இந்து மதம் எங்கே போகிறது? -மெய்யியல்-பாகம் 51 - 61.


51 தன்னுடைய"அதை" மட்டும்அனுப்பி இல்லறசுகம்!!!. முடியுமா உங்களால்?


“அது” மட்டும் விர்ரென பறந்துபோய் ஆனந்தமாக கலவி அனுபவித்து விட்டு திரும்பியதாம். .

நள்ளிரவிலும் பிராட்டியை சேரவேண்டும் என்ற ஆசை ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி)அனுப்பி ரங்கநாயகி சன்னதிக்குள் சென்று இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்’ என்பதை குணரத்ன கோசத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் பராசரபட்டர்.

பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர்.

தெய்வங்களிலேயே பெண் தெய்வங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் பாருங்கள்.

பாரி வேட்டை படித்திருப்பீர்கள். அதாவது ஆண் தெய்வம் கோவிலை விட்டு எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் இதை சகித்துக் கொண்டு பெண் தெய்வங்கள் கோயிலுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும்.

ஆமாம்... பெருமாள் இத்தனை வாகனங்களில் ஊர்விட்டு ஊர், தெருவிட்டு தெரு என ‘புறப்பாடு’ நடத்திக் கொண்டிருக்க தனிக்கோவில் நாச்சியாரான தாயார் நிலை என்ன தெரியுமா?“

நம் கணவர் ஜம்மென்று இப்படி ஊர் சுற்றுகிறாரே... நாம் சுற்ற முடியாதா?” என ஒருவேளை பிராட்டி நினைத்தால்...“ஓ... நீங்களும் சுற்றலாமே...ஆனால் உங்கள் கணவரான பகவானை மட்டும் சுற்றுங்கள். அதுவே ஊரைச் சுற்றியது போல் ஆகிவிடும்”... என பெண் தெய்வத்துக்கே கட்டளை போடுகிறது நமது ஆண் சாஸ்திரம்.

அதனால்... இன்றும் பெருமாள் கோவில்களில் தனிக்கோவில் நாச்சியாரான பிராட்டிக்கு ‘புறப்பாடு’ என்றால் கோயில் பிரகாரத்தை சுற்றி வருவதுதான் அதற்குமேல் எங்கேயும் வெளியே போகக்கூடாது என்பதுதான் பொது விதி. இன்னும், விதிவிலக்காக சிற்சில இடங்களில் சில ஸ்தலபுராணங்களை முன்வைத்து பெண் தெய்வமான பிராட்டி வெளியே தலைகாட்டும் உற்சவங்களும் அபூர்வமாக நடக்கின்றன.

அதாவது... தெய்வங்களிலேயே பெண் தெய்வங்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் பாருங்கள்.

இதெல்லாம் எதற்கு? தெய்வ விஷயத்திலேயே இப்படித்தான் இருக்கிறது. பெண் தெய்வம் படிதாண்டக்கூடாது என சாஸ்திரம் கோடு போட்டு வைத்திருக்கிறது.

அப்படியானால் மனித தர்மத்தில் பெண்கள் நிலைமை எப்படி இருக்கவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்குத்தான் இதெல்லாம்.இதெல்லாம் இருக்கட்டும்...

பெண்ணை ஆண் எப்படி வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் தன் போகத்துக்காக இஷ்டப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற போதனையையும் தெய்வங்களிடமிருந்தே ஆரம்பித்து விட்டனர்.

அந்த போதனையை சொல்லும் ஒரு காட்சியை உங்களுக்கு சொல்கிறேன்.இப்போது நாம் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றால் என்னென்ன தரிசிப்போம்?

படுத்துக் கொண்டிருக்கும் ரங்கநாதனை சேவிப்போம். பின் ரங்கநாயகியை வழிபடுவோம். ஸ்ரீராமானுஜரை சேவிப்போம். இப்படி ஒவ்வொரு சன்னதியாய் போய் சேவித்து வருவோம்.

ஆனால்... ஒரு பக்தர் இரவு நேரத்தில் பகவானை சேவிப்பதற்காக வந்திருக்கிறார். அர்த்த ஜாமம் எல்லாம் ஆகி சன்னதியை பூட்டி... சாவிக்கொத்தை மாட்டிக் கொண்டு அர்ச்சகர்கள் சென்றாகி விட்டது. அமைதியே உருவான ரம்யமான ராத்திரி அது.

அப்போது... ரங்கநாதன் சன்னதியிலிருந்து திடீரென ஒரு விசேஷ வெளிச்சம். பகவான்தான் காட்சி தரப்போகிறாரோ என்னவோ என அந்த பக்தர் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து... ரங்கநாதன் சன்னதிக்குள்ளிருந்து ஒரு பொருள் மட்டும் விர்ர்...ரென வெளியே வருகிறது.

அப்படியே வானத்தின் வழியாக பறந்து போய் ரங்கநாயகியின் சன்னதிக்குள் நுழைகிறது. அந்த பக்தர் இதையும் பார்க்கிறார்.

கொஞ்சநேரம் ஆனது... மறுபடியும் ஒரு விசேஷ வெளிச்சம். இப்போது... ரங்கநாயகி சன்னதிக்குள்ளிருந்து அந்த பொருள் கிளம்பி... வந்த வழியே திரும்பி பழையபடி ரங்கநாதன் சன்னதிக்குள் வந்தடைகிறது. முன்னால் இருந்த இடத்திலேயே சென்று சேர்ந்து விடுகிறது.

சரி... அது என்ன பொருள் என்கிறீர்களா? அந்த பக்தரை கேட்டால் சொல்வார் அல்லவா?

சொல்வது என்ன எழுதியே வைத்திருக்கிறார். அந்த பக்தர் வேறு யாருமல்ல... ராமானுஜரின் வலது கையான கூரத்தாழ்வானின் மகன் பராசரபட்டர்தான்.

பராசரபட்டர் தான் அருளியிருக்கும் குணரத்ன கோசத்தில் இந்த காட்சியை சாதித்திருக்கிறார். சரி...

பறந்து போனது என்ன?

‘அது... ரங்கநாதனின் ஆனந்த நாடி... (ஆண் குறி )அதாவது தேக சம்பந்தம் வைத்துக்கொள்வதற்கு உபயோகப்படுகிற அங்கம்.

நள்ளிரவிலும் பிராட்டியை சேரவேண்டும் என்ற ஆசை ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி)அனுப்பி ரங்கநாயகி சன்னதிக்குள் சென்று இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்’ என்பதை குணரத்ன கோசத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார் பராசரபட்டர்.

இந்தக் கதை எதற்கு? விட்டலாச்சார்யா கதைபோல இருந்தாலும்... ‘ஆணின் போகத்துக்குத்தான் பெண். அவளை எந்நேரமும் எப்படியும் உபயோகப்படுத்த ஆணுக்கு உரிமை உள்ளது’ என்பதைத்தான் இப்படி ரங்கனின் அந்தரங்கத்தையே பார்த்ததாக விளக்கியிருக்கிறார் பட்டர்.

இதை பெருக்காரணை சக்ரவர்த்தி ஆச்சார்யர் எழுதிய ‘மும்மத்தஸாரம்’ என்னும் புஸ்தகத்தில் நீங்கள் தமிழிலேயே தரிசிக்கலாம்.

“ஸ்ரீரங்கநாதன் தனது ஆனந்த நாடிகளைக் கொண்டு ஸ்ரீரங்கநாயகியுடன் ஆனந்தமாக கலவியை அனுபவிக்கிறான் என்று ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீ குணரத்ன கோசத்தில் எப்படி சாதித்தார்?...” என்று கேட்கிறார் சக்ரவர்த்தி ஆச்சார்யர்.

இதைப் பார்த்துவிட்டு வைதீகர்கள் பலர் வேதனைப்பட்டார்கள். இப்படி எழுதியதை தமிழிலும் மொழிபெயர்த்து விட்டாரே என்று.

இதையே சக்ரவர்த்தி அய்யங்கார் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தபோது... இக்காட்சி இடம் பெற்றால், பெண்ணடிமைத்தனம் ஆபாசமாக சித்தரிக்கப்படுகிறது என்ற பேர் வருமே என்பதற்காக... அந்த ஆனந்த நாடி பகுதியை மட்டும் வெட்டி எடுத்துவிட்டார்கள்.

இப்படியெல்லாம் பெண்களை போகப்பொருளாகக் காட்டுவது வைணவம் மட்டும்தானா... சைவமும் இதற்கு சளைத்ததல்ல..

தொடரும்

00000000000000000000000000

52 - 01 தெய்வங்களில் மேல்தரம்? கீழ்தரமா ?

விஷ்ணு, சிவன் உள்ளிட்ட தேவதைகள் வேதம் வகுத்த தேவதைகளாம். மற்ற தேவதைகள் எல்லாம் கிராம தேவதைகளாம். அவை... கீழ்த்தரமான தேவதைகளாம். ஏனென்றால், அவற்றை வணங்குபவர்கள் உழைக்கும் மக்கள், சூத்திரர்கள். அதனால்தான் கிராம தேவதை!

என்னைக் கேட்டால் கிராம தேவதைகள் என்று சொல்வோரை உதைக்கவேண்டும்.

அதென்ன கிராம தேவதை, சர்க்கிள் தேவதை, ஜில்லா தேவதை என நீங்களே வகைப்படுத்துவது...?வைணவத்தில் பிராட்டி... சைவத்தில் அம்பாள். இந்தப் பெயர் வேறுபாடுதானே தவிர பெண் தெய்வங்களை அடிமையாக வைத்திருத்தலே இரண்டு சமயங்களிலும் பக்தி யுக்தியாக பேணப்படுகின்றன. பெண்கள் சைவம் எப்படி திருவிளையாடல் பண்ணியது என்பதை பிறகு பார்ப்போம்.

அதற்குமுன்... காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்ற அம்பாள்கள் கோயிலை விட்டு வெளியே வந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

இன்றும் ‘அத்வைதம்’ என பேச்சுக்குப் பேச்சு பேசும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் எங்கெங்கே போய் வருகிறார்கள்? சென்னை, பம்பாய், காசி, டில்லி என டூர் அடித்து கோர்ட் வரைக்கும் போய்விட்டார்கள். ஆனால்... அவர்கள் பூஜிக்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரகாரத்தைத்தாண்டி வெளியே வந்திருக்கிறாளா என விசாரித்துப் பாருங்களேன்.

இதுபோல் தெய்வங்களிலேயே ஆண் - பெண் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி வைத்திருந்த ஆகம சம்பிரதாயங்கள்... தெய்வங்களில் வர்க்க பேதங்களையும் வகைப்படுத்தி வைத்திருக்கின்றன.

அதென்ன? விஷ்ணு, சிவன் உள்ளிட்ட தேவதைகள் வேதம் வகுத்த தேவதைகளாம். மற்ற தேவதைகள் எல்லாம் கிராம தேவதைகளாம். அவை... கீழ்த்தரமான தேவதைகளாம். ஏனென்றால், அவற்றை வணங்குபவர்கள் உழைக்கும் மக்கள், சூத்திரர்கள். அதனால்தான் கிராம தேவதை!

என்னைக் கேட்டால் கிராம தேவதைகள் என்று சொல்வோரை உதைக்கவேண்டும்.

அதென்ன கிராம தேவதை, சர்க்கிள் தேவதை, ஜில்லா தேவதை என நீங்களே வகைப்படுத்துவது...?

“சமேத விஷ்வா வசஸாபதிந்தவஹா ரெகஹ விபுஹீஅதிதித் ஜனானாம் தம் வர்த்தனிஹீயது வாவ்ருதே ஏகையித் பூரி...”

அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் அந்தந்த மண்ணுக்கேற்ற வகையில்... தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் தங்கள் தெய்வங்களை சிருஷ்டித்துக் கொண்டார்கள்.

இது பெரும்பாலும் பெண் தேவதைகளாகவே அமைந்தன. ஏனென்றால்... பெண் வீட்டிலேயே இருந்து சகலத்தையும் கவனித்துக் கொள்வதுபோல பெண் தேவதைகளை நிறுவி வைத்தால் நாம் வெளியே போனாலும் நம் ஊரிலேயே நமது பகுதியிலேயே தங்கியிருந்து பாதுகாக்கும் என்பது வாழ்க்கையிலிருந்து அவர்களுக்குக் கிடைத்த நம்பிக்கை.

அவரவர் பகுதியில் அவரவர் தெய்வத்தை சிருஷ்டிக்கிறார்கள். அதனால் ‘கிராம தேவதை’ என்ற பதமே தவறானது.

முதன்முதலில் வெளிச்சத்தை மனிதன் வணங்கினான் என்று முன்பே பார்த்தோம்.அதேபோல் இருட்டைக் கண்டும் பயந்து வணங்கினான். இருட்டுக்குள்ளும் கடவுள் இருக்கிறது என்று நம்பினான்.

அதுதான் காளி. கருங்கல்லைத்தான் முதலில் காளி என்று வணங்க ஆரம்பித்தான். காளி என்றால் கருப்பு என்று அர்த்தம். பிறகு அந்தக் கரிய கல்... கரிய உருவமானது. காளியம்மாள் ஆனது. பின் காளியாத்தா ஆனது.

இதேபோல் வேளாண் தொழில் செய்து வந்தவர்கள் காளியை பச்சையாக பார்த்தார்கள். பண்பாடு வளர வளர... அவரவர் வாழ்க்கை முறைக்கேற்ப தங்களது தெய்வங்களை வடிவமைத்துக் கொண்டார்கள்.

இப்படிப்பட்ட காளி, மாரி போன்ற தேவதைகள் எல்லாம் ஆகமத்துக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அதனால் அவை வெளியே வரக்கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் கிடையாது.

ஏனென்றால், அந்த தேவதைகள் இருப்பதே... ஊருக்கு வெளியே எல்லைப் புறத்திலே காவலுக்காகத்தானே.பிற்பாடான காலங்களில் இவைகளையும் ஆகமத்துக்கு உட்படுத்தினார்கள்

தொடரும்

0000000000000000000000000

52 - 2 பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும்.

அதாவது... பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான்.

எனவே, அவனுக்கு, அவளுக்கு (தெய்வங்களுக்கு) தினமும் முறையாக நைவேத்யம் படைக்கவேண்டும் என்றார்கள். பகவானுக்கு குளிரும். அதனால் குளிர்காலத்தில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை.

பிராமணர்கள். அதன் பிறகு சிலைக்கு நைவேத்யம் வழங்கும் வழக்கம் வருகிறது.

அதாவது ஆகமத்துக்கு அப்பாற்பட்ட தேவதைகளையும் பூஜிக்கத் தொடங்கிய பிராமணர்கள் நைவேத்யத்தை கட்டாயமாக்கினார்கள்.

அதாவது... பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான். எனவே, அவனுக்கு, அவளுக்கு (தெய்வங்களுக்கு) தினமும் முறையாக நைவேத்யம் படைக்கவேண்டும் என்றார்கள்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தினமும் பகவானுக்கு வழக்கமாகப்படைக்கும் நிவேதனம் வேறு. விசேஷ காலங்களில் ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு வகை நைவேத்யம்.

பெருமாள் கோயில்களில் சொல்கிறேன் கேளுங்கள். காலையில் தினமும் நடக்கும் காலசந்தி என்ற பூஜைக்கு தயிர்ச்சாதம், மதியம் உச்சிகாலம் எனப்படும் பூஜைக்கு சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், இத்யாதிகள். இதற்குப் பெயர் அலங்காரத்தளிகை.

அதாவது நாம் சாப்பிடும் மதியச்சாப்பாட்டை பகவான் சாப்பிட்டால் அதற்குப் பெயர் அலங்கார தளிகை. பெருமாள் வெளியே வாகனங்களில் சுற்றி விட்டு கோயில் திரும்புவார் என்று சொன்னேன் இல்லையா?

அப்போது ஊரெல்லாம் திருஷ்டி போட்டிருக்கும் என கருதப்பட்டு... பெருமாளுக்கு திருஷ்டி கழிப்பதற்காக ‘திருவந்தி காப்பு’ என்றொரு விசேஷம்.

இதில் பால், பழம், பயத்தம்பருப்பை ஊற வைத்து செய்த வடைப் பருப்பு, தோசை எல்லாம் நைவேத்யம் செய்து திருஷ்டி கழிப்பார்கள்.

இதுதவிர அமாவாசை, ஏகாதசி காலங்களில் ஒரே நைவேத்யம் உப்புமா. இதுதவிர அய்ப்பசி மாதம் மூல நட்சத்திரம் அன்று... பால் புடலங்காய்... அதாவது பாலில் புடலங்காயை ஊற வைத்து செய்யப்படும் இனிப்பான உணவு.

வைகாசி விசாகம் அன்று பால்மாங்காய். இதுவும் அதுபோலவே ஓர் இனிப்பு. நாச்சியார் திருமொழி சாத்துமறை திருநாளன்று அக்காரவடிசில் அதாவது சர்க்கரைப் பொங்கல். இதுதவிர புளியோதரை போன்ற புகழ் பெற்ற உணவு வகைகள் திருவிழாக்களில்.

பெருமாள் கோயிலைப்போன்று சிவன் கோயில்களில் உணவுக்கு இந்த அளவு முக்கியத்துவம் இல்லை. அங்கே ‘சம்பா’ சாதம் தான் முக்கியம். அதாவது மிளகு, ஜீரகம், பொடியோடு நெய் ஊற்றி சாதம் பிசைந்து படைப்பார்கள்.இவ்வளவு கேட்டு உங்கள் நாக்கில் உமிழ் நீர் ஊறுகிறதா? இவையெல்லாம் நிர்மால்யம். அப்படியென்றால்...?

தொடரும்

00000000000000000000000000000

53 பகவானின் சாப்பாட்டுப்பட்டியலை பார்த்தீர்களா?...

பார்த்தீர்களா பெண் தெய்வங்கள் படும் பாட்டை?... பெண் தெய்வத்தை வெளியே விடுவதில்லை.

மோட்சம் கொடுக்கும் சக்தி பெண் தெய்வத்துக்கு இல்லை. ஆண் தெய்வம் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடும் பேறு கூட பெண் தெய்வத்துக்கு இல்லை. பகவானின் போஜனப் பட்டியலை பார்த்தீர்களா?... காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் நித்யப்படி (தினந்தோறும்) சாப்பிடும் இஷ்டமான போஜனம் இட்லி நாம் சாப்பிடும் சாதாரண இட்லியல்ல.

குடலை இட்லி, அப்படியென்றால்?...பெருமாள் கோவில்களில் துளசி பறிப்பதற்கென்றே ‘குடலை’ என அழைக்கப்படும் ஒரு நீண்ட கூடை வைத்திருப்பார்கள். நீண்ட உருளை வடிவில் இருக்கும் இந்த கூடை...இதே போன்று ஒரு பாத்திரம் செய்து... அதில் மாவை ஊற்றி வேகவைத்து வெளியே எடுத்தால் அதுதான் குடலை இட்லி.சரி... இவ்வளவு நளபாகங்களை சொல்லியாகிவிட்டது.

இத்தனை நளபாகங்களும் நிர்மால்யம் என்றது ஆஹமம்

அப்படியென்றால்?...பாஞ்சராத்ர ஆகமம் சொன்னது...

“சொரூபாம் பிரதிமாம் விஷ்ணோஹோப்ரஸன்ன வதனே க்ஷணாம் க்ருத்துவாஆத்மன ப்ரீதிகரீம் சொர்ண ரஜதா திபிதாமர்ச்சயேது தாம்ப்ரணமேது தாமே விசிந்தேதுவிஷதீ அபாஸ்த தோஷஸ்துதாமேவ ப்ரம்ம ரூபிணிம்....”

வேத வழிமுறைகளை கர்மாக்களை புத்தர் வேகமாக வீரியமாக அடித்து புரட்டி போட்ட காலத்துக்குப் பிறகு...“உனக்கொரு புதுவழி சொல்கிறேன் கேள்.

விஷ்ணுவை பிரதானமாக்கி உனக்கு பிடித்தமான உருவத்தை சிறிய அளவில் தயார் செய்து கொள். அது கல்லாக இருக்கக்கூடாது. தங்கத்திலேயோ வெள்ளியிலேயோ செய்ததாக இருக்கவேண்டும். அதை நீ தனியே வைத்து பூஜை செய்து கொள்...” என்றது.

இதன் பிறகு தென்னாட்டில் பெரிய பெரிய கோவில்களையும்... சிலைகளையும் பார்த்தவர்கள் ‘இது நன்னா இருக்கே... இதுக்கும் நாங்களே பூஜை பண்றோம்...’ என்று வந்தனர். பிறகுதான் பகவானுக்கும் பசிக்கும் அவனுக்கு நைவேத்யம் செய்யணுமே என்று சொல்லி... இவ்வளவு நளபாகங்களை கண்டுபிடித்தனர்.

சரி... நிர்மால்யம் என்றால் என்ன என்று இன்னும் சொல்லவில்லையே?... பகவானுக்கு இத்தனை விதம் விதமான பட்சணங்கள், பலகாரங்கள் இத்தியாதிகளை நைவேத்யம் பண்ணுகிறீர்களே...

அவன் அதை சாப்பிடுகிறானா?... அவன் முன்னால் வைத்துவிட்டு அதை கொஞ்ச நேரத்திலேயே எடுத்து வந்து விடுகிறீர்களே?... அதற்குள் அவன் அதை ஸ்வீகரித்துக் கொண்டிருப்பானா?...எடுத்துக் கொண்டு போய் என்ன செய்கிறோம்?

பகவானின் பேரைச் சொல்லி நாம் சாப்பிடுகிறோம். இன்றும் கூட பெருமாள் கோவில்களில் உத்ஸவத்தின் போது புளியோதரையில் காரமில்லை, உப்புமாவில் உப்பில்லை என்று பெரிய சண்டையே நடக்கிறது.

இதெல்லாம் எதற்கு?.... பகவான் சாப்பிட்டதை நாம் ஏன் சாப்பிட வேண்டும்?... அது எச்சிலாயிற்றே?... அவன் எச்சில் செய்ததை நான் சாப்பிடுவதாவது... அதை தூக்கிப் போடுங்கள். தூர தூக்கிப்போடுங்கள். அதை உபயோகப்படுத்தாதீர்கள். இதுதான் நிர்மால்யம்.

அதாவது ‘எச்சிலை சாப்பிடாதே’ சாப்பிட்டால் உனக்கு நிர்மால்ய தோஷம். ஆகமம் சொன்னபடி சிலை செய்து, பூஜித்தவர்கள் இந்த விஷயத்தை கேட்டவுடன் ‘அடிமடியில் கைவைக்கிறதே’ என்று நினைத்தார்கள்.

அப்படியென்றால் நாம் எப்படி பிழைப்பது?... யோசித்தனர் அதெல்லாம் முடியாது என்றனர். பகவானின் எச்சில்தானே அதை சாப்பிட்டு விட்டுப் போகிறோம். விடுங்கள் என்று அன்னக்கொடி பிடித்தனர்.

இதைத்தான் வேதாந்த தேசிகன் தனது ‘பாஞ்சராத்ர ரட்சை’யிலே சொல்லியிருக்கிறார். இவ்வளவு பட்சணம் பலகாரம் பண்ணி பகவானுக்கு படைத்துவிட்டு அதை நிர்மால்யம் என்று தூக்கிப் போட்டால் எப்படி?...

அது சரிப்பட்டு வராது.எனவே பெருமாள் கோவில்களில் இந்த நிர்மால்யம் சரிப்பட்டு வராது. பெருமாளுக்கு படைத்தவற்றை சாப்பிடுவதால் நிர்மால்ய தோஷம் வராது.

சிவன் கோயில்களில் வேண்டுமானால் நிர்மால்ய (எச்சில்) தோஷம் இருக்கட்டும். இங்கே வேண்டாம்...” என்கிறார் வேதாந்த தேசிக ஸ்வாமி... அதாவது இதன் உள்ளர்த்தம் என்ன?

பெருமாள் கோவில்களில் தான் வகை வகையாய் நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன.

சிவன் கோவில்களில் இப்படி வகை வகையாய் சுவை சுவையான பதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை.

எனவே சிவன் கோவில்களில் வேண்டுமானால் எச்சில் தோஷம் என கருதி அதிகபட்சம் சம்பா சாதம்தான். அதை ஒதுக்கி விடலாம்.

ஆனால் சுவையான ‘சப்பு’ கொட்டி சாப்பிடும் பெருமாள் கோவில் பதார்த்தங்களை எப்படி நிர்மால்யம் என்று தூரப் போட முடியும்?... இப்போது புரிகிறதா?

சரி... எதற்கு இதைச் சொல்ல வந்தேன். நாம் தெய்வங்களிலும் பெண் தெய்வங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைப் பற்றி பார்த்து வருகிறோம் அல்லவா?... சாப்பாட்டு விஷயத்தில் கூட அது பின்பற்றப்படுகிறது என்பதை சொல்லத்தான் இவ்வளவு விஷயங்களையும் விளக்கினேன்.

அதாவது பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும் நைவேத்யத்தை பிராட்டிக்கு நைவேத்யம் செய்யக்கூடாது. அது ஆண் தெய்வமான பெருமாளுக்கு மட்டும்தான். அவர் சுவைக்க மட்டும்தான்.

பிராட்டிக்கு தனித்தளிகைதான். இன்றும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலுக்கு போய்ப் பாருங்கள்.

பெருமாளுக்கு செய்த தளிகையை தாயாருக்கு அதாவது பெண் தெய்வமான பிராட்டி பக்கம் கூட கொண்டு போக மாட்டார்கள். பொருளாதார வசதியில்லாத பெருமாள் கோவில்களில் மட்டும்தான் தவிர்க்க முடியாமல் பெருமாளுக்கும் தாயாருக்கும் சாப்பாட்டு சமாச்சாரம் சமமாக இருக்கிறது.

பெண் தெய்வத்தை வெளியே விடுவதில்லை. மோட்சம் கொடுக்கும் சக்தி பெண் தெய்வத்துக்கு இல்லை. ஆண் தெய்வம் சாப்பிடும் சாப்பாட்டை சாப்பிடும் பேறு கூட பெண் தெய்வத்துக்கு இல்லை. பார்த்தீர்களா பெண் தெய்வங்கள் படும் பாட்டை?...

தொடரும்

00000000000000000000000

54 "அதை" காட்டிஜெயித்த‌ சிவ‌ன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

சிவபெருமானும் காளியும் போட்டி நடனமாட... சிவன் வேண்டுமென்றே காலை தூக்கி ஆணுறுப்பை வெளிக்கொண்டு வந்து தெரியும்படியாக்கி... சிவபெருமானின் திட்டம் பலித்து ஜெயித்துவிட்டார்.

இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம்.பெண் தெய்வங்கள் இந்த பாடுபடுவது வைஷ்ணவ சம்ப்பிரதாயத்தில் மாத்திரம்தானா? சைவத்தில் எப்படி? உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில்கூற நாம் சிதம்பரம் வரை போகவேண்டும். சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சிலபேர் அவரது ஆலயத்துக்குச் சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள்.

இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம் தான். ஒருநாள்... மிகப்பழைய காலத்தின் அழகான நாள்... சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்?

பரமசிவன், தில்லை காளி. யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள்தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள். புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையை விட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும், தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள் பின் சொல்ல வேண்டுமா?

அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப்போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப்போய் விடுவார்கள். இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன.

இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது.

தொடங்கியாகி விட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கைவிரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.

மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை அய்ந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம், இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம். காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன.

சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை...பார்த்தார் சிவபெருமான், ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா?

அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா... சிவபெருமானை தில்லை காளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்... இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்... தன் இடதுகாலை சற்றே தூக்கினார்.

நடனத்தின் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக்கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடது கால் இன்னும் எழும்பியது, ஆமாம்... இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.

வலதுகாலை ஊன்றி இடது காலை உயர விலக்கிக்கொண்டே போக... சபையே ஒருகணம் அதிர்ந்தது. ஏன்?...வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார்

சிவன்.வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது.

ஆனால், சிவபெருமான்... தொடர்ந்து தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக... சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது. வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை (ஆணுறுப்பை) வெளிக்காண்டு வந்து... ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?

‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.

இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். இதை நானாகச் சொல்லவில்லை. நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன? ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்துவிடக்கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோற்றவள் காளி.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளி... ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். “Siva is a hig class God. „But Kali is low class rural God” என்று சொல்லி காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே...?

இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள்.

கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.

‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

இவ்வாறு தெய்வங்களுக்கிடையிலேயே ஆண்... பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது. அதோடு வர்க்கமொழி பேதமும் பின்பற்றப்பட்டிருக்கின்றன.

தொடரும்

00000000000000000000000000000

55 சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார்?

முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை.

சிவனின் மன்மத புயல் கிளம்ப‌‍ ‍பார்வதி விலகிக் கொள்ள... சிவனின் உயிர்த்துளிகள் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.. முடிவு?? !! அதன் பெயர்தான் ஸ்கந்தன். இப்போது புரிகிறதா?

சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்.சைவத்தில் இது மட்டுமல்ல மொழி பேதமும் உண்டு. முருகன் அழகான தமிழ்ப்பெயர். இச்சொல்லின் பொருளே அழகு என்றுதான் அர்த்தம். சுத்த தமிழ்க்கடவுளான முருகனை, பிராமணர்கள் கந்தனாக்கி விட்டார்கள். சுப்ரமண்யனாக்கி விட்டார்கள். ஏன்... பரமசிவன் - பார்வதியின் மகனாக்கி விட்டார்கள்

சமஸ்கிருதக்காரர்கள்.அப்படியென்றால் முருகன் பரமசிவனின் மகன் இல்லையா? இல்லை என்பது தமிழ் பதில். ஆமாம் என்பது சமஸ்கிருத பதில்.

எப்படி என்று கேட்டால் பெயர்க்காரணங்களை வைத்தே எளிதில் கூறிவிடலாம். முருகன் என்றால் அழகன். அதாவது தொன்மையான பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் பரிபாடல் நூலில் முருகன் என்ற தமிழ்க் கடவுள் பெயர்தான் வழங்கப்பட்டிருக்கிறது.

சரவணபவ, கந்தன்... இவையெல்லாம்...? அர்த்தம் சொல்கிறேன். பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை முருகன். இது தமிழ் பதில் என்று சொன்னேன்.அப்படியென்றால் சமஸ்கிருத பதில் என்ன? கந்தன், சரவணபவ என்றெல்லாம் சொல்கிறோமே? என்றெல்லாம் கேட்கிறீர்கள்.

வடமொழிக் கதையை தான் இங்கே வாசித்துக்காட்ட வேண்டியிருக்கிறது. பரமசிவனும், பார்வதியும் தங்களது லோகத்தில் லயித்திருக்கிறார்கள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது... பார்வதியின் மீது மோகனம் பொங்குகிறார் பரமசிவன். பார்வதியை நெருங்குகிறார்.
பார்வதிக்கு அப்போது என்ன வேலையோ? இல்லை ஸ்வாமி... இப்போது வேண்டாம். நான் தயாரில்லை... என்கிறார்.

பரமசிவனுக்குள்ளோ மன்மதப்புயல், பார்வதியை பார்க்கப் பார்க்க சுற்றிச் சுழன்று அவரை தாக்குகிறது. பார்வதி மீது மன்மத தாண்டவம் ஆடிட மிகத்தயாராக இருக்கிறார். ஆனால்... சக்திக்கு சம்மதமில்லை.பார்வதியை துரத்துகிறார் பரமசிவன். நாதனின் வேட்டையிலிருந்து தப்பிக்க நழுவி ஓடுகிறார் பார்வதி. பரமசிவனாயிற்றே... விட்டு விடுவாரா? பார்வதியை வளைத்து தன் கைகளின் எல்லைக்குள் இழுத்து விட்டார்.

`தேவி... உன்னை சுகிக்க சித்தமாயுள்ளேன்... தேக சம்பந்தம் கொள்ள தாகமாயிருக்கிறேன். ஏன் நீ விலகிச் செல்கிறாய்? என்னாயிற்று உனக்கு?’ - பார்வதியை ஒரு கொடிபோல சுற்றிக்கொண்டு பரமசிவன் விரகதாபத்தோடு வினா கேட்கிறார்.

`இல்லை நாதா... இப்போது வேண்டாமே...’ - மறுபடியும் அவளது பதில் இதுதான்.பகவானாக இருந்தாலும் தன் பாகங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முழுதாக பார்வதியை இறுக்கி கட்டியணைத்தவர்... அவளது ஆடைகளையும் அகற்ற ஆரம்பிக்கிறார்.

`ஸ்வாமி... நாதா...’ கெஞ்சுகிறார் பார்வதி. ஆனால்... இதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சுகத்துக்கான போருக்கு தான் மட்டுமே தயாராகி விட்டார் சிவன்.

பார்வதியின் ஒவ்வொரு பாகங்களையும் தன் கட்டுக்குள் பரமசிவன் வைத்திருக்க... இப்போதும் சக்தி சம்மதிக்கவில்லை. சிவனுக்கோ தாங்க முடியவில்லை. மன்மதக் கோபம் அவருக்குள் கொந்தளித்தது. பார்வதி மீது பாய்ந்து படர்ந்தார்.

ஆனால்... பார்வதியோ... சரியாக அந்த க்ஷணத்தில் தன் உடலை சற்று விலக்கிக் கொள்ள... பரமசிவனின் உயிர்த்துளிகள் போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.

பார்வதி விலகிவிட்டதால் பரமசிவனின் ரேதஸ் (இந்த்ரிய துளிகள்) அப்படியே ஆகாயத்திலிருந்து கீழே விழுந்தன. அந்த உயிர்த்துளிகள் அப்படியே கங்கையில் வந்து விழுந்தன. சிவபெருமானின் சொத்தாயிற்றே.... கங்கை நீரோட்டத்தோடு வேக வேகமாக பயணித்தன.

கங்கா மேலே சவாரி செய்த அந்தத் துளிகள்... கங்கைக்கரையோரம் படர்ந்திருந்த ஒரு நாணல் காட்டுக்குள் சென்று தேங்க...அப்படியே அது குழந்தையாக அவதரித்தது.

நாணலுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சரம். காட்டுக்கு வனம். சரவனம்... - நாணல் காட்டில் பின் உருவானவன் - என்பதால் சரவணன் - இப்போது சரவணன் என்று அழைக்கப்படுகிறான் முருகன்.சமஸ்கிருதத்தின்படி, சரவணன் இப்படித்தான் அவதரித்தான். பெயர் தரித்தான்.

கந்தன் என்றால்...? அதை கந்தன் என்று சொல்லக்கூடாது. உண்மையான சரியான சமஸ்கிருதப் பெயர் ஸ்கந்தன்.சரி... ஸ்கந்தன் என்றால்? இப்போது ஒரு வடமொழி கதை வாசித்தீர்களே... அதற்குள் வரும் மூலப் பெயர்தான் இது.

அதாவது... ஆணுடைய உயிர்த்துளிகள் பெண்ணுடைய பாகத்தில் சேராமல் வழிதவறி விழுந்தால்... அதன் பெயர்தான் ஸ்கந்தன். இப்போது புரிகிறதா?

முதலில் ஸ்கந்தன். அதன் பிறகுதான் சரவணன்... இப்படித்தான் சிவனுக்கு சரவணன் `பிறந்தான்’ என்கின்றன சமஸ்கிருத காவ்யங்கள். ஆனால்... அழகானவன் என்ற அர்த்தத்தில் அவனை ஒரு மலைக்கடவுளாக வணங்குகிறது தமிழ்க்குடி.

முருகனை ஸ்கந்தன், சரவணன் என கருத தமிழ் இடம் கொடுக்காது. தவிரவும் ஆபாசமான காரணங்களை வரையறுத்திருக்கிறது சமஸ்கிருதம்.

இப்படிப்பட்ட ஸ்கந்தன், சரவணனுக்கு சுப்ரமணியர் எனவும் ஒரு பெயர். இதன் அர்த்தம் உயர்ந்த பிராமணன். இப்போது புரிகிறதா? முருகனை சிவனின் மகனாக்கியது போலவே... கணபதியையும் மகனாக்கி விட்டார்கள். கணபதி யார்?

தொடரும்

00000000000000000000000000000

56 - 1 பார்வதி குளிப்பதை மறைந்து பார்த்த சிவன். விநாயகன் பரமசிவன் தான்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள் தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன. விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன் தான்.

‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.முருகன் என்ற பேருக்கும் ஸ்கந்தன், சரவணன் என்ற பேர்களுக்கும் இடையே நிலவும் மொழி, கலாச்சார வேறுபாட்டைப் பார்த்தோம்.

அப்படியென்றால் முருகனின் அண்ணான விநாயகர், கணபதி யார் என்கிறீர்களா? அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவு வைத்ததெல்லாம் Humanistic Worship -ஆல் வந்தது.சரி... கணபதிக்கு வருவோம்.

கணபதி முருகனின் அண்ணன், சிவனின் மூத்த மகன் என்றுதான் பரவலாக நம்மவர்கள் பேசி வருகிறோம். நம்பி வருகிறோம்.

ஆனால்... சமஸ்கிருதக் கதைகள் இதற்கும் வேட்டு வைக்கின்றன. என்ன கதை? பரமசிவனின் மனைவியாகிய பார்வதி, ஒருநாள் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள்தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன

சரி... சிவன் இங்கு என்ன செய்கிறார்? பார்வதி தேவி தண்ணீர் கொட்டிக் கொட்டி குளித்துக் கொண்டிருக்கிறாள். சிவனுக்கு ஒரு நப்பாசை. நம் தேவி எப்படி குளிக்கிறாள் என்பதை அவள் அறியாமல் பார்க்கவேண்டும். அதாவது... ஒருபெண் குளிப்பதை அவளுக்குத் தெரியாமல் இன்னொரு ஆண் (கணவனே என்றாலும் தெரியாமல் பார்க்கிறானல்லவா?) பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார் சிவன்.

அதுபோலவே பார்வதி தேவி ஜலக்கிரீடை செய்யும்போது மறைந்து மறைந்து நின்று தேவியின் தரிசனத்தை அவருக்கே தெரியாமல் பெற்றுக் கொண்டிருந்தான் பரமசிவன்.

‘சகல லோகங்களையும் கண்காணிக்கும் சக்தி பெற்ற’ பராசக்திக்கு தான் குளிப்பதை இரண்டு கண்கள் திருட்டுத்தனமாக பார்ப்பது தெரிந்திருக்காதா என்ன?உணர்ந்தாள்.

தான் தன்னந்தனியாக குளித்துக் கொண்டிருப்பதை யாரோ ரசம் சொட்ட பார்த்துக் கொண்டிருப்பதை தன் சக்தியால் தெரிந்துகொண்ட பார்வதி திடுக்கிட்டாள். பெண் தெய்வம் என்றாலும் பெண் தானே?

உடனே... அவசரமாக தனது கச்சைகளையும், வஸ்திரங்களையும் பதறியபடியே உடுத்திக்கொண்ட பார்வதி, தன்னைப் பார்த்தவனை தேடினாள். டேய்... யாரங்கே? பராசக்தியின் ஸ்நானத்தை ஒளிந்து பார்க்கும் அளவுக்கு துணிச்சல்காரன் யார்?

என கோபத்தில் பார்வதிதேவி சத்தம்போட... பட்டென்று வெளியே வந்த சிவன்... ‘தேவி... யாம்தான் ஒரு சின்ன திருவிளையாடல்... அதற்குப் போய் ஏன் இப்படி கோபப்படுகிறாய்? சாந்தம்... சாந்தம்...’ என்கிறார்.

எது ஸ்வாமி திருவிளையாடல் ஒரு பெண் குளிப்பதை இன்னொரு ஆண் மறைந்து நின்று கண்களால் சுகிப்பது உங்கள் திருவிளையாடல் என்றால்... என் திருவிளையாடலையும் கொஞ்சம் பாருங்கள்.

சக்தியும் தன் திருவிளையாடலை அரங்கேற்றினாள். “மனைவியென்றும் ‘பாராமல்’ நான் குளித்ததைப் பார்த்த நீர்... யானைத் தலையனாகவும், மனித உடம்பாகவும் மாறக் கடவுவது...” என கோபத்தால் சாபமிட்டாள்.

அந்த க்ஷணத்திலேயே பரமசிவன் அவ்வாறே ஆனார். அதாவது யானை முகத்துடனும் மனித உடம்பாகவும் புது வடிவம் பெற்றார். அதாவது... விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன்தான் என்கிறது இக்கதை.

இன்றும் ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் எல்லாம் விநாயகர்கள் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.அது எதற்கு என்றால்...?

‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.

தொடரும்

00000000000000000000000

56 - 02 வேதப்படி கணபதி கடவுள் இல்லை.?? மிருகங்களை வழிபடுதல்.

இவர் வேதத்திலேயே வருகிறார். இவர்தான் உலகத்தின் தொடக்கம், என்றெல்லாம் பின்னர் ‘பிள்ளையார் சுழி’ போட்டார்கள்.

அதெல்லாம் கிடையாது. வேதத்தில் கணபதி... என்ற சொல் வருகிறது. அவர் யாரென்றால்...?

வேதப்படி கணபதி கடவுள் இல்லை?.

வரலாற்று ரீதியாக பார்த்தோம் என்றால், நான் முன்பே சொல்லியிருக்கிறேன். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவியிருந்த வழிபாட்டு முறைகளில் முக்கியமான இரண்டாவது வழிபாட்டு முறை Totamism Worhip அதாவது மிருகங்களை வழிபடுதல்.

அப்படியாகத்தான் ‘ஒரு காலத்தில் காட்டுக்குள் வாழ்ந்த மக்கள் வித்தியாசமான, பெரிய உருவம் கொண்ட யானைகளை பயந்து வழிபடத் தொடங்கினார்கள்.

நாம் மனித உடலில் யானைகளை வைத்ததுபோல்... எகிப்தில் பல மிருகங்களை வழிபட்டு வருகின்றனர். இதுதான் கணபதியின் வரலாற்றுக் கதை.

கணபதி என்றவுடன்... இவர் வேதத்திலேயே வருகிறார். இவர்தான் உலகத்தின் தொடக்கம், என்றெல்லாம் பின்னர் ‘பிள்ளையார் சுழி’ போட்டார்கள்.

அதெல்லாம் கிடையாது. வேதத்தில் கணபதி... என்ற சொல் வருகிறது. அவர் யாரென்றால்...? ரிக்வேதத்தின் இந்த மந்த்ரத்தைப் பாருங்கள்.

“கணானந்தவா கணபதிஹிம் ஷவாமஹேகவிகம் கவினாம் உபமஸ் ஸ்ரவஸ்தமம்தேஷ்டராஜம் ப்ரம்மனாம் ப்ரம்மனாஸ்பதி”

வேதத்தில், வேதகாலத்தில் மக்கள், ரிஷிகள் எல்லாம் கூட்டம் கூட்டமாய் போவார்கள்.

அப்போது அவர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்ந்தெடுத்துக் கொண்டு அவன் சொல்படி நடப்பார்கள். அதாவது Leader of the Group. கணபதி என்றால் இதுதான் அர்த்தம். அந்த சிறுசிறு கூட்டங்களின் தலைவர்கள்தான் கணபதிகள்.

இதுபோல் வேதம் நிறைய கணபதிகளைக் காட்டுகிறது.

‘ஏ... தலைவா... உன் தலைமையில் நாங்கள் நடந்தால் எங்களுக்கு எல்லாம் கிடைக்கும். செல்வம் பெருகும்...’ என தங்கள் தலைவனை போற்றிப் புகழ்வதுதான் இந்த மந்த்ரம். இந்த Leader of the Group- அய்த்தான் பிற்காலங்களில் கணபதி என்ற கடவுள் ஆக்கிவிட்டார்கள்.

வேதப்படி கணபதி கடவுள் இல்லை.

பெண்கள் விஷயத்தில் நமது கடவுளர்களின் கண்ணியத் தன்மையையும் இந்த கண்ணியத் தன்மையாலேயே இன்னொரு கடவுள் உதித்ததையும் கண்டோம்.

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால்... நமக்கெல்லாம் ஒழுக்கத்தையும் சத் நெறிகளையும் வழங்க வேண்டிய தெய்வங்கள் எப்படி சித்தரிக்கப்பட்டிருக்கின்றன என்பதை உணரத்தான்... உணர்ந்து விட்டீர்களானால்... அடுத்து.

தொடரும்

000000000000000000000000000000000

57 - 58 நவராத்திரி நதிமூலம், ரிஷிமூலம், உண்மையான மூலம்.

இதுதானப்பா கொலுவின் ரிஷி மூலம், நதிமூலம் உண்மையான மூலம் எல்லாம். நவராத்திரியின் ஜோடிக்கப்பட்ட கதை புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான தத்துவத்தையே கொன்றுவிட்டார்கள்.

ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது. சாதிக்க முடியாது’ என்று சொல்வதுதான் கொலு(!) தத்துவம்.சில பல அத்தியாயங்களாக பெண்கள், பெண் தெய்வங்கள் ஆகியோருக்கு நமது சம்ப்ரதாயம் சபித்து வைத்த அநியாயங்களை யெல்லாம் விஸ்தாரமாகவே பார்த்தோம். அவற்றைப் படித்து விட்டு... சில ஸ்திரீகள் என்னிடம் ‘இப்படியா ஸ்வாமீ... அப்படியா ஸ்வாமீ... என ஆச்சரியத்தை கொட்டினார்கள். அனுபந்தமாக ஒரு கேள்வியையும் கேட்டனர்.

பெண் தெய்வங்கள் கூட படாதபாடு படறாள்னு சொன்னீர்கள். ஆனா... பெண் தெய்வங்களுக்காகவே பிரத்யேகமாக நவராத்திரி கொண்டாடுகிறோமே... நான்கூட எங்க ஆத்துல நவராத்திரி 9 நாளும் கொலு வைக்கிறேனே... இது பெண் தெய்வத்துக்கு பெரிய விசேஷம்தானே...” என்றாள் அந்த சின்னப்பெண்.‘அப்படி வா வழிக்கு...’ என்று சொல்லிவிட்டு நவராத்திரி கொலுபற்றி அவளிடம் விளக்கத் தொடங்கினேன். அதை நீங்களும் கேளுங்கள்

நவராத்திரி, கொலு என்பதெல்லாம் பெண் தெய்வங்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர்களின் ஆராதனைக்காக விசேஷமாக நடத்தப்படுகிறது என்பது இப்போது பொதுவான நம்பிக்கை. ஆனால்... இதன் நதிமூலம், ரிஷிமூலத்தைப் பார்த்தால் விஷயமும் வேறு. விசேஷமும் வேறு. அந்த ரிஷிமூலத்தை பார்ப்பதற்கு முன்பு... நவராத்திரியின் ஜோடிக்கப்பட்ட கதையைப் பார்த்து விடுவோம்.

மகிஷாசுரன் என்றொரு அரக்கன் எருமைத்தலையை உடையவன். தேவர்களுக்கு பெரும் துன்பங்கள் கொடுத்துக் கொண்டிருந்தவன். காரணம் அவன் பெற்றிருந்த ஒரு வரமாம். ‘என்னை கொல்ல முடியுமானால் அது ஒரு பெண்ணால்தான் நடக்கவேண்டும் என்பதுதான் வரம். அதாவது... பெண்ணால் என்ன செய்ய முடியும்? பெண் தெய்வங்களே கோயிலை விட்டு வெளியே வருவதில்லை. பிறகு எப்படி நம்மை அழிக்க முடியும்-என்ற நினைப்பு நம்பிக்கை அப்போது தேவர்களிடம் நிலவி இருந்ததால் அந்த அரக்கன் அப்படியொரு வரத்தை கேட்டான்.

தெய்வங்களும்... ‘பெண்கள்’ மீது வைத்திருந்த அபிப்ராயத்தாலோ என்னமோ வரம் கொடுத்துவிட்டன. பெண்தானே நம்மை அழிக்கவேண்டும். எந்த பெண்ணால் அது முடியும்?... என்ற திமிரில் கொடுமைகள் செய்ய ஆரம்பித்து விட்டான். இது சிவனின் மனைவி பராசக்திக்கு எட்டியது. “பெண்தானம்மா அவனை அழிக்க வேண்டும். அது எப்படி முடியப் போகிறது.உன்னால் அவனை அழிக்க முடியுமா?...” என்று பராசக்தியிடம் மற்ற தேவ, தேவதைகள் பிரார்த்திக்கிறார்கள்.

பராசக்தி யோசிக்கிறாள். ‘நம்மால் முடியுமா?...’ பக்கத்து வீட்டு பெண்கள் (!) போன்ற லட்சுமியிடமும், சரஸ்வதியிடமும் ஆலோசிக்கிறாள்.அவர்கள் சொல்கிறார்கள். ‘நமக்கு ஏது அவ்வளவு பலம்?... இறந்து போனவர்களுக்கு மோட்சம் கொடுக்கக்கூட வக்கில்லாதவர்கள் நாம். நம்மால் எப்படி ஒரு அரக்கனை கொல்லமுடியும்?...”...என பெண் தெய்வங்களே தங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையோடு பேசுகின்றன.

சரி பிறகு?... என்ன செய்வது? அப்போது ஒரு கருத்து அங்கே உதிக்கிறது. அரக்கனை அழிக்க வேண்டுமென்றால் ஆண்களின் பலம் வேண்டும். ஆனால், பெண்ணால்தான் அவன் அழிவான் என அவன் தலையில் வரம் விதி வரைந்திருக்கிறது. அப்படியென்றால் என்ன செய்யலாம். தேவர்கள் அத்தனை பேரின் பலத்தையும் நாம் வாங்கிக் கொள்ளவேண்டும். அதன் மூலம் மகிஷாசுரனை அழிக்கவேண்டும்.

...என பெண் தெய்வங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த இடத்தில் வேதம் சொன்ன ஒரு உண்மையை இங்கே உங்களுக்கு சுட்டிக்காட்டி... புராணத்தை அதனுடன் ஒப்பிட்டுக் காட்ட பிரயாசைப்படுகிறேன்.

வேதம் என்ன சொன்னது?...“ஸ்த்ரீனாம் த்விகனம் ஆஹாரம்புத்தீஸ் சாபிசதுர் குணம்...” இதை வேதத்தில் பெண்களைப் பற்றிப் பார்க்கும் போதே உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். அதாவது... பெண்கள் ஆண்களைவிட இரண்டு மடங்கு அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் அவர்கள், 4 மடங்கு புத்தியும், பலமும் ஆண்களைவிட அதிகமாக பெற்றிருப்பார்கள் என்றது வேதம்.

ஆனால்... புராணத்தில் நடக்கும் பெண் தெய்வங்களின் ‘Meeting’-கில் என்ன நடக்கிறது?‘ஆண்களின் பலத்தைப் பெற்றால்தான் நாம் பலமாக முடியும். அதன் மூலமாகத்தான் நாம் அசுரனை அழிக்க முடியும்...’ என்று பேசுகிறார்கள்.

அதாவது ‘கொடுத்த’ பலத்தை புராணம் பலவீனமாக்கியது.
சரி... விஷயத்துக்கு வருவோம். அனைத்து தேவாதி தேவர்களின் புஜபலம், பராக்கிரம பலம் அனைத்தையும் பெற முடிவு செய்தாள் பராசக்தி. பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களின் ஆற்றலையும் கேட்டாள் பராசக்தி. நீங்கள் உங்களது அனைத்து பலத்தையும் கொடுத்தால்தான்... நான் அந்த அரக்கனை அழிக்க முடியும். பெண்ணாகிய என்னால் தனித்து இயங்க முடியாது. உங்கள் கூட்டணி எனக்கு வேண்டும். தாருங்களேன் என்கிறாள்.

என்ன செய்வது?... வரம் கொடுத்து மாட்டிக் கொண்டவர்களாயிற்றே. தங்கள் பலத்தை கொடுத்தார்கள். அனைத்து ஆண் தெய்வங்களின் பலத்தையும் உறிஞ்சிய பராசக்தி அந்த அரக்கனை அழித்தாள். உடனே தேவர்களெல்லாம் பராசக்தியை போற்றிப் புகழ்ந்து துதிபாடியிருக்க வேண்டுமே... எங்களைக் காப்பாற்றினாய் என்று அவளின் தாழ் பணிந்திருக்க வேண்டுமே... ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அந்த பராசக்தி பெண்ணை யாரும் போற்றவில்லை புகழவில்லை. காரணம்...எல்லா பலத்தையும் கொடுத்துவிட்டார்களே...

அதனால் தேவர்கள் அனைவரும் அதுவரைக்கும் அப்படியே அசைவற்று பொம்மைகளாய் நின்றார்கள்...அந்த பொம்மைகள்தான்...

00000000000000000000000000000

பகுதி – 58 

கடந்த அத்தியாயத்தில் சொன்ன பொம்மைகளை நினைவுக்கு இழுத்து வாருங்கள்.அதைத்தான் கொலு... கொலு... என்று கொண்டாடுகிறார்கள். அதாவது... `பெண்ணால் எதையும் தனித்துச் செய்ய முடியாது, ஆண்களின் உதவியோடு தான் அவள் காலந்தள்ள முடியும்’ என்ற கருத்தைச் சொல்வதுதான் கொலுவின் உள்ளே குடியிருக்கும் நீதி.

சரி... இந்தப் புராணக் கதையை வைத்து பின்னிப்பின்னி பின்னர் செய்தது தான் கொலு பண்டிகையா?

இந்தப் புராணக் கதையின் மேல்தான் கொலு பொம்மைகளை நிறுத்தி வைத்தார்கள். அதாவது தேவர்களெல்லாம் பொம்மைகள் ஆகிவிட்டனர். அவர்களை நாம் வழிபட்டு, பராசக்தியின் புகழைப் போற்றவேண்டும் என்று அய்தீகம் வகுத்தனர்.பின்னர் இந்த கொலு கலாசாரத்தில் ஒரு பாகப் பிரிவினை போட்டி வந்தது. யாராருக்கு...? பார்வதி, லட்சுமி, சரஸ்வதி. யாரை அதிகம் போற்றுவது என்பதுதான் பிரச்சினை. அதையும் இங்கேயே முடிவெடுத்து விட்டார்கள்.

லட்சுமிக்கு மூன்று நாள், சரஸ்வதிக்கு மூன்று நாள், பராசக்திக்கு மூன்று நாள் சரியான பாகப் பிரிவினைதான்.

பிறகு... இதற்கு நைவேத்யத்தையும் நிர்ணயித்து விட்டார்கள். அதானே... விடுவார்களா. முதல் நாள் வெண்பொங்கல் படைக்கவேண்டும். இரண்டாம் நாள் புளியோதரையாம். மூன்றாம் நாள் சர்க்கரைப் பொங்கல். நான்காம் நாள் கதம்பசாதம். அதாவது பலதரப்பட்ட காய்கறிகளைப் போட்டு பண்ணப்படும் சாதம். அய்ந்தாம் நாள் தயிர் சாதம். ஆறாம் நாள் கொஞ்சம் வித்தியாசமாகத் தேங்காய் சாதம். ஏழாம் நாள் எலுமிச்சை சாதம். எட்டாம் நாள் பாயாசம் வை. ஒன்பதாம் நாள் மறுபடியும் சர்க்கரைப் பொங்கல் பண்ணு... என்றெல்லாம் நவராத்திரியின் பெயரைச் சொல்லி நவ நைவேத்யங்களையும் படைத்து விட்டார்கள்.

இதிலே இன்னொன்று... தினமும் சுண்டல் கடலை வேறு சேர்த்து விட்டார்கள். எனக்கொரு சந்தேகம்.. இந்த புளியோதரை, தயிர் சாதமெல்லாம் சாப்பிட்டுவிட்டு அரக்கர்களை அழிக்க முடியுமோ என்னமோ?

இப்படியாக வருஷத்துக்கு 9 நாள்கள் கொண்டாடப்படும் நிகழ்ச்சியைத்தான் கொலு என்கிறார்கள். கொலு... என்பதற்கு என்ன அர்த்தம் சொல்லப்படுகிறது என்றால்... இதுதான். ஆனால்... கொலுவின் நதிமூலம், ரிஷிமூலமே வேறு. நாம் கொண்டாடும் கொலு... நமது வாழ்க்கை முறையிலிருந்து வந்ததுதான். ஆனால்... புராணக்காரர்கள் பல ஜோடனைகள் பண்ணி கொலுவின் உண்மையான தத்துவத்தையே கொன்றுவிட்டார்கள்.

கொலுவுக்கும், பராசக்திக்கும் சம்பந்தம் இல்லை. கொலுவுக்கும், லட்சுமிக்கும் சம்பந்தம் இல்லை. கொலுவுக்கும், சரஸ்வதிக்கும் சம்பந்தமே இல்லை. பிறகு இதெல்லாம் எப்படி வந்தது?

அரக்கனை சொல்லி... அவனை அழிப்பதற்கு காரணம் சொல்லி... அதற்காக ஒரு கதையையும் சொல்லி - இன்று 9 நாள்கள் நவ நைவேத்யம் படைப்பதுதான் மிச்சம்.

அப்படியென்றால், கொலுவுக்கு என்னதான் அர்த்தம்? இதற்குப் பதில் காண மன்னர் காலத்துக்கு நாம் செல்லவேண்டும். அதாவது, பழங்கால தமிழ் மன்னர்கள் யுத்தத்துக்கு தயாராவதற்கு முன் பல விஷயங்களை சிந்திப்பார்கள். இப்போது போன்று அப்போதெல்லாம் நினைத்த உடனே பீரங்கிகளையும், யுத்த தளவாடங்களையும் தயாரித்துக் கொண்டு யுத்தத்தில் இறங்கிவிட முடியாது. சீதோஷ்ண நிலையை பொறுத்து தான் யுத்த தந்திரமே வகுக்கப்படும். ஏனென்றால், இயற்கையை அனுசரித்து வாழ்ந்த, வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்த காலம் அது.

அதில் மழைதான் மிக முக்கியமான அம்சம். எத்தனை பெரிய மன்னனாக இருந்தாலும் மழைக்காலத்தில் போர் தொடுக்க யோசிப்பான். ஏனென்றால்... காயும் சூரியனை தாங்கிக் கொண்டு போர் நடத்திவிட முடியும். ஆனால்... பேயெனக் கொட்டும் மழைக்குள் திட்டம், தந்திரம், தாக்குதல், வியூகம் எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விடக்கூடிய காலம் அது. இத்தனை காரணங்களால்... மன்னர்கள் தங்கள் சேனைகளையும், யுத்த தளவாடங்களையும் மழைக்காலத்தில் பத்திரப்படுத்தி வைப்பார்கள். வரிசையாக அவற்றை நிறுத்தி வைத்திருப்பார்கள். அதை பார்ப்பதற்கே ஒரு கம்பீரமாக, அழகாக வசீகரமாக இருக்கும்.

தனக்கு வெற்றி தேடித்தரும் செல்வங்கள் இவைதான் என்பதால்... படைத்தளபதியும், சேனாதிபதிகளும் அந்தப் போர் ஆயுதங்களை பழுது நீக்கி, புதிதாக்கி யுத்தத்துக்கு தயார் ஆவார்கள். வெற்றித் தேடித் தரவேண்டும் என்று வீரத்தோடு தங்கள் படைக்கலங்களுக்கு வணக்கம் செலுத்துவார்கள். மழை மெல்ல முடிந்ததும்... பதுங்கியிருந்த புலி பாய்வதுபோல பாய்ந்து எதிரிகளை வெல்வார்கள். இதுதானப்பா கொலுவின் ரிஷி மூலம், நதிமூலம் உண்மையான மூலம் எல்லாம்.

இதைப் பார்த்த பிராமணர்கள் தான்... இந்த தத்துவம் நன்றாக இருக்கிறதே. இதை பகவான் பெயரைச் சொல்லி பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்குமே? என யோசித்தார்கள். உண்டானது நவராத்திரி. 9 நாள் முடிந்ததும்... வெற்றிக்காக போருக்கு புறப்படுவதை விஜயதசமி ஆக்கினார்கள்.

இதில் லட்சுமி எங்கிருந்து வந்தாள்? பார்வதி எங்கிருந்து வந்தாள்? சரஸ்வதி எங்கிருந்து வந்தாள்? பெண் தெய்வங்களின் புகழ் பாடுகிறேன் என்று சொல்லியே... `ஆண் இல்லாமல் பெண் வாழ முடியாது. சாதிக்க முடியாது’ என்று சொல்வதுதான் கொலு(!) தத்துவம்.

இந்த கொலு தத்துவத்தை செயல்படுத்துவதில் கூட நமக்குள் பற்பல வேறுபாடுகள். சிவனின் பெண்டாட்டி பார்வதி, விஷ்ணுவை பொம்மையாக்குவதா? அதை நாம் பண்டிகையாகக் கொண்டாடுவதா? என்று வைஷ்ணவர்கள் மத்தியில் ஒரு சங்கல்பம். எனவே, இன்றும் கொலு வைப்பதை வைஷ்ணவர்கள் சம்பிரதாயப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. இத்தனை கதைகளும் ஒரு உண்மையும் கொண்டதுதான் கொலு. அடுத்து?

தொடரும்

00000000000000000000000000000000

59 - 60 - 61 தெய்வங்களிடம் எதற்கு ஆயுதம்? பகவானின் ஆயுதப்பட்டியல்.

பகவான் சர்வ சித்தன் என்கிறபோது... அவனுக்கு ஆயுதங்கள் எதற்கு? சாதி உணர்வு கடவுளுக்கும் உண்டு... வேண்டும் என்று வலியுறுத்துகிறது

தன்னந்தனியாக நிற்கின்ற அய்யனாரில் இருந்து தேவிகள் புடைசூழ நிற்கிற சிவன், நாராயணன் வரை எல்லா கடவுள்களும் கையில் சுத்தி, அரிவாள், சூலம், வேல், வில், அம்பு என ‘ரவுடியிஸம்’ போலவே நிற்பதை பார்க்கிறோம்.

இவர்களுக்கு ஆயுதம் வேண்டுமா? ஏன் வேண்டும்?கொலு தத்துவம் பற்றி பார்த்து முடித்தோம். கொலு என்பது உண்மையில் பெண்தெய்வங்களைப் போற்றிப் புகழ்வதற்கா? அல்லது பெண் தெய்வங்களை சிறுமைப்படுத்தும் சடங்கா என்பதை விளக்கிக்கொண்டிருப்பீர்கள்.

ஒருவேளை.... இது பெண்களைப் போற்றிப்புகழும் சடங்கு என்றே வைத்துக் கொண்டாலும்... கொலு, கோயில்களில் வைக்கப் படுவதில்லை. அவரவர் வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் அய்தீகம்.

ஒருவேளை பெண்களைப் போற்றினாலும் வீட்டுக்குள்ளேயே வைத்துப் போற்றிக்கொள்... வெளியே வேண்டாம்’ என்று சொல்லாமல் சொல்கிறதோ என்னவோ?

சரி... கொலுவின் ரிஷிமூலமாக நாம் பார்த்தோமல்லவா? மன்னர்கள் தங்கள் படைகளை, படைக்கலன்களை வழிபாடு செய்வார்கள் என்று அந்த செய்கையிலிருந்து நம்பிக்கையாக, வழக்கமாக உருமாறியதுதான் ஆயுத பூஜை.மன்னன் மட்டுமன்றி அவனது தேசத்திலுள்ள பிரஜைகளையும் அவன் செய்ததை பின்பற்றினார்கள்.

மன்னனுக்கு போர் செய்வது ஒரு தொழில். அதனால் அவன் யுத்த தளவாடங்களை வழிபட்டான். அதுபோல்... ஒவ்வொரு பிரஜையும் தான் என்ன தொழில் செய்கிறானோ அந்த தொழில் செய்ய பயன்படும் உபகரணங்களை வைத்து வழிபாடு செய்தான்.

அந்தக்காலத்தில் பிராமணர்களுக்கு என்ன தொழில்? இந்தக் கேள்விக்கான பதிலை நாம் இத்தொடரின் 11-வது அத்தியாயத்திலேயே பார்த்திருக்கிறோம். அதாவது... யஜனம், யாஜனம் இரண்டுதான் பிராமணர்களின் தொழில் மந்திரம், ஹோமம், யாகம் ஆகியவற்றை பண்ணுவது, பண்ணுவிப்பது இதுதான். அப்படியென்றால் ஆயுதபூஜை என்று எதை வணங்க முடியும்?

யோசித்துப் பார்த்தார்கள் ஆயுத பூஜையை அப்படியே சரஸ்வதி பூஜையாக்கிவிட்டார்கள். இந்த இடத்தில் இன்னொரு கிளைக் கேள்வி முளைக்கிறது.

ஆயுதம் என்பது மனிதர்களுக்குத் தானே தேவையாக இருந்தது. இருக்கிறது. தெய்வங்களிடமும் எதற்கு ஆயுதம் இருக்கவேண்டும். பகவான் சர்வ சித்தன் என்கிறபோது... அவனுக்கு ஆயுதங்கள் எதற்கு?

நாம் இன்னும் தன்னந்தனியாக நிற்கின்ற அய்யனாரில் இருந்து தேவிகள் புடைசூழ நிற்கிற சிவன், நாராயணன் வரை எல்லா கடவுள்களும் கையில் சுத்தி, அரிவாள், சூலம், வேல், வில், அம்பு என ‘ரவுடியிஸம்’ போலவே நிற்பதை பார்க்கிறோம்.

இவர்களுக்கு ஆயுதம் வேண்டுமா? ஏன் வேண்டும்? இதற்கான பதிலை வேதத்திலிருந்து தொடங்கி பார்த்தால் நமக்குத் தெளிவான பதில் கிடைக்கும்.

வேதத்தில் தெய்வங்களை இரண்டு வகையாக பிரித்துப் பார்த்திருக்கிறார்கள் ரிஷிகள்.

“ருத்ரோவா ஏஷஹ அக்னிஹிதஸ்யைதே தனுவஸ் கோரான்யசிவான்ய யச்சதயதுசத ருத்ரியஞ்ஜோதி யதேவாஸ்து கோராதனுதாம்தேன சமயதீ யத்வஸோர் தாதாம் தியோதீயைவாஸ்ய சிவாகனு தாந்தனே ப்ரினாதீ...”

இந்த வேத மந்த்ரம் என்ன சொல்கிறது. தெய்வத்தின் இயல்பைச் சொல்கிறது. அதாவது “Character of God” வேதகாலத்தில் ரிஷிகள் யாகம் பண்ணுவதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கும் போது... பெருங்காற்று காதை கிழிக்கும், மனசை உலுக்கும் சத்தத்தோடு அடிக்கிறது. ரிஷிகள் பயந்து சாகிறார்கள்.

‘அய்யோ ருத்ரன் வந்துவிடுவானே... அவன் கொலைகார தேவதையாச்சே... எல்லாவற்றையும் துவம்சம் பண்ணிவிடுவானே...’ என அலறுகிறார்கள்.

உடனே, ருத்ரனை நினைத்து...ருத்ரா உன் கோபத்துக்கு ஒரு நமஸ்காரம்ருத்ரா என் கோரத்துக்கு ஒரு நமஸ்காரம் ருத்ரா உன் குரூரத்துக்கு ஒரு நமஸ்காரம் உனக்குப் பயந்து உன்னைப் போற்றுகிறோம். நீ இங்கே வராதே. ஓடிப்போய்விடு...’ என்று ருத்ரனை விரட்டுவதற்காகவே அவனை போற்றுகிறார்கள்.

அந்த வேதமந்திரம் விளக்குவது இதைத்தான்.அதாவது ருத்ரன் பார்க்கவே கோரமாக கொடூரமாக இருப்பான். அவனது வேலை மக்களுக்கு கெடுதல் செய்வதுதான். ‘ருத்ராஹா குரூரஹா’ என்றது வேதம். ருத்ரன் அயோக்கியன்.‘சக்ஸ்ரானி, சகஸ்ரஸ்ய ருத்ரானி பூம்யாம்’

அதாவது இந்த லோகத்தில் ஆயிரமாயிரம் ருத்ரர்கள், (அயோக்கியர்கள், கொடுமைக்காரர்கள்) இருக்கின்றனர். அதனால்? “அந்த ஏவ ருத்ரன் நிரவதேதே...” ‘சயனம்’ என்றொரு யாகத்தை நடத்த எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் போது ருத்ரன் தலையை விரித்துப்போட்டுக் கொண்டு கையில் தனுஸ்... பாணத்தோடு வருகிறான்.

இங்கேதான் கவனிக்கவேண்டும்.வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே ஆயுதம் தனுஸ்-பாணம் தான். இது ருத்ரனின் கையில் இருக்கும். அதை எடுத்துக்கொண்டு அவன்... யாகத்தை குலைப்பான். சோகத்தை உருவாக்குவான். சத்(நல்ல) விஷயங்கள் செய்து கொண்டிருக்கும் இடத்தில் வில்லை எடுத்துக்கொண்டு வந்து எல்லாரையும் விரட்டுகிறான்.

இப்படியெல்லாம் ருத்ரன் தாண்டவம் ஆடும் முன்னமேயே... அவனை மந்த்ரம் மூலம் போற்றி மந்த்ரத்தால் அடித்து விரட்டு என்பதைத்தான் ‘அந்தத ஏவ ருத்ரன் நிரவதேதே....’ என்கிறது வேதம்.இப்படிப்பட்ட, அயோக்கியன், திருடன், குரூரன், பெருங்காற்றின் தகப்பனார் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ருத்ரன் கையில் தனுஸ்-பாணம் (வில், அம்பு) என்ற ஆயுதம் இருந்தது. அதே நேரம் ருத்ரனுக்கு இன்னொரு சாந்த வடிவமும் இருக்கிறது. அன்பே உருவான, கருணையே சொரூபமான அவன்?....

0000000000000000000000000000

பகுதி – 60. 

வேதத்தில் கொடுமைக்காரனாக சித்தரிக்கப்பட்ட ருத்ரனின் இன்னொரு வடிவான சாந்தரூபன், கருணை சொரூபன் யார்?...விஷ்ணு !

வேதம், அழகு என்பதை அத்புதம் என்னும் வார்த்தையால் வடித்துக் கொடுக்கிறது. அது பிற்பாடு நம் பாஷையில் அற்புதம் என்று மயங்கி மருவிற்று. ‘சதசத்பதி அத்புதம்....’ என்கிற மந்த்ர வார்த்தைகள் விஷ்ணுவை Leader of the Society ஆக சித்தரிக்கின்றன.சமுதாயத்தின் தலைவனான நீ அழகாக சாந்தமாக இருக்கிறாய் என்கிறது வேதம்.

இன்னொரு இடத்தில்...‘தொம்ஹி சத்யோ அத்புதஹா தாதா வாஜஸ்ய’....அதாவது நீ உண்மையான அழகுள்ளவனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்.

வேதப்படி கடவுளுக்கு உருவம் இல்லையென்றீர்களே... பிறகு எப்படி ஆயுதம், அழகெல்லாம் வந்தது? என உங்களுக்கு சந்தேகம் முளைக்க வேண்டும். அதே வேதம்தான்...’நீ நினைத்தால் கடவுளுக்கு உன் இஷ்டப்படி உருவம் கற்பிதம் செய்துகொள்’ என்று கூறியிருக்கிறதே!

சரி... வேதம் சொன்னதுபோல் ருத்ரனுக்கு வில்-அம்பு ஆயுதம். ருத்ரன் போன்ற கொடுமைக்காரனே வில்-அம்பு மட்டும்தான் வைத்திருந்தான் என்றால்... சாந்த சொரூபி... கருணை வடிவான விஷ்ணுவுக்கு பட்டு பீதாம்பரம், ஜொலிக்கும் நகைகள் மட்டும்தானே உடைமைகளாக இருக்கவேண்டும்.

ஆனால்... ருத்ரன் போன்ற குரூரனுக்கே இல்லாத வகையில் பஞ்சாயுதம் தரித்திருக்கிறார் விஷ்ணுபஞ்சு ஆயுதமா?... ஆமாம் ஆயுதங்களுக்கு பஞ்சமில்லை. ஆமாம் விஷ்ணுவின் கைகளில் அய்ந்து ஆயுதங்கள்.சங்கு, சக்கரம், கதை, சாரங்கம், கட்கம்! ஒவ்வொன்றாய் விளக்குகிறேன்.

சங்கு... அந்தகாலத்தில் Premetive Culture காலத்துப் பழக்கப்படி சண்டை போடச் செல்லும்போது... ‘நாம் சண்டைக்கு தயார்... புறப்படட்டும் நமது பரிவாரங்கள்’ என்று சமிக்ஞை கொடுப்பதற்காகவும்... டேய்... என் படை கிளம்பி விட்டதடா... என எதிரிக்கு சவால் விடுவதற்கும்தான் சங்கு ஊதுவார்கள். அதேபோல் எல்லாம் முடிந்தபின்னரும் சங்கை ஊதி முடிவை தெரிவிப்பார்கள்.

சண்டை ஆரம்பித்து முடியும் வரை உபயோகப்படும் சங்குதான் சாந்த சொரூபியான விஷ்ணுவின் முதல் ஆயுதம்.அடுத்தது சக்கரம்...வேதத்தில் முக்யத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ள அக்னியின் அம்சம்தான் இந்த சக்கரம். சக்கரத்தை ஏவினால் அதிலிருந்து கக்கப்படும் நெருப்பு எதிரியைக் கொளுத்தி வேகவைத்து சாகவைத்துவிடும்.

இதுதான் அழகான விஷ்ணுவின் அடுத்த ஆயுதம். சக்கரத்துக்கு இன்னொரு விசேஷம் உண்டு. அதை அய்ந்து ஆயுதங்கள் பற்றி விளக்கி விட்டு தனியாகச் சொல்கிறேன். மூன்றாவது ஆயுதம் கதை (Gadha). இதுவும் Premetive Culture காலத்து... அதாவது ஏறத்தாழ காட்டுமிராண்டிகள் பயன்படுத்திய ஆயுதம்தான். பெரிய மரக்கட்டை அடித்தால் ஒரே அடியில் மோட்சம்தான். அப்படிப்பட்ட கட்டைதான் இது.

இன்றும் செய்தித்தாள்களில்.... ‘உருட்டுக் கட்டையால் அடித்து ஒருவர் பலி’ என்று கொட்டை எழுத்தில் செய்தி பிரசுரம் பண்ணுகிறார்களே. அந்த உருட்டுக் கட்டைதான்.

கிராமப்புறங்களில் சுக்குமாந்தடி என பயத்தோடு அழைக்கப்படும் ஆயுதம் தான் கதை (Gadha). நான்காவது சாரங்கம் அதாவது வில்... இதுவும் பழங்காலத்தில் காட்டில் உள்ளவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய ஆயுதம்.

அய்ந்தாவது கட்கம், ‘தனியாய் போன ஸ்த்ரீயை கத்தியை காட்டி தங்கச் சங்கிலி பறித்தான் திருடன்’ என்று News paper களில் வாசிக்கிறோமே... கத்திதான் கட்கம்.இப்படியாக அய்ந்து ஆயுதங்களை தாங்கிக் கொண்டிருப்பவர்தான் ருத்ரனின் சாந்த வடிவமான விஷ்ணு.

இதில் சக்கராயுதத்துக்கு மட்டும் பெரிய விசேஷம் உண்டு என குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? அது என்ன விசேஷம்? பகவான் விஷ்ணுவின் சங்கல்பம்தான் சக்கரம். அதாவது, சுதர்ஸனர் என மரியாதையாக அழைக்கப்படும் ஆயுதம். பகவான் நாராயணன்தான் நினைப்பனவற்றை எல்லாம் செய்து முடிப்பதற்காகவே சுதர்ஸனரை வைத்திருக்கிறார். பகவான் எண்ணியதை எல்லாம் சுதர்ஸனர் (சக்கர ஆயுதம்) நடத்தி முடிக்கிறார்.

இவ்வாறு... ஒரு ஆயுதத்துக்கு இவ்வளவு அந்தஸ்து தந்துள்ளது. நமது சம்ப்ரதாயம்.சுதர்ஸனருக்கு இன்னொரு சீரும் சிறப்பும் உண்டு.என்ன?...

“யஸ்மின் விண்யஸ்யபாரம் விஜயினீஜகதாம் ஜங்கமஸ்தாவரணாம் லக்ஷ்மி நாராயணாக்யம் மிதுனம் அனுபவதீ உதிஉதாரன் விஹாரான்ஆரோக்கியம் பூதிமாயுஸீம்க்ருதமிஹ பஹீனா...” 

சுதர்ஸன ஸதகம் என்றும் புஸ்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கடைசி ஸ்லோகம் இது. இதை பண்ணியவர் சுரநாராயண ஜீயர்.

சரி... இந்த ஸ்லோகம் என்ன சொல்கிறது? நாராயணன் பல காரியங்களைக் கவனித்து வருகிறார். இதனாலேயே தன் மனைவியான லட்சுமியோடு அதிக நேரத்தை அவரால் செலவிட முடிகிறதில்லை.

ஆனால்... பகவான் தன் பத்தினியான லட்சுமியோடு உல்லாசமாக பொழுது போக்குவதற்கு... Relax செய்வதற்காக லட்சுமியோடு தனியாகச் செல்லும்போது எல்லா பொறுப்புகளையும் தன் முக்கிய ஆயுதமான சுதர்ஸனரிடம் தான் கொடுத்து விட்டுப் போகிறார்.

இதைவிட விசேஷம்... இந்த சுதர்ஸன ஆயுதத்தின் கையில் 16 ஆயுதங்கள் இருக்கின்றன.என்னது? ஆயுதத்தின் கையிலும் ஆயுதங்களா?

000000000000000000000000000

பகுதி - 61. 

என்னது ஆயுதத்தின் கையில் 16 ஆயுதங்களா? அப்படியென்hல் சுதர்சனர் என்ற சக்கராயுதத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் பாருங்கள். அந்த ஆயுதத்தை அது இது என்று குறிப்பிடாமல் அவர் இவர் என்ற மரியாதை விகுதியுடன் அழைக்கின்றனர். ஆமாம் சக்கரத்தாழ்வார் என நாமகரணம் சூட்டப்பட்டது சுதர்சனத்துக்கு. சமஸ்கிருதத்தில் அப்படியே சுதர்சனர் என்று மரியாதை கலந்து பெயர் சூட்டினார்கள்.

பெருமாளின் கையில் இருக்கும் சுதர்சனரின் கையில் 16 ஆயுதங்கள். பெருமாளுக்கே பஞ்சாயுதம்தான். ஆனால் இவருடைய ஆயுதத்துக்கு 16 ஆயுதங்கள்.

என்னென்ன என்று பார்ப்பதற்கு முன்னர்... பெருமாள் சுதர்சனத்தை கையில் வைத்துக்கொண்டு செய்த சாகசங்களில் ஒரு சிலவற்றைப் பார்த்துவிடுவோம்.

பவுண்டரக வாசுதேவன் என்னும் மன்னன். காசியை ஒரு காலத்தில் ஆண்டவனாம். அவனுக்கு தன் பெயரின் மேல் அலாதி பற்று. அந்தப் பற்று கொஞ்சம் கொஞ்சமாக கர்வமாயிற்று. கர்வம் தலைக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டு அவனை அழிச்சாட்டியம் பண்ண வைத்தது. அவன் என்ன நினைத்தான் என்றால் என் பெயரில் வாசுதேவன் என்று வருகிறது. அதனால் வாசுதேவனாகிய விஷ்ணு நான்தான். நானே கடவுள். என் முன் அந்த விஷ்ணு கைகளில் பஞ்சாயுதம் தரித்துக் கொண்டு நிற்கக்கூடாது. அவன் கடவுள் அல்ல. இந்த உலகத்தை ரட்சிக்க வந்த கடவுள் நானே.

அதனால்... அடே விஷ்ணு... உன்னுடைய சங்கு சக்கரத்தை நீ விட்டுவிட வேண்டும். என்னிடம் ஒப்படைத்து விடவேண்டும். ஏனென்றால் உண்மையான வாசுதேவன் உண்மையான விஷ்ணு நான்தான் என கர்வம் தலைக்கேறி குதித்தான் வாசுதேவன்.

விஷ்ணு பார்த்தார்... சங்கு - சக்கரத்தையா கேட்கிறாய்? முதலில் சக்கரத்தை தருகிறேன் வைத்துக்கொள்... கையில் அல்ல... கழுத்தில் வாங்கிக்கொள் என தனது சக்கராயுதத்தை ஏவினார் விஷ்ணு. அந்த சக்ராயுதம் பவுண்டரக வாசுதேவனின் கழுத்தில் இறங்கியது. ``நான்தான் கடவுள், உன் ஆயுதத்தைக் கொடு’’ என்றவனுக்கு தன் சக்ராயுதத்தைக் கொடுத்து அவன் உயிரை எடுத்தார் விஷ்ணு.

இது ஒரு சாகசம் என்றால்... இன்னொன்று... விஷ்ணுவாகிய கிருஷ்ணன் சம்பந்தப்பட்டது.

சிசுபாலன். இவன் யாரென்றால்... சேதி நாட்டு அரசன். இவன் கிருஷ்ணனோடு விரோதம் புரிந்தே வந்தான். கிருஷ்ணரை திட்டிக் கொண்டே வந்தான். விஷ்ணுவாகிய கிருஷ்ணர் நூறு திட்டுவரை பொறுத்துக் கொள்ளலாம் என்று இருந்தார். சிசுபாலனின் திட்டு மொழிகளும் நூறை கடந்தன.

கடைசியாய் ``போடா இடைப்பயலே...’’ என கிருஷ்ணரின் ஜாதிப் பெயரை சொல்லி திட்டினானாம் சிசுபாலன். அதுவரை பொறுத்த கிருஷ்ணன் சாதிப் பேரை சொல்லி திட்டுகிறாயே...? என கோபப்பட்டு - சுதர்சனத்தை தன் சக்ராயுதத்தை எடுத்தார்... சிசுபாலனின் தலையை கழுத்திலிருந்து கத்தரித்து கீழே விட்டெறிந்தார்.

இந்த சிசுபாலன்தான், வைகுண்டத்தின் துவாரபாலகர்களில் ஒருவராம். விஷ்ணுவே இவனுக்கு மோட்சம் அளிக்கிறாராம். எப்படியென்றால்... ``டேய்... நீ என் நண்பனாக இருந்து தாமதமாக மோட்சம் பெறுகிறாயா? அல்லது எனக்கு எதிரியாக மாறி உடனே மோட்சம் பெறுகிறாயா? எது வசதி...?’’ என சிசுபாலனிடம் கேட்டாராம் விஷ்ணு. எதிரியாகவே இருந்து சீக்கிரம் மோட்சம் பெற்று விடுகிறேன் என்கிறான் சிசுபாலன்.

ஆக... கடவுளின் நண்பர்களைவிட எதிரிகளுக்குத்தான் மோட்சம் விரைவில் கிடைக்கும் என்பதை விஷ்ணுவே சொல்லியிருக்கிறார். இது பாகவதத்தில் வருகிறது.

தவிர, சாதி உணர்வு கடவுளுக்கும் உண்டு... வேண்டும் என்று வலியுறுத்துகிறது இக்கதை.

கூடவே சக்கராயுதத்தின் சாகசத்தையும் காட்டுகிறது. சக்கராயுதத்தைப்பற்றி இன்னொரு குறிப்பும் உண்டு. இந்திரனுடைய வஜ்ராயுதம் ததீசு முனிவருடைய எலும்பை எடுத்து உடைத்து செய்யப்பட்டது. அந்த மனித எலும்பு ஆயுதத்துக்கு சக்தி கொடுத்ததே இந்த சக்கராயுதம்தான்.

சரி... சக்கராயுதத்தின் சாகசக் கதைகளைப் பார்த்தோம். 16 ஆயுதங்கள் என்று சொன்னீர்களே... அது என்ன என்று கேட்கிறீர்களா?

பகவான் விஷ்ணுவின் ஒரு ஆயுதமான சக்கரத்தின் இரு பக்கம் எட்டெட்டு கைகளிலும் தலா 8 ஆயுதங்கள். இதைப்பற்றி வேதாந்த தேசிகனே ``சோடஸ ஆயுத ஸ்தோத்ரம்’’ என்று பண்ணியிருக்கிறார். அதாவது 16 ஆயுதங்கள் பற்றிய ஸ்தோத்தரம். ஆயுத ஸ்தோத்திரத்தில் என்னென்ன ஆயுதங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன?

சுதர்சனத்தின் வலது கைகளை முதலில் பார்ப்போம்.
1. சக்கரம் 2. மழு 3. குந்தம் (ஈட்டி) 4. தண்டம் (தடி) 5. அங்குசம் 6. சதாமுகாக்னி (ஒரே நேரத்தில் நூறு வாய்களிலிருந்து அக்னி உமிழும் ஆயுதம்) 7. மிஸ்க்ரிஸம் (கத்தி) 8. வேல்.

இவையெல்லாம் வலது கைகளில் உள்ள ஆயுதங்கள்.
அப்புறம் இடது கையில், 1. பாஞ்ஜ சண்யம் (சங்கு) 2. சாரங்கம் (வில்) 3. பாசம் (கயிறு) 4. கலப்பை 5. வஜ்ராயுதம் 6. கதை (குண்டாந்தடி) 7. உலக்கை 8. திரிசூலம்.
மொத்தம் எட்டெட்டும் பதினாறு ஆயுதங்கள் ஆயிற்றா...?
பதினாறும் பெற்று பகவான் பெருவாழ்வு வாழ்வது இதுதானோ...?

வேதத்தில் சாந்த சொருபியாக காட்டப்பட்ட விஷ்ணு என்ற பகவானை இப்படி பட்டறைக்காரர் போல ஆயுதம் தரிக்க வைத்துவிட்டார்களே...யார்...? ஏன்...?

தொடரும்

நன்றி : http://thathachariyar.blogspot.fr/2010/10/3.html

































Comments