ஊர்களிலும் பலர் பாவை மாநாட்டை தடுத்துப் பார்த்தனர். முடியவில்லை. பல வருஷங்கள் நடந்தது மாநாடு...சைவ - வைணவ - பிராமணர் - பிராமணரல்லாதவர் ஒற்றுமையை வலியுறுத்தி இப்படி மாநாடுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் ஆகியோர் கோயில் இருக்கும் திசையைகூட திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு ஜாதி துவேஷம் ஜ்வாலை விட்டு எரிந்த காலம் அது.

ஆகமம் போட்ட ஆணைக்கு இணங்கதான் இந்த அனுமதி மறுப்பு என்னும் ஆச்சாரத்தை பிராமணர்கள் பின்பற்றி வந்தனர்.ஆகமம் எப்படி என்னதான் ஆணையிட்டது என்று கேட்கிறீர்களா?

“த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே...”என்று போகிற பாஞ்சாத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறது என்றால்...பல ஆச்சார அனுஷ்டானங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம்.

இந்தப் புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ, பஞ்சமனோ ஒரு அடியெடுத்து வைத்தால்கூட அனுஷ்டானங்கள் கறைபட்டு விடும். அதனால்... அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் ‘பட்’டென ஓடிப் போய்விடுவார்.

அதனால்... சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்... விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பகவான் அதில் க்ஷணம் கூட தங்கமாட்டார். எனவே, அவர்களை கோயிலுக்குள் விடாதே... என்கிறது ஆஹமம்.

தொடரும்

28. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது . ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..

பெண்களுக்கு கல்வி தேவையில்லை சொத்தில் பங்கு கிடையாது ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று விதித்தனர்.
துறவி அழலாமா?... அனைத்தையும் துறந்த சங்கராச்சாரியாரின் கண்களில் வழிந்த கண்ணீர், என் கண்களையும் நனைத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஆறுதலும், ஆசியும் சொல்ல வேண்டியவரின் கண்களே கலங்கி நிற்கும்போது நாம் என்ன செய்ய முடியும்...? சில நிமிடங்கள் அந்த ஞானக்கண்கள் உப்புநீரை உற்பத்தி செய்தபடியே இருந்தன.

பின்... அவரது காவி வஸ்திரத்தை எடுத்து துடைத்துக் கொண்டார். ‘கஷ்டமாயிருக்கு...’ என்றபடியே மௌனாமானார். அவர் அழுவதற்குக் காரணமான அந்த சம்பவத்தை அவரிடம் சொன்னதை நினைத்து எனக்கும் கஷ்டமாக இருந்தது.

அது...ஸ்ரீரங்கத்து சம்பவம்ஆலய நுழைவுப் போராட்டங்கள் ஆங்காங்கே அதிர்வேட்டுகள் போல நடந்து கொண்டிருந்தன. கூட்டம் கூட்டமாய் ஆலயவாசல் முன் நின்று...தெய்வத்தை தரிசிக்க தங்களுக்கும் உரிமை வேண்டும் என போராடிக் கொண்டிருந்தனர். அனுமதி மறுக்கப்பட்டவர்கள்.

அப்படித்தான், ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சஞ்சரிக்க அனுமதி வேண்டும் என்றும், ரங்கநாதரை தரிசிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் கோஷங்கள் காற்றை பயமுறுத்திக் கொண்டிருந்தன.

காந்திஜியால் ஹரிஜன்கள் என அன்போடு அழைக்கப்பட்ட ஜனங்கள் தங்கள் குடும்பங்களோடு அங்கே குழுமியிருந்தனர்.

அவர்கள் ஸ்ரீரங்கம் கோயில் அருகே கூடிக் கொண்டிருக்கும் போதே.. இந்த ஆலய நுழைவுப் போராட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமே எப்படி என அக்ரஹாரத்தில் கூடி ஆலோசித்தனர் பிராமணர்கள். ஆளாளுக்கு ஒரு யோசனையை அள்ளித் தெளித்தனர்.

நாமெல்லாம் போகலாம், கோவில் வாசல்ல நின்னுப்போம். அவா வந்தா அடிச்சு வெரட்டிடிலாம்- என இளம் பிராயத்து பிராமணர்கள் குதித்தனர்.

ஓர் நடுத்தர வயதுக்காரர் எழுந்து...’அபிஷ்டூ’ அவாமேல நம் கைபடாம வெரட்டணும்டா என ஆச்சாரமான யோசனையை ஆவேசமாக எடுத்துரைத்தார்.

கடைசியில் அக்கூட்டத்தில் வித்தியாசமான ஒரு முடிவெடுக்கப்பட்டது.

“இப்ப ஆம்பளைகள் நாம ரொம்பபேர் போகவேண்டாம். நம்மாத்து பொம்மனாட்டிகளை அனுப்புவோம். கோயிலுக்கு போறாமாதிரி இவா போகட்டும். அங்க... கோயிலுக்குள்ள போறதுக்காக போராடிண்டிருக்காளே... அவா பக்கத்துல போயி... அர்ச்சனைத் தட்டுல மறைச்சி எடுத்துண்டு போன மிளகாய்ப் பொடியை தூவிட்டு கூட்டத்தை கலைச்சிடணும்..

“இதுதான் முடிவு. இம்முடிவு ஒவ்வொரு ‘ஆத்து’க்கும் சென்று சொல்லப்பட்டது. அதேபோல் மடிசார் கட்டிக்கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட அக்ரஹார மாமிகள் கோயிலுக்கு அர்ச்சனை தட்டுகளோடு கிளம்பினார்கள்.

அவர்கள் தட்டில் இருந்தது சுத்தமான மிளகாய்ப் பொடி. ரங்கநாதன் சந்நிதியை நோக்கி கூட்டமாக போய்க்கொண்டே இருந்தவர்கள் திடீரென்று ‘ஹரிஜன்கள்’ பக்கம் சட்டென திரும்பி தாங்கள் கொண்டு வந்த மிளகாய்ப் பொடியை எல்லாம் விசிறி அடிக்க...ஒரே தும்மல் சத்தம் இருமல் சத்தம் பல ஹரிஜன்கள் அவசர அவசரமாய் பதறியபடி ஓடினார்கள்.

அவர்களின் கண்களில் மிளகாய்ப் பொடி விழுந்து கதறி அழுதபடி கலையப் பார்த்தார்கள்.

“கோயிலுக்குள் போய் சாமியை பாக்கணும்னு நெனச்சேன். இனி கண்ணே தெரியாது போலிருக்கே...” என அந்த நொடியிலும் சிலர் சொல்லியபடி ஓடினார்கள்

இப்போராட்டத்தை அறிந்து அங்கு வந்திருந்த போலீஸ்காரர்கள் இதைப் பார்த்துவிட்டு... ‘அந்த பொம்மனாட்டிகளை அப்புறப் படுத்தணும்ப்பா...’ என சொல்லிக்கொண்டே லத்திகளை ஓங்கிக் கொண்டுவர - சில ‘மிளகாய்ப்பொடி’ மாமிகளுக்கு போலீஸ் அடி விழுந்துவிட்டது. இதுதான் சிறீரங்கத்து சம்பவம்.

இதனை நான் சங்கராச்சாரியாரிடம் சொன்ன போது தான்... “அய்யய்யோ, அபச்சாரம், பொம்மனாட்டிகளை போலீஸ்காரா அடிச்சுட்டாளா... கஷ்டகாலமே” சட்டென அழுதுவிட்டார். அவர் அழுது, நான் அதுவரை பார்த்ததில்லை.இந்த சம்பவத்தை அவரிடத்திலே தெரியப்படுத்தியிருக்க வேண்டாமோ... என்கிற கேள்வியும் எனக்குள் எழுந்து அடங்கியது.

ஆனாலும்... இது போன்ற ஆலய நுழைவுப் போராட்டங்கள் மற்றும் சமய சம்பந்தம் உடைய காரியங்களைப் பற்றி தெரிந்துகொள்வதில் மகாபெரியவருக்கு ஓர் இஷ்டம். ஏனென்றால், சிருங்கேரி மடத்துக்காரர்கள் பல விஷயங்களில் சமய சம்ப்ரதாய விஷயங்களோடு சமுதாய விஷயங்களிலும் தலையிடுவார்கள்.

அவர்களுக்கு அவ்வப்போது பதில் தர மகாபெரியவரும் இதுபோன்ற சமுதாய விஷயங்களில் தலையிடுவது அவசியமாய் இருந்தது. இது ஒரு சிறிய காரணம் என்றாலும்... அனைத்து வர்க்க மக்களிடத்திலும் அவர் வைத்திருந்த அக்கறைதான் பெரிய காரணம்.

இந்த நிலைமையில் தான்... பண்டித ஜவஹர்லால் நேருஜியின் மந்திரி சபையில் ‘ஹிந்து கோடு பில்’ கொண்டு வருவதுபற்றிய ஆலோசனையில் இறங்கினார்கள்.

ஸ்மிருதியில் பெண்களுக்கு சொத்து பாத்யம் கிடையாது என கண்டிப்பாய் கூறப்பட்டிருக்கிறது

பாரத தேசத்துக்குள் பிராமணர்கள் வரும்போது அவர்களுடன் வந்த ஸ்திரீகள் மிகக் குறைவானவர்கள் என்பதை இக்கட்டுரைத் தொடரின் தொடக்க அத்யாயத்தில் நான் குறிப்பிட்டிருந்ததை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.

இங்கு வந்த பிராமணர்கள் இங்குள்ள பெண்களோடு கூடி வாழ ஆரம்பித்தாலும்... பெண்களை சூத்ரர்களுக்கு சமமாகவே வைத்தனர். அதனால்தான் பெண்களுக்கு எவ்வித சமய சமஸ்காரங்களும், சடங்குகளும் கிடையாது. இதோடு கூட... பெண்களுக்கு வித்யா அதாவது கல்வி தேவையில்லை என்றும் ஸ்மிருதியில் விதித்தனர்

இதன் ஒரு பகுதியாகத்தான் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது என்றும்... அவள் எப்போதும் ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டுமென்றும் ஸ்திரீகளுக்கு ஸ்மிருதி பயங்கர கட்டுப்பாடுகள் வைத்திருந்தது.

இந்த ஸ்மிருதியின் பிடியிலே பெண்கள் இருந்த சமயத்திலேதான்... நேருஜி அறிவித்தார். எல்லார்க்கும் சொத்துரிமை உண்டு. அதாவது பெண்களுக்கும்.

இவ்விஷயம் சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கும் எட்டியது. பெண்களை போலீசார் தாக்கியதற்காக கண்ணீர் விட்ட சங்கராச்சாரியார், பெண்களுக்கு சொத்து பாத்யம் உண்டு என கேட்டதும்.... 

தொடரும்

http://thathachariyar.blogspot.fr/2010/11/28.html

 

Comments