இந்து மதம் எங்கே போகிறது? மெய்யியல் - பாகம் - 82 - 2 - பாகம் 91- 1.


சபரிமலை அய்யப்பன் ரக‌சியங்கள்.

ஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன். 

ஆண்கடவுள் பெருமாள் எடுத்த‌ மோகினி ரூபத்தினால் ஏற்பட்ட பரமசிவனின் அடங்கா காமத்தின் விளைவுதான் சப‌ரிமலை ஐயப்பனாம். ஆக இரு ஆண் கடவுள்களின் புணர்ச்சியால் பிறந்தவர் ஐயப்பன்.

தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடின பரமசிவன்

சப‌ரிமலைப்பகுதியின் அய்யனார்... பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்

யப்பப்பா என்ன வேகம்... கொள்ளு தின்ன குதிரைகளா? குதிரையைத் தின்ற குதிரைகளா? இவ்வளவு வேகமாக, முரட்டுத்தனமாக, ஆஹா... சூறைக்காற்று வேகத்தில் சுழற்றியடிக்கின்றார்களே? யார் இவர்கள்...? அந்த மலைக் கிராமத்து மக்கள் பதறினார்கள்.

குதிரையில் உட்கார்ந்து கொண்டு லகானை ஒரு கையிலும், சாட்டையை இன்னொரு கையிலும் கொண்டிருந்த அந்த சிப்பாய்க் கொள்ளையர்கள் சாட்டையால் நர்த்தனம் ஆடினார்கள். ஸ்த்ரிகள் சிதறினார்கள். சின்னச் சின்ன குழந்தைகள் தெறித்தார்கள். ஆண்களில் சிலர் எதிர்த்து நின்றார்கள். ஆனால்... சாட்டைகளின் சமர் தாங்க முடியாமல் அப்படியே உதிர்ந்து போனார்கள். யார் அவர்கள்? அந்தக் கிராமம் எங்கிருக்கிறது? ஏன் அடிக்கிறார்கள்?

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் இன்றைய மலையாள தேசத்தில் இருக்கும் மலைக்கிராமம் தான் அது. வந்தவர்கள்... அங்கே கொள்ளையடிக்க வந்த மிலேச்ச சிப்பாய்கள். ஒரு காலத்தில் பாண்டிய ராஜாவிடமிருந்த அந்த மலைதேசம்... அப்போதும் அதற்குப் பின்னரும் வளங்கொழித்துக் கிடந்தது. சுற்றிலும் கொள்ளையடித்துக் களித்த அந்தச் சிப்பாய்கள் சற்றே நிமிர்ந்தனர். சுற்றிலும் 5 குன்றுகள் அழகழகாய் இருந்தன. இயற்கை சௌந்தர்யமாக காட்சியளித்தாள்.

மேலே ஏதாவது வைத்திருப்பார்களோ? சிப்பாய்களில் ஒருவன் கேட்டான். ‘ம்... இருக்கலாம்’ கஷ்டப்பட்டு மேலே ஏறினார்கள்.அங்கே... அவர்கள் கண்ட காட்சி பற்றி தான் இருவேறு கருத்துகள் எதிரொலிக்கின்றன. காந்தமலை என்ற அந்த குன்றை அடைந்த அந்த சிப்பாய்களின் கண்கள் கூசின. சற்றே நெருங்க நெருங்க அவர்களின் இந்த்ரியங்கள் எல்லாம் பிரகாசம்.

அப்படியென்ன அங்கே இருந்தது? தங்கச்சிலை தகதகவென மின்னிய தங்கச் சிலை மலைவாழ் மக்களின் செழிப்பை உணர்த்தியது அந்தச் சிலை. அடித்தார்கள் கொள்ளை. இது செவி வழிச்செய்தி. இன்னொன்று அச்சிலையை உடைத்து நொறுக்கிவிட்டார்கள் என்ற செய்தி.

இதற்குப் பிறகு, தாங்கள் வழிபட்ட சிலை களவாடப்பட்டதைக் கண்ட மலைமக்கள் இங்கிருந்து காந்த மலையிலிருந்து சற்றே இறங்கி வந்தனர். 5 குன்றுகளுக்கும் நடுப்பட்ட அந்த ஸ்தலத்தில் இன்னொரு சிலையை உருவாக்கினார்கள்.

இயற்கையை வழிபட்டு பின் விலங்கு உருவங்களை வழிபட்ட பின் மனித உருவுக்கு மாறிய மக்களின் கிராமத்து தெய்வமாக விளங்கியது அய்யனார். பெண் காவல் தெய்வம் போல் இது ஆண் காவல் தெய்வம்.

இதேபோலத்தான் அந்த மலைமக்கள் தங்கள் காவல் தெய்வமாக அய்யனாரை அமர வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சிலையும் சிலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மிலேச்ச சிப்பாய்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

முதலில் பொன் விக்ரகம் இருந்த இடம்தான் பொன்னம்பலம் என அழைக்கப்படுகிறது. பொன்... தங்கம். அம்பலம்-என்றால் கோயில் என்ற அர்த்தத்துடன். அந்த சிலை கொள்ளைபோன பிற்பாடு...வேறொரு சிலையை மலைக்கு நடுவே பாதுகாப்பாய் வைக்கலாம் என்றால்... அதுவும் கொள்ளையடிக்கப்பட்டது. இங்கே இன்னொரு தகவல்...

இரண்டாவதாக நடந்த சம்பவத்தில் சிலை கொள்ளையடிக்கப்படவில்லை. உடைத்து நொறுக்கப்பட்டது என்றும் தகவல்கள்.

இப்படியாக எதிரிகளால் உடைத்து நொறுக்கப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட அந்த மலைமக்களின் சிலைதான் இன்று ஜோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. தினம் தினம்பூக்களால் பூஜை செய்து... திருவிழாக்களுடன் கொண்டாடப்பட்ட அந்த மலைமக்களின் சிலையை மையமாக வைத்து... இன்று சிலர் வருஷத்துக்கு சில நாட்கள் மட்டுமே அந்தச் சிலையை திறந்து தங்கள் வசம் வழிபாட்டு லகானை வைத்திருக்கிறார்கள். இப்போது அந்தச் சிலை...? 

00000000000000000000000000

பகுதி – 83.

உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு மிலேச்ச சிப்பாய்களால் துஷ்பிரயோகம் பண்ணப்பட்ட அந்தச் சிலை மலை மக்களால் மறுபடியும் செதுக்கி உட்கார்த்தி வைக்கப்பட்டது . சுத்தமாக ஓடிவருகின்ற மலை ஜலத்தை எடுத்துக் குளிப்பாட்டி... சில்லென்று அன்று பூத்த மலை மலர்கள் அன்றே பறித்து தங்கள் அய்யனாருக்கு கட்டி... மென்மை வழிபாடு செய்தனர்.

இன்னொரு பக்கம்... கூர்முனை அஸ்திரங்களால் குத்திக் கிழிக்கப்பட்ட வன விலங்குகளின் மாம்ஸத்தைக் கொண்டு வந்து தங்களது அய்யனாரின் காலடியில் சமர்ப்பித்து வன்மை வழிபாடும் செய்தனர்.இப்படி மென்மை வழிபாடு, வன்மை வழிபாடு இரண்டும் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில்தான்..

அந்த மலைதேசத்துக்கு இப்போது ஆந்திரப்பிரதேசமாக இருக்கிறதே... அந்தப்பக்கத்திலிருந்து ஒரு கூட்டம் பிழைப்புக்காக தனியாய் நடந்து வந்தது. அப்போதுதான் அந்த அய்யனாரையும் மலை மக்களையும் பார்த்தார்கள்.

அது ராத்திரி நேரம். மலைமக்கள் இரு கையில் தீப்பந்தத்தையும் மறுகையில் மாம்ஸத்தையம் வைத்திருந்தனர். அய்யனாருக்கு எதிரே தீப்பந்தத்தை கொளுத்தி வைத்துவிட்டு... வேட்டையாடி வந்த உடல்களை அய்யனாருக்கு படைக்க ஆரம்பித்தனர். இன்றைய ஆந்திரப்பிரதேசத்திலிருந்து வந்தேறிய நம்பூதிரிகள் (பிராமணர்கள்) தங்கள் பூணூலை முறுக்கிக்கொண்டு இக்காட்சியைப் பார்த்தனர்.

தீவிர வைதீகர்களான நம்பூதிரிகள்... இந்த அய்யனார் வழிபாட்டை கொஞ்சநாள் கவனித்தபடியே இருந்தவர்கள்... திடீரென ஒருநாள்... புது ஐதீகத்தை கிளப்பினார்கள். யப்பப்பா... இது என்ன அபச்சாரம்?

நெய்யும் தேங்காயும் படைக்கப்பட வேண்டிய இவனுக்கு கொழுப்பு வடியும் மாம்ஸத்தை படைக்கிறீர்களே...? இவன் யார் தெரியுமா உங்களுக்கு? மலைமக்கள் சிலிர்த்துப் போனார்கள். ஆஜானுபாகுவான நம்பூதிரிகளை பார்த்ததுமே இவர்கள் மேல் மலைமக்களுக்கு ஒரு புது மரியாதை பிறந்தது.என்ன சாமி சொல்றீங்க? இது உங்க அய்யனார் இல்லப்பா... எங்க அய்யப்பன். இவன் இங்க வந்த கதை உங்களுக்குத் தெரியாதா?

" தெரியுமே! ரெண்டு மூணு தடவ உடைச்சிட்டாங்க. அப்புறம் நாங்களே கஷ்டப்பட்டு இந்தச்சிலையை செஞ்சோம். காவலுக்கு வச்சிருக்கோம்'' -இதுதான் மலைமக்களின் பதில். நம்பூதிரிகளாக வந்த பிராமணர்கள் பதில் சொன்னார்கள். "தப்பு...தப்பு... இவன் எப்படி அங்கே வந்தான்னு பெரிய ஏதீகமே இருக்கு...' என்றபடி ஆரம்பித்தார்கள்.

சிவபெருமான் இருக்கிறாரே... தன்னை நினைத்து யார் தவம் செய்தாலும் அதில் மெச்சி மயங்கி அவர்களுக்கு வரம் கொடுத்துவிடுவார்.

அப்படித்தான் பத்மாசுரன் என்ற ஒர் அசுரன் சிவனை நினைத்து கடுந்தவம் இயற்றினான். வெயில், மழை, பரி, பாம்பு, புலி எதற்கும் பயப்படாமல் அசையாமல் சிவனது நாமத்தையே அசை போட்டான்.வந்தார் சிவன். என்னப்பா வரம் வேண்டும்? "தேவா... நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் பஸ்பமாய் எரிந்து இறந்துவிடவேண்டும்...'- கேட்ட வரத்தைப் பற்றி யோசிக்காமல் "தந்தேன் பத்மாசுரா' என சேங்ஷன் பண்ணிவிட்டார் சிவன்.

அன்றிலிருந்து அசுரனுக்கு கை அரித்தது. தன் எதிரிகள், மானிடர்கள் என பிடிக்காதவர்கள் தலை மேலே கை வைத்தான். உடனே அவர்கள் பஸ்பமாகி கருகிக் கிடந்தார்கள். பத்மாசுரனுக்கு விபரீத எண்ணம் உதித்தது. எல்லார் தலையிலும் கை வைத்தாகிவிட்டது. வரம் கொடுத்த சிவன்தான் பாக்கி...அவரிடம் போனான். "என்னப்பா?' என்றார் சிவன்.

"உங்கள் வரத்தின் வலிமையை சோதிக்க வேண்டும் போல இருக்கிறது. அதனால் உங்கள் தலையில் ஒரே ஒரு தடவை கை வைத்து...' சிவனுக்கு புரிந்துவிட்டது. தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடினார்.

புரிந்துகொண்டார் பெருமாள். இந்த அசுரனை திசை திருப்ப வேண்டுமென்றால் "தசை' யால் தான் முடியும் என்று நினைத்த பெருமாள்... அடுத்த கணமே மோகினியானார். மோகினி...? ஆமாம்... மோகம் முற்றிய நிலையில் சுவைக்க அழைக்கும் கனிகள் போன்ற அழகுடையவள் தான் மோகினி. வாலிப்பான தேகம், வளமையான பாகம், சின்ன இடுப்பு, வண்ண ஆபரணம், கண்டவரை கதிகலங்கச் செய்து காமுற வைக்கும் அழகுப் பதுமையாய் மோகினி நின்றாள்.

பார்த்தான் பத்மாசுரன். பாதத்திலிருந்து கேசம் வரை பாகம் பாகமாய் மோகினியைப் பார்த்தவன் தன்னை மறந்தான். தன்னையே மறந்துவிட்டபோது... சிவன், தசை, வரம் எல்லாம் அவனுக்கு எப்படி ஞாபகம் வரும்? மோகினிக்குள் மூழ்கிய பத்மாசுரனின் ஞாபகத்திலிருந்து எல்லாம் மறந்து போயின. பார்த்தார் பெருமாள். அதாவது மோகினி, பத்மாசுரனை இன்னும் கவனம் சிதறச் செய்வதற்காக தொடங்கினாள் நாட்டியத்தை.

அடடா... மோகினி சும்மா நின்றாலே சொக்கும் அழகு. இதில் அவள் ஆட அரம்பித்தால்...? கேட்க வேண்டுமா? "பத்மாசுரா என்னைப் போல் நீயும் அடினால் என்னை அடையலாம்? தயாரா?' -

மோகினியின் வார்த்தைகள் பத்மாசுரனை சொர்க்கத்தில் கொண்டு வந்து போட்ட மாதிரி குஷிப்படுத்தின. தான் ஆடிய ஆட்டத்தையெல்லாம் மறந்து மோகினிக்கு எதிராக நின்று ஆடத்தொடங்கினான். மோகினி இடுப்பை வளைத்தாள். அசுரனும் தன் இடுப்பை வளைத்தான். மோகினி தன் வளைக்கரங்களால் அபிநயம் பிடித்தாள். விடவில்லை அசுரனும் அதே அசைவைச் செய்தான். குனிந்து நிமிர்ந்து சிரித்தாள் மோகினி.

தன் காலைத்தூக்கி பட்டுப் பாதங்களைக் காட்டினாள். பத்மாசுரனும் முயன்றான். சுற்றினாள். பின்னல் காற்றில் பறந்தது. மறுபடியும் மோகினி தன் இடுப்பில் கை வைத்தாள். நெஞ்சில் கை வைத்தாள். பின் முகத்தைக் கைகளால் பொத்தி புன்னகைத்தாள். அசுரனும் ஆனந்தத்தில் அப்படியே செய்தான். கடைசியில்... முகத்தில் வைத்திருந்த கையை தலையில் வைத்தாள் மோகினி.எந்தத் தாமதமும் இல்லாமல் பத்மாசுரனும் தன் கைகளை தன் தலையில் எடுத்து வைத்தான்...? -- 

00000000000000000000000000000

பகுதி – 84.

மோகினியாக வந்த பெருமாளின் சவுந்தர்ய ரூபத்தால் எல்லாவற்றையும் மறந்துபோன பத்மாசரன்... மோகினி போலவே தானும் தன் தலைமேல் கை வைத்தான். அவ்வளவுதான்!

அவன் வாங்கிய வரம் அவனுக்கே ஆபத்தாக முடிந்தது. நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து இறந்துவிட வேண்டும் என அவன் வாங்கிய வரத்தின்படி... தன்னைத் தானே எரித்துக் கொண்டான். இதையடுத்து... சிவபெருமான் நிம்மதியடைந்தார்.

மோகினி... தன் அவதாரம் எடுத்தற்கான காரியம் நிறைவேறி விட்டதை கண்டு... முகம் மலர்ச்சியடைந்தாள். இனிமேல்... இந்த பத்மாசுரன் தொல்லை இல்லை... ஆமாம்... அசுரனை சம்ஹாரம் செய்துவிட்டு மோகினியாகவே இருந்த பெருமாளின் அழகு சிவனுக்குள் பிரேமத் தீயை மூட்டியது. மோகினியை மெல்ல நெருங்கினார். ‘அந்த அசுரனை சம்ஹாரம் செய்து விட்டீர்கள். ஆனால்... எனக்குள் பிரேமம் எனும் இன்னொரு அசுரன் முளைத்தெழுந்து விஸ்வரூபம் செய்கிறான். அவனை சம்ஹாரம் செய்யவும் உங்கள் தாட்சண்யம் தேவை’ சிவனும் மோகினியும் மோகித்தார்கள், பிரேமித்தார்கள்.

இந்த சம்பவத்தால் மோகினி ஒரு தெய்வக் குழந்தை பெற்றெடுக்க... அதுதான் அந்தக் குழந்தைதான்... அந்த தெய்வக் குழந்தை தான்... அய்யப்பன்.

சிவனுக்கும் மோகினிக்கும் (பெருமாளுக்கும்) பிறந்தவன் பிறக்கும் போதே கழுத்தில் மணியுடன் பிறந்ததால்... அவனுக்கு மணிகண்டன் என்றும் பெயர் உண்டு... ... என அய்யப்பன் பிறந்த கதையை நம்பூதிரிகள் மலைவாசிகளிடம் சொல்ல... மலைமக்கள் திகைத்து விட்டார்கள்.

இங்கே சுருக்கமாக நாம் பார்த்ததே இவ்வளவு சுவராஸ்யமாக இருக்கிறதென்றால்... அன்று... மலைவாசிகளிடம் கதை கதையாய் சொல்லப்பட்ட போது... அவர்கள் எவ்வளவு ஆர்வமாய் கேட்டிருப்பார்கள்.

அப்படியா?... எங்கள் அய்யனார் இப்படியா பிறந்தார்?... என்றார்கள். ‘ஆமாம்’... அவர் இன்னும் பல அரிய செயல்கள் செய்திருக்கிறார். இரண்டு மூர்த்திகளால் அவதரித்தவரான அய்யப்பனை இதுபோல நீங்கள் வழிபடக் கூடாது... அய்யப்பனை வழிபடும் வேலையை எங்களிடம் விட்டு விடுங்கள்.

‘நம்பூதிரிகள் சொன்ன புராணக் கதைகளை மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தார்கள் மலைமக்கள் மலைப் பகுதியில் இருந்த தங்கள் அய்யனாரை அருகே சென்று பூக்கள் போட... சில படிகளைக் கட்டி வைத்திருந்தார்கள் மலைவாசிகள்.

இதைப் பார்த்த நம்பூதிரிகள்... ‘ஆஹா... இந்த படிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?’ எனக் கேட்க... ‘ஏன் தெரியாது... ஏறி வழிபாடு செய்ய வசதியாக இருக்கட்டுமே என நாங்கள் தான் செதுக்கி வைத்தோம்’ என்றார்கள் மலைமக்கள்.

அபச்சாரம்... அபச்சாரம்... இவை சாதாரண படிகள் அல்ல... ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தெய்வ அம்சம் கொண்டவை. 6 திருப்படிகள் சிவாம்சம் வாய்ந்தவை. 7 திருப்படிகள் பெருமாள் அம்சம் கொண்டவை. 5 திருப்படிகள் மணிகண்டனான அய்யப்பன் அம்சங்கள். இந்த 18 படிகளில்... நீங்கள் இனிமேல் சாதாரணமாக ஏறமுடியாது. விரதம் இருந்து... சும்மா இல்லை.

1 மண்டலம் விரதம் இருந்து... மாம்ஸம் விலக்கி... சுத்தமாக... இருந்தால்தான் இங்கே ஏறமுடியும். என்ன புரிகிறதா?... ...அவர்களின் தொனி உயரத்தில் இருந்தது. இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாய்... நாளடைவில் அந்த மலைப்பகுதியின் அய்யனார்... நம்பூதிரிகளால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்.

மலைமக்கள் படிகளின் கீழே நின்றனர். பிராமணர்கள் மேலே சென்றனர். மேலே சென்றவர்களின் கண்களில்... ‘திரு திரு’வென ஒரு ஜோதிப் பிரகாசம் ஜொலித்தது. என்ன அது?... ...ஆச்சர்யமாய் கேட்டனர்.

மலைமக்களோ அதைப் பார்த்துச் சிரித்தனர். “நாங்கள் ஆச்சர்யப்படுகிறோம். பயப்படுகிறோம். பெரிதாக எரிகிறதே என்று, நீங்கள் எவ்வித முகபாவமும் காட்டாமல் இருக்கிறீர்களே?...” மறுபடியும் கேட்டார்கள் பிராமண நம்பூதிரிகள். ஓ... அதுவா?... நீங்கள் எங்களை பார்த்த ராத்திரி நேரம்... நாங்கள் தீப்பந்தம் கொளுத்திவைத்திருந்தோமே... கவனித்தீர்களா...?‘ஆமாம்...’ ‘இன்று எங்கள் திருவிழா.

நாங்கள் தீப்பந்தத்தை கொளுத்தி திருவிழா கொண்டாடுகிறோம். அதுதான் அந்த காந்த மலைமேல் ஜொலிக்கிறது’ என்றார்கள் மலைவாசிகள். கொஞ்சநாள் ஆனது... மலைமக்களின் தீப்பந்தத் திருவிழாவை தங்களது திருவிழாவாக பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தனர்.

அட அசடுகளே... அது உங்களின் திருவிழா அல்ல... அய்யப்பனுக்கு சபரி என்னும் காட்டுவாசி பக்தை இருந்தாள். அவளுக்கு மோட்சம் தந்தார் அய்யப்பன்... புஷ்ப மரங்கள் பூக்களை இறைக்க... தேவர்கள் எல்லாம் வந்திருந்து வாழ்த்த... ஒரு ஜோதி பெரிய அளவில் தோன்றியது. அதிலே சபரி கலந்து மோட்சம் அடைந்தாள். அந்த மோட்ச ஜோதி அது. நீங்கள் அதன் பிறகு திருவிழாவை ஆரம்பித்திருக்கிறீர்கள். புரிகிறதா?... இந்த மலைப் பகுதிக்குக் கூட சபரிமலை என்று பெயர்.

இப்படித்தான் பெயர் வந்தது. இப்போது தெரிந்துகொண்டீர்களா?.

பிராமணர்கள் தீப்பந்தத் திருவிழாவுக்கு புது ‘வெளிச்சத்தை’ கொடுத்தார்கள். தை மாதம் மகர நட்சத்திரத்தில்... இன்றும் அந்த காந்த மலைமேலே ஒரு ஜோதி தெரிகிறது. திடுதிப்பென மறைகிறது. இப்போதும் மலைமக்கள் தீப்பந்த திருவிழா கொண்டாடுகிறார்களா?... இல்லையே?... பிறகெப்படி?...

நம்பூதிரிகள் ரகஸ்ய ஏற்பாடு. அங்கே தீமூட்டி வருவார்கள். இதுபற்றி பிரபல்யமான கேரளத் தலைவர்கள் பலருமே சொல்லியிருக்கிறார்கள். மகரஜோதி என்பது மலைமக்கள் ஜோதி. அதை இப்போது நம்பூதிரிகள் தான் ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

காமத்துக்கு அடிபணிந்த‌ முனிவர்கள்.

காமத்துக்கு முனிவர்கள் விலக்கல்ல‌. ரிஷிகள் காமத்தை ஓர் அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்களாம். அதாவது... தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக.. ? பிராமணன் யுத்தத்துக்குப் போவதில்லை. பரலோகம் யாருக்குத் தெரியும்?.... அதைப் பார்த்தவர்கள் யார்?... இருந்தால் வரச்சொல்?... அது எப்படியிருக்கும்?...

0000000000000000000000000000000

பகுதி – 85.

தெய்வ வழிபாடுகளைப் பற்றி நிறைய பார்த்தோம். இப்போது தெய்வம் யார் என்ற இன்னொரு தத்துவத்தைப் பற்றியும், தத்துவக்காரர்களையும் பார்க்கப்போகிறோம். தத்துவம் என்றதும் குழம்பிவிடாதீர்கள். இதைப் பார்க்க... கொஞ்சம் பின்னோக்கிச் செல்வோம். வேதம் வகுத்துத் தந்த கர்மாக்கள் பற்றி நிறைய பார்த்தாகிவிட்டது.

வேதத்தை அடுத்து வந்த உபநிஷத்துக்காரர்கள். “நகர்மனா நப்ரஜா தனேனாதியாகேன ஏகேஅமிர்தத்வம் ஆனஸோ... ”கர்மாக்களை தியாகம் செய்துவிடுங்கள். அதாவது விட்டு விடுங்கள் அதுதான் மோட்சம் என்கிறது. இப்படி... வேத, உபநிஷத்துகாக்ரர்களின் கடவுளைப் பற்றிய சிந்தனைகள் வேறு வேறாய் இருக்க... இதன்அடிப்படையில் 6 தத்துவக்காரர்கள் தோன்றி... தத்தமது கொள்கைகளை தத்துவங்களை நிறுவினார்கள்.

அவர்கள் யார்? அவர்கள் சொன்னது என்ன?அதற்கு முன்...வேத சனாதன மதத்தின் பெரிய அதிர்ஷ்டம் அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தான். வேதங்களும் வேத வழி விளக்கங்களும் இன்றுவரை நிலைபெற்றிருப்பதற்கு அதன் அடிப்படையில் எடுத்த வியாக்யானங்களும் விளக்க புஸ்தகங்களும்தான்.

இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். பிராமணன் யுத்தத்துக்குப் போவதில்லை. அவனுக்கு அப்போதிலிருந்தே சிந்திப்பது மட்டும்தான் வேலை. அதனால் தான் இப்படி நிறைய புஸ்தகங்களை எழுதித் தள்ளிக் கொண்டிருந்தான்.

மதத்தை அன்று முதல் இன்றுவரை பிராமணனே கைக் கொண்டிருப்பதால் அவனே Leading பண்ணிக் கொண்டிருப்பதால்.பழையதை வைத்துக்கொண்டு புதியதை கற்பிப்பதில் பிராமணனுக்கு தனி சிரத்தை. எப்படி என்று கேட்டால் Vedic Prayer முழுக்க ‘எனக்கு அறிவைக் கொடு’ என்றே நிறைய இடங்களில் கேட்கிறான்.

சரி... அந்த 6 பேர் யாரென்று பார்க்கலாமா? கனாதர், அக்ஷபாதர், வ்யாஸர், கபிலர், பதஞ்சலி, ஜெய்மினி ஆகிய ஆறுபேர் உபதேசித்தவை தர்ஸனங்கள் என அழைக்கப்படுகின்றன. அதாவது தத்துவங்கள். இவர்களில் கனாதர், அக்ஷபாதர் ஆகியோர் உபதேசித்தது நியாயம், வைஷேஷிகம்.

அதாவது தர்க்கம் பண்ணுவது, வாதம் பண்ணுவது, கடவுளைப் பற்றி வாதம் பண்ணுவது, தர்க்கிகம் என்று பெயர் இதற்கு.கபிலர் சாங்க்யம் செய்தார். இதுவும் கடவுளைப் பற்றி கேள்வி கேட்கிறதுதான். பதஞ்சலி, ‘யோகம்’ என்ற தத்துவம் சொன்னார். நாம் இவர்களில் வ்யாஸரைப் பற்றியும், ஜெய்மினியைப் பற்றியும் தான் விஸ்தாரமாகப் பார்க்கப் போகிறோம்.

அதற்கு முன்...கங்கைக்கரை... பழைய காலத்தின் கங்கைக்கரை... அடர்ந்த காடு... அப்போதெல்லாம் நிறைய முனிவர்கள் அங்கே திரிந்து கொண்டிருப்பார்கள். தவம் செய்வார்கள். இதற்கு முனிவர்கள் மட்டுமன்றி காட்டு வாசம் செய்யும் துண்களும், அதாவது விறகு வெட்டுபவர்கள்... மூலிகை எடுப்பவர்கள். கங்கைக்கரையாதலால் மீன் பிடிக்கும் மீனவர் குலப் பெண்கள் உள்பட மக்கள் வசித்தார்கள். இவர்களுக்கிடையிலே தான் முனிவர்களும் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்கள்.

‘புத்ரேனே... பார்யேனே...’ என்ற சொல்லுக்கிணங்க மனையாள் வேண்டாம், மகனும் வேண்டாம் என்று வாழவேண்டும் முனிவர்கள். ஆனால்... அந்தக்கால வாழ்க்கை முறையில் எப்படியென்றால்... தவம் பண்ணிக் கொண்டிருக்கும்போதே பல பெண்கள் கண்ணில் தென்படுவார்கள். காம ஆசையை தூண்டுவார்கள்.

.முனிவர்கள் அவற்றை மறுதலித்து ஆசையை அடக்க வேண்டும். ஆனாலும்... தவத்துக்கு இடையூறாக அந்த ஸ்திரிகள் தேகம் தொந்தரவு செய்து கொண்டிருந்தால் சட்டென அவர்களை நெருங்கித் தொட்டுத் தங்களது காம ஆசையை தீர்த்துக் கொண்டு விடுவார்கள் முனிவர்கள். அந்த ஸ்திரீகளும் முனிவர்கள் இஷ்டப்பட்டால் மறுக்க முடியாத நிலைமையில் இருப்பவர்கள்.

இப்படிப்பட்ட கங்கைக்கரையிலே தான் பராசரர் எனும் முனிவர் தவம் இயற்றிக்கொண்டிருந்தார். கங்கைக்கரையிலே ஒரு சவுந்தர்ய பொழுதிலே அவர் நடந்து கொண்டிருந்த போதுதான்...

ஈர ஆடைகளுடன் நின்ற ஒரு தேகவனப்பு மிக்க அழகியைப் பார்க்கிறார். இவரது மனம் சட்டென அவள்மேல் தொற்றிக் கொள்கிறது. அவளை நெருங்கினார். பெண்ணே நீ யார்? “மகரிஷி... என் திருநாமம் மச்சகந்தி என்கிற சத்யவதி. நானொரு செம்படவப் பெண். என் அப்பா வலை வீசுவார். மீன் பிடிப்பார். நான் அவற்றைச் சேகரித்து எடுத்துச் செல்வேன்.

அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பராசரர் அவளை இன்னும் அருகே நெருங்கினார். மச்சகந்தியின் உடலிலிருந்து மீன்வாசம் ‘கப்’பென அடித்தது. ஆனால் அவருக்கு அது பெரிதாக தெரியவில்லை. பெண் வாசம் தான் அவருக்கு அதிகமாய் வீசியது. மச்சகந்தியின் தோளைத் தொட்டார் முனிவர்.

‘மகரிஷி...’ என உடல் சிலிர்த்து இழுத்தாள் மச்சகந்தி. பெண்ணே...! எனக்கு கங்கையைக் கடக்க உதவி செய்வாயா? சம்மதித்தாள் மச்சகந்தி.

ஆற்றைக் கடந்த முனிவரால் ஆசையைக் கடக்க முடியவில்லை. மச்சகந்தியை நெருக்கமாக அணைத்தார். “இது பகவத் முகூர்த்தம். இந்த அருமையான தருணத்தில் என்னோடு நீ சம்மதித்து இணைந்துவிடு. ஒரு மாமுனிவனை எனக்குப் பெற்றெடுத்துக் கொடு.

இது யாருக்கும் தெரியப்போவதில்லை. என்ன?”மச்சகந்தி சம்மதித்தாள். அவளது மேனியில் மீன்வாசம் போய் ஆண்வாசம் வந்தது. 

000000000000000000000000000000

பகுதி – 86.

மீனவப் பெண்ணான மச்சகந்தியின் மேனியில் மேவினார் பராசர். அந்த காட்டுப்பகுதிக்குள் அப்பொழுது ஒரு விசேஷ சிருஷ்டிக்கான விஷயம் நடந்தது. புதர்களுக்கிடையே ஒரு புதிய பூ பூப்பதற்கான பிராக்ரமத்தை (உடலுறவு கொண்டார்) செய்தார் பராசரர்.

“மச்சகந்தி... என் ஆசைக்கு ஒத்தாசை செய்தாய் நன்றி இனி நீ என் புத்ரனை பெற்றெடுத்துக் கொடுத்து விட்டு உன் அப்பாவிடம் செல்லலாம். அவருக்கு எதுவும் தெரியாது... நீ கன்னியாகவே இருப்பாய்.”

மச்சகந்தி அடுத்த கொஞ்ச நேரத்திலே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். நீங்கள் ஆச்சரியப்படலாம். என்னடா இது...? மழை பெய்தவுடன் மரம் எழுந்து வந்துவிடுகிற மாதிரி இருக்கிறதே பராசரரோடு தேகசம்பந்தம் கொண்டவள் திடீரென பிள்ளை பெறுகிறாளா? அப்படியும் கன்னியாகவே இருக்கிறாளா?

ஆமாம்... ‘ரிஷி கர்ப்பம் ராத்தங்காது’ என்பார்கள். அதாவது ரிஷிகள் தங்கள் காமத்தை ஓர் அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள். அதாவது... தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக. பராசரரும் மச்சகந்தியும் இணைந்த பிறகு பிறந்தது ஒரு குழந்தை. அவன் வளர்ந்தான்.

குழந்தை பிறந்தது யாருக்கும் தெரியாது என்று பராசர் சொன்னார் இல்லையா? ஆனால்... இந்தப் பையன் ஒரு வலையச்சிக்கு பிறந்தவன் என்பது அந்த காட்டில் உள்ள மற்றவர்களுக்கெல்லாம் தெரிந்து விட்டது. மச்சகந்தி குழந்தையை கொடுத்துவிட்டு போய்விட்டாள். ஆனால் அப்பகுயில் உள்ள மற்ற ரிஷிகள், பிராமணர்கள் எல்லாரும்...

‘ச்சீ ச்சீ... ஒரு மீனவத்தி பெற்றெடுத்த பிள்ளையை நாங்கள் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இவனை அவளிடமே கொண்டு விட்டுவிடுங்கள். இவனுக்கு சாத்திரம் சொல்லித்தரக்கூடாது. சம்ப்ரதாயம் சொல்லித் தரக்கூடாது” கிட்டத்தட்ட அந்தப் பையனை பிராமணர்கள் பகிஷ்காரமே செய்துவிட்டார்கள். அதாவது புறக்கணித்து விட்டார்கள்.

ஆனால் அந்தப் பையன் வளர்ந்தான். சாஸ்திரம் கற்றான். சம்ப்ரதாயம் கற்றான். தனக்கு எதையெல்லாம் கற்றுக் கொடுக்கக்கூடாது என பிராமணர்கள் மறுத்தார்களோ அதையெல்லாம் கற்றான் அப்பையன்.

வளர்ந்தான் ஞானம் வளர்ந்தது. தாடி வளர்ந்தது. ரிஷியானார். இன்றைக்கும் பிராமணர்கள் கொண்டாடுகிறார்களே வேதம் அதை வகைப்படுத்தி தொகுத்தார். இன்றைக்கும் ஆயிரமாயிரம் தெய்வக் கதைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறதே அந்த 18 புராணங்களைத் தொகுத்தார்.

இன்றைக்கும் பிராமணர்களில் முதுபெரும் புனித நூலாக முழங்கப்படுகிறதே ‘ப்ரம்மசூத்ரம்’ அதை எழுதினார். அவர்தான் வ்யாஸர் வேதவ்யாஸர். வ்யாஸர் பிறந்த சம்பவங்கள் கதை என நாம் கருதிக்கொள்ளலாம்.

ஆனால், அந்தக் கதையில் ஒரு செய்தியைப் பாருங்கள். மீனவத்திக்குப் பிறந்தான் என்பதற்காக அவரை ஒதுக்கி வைத்த பிராமணர்கள்... பிறகு தங்கள் சமயத்துக்கே வ்யாஸரை பெரும் வரமாக ஏற்றுக் கொண்டார்கள்.

இந்த இடத்தில் ஒர் சின்ன சம்பவம் ஞாபகம் வருகிறது. கங்கை நதிக்கரையில் காட்டுப்பகுதியிலிருந்து அப்படியே காரைக்குடி பக்கம் வாருங்களேன்.

காரைக்குடியில் சனாதானிகள் கூட்டம். நாம் பேசிக் கொண்டிருந்தேன் நிறைய கூட்டம் கூடியிருந்து. அப்போது வியாஸரைப் பற்றியும் பேசினேன். அந்த வேளையில்...

அங்கே வந்தார் ராமசாமி நாயக்கர். நான் வ்யாஸரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட ராமசாமி நாயக்கர், ‘அய்யா..வ்யாஸர் மீனவப் பெண்ணுக்கு பிறந்தவரா? என்றார்.

‘ஆமாம்’ என்றேன்‘ அவர் பிறந்த போது அவரை பிராமணர்களெல்லாம் ஒதுக்கி வச்சாங்களாமே?...‘ஆமாம்’ அப்புறம் அவர் படைச்ச விஷயங்களையும் ஒதுக்கி வைக்கலாமே...? கூட்டம் நாயக்கர் பக்கம் திருப்பிப் பார்த்தது.

சரி... மறுபடியும் கங்கைக்கரையின் காட்டுப் பகுதிக்கே திரும்பபோவோம். வ்யாஸர் தனது ப்ரம்ம சூத்திரத்தில் கடவுளைப் பற்றி நான் முன்பு கூறிய தத்துவக்காரர்களை கண்டித்திருக்கிறார்.

சரி... வ்யாஸர் வ்யாக்யானம் என்ன? “நீங்களெல்லாம் ப்ரம்மத்தை, அதாவது கடவுளை காரணத்தின் அடிப்படையில் அணுகுகிறீர்கள் (based on reason) ஆனால் அவர் அறிவுக்கு அப்பாற்பட்டவர் தர்க்கங்களைத் தாண்டியவர்.
உலகத்தைக் கடவுள்தான் படைத்தார். அவர்தான் காப்பாற்றுகிறார். அவரை அறிவு, காரணம், தாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் அணுகாதீர்கள்.

கடவுள் காரணங்களை கடந்தவன். God is above logic...”...இதுதான் வ்யாஸரின் வ்யாக்யானத்தின் எளிய வடிவம். வ்யாஸர் புராணங்களைத் தொகுத்தவர். வேதத்தை புராண வடிவத்தின் அடிப்படையில் கதைகளாக சொல்பவர். அதனால் வேதம் சொன்னபடி கடவுளை ‘Poetic’ ஆக அணுகினார்.

அதாவது கவித்துவமான கதாம்சமாக.சரி... இப்படிப்பட்ட வ்யாஸருக்கு ஒரு சிஷ்யர் இருந்தார். அவரை ...Naturalist என்று சொல்லலாம். அதாவது இயற்கைவாதி. அவர்தான் ஜெய்மினி, வ்யாஸரின் சிஷ்யரான ஜெய்மினி, வ்யாஸரோடு நிகழ்த்திய வாதங்கள் சுவராஸ்யமானவை சிந்தனாசக்தியைத் தூண்டுபவை.

ஒருமுறை... காட்டில் வ்யாஸர் ஜெய்மினியோடு பேசிக் கொண்டிருக்கும்போது தனது வழக்கமான அறிவுரையை வழங்கினார்.

‘சிஷ்யா இந்த செடியை, மரத்தை...மண்ணை, உன்னை, என்னைப் படைத்தது கடவுள் அவர்தான் நம்மை படைத்துக் காத்து பரிபாலித்துக் கொண்டிருக்கிறார் என வ்யாஸர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க...

ஜெய்மினி... ஒரு செடியைக் கையில் பிடித்தவாறே...’ஸ்வாமி கூப்பிடுங்கள் அவனை’ என்றார். ‘யாரையப்பா?‘ அதுதான் நீங்கள் சொன்ன கடவுளை’ ஜெய்மினியின் வினா வ்யாஸரை...

000000000000000000000000000000

பகுதி – 87.

“ஸ்வாமி அவனை இங்கே கூட்டி வாருங்களேன்...? யாரையப்பா?...அவன் தான் உலகத்தையெல்லாம் ஒருத்தனே பொசுக்கென படைத்து முடித்து விட்டான் என்கிறீர்களே?... அந்த கடவுளைத்தான். ஜெய்மினியின் வினா வ்யாஸரை துளைத்துக் கொண்டு சென்றது.

விழிகளை சுருக்கி இமைத்த வ்யாஸர் ‘அவன் பரலோகத்தில் இருக்கிறானப்பா... அவனை இங்கே இருந்து பார்க்க முடியாது...’ என்கிறார் வ்யாஸர் ஜெய்மினி சிரிக்கிறார் “அது எப்படி இருக்கும்?”

இங்கே யாகத்தில் புகை அதிகமாக வந்தால் புகைமூட்டமாக இருக்குமே... அதுபோல இருக்கும்...”நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்... பரலோகம் உங்களுக்குத் தெரியுமா?... அப்படி தெரிந்தால் காட்டுங்கள் இல்லையென்றால் தெரிந்தவர்களை கூப்பிடுங்கள். அடியேன் பார்த்து பரவசப்பட்டுக் கொள்கிறேன்...?

”வ்யாஸர் பதிலின்றி மௌனித்தபோது...ஜெய்மினி சொன்னார். “கோஹி தஸ்வேத யத்ய முஷ்பின் லோகஅஸ்தீ வாரவேதீ...”யஜுர் வேதத்தில் வருகிற மந்த்ரம் இது.

பரலோகம் யாருக்குத் தெரியும்?.... அதைப் பார்த்தவர்கள் யார்?... இருந்தால் வரச்சொல்?... அது எப்படியிருக்கும்?...என கேள்விகளைச் சொடுக்குகிறது அந்த யஜுர் வேத மந்த்ரம். இந்த வேதக் கேள்விகளுக்காவது விடை வைத்திருக்கிறீர்களா?.......ஜெய்மினி கேட்டார்.

வ்யாஸரோ... “அவன் பரலோகத்தில் தான் இருக்கிறான்... உனக்கும் எனக்கும் இந்த செடிக்கும் கொடிக்கும் உயிர் கொடுத்தவன்... ”ஜெய்மினி... இதைக் கேட்டதும் டக்கென ஒரு கொடியை பிடித்தார்.

இந்தக் கொடிக்கும் பிராணன் உள்ளது வளர்கிறது அசைகிறது. பூக்கிறது, காய் கொடுக்கிறது, கனி கொடுக்கிறது. இதற்கு இத்தனையும்.. கொடுப்பது தண்ணீர். அந்த தண்ணீர் தான் கொடிக்கு சோறு....

இப்போது... இந்த கொடியை வாழவைப்பது கடவுள் என்றால்... தண்ணீர் தான் கடவுளா?... அல்லது கடவுள் தண்ணீர் தானா?...அந்தக் கொடிக்கு உள்சக்தி ஒன்று உண்டு.... அதற்கொரு வளரும் சக்தி உண்டு. அது தண்ணீரால் கிடைக்கிறது. அதை ஏன் கடவுள் என்கிறாய்? “இது தான் ஜெய்மினியின் மீமாம்ஸ அதாவது கடவுளைப் பற்றிய விசாரணை.

ஜெய்மினி இப்படி செடிகொடிகளை காட்டி விளக்கம் கொடுத்ததற்கு பலப் பலப் பல யுகங்கள் கழித்து தான் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்று விஞ்ஞான ரீதியாக கருத்தும் உறுதிப்பட்டது.

ஜெய்மினி சொல்லும் சோறென்றால் வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு ஏப்பம் விடுவதல்ல... “ஏதோ வானஸ்ய மஹிமாயத அன்னேனு அதிலோகதீ...”உயிர் சக்தியை கொடுக்கும் உணவுப் பொருள்தான் கடவுள். காலையில் நாம் சாப்பிடுகிறோம். மதியம் கடக்கும் வேளையிலே வயிறு பசிக்கிறதே... ஏன்?... அந்த உணவு கொடுத்த சக்தி தீர்ந்து போய் விடுகிறது. அடுத்தபடி... உயிரும் உடலும் இயக்குவதற்கு சக்தி இல்லை. அதற்கு அன்னம்தான் கடவுள். The food is God

ஜெய்மினி இப்படியாக இயற்கையை முதன்மைப்படுத்தினார். நம் கர்மாக்களை நாம் செய்து கொண்டிருந்தால்... கடவுளுக்கு என்ன அவஸ்யம்...? என்பது தான் ஜெய்மினியின் கேள்வி. இதுதான் வ்யாஸர்...ஜெய்மினி இடையே நடந்த உரையாடல்.

வ்யாஸர் பிரம்மசூத்திரம் எனும் நூலை இயற்றினார் என்று பார்த்தோம். அதற்கு உத்தர மீமாம்ஸா என்று பெயர். இதனை ராமானுஜர் சங்கரர் போன்றோர் பாஷ்யப் படுத்தியுள்ளார்கள். அதாவது உரையிட்டுள்ளார்கள்.

ஆனால்... ஜெய்மினி பூர்வ மீமாம்ஸ எனும் சித்தாந்த்தை கொடுத்தார். மீமாம்ஸா என்றால் enquiry விசராணை என்று பாத்தோம். வ்யாஸரின் மீமாம்ஸாவை தொட்ட சிலர் ஜெய்மினியின் ‘மீமாமம்ஸா’ வை தொடவில்லை.

ஏனென்றால் ஜெய்மினியை நாஸ்திகர் என்று அழைத்தவர்கள் கூட அன்று உண்டு. இங்கே ஒரு வேடிக்கை என்னவென்று கேட்டால்... அதுவும் வேதனையான வேடிக்கை.... கடவுளைப் பற்றிய enquiry விசாரணையில் ஈ டுபட்ட ஜெய்மினியை பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு... இன்னும் ஜெய்மினி கோத்ரம் என்று இருக்கிறார்கள்.

அவர்களோ... ஜெய்மினிக்கு எதிர்மாறாக இருக்கிறார்கள்.சரி... வ்யாஸரை பார்த்தோம். ஜெய்மினியைப் பார்த்தோம்.

இப்போது இன்னொரு புதிய தரிசனம் தலை முழுவதும் கிளி மாதிரி இருக்கிறது. உடல் முழுவதும் மனுஷன் மாதிரி இருக்கிறது. இந்த வித்தியாசமான பிறவி யார்...?அவர் எப்படி இப்படிப் பிறந்தார்.?...அவர் அந்த ராஜாவோடு அப்படி என்னதான் பேசிக் கொண்டிருக்கிறார்?... கேட்போமா?... இவருக்கும் வ்யாஸருக்கும் சம்பந்தம் உண்டு...

கர்ப்பமாகி குட்டிபோட்ட கிளி ? நம்புங்கள்.!!

கிளி கர்ப்பமானால் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல.குட்டிபோட்டது. புராணம் அப்படித்தான் சொல்கிறது.

ரிஷிகள் காம சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள் அப்படி காம சுகத்தை அனுபவிக்காத சந்தர்ப்பங்களில் அவர்களது ‘உயிர்த் திரவியம்’ வெளியாவது இயற்கைத்தானே.

என்னடா இவ்வளவு வயதானவர் இப்படி கதை சொல்கிறாரே என வருத்தப்பட வேண்டாம். புராணங்களை புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.

யாரது?... கிளி போன்ற தலை உடம்பெல்லாம் மனிதன் போன்ற தோற்றம். அதுவும் நாம் பார்த்த வ்யாஸருக்கு சம்பந்தம் உள்ளவரா?... வ்யாஸர் பிறந்த வரலாற்றை பார்த்தோம். வித்தியாசமாக இருந்தது. அதாவது... பராசரர் மச்சகந்தி என்னும் மீனவப் பெண்ணோடு கூடிக் குலவ... திடுதிப்பென பிறந்தவர் தான் வ்யாஸர்.

சரி... வ்யாஸருக்குப் பிறந்த ஒருவர் எப்படி பிறந்தார்?... இதையும் புராணங்கள் சொல்லுகின்றன?... என்னடா இவ்வளவு வயதானவர் இப்படி கதை சொல்கிறாரே என வருத்தப்பட வேண்டாம். புராணங்களை புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன. சரி... Come to the subject வ்யாஸருக்கு ஒருவர் பிறந்தார். அவர் எப்படிப் பிறந்தார்.

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ரிஷிகள் காம்ய சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள் என்று. அப்படி காம்ய சுகத்தை அனுபவிக்காத சந்தர்ப்பங்களில் அவர்களது ரேதஸ்... அதாவது ‘உயிர்த் திரவியம்’ வெளியாவது இயற்கைத்தானே.

அப்படியோர் பொழுது வ்யாஸரிடமிருந்து வெளிப்பட்டு விட்டது ரேதஸ். சிந்தி கிடந்த அந்த ‘ரேதஸ்’ஸை ஒரு கிளி என்ன பண்ணியது. கொத்தித் தின்றுவிட்டது.

கிளியாக வந்த அழகியுடன் கூடினார் என்றும் சொல்வார்கள். அதை கொத்தித் தின்ற கிளி சும்மாயிருக்குமா?... அந்தக் கிளி கர்ப்பமாகி விட்டதாம். கிளி கர்ப்பமானால் என்ன செய்யும்? முட்டை போடும். குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல. வ்யாஸரின் வீர்யம் சாப்பிட்ட கிளியல்லவா. அதனால் கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது.

அந்த கிளிக்குட்டி(!) எப்படி இருந்ததாம்?... தலையெல்லாம் கிளிபோல இருந்ததாம். உடல் மட்டும் மனுஷ்ய பாவணையாய் அமைந்ததாம். என்னடா இது புதுக் கொடுமையாக இருக்கிறதே என்கிறீர்களா?... இது பழம்பெரும் ‘கொடுமை’.

இருங்கள். கதை இன்னும் இருக்கிறது. அந்த ‘கிளிக்குட்டி’ வ்யாஸருக்கும் கிளிக்கும் பிறந்தது. இந்தத் தகவல் வ்யாஸருக்கு தெரிந்தது. உடனே அவர்... ‘டேய் பயலே’ என தன் குடிலுக்கு வெளியே வந்து குரல் கொடுக்க... அதற்குள் அந்த கிளிப்பயல் பறந்து விட்டான்.

வ்யாஸர் குரல் கேட்டு மரங்களெல்லாம் திரும்பிப் பார்த்ததாம். சரி... அந்த கிளிப் பிள்ளைக்கு என்ன பெயர்?...சுகஹா... என்றால் வடமொழியில் கிளி என்று பெயர். அதனால்... அவருக்கு ‘சுகர்’ என்று பெயர். சுகப்பிரம்மம் என்றும் சொல்லுவார்கள். ஏனென்றால்... வ்யாஸருக்கு வேதங்களை பிரித்து வகைப்படுத்தி தொகுத்த பின்பும், உபநிஷத்துக்கு வ்யாக்யானமாக ப்ரம்ம சூத்திரம் பண்ணியபோதும்... 18 புராணங்களை தொகுத்தபோதும் திருப்தி இல்லை.

அதனால்தான் ‘பாகவதம்’ என்று மகா காவ்யத்தை படைத்தார்.
பாகவதம் என்றால் கிருஷ்ண பரமாத்மாவின் முழு வாழ்க்கை வரலாற்று தகவல்கள் உள்பட பல பகவத் விஷயங்களை சொல்வது. இதைக் கேட்டாலோ, உபதேசம் பெற்றாலோ அவர்கள் மோட்சம் பெற்று பகவான் நாராயணனின் வைகுண்டத்தை அடைந்து விடலாம் என்பது நம்பிக்கை.

இந்தக் கிளிக் கதையை...“எம்ப்ரவ் விஷந்தம்அனுபேதம் உபதே ஹிருத்யம்தனவ பாயஹைவிரக காதரஹ ஆஹிஜாகாதேதீ தன்மயேதய தரவோ...” என்கிற பாகவத பாராயண ஸ்லோகமே சொல்கிறது.

சரி... வ்யாஸர் இயற்றிய இந்த பாகவதத்தை அவரை விட அறிவாளியான ஞானத்தில் சிறந்தவரான சுகர்... பரீட்சித்து என்னும் ராஜாவுக்கு உபதேசிக்கின்றார்.

அதுவும் ஒரே வாரத்தில் பரீட்சித்து ராஜா பாகவத உபதேசம் பெற்றால்தான் அவன் மோட்சம் பெறமுடியும் என்ற நிலைமை. அடித்துப் பிடித்து... உருட்டி விரட்டி... இன்று பரிட்சைக்கு ‘போர்ஷன்’ முடிக்கிறார்களே அதுபோல பரீட்சித்து ராஜாவுக்கு பாகவதக் உபதேசித்து முடித்தாயிற்று. அவன் சாபம் நீங்கி மோட்சம் பெற்றான்.

இங்கேதான் ஜெய்மினி கேட்ட கேள்விக்கு நாம் விடை தேடப் போகிறோம். அதற்காகத்தான் இந்த சுகர் கதையை உங்களுக்குச் சொன்னேன்.

மோட்சம், பெற்று வைகுண்டம் செல்கிறான் என்று சொல்கிறார்களே?... மோட்சம் என்றால் என்ன?... வைகுண்ட லோகம் எப்படி இருக்கும்?... இதற்கான விடையை நாம் உபநிஷத்துகளில் பார்க்கலாம். இங்கு போல் அங்கும் ஸகல போகங்களும் உண்டு என்கிறது உபநிஷது.

அப்படியென்றால்... வைகுண்ட லோகத்தில் வீடுகள் உண்டா?... மாடுகள், கிளிகள், மான்கள் உண்டா?... அங்கு வஸிப்பவர்கள் மனைவியுடன் இருக்கிறார்களா?... இங்கு போல் அங்கும் காம ஸூகத்தை அனுபவிக்கிறார்களா?... மகப்பேறுகளைப் பெறுகிறார்களா? ... அங்கேயும் திருடர்கள் இருப்பார்களா?... ஸந்யாஸிகள் இருப்பார்களா?... ஒரு புருஷன் மற்றொருவர் மனைவியை அங்கும் விரும்புவானா?... இந்தக் கேள்விகளை நான் கேட்கவில்லை. பின்?... 

உடலுறவுக்கு தட்டுபாடில்லாத சுவர்க்கம்.

உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா? குடும்பஸ்திரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..? எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். பரலோகத்தில் பேரின்பமாக மாறும்.

விரஜா என்னும் நதி மிக சன்னமாக சீராக ஜலஜலவென ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதியைத் தாண்டி அபராஜிதை என்னும் ஒரு பட்டணம் இருக்கிறதாம். பட்டணம் என்றால் அப்பேர்ப்பட்ட பட்டணம் அதாவது எங்கு பார்த்தாலும் ஆண்கள், பெண்கள் ரொம்ப சந்தோஷமா கூடிக் குலவி களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் நிறைந்த இங்கே.. ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உள்ளதாம் அந்த மண்டபத்திலும் ஒரே ஆனந்த மயம்தான். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் திவ்யபர்யங்கம் என்னும் உயர்ந்த கட்டில் ஒன்று இருக்கிறது அதிலேதான்.. பாம்புப் படுக்கையிலே பெருமாள் இருக்கிறார்.

பக்கத்திலே அங்குள்ளவன் தனது விருப்பத்துக்கு தக்கபடி பித்ரு லோகம், ஸ்த்ரி லோகம் முதலியவற்றை படைத்துக் கொள்கிறான் சுகத்தையும் அனுபவித்துக் கொள்கிறான். இதெல்லாம் என்ன? இதுதான் மோட்சமாம். மோட்ச லோகத்தில் குடும்பம் குட்டிகள் உண்டா? சன்னியாசிகள் உண்டா? ஒருவனுடைய பத்னியை இன்னொருவன் அபகரிப்பானா?

என்றெல்லாம் கேள்விகளைப் போன அத்தியாயத்தில் பார்த்திருப்பீர்கள்.

இதெல்லாம் நான் எழுப்பிய கேள்விகள் இல்லை.. மும்மதஸாரம் என்னும் புத்தகத்தில் சக்கரவர்த்தி ஆச்சாரியார் எழுப்பிய கேள்விகள். பின் அவரே விளக்குகிறார் பாருங்கள்.மோட்ச ஸ்வருபம் என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்.

இவர்கள் இணைந்துள்ள மோட்சம் எல்லோராலும் போற்றத் தகுந்தது ஜாதி, வர்ணம், மதம், பாகுபாடு இதில் கிடையாது எல்லாரும் ஏக ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கு போகத்திலும் வேற்றுமை இல்லை அனைவருக்கும் சமமான போகம் இதைத்தான் ஸாயுஜ்யம் என்பர் எல்லா வகைகளும் எல்லாருக்கும் சமமாகப் பரிமாறப்படுகின்றன என்றிருந்தால் தான் அது ஸாயுஜ்யம்.

குயில், கிளி, கருடன், கஜானன் (யானை) செடி, கொடி, மரம் முதலியவைகளும் அங்கு வைகுண்ட லோகத்தில் உள்ளனவே.. இவர்களும் ஜீவராசியை சேர்ந்தவர்கள்தானே, இதைக் கொண்டு வேற்றுமை ஏற்பட்டுவிடாதா என்கிற அய்யம் சிலருக்கு வரலாம்.

இதற்குப் பதில்.. இவர்கள் அனைவரும் அங்குள்ள நித்ய ஸ்திரீகள் ஆண், பெண் என்கிற வேறுபாடு அங்கிருந்தாலும்.. எவ்வகையிலும் அவர்களுக்குக் குறைவில்லை. கிளி, குயில் முதலியவைகளும் தத்தம் விருப்பப்படி பல உடல்களை எடுத்துக்கொண்டு பணிவிடை செய்யலாம்.

ஒரு முக்தாத்மா பல உடல்களை எடுக்கும்போது ஆண், பெண், குழந்தை முதலிய உடல்களை எடுத்துக்கொண்டு குடும்பமாக அடிமை செய்யலாம் அல்லது மற்றொரு முக்தாத்மாவை உதவியாக வைத்துக்கொண்டு அதற்குத் தக்கபடி இரு முக்தர்களும் பல உடல்களை எடுத்து குடும்ப தாஸ்யம் செய்யலாம்.

இவ்வாறு குடும்ப தாஸ்யம் செய்யும் போது.. ஆண் உருவமும், பெண் உருவமும் உடையவர்களாக இருந்து கொண்டு விளையாடினால் காமம் என்கிற இன்பம் இவர்களுக்கு வரும். ஆகையால், அது மோட்ச சொரூபத்துக்கு விரோதமா என்று சந்தேகப்பட வேண்டாம். இவர்களது எல்லா ரமணமும் அதாவது விளையாட்டும் பகவானுடையதே..

கிருஷ்ணன் கோபி ஸ்திரிகளுடன் ஏன் காம போகத்தை அனுபவிக்கவேண்டும்?

சிறீரங்கநாதன் தனது ஆனந்த நாடிகளைக் கொண்டு சிறீ ரங்கநாயகியுடன் ஆனந்தமாகக் கலவியை அனுபவிக்கிறான் என பாரசரபட்டர் சிறீகுணாத்ர கோசத்தில் எப்படி சாதித்தார்?

இவையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்தால்.. இங்கு போல் அங்கும் சகல போகங்களும் உள்ளன. அங்குள்ளவர்கள் நித்ய சுத்தர்களாக இருந்தாலும் லீலையாக ஜலக்ரீடை முதலியவைகளை செய்கிறார்கள் 'எல்லாம் பகவான் செயல்' என விளக்கமாக சொல்லிக் கொண்டே போகிறார் சக்கரவர்த்தி ஆச்சாரியார்.

இன்னும் நாம் உபநிஷது வாக்கியங்களின் மூலமாகவே அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போமா? 

"சஹ யதீ பிதுர் லோககாமோ பவதீ...சங்கல்பா தேவாஸ்யபிதரஉபதிஷ்ட ந்தே...” 

உனக்கு என்ன வேண்டும்? உன் அம்மாவை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் அப்பாவைப் பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் புத்திரனை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள்!

சரி.. குடும்ப உறவுகள் வெறுத்துப் போய் விட்டது உனக்கு இப்போது ஒரு பரஸ்த்ரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு.. நீ நினைத்தால் உன் முன்னே வந்து நிற்பாள் உன்னைப் பார்த்து சிரிப்பாள் நெருங்குவாள் அணைப்பாள் ஆனந்தம் தருவாள். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம் அங்கே பேரின்பமாக மாறும். இந்த லோகத்தின் ஆனந்தங்கள் அல்பம் அங்கே பகவத் ஆனந்தம்.

இது Nature அது Super Nature. 

"யஷனன்னே க்ரீடன்னேரமமானாஹா ஸ்த்ரீபிர்வாயானிர்வா...” 

என்று போகிற உபநிஷது.

இங்கு நீ மோட்டாரில் சுற்றுவது போல அங்கேயும் ஜாலியாக சுற்றலாம் அதுவும் எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.. அவளை நீயே படைத்துக் கொண்டு என்கிறது. அப்படியென்றால், அங்கே பகவானின் வேலை என்ன? பெண்களுக்கு மோட்சம் கிடையாது. கடவுளுக்கு வேலை என்ன?

மோட்சம் பெறுவது எப்படி? கடவுளுக்கு வேலை மகாலட்சுமியுடன் இருந்து சந்தோஷிப்பதுதான். பெண்களுக்கு மோட்சம் கிடையாது அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம். உடலுறவுக்கு மோட்சலோகத்தில் ஸ்த்ரிகள் நிறைய பேரை அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.

0000000000000000000000000000

பகுதி 90. 

உன்னை இங்கு படைப்பவள் அம்மா - நீ நினைத்தால் உன் அம்மாவையே அங்கு படைக்கலாம் உன்னைப் படைத்தவர் அப்பா நீ நினைத்தால் உன் அப்பாவையே அங்கு படைக்கலாம் இப்படியொரு Super Nature சூத்திரத்தின் படி சொல்லப்பட்டு வரும் மோட்ச உலகத்தைப்பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம்.

இப்படியெல்லாம் இருக்குமா? பசி, பட்டினியற்ற இந்த உலகத்துக்குப் போகவேண்டும் என்றால் எப்படிப் போவது?

இதற்காக சாந்தோக்ய உபநிஷத்தில் பல வித்யையைகள் ஓதப் பெற்றிருக்கின்றன அதாவது இந்த உபநிஷதுவின் மூன்றாம் அத்தியாயம் முதலாக. மதுவித்யை, காயத்ரீ ப்ரம்ம வித்யை, சாண்டில்ய வித்யை, ஸம்வர்க வித்யை, ஷோட சகல ப்ரம்ம வித்யை உபகோஸல வித்யை, ப்ராண வித்யை, பஞ்சாக்னி வித்யை இப்படியாக பல வித்யைகள் போய்க் கொண்டே இருக்கின்றன.

இந்த வித்யைகளை ப்ரம்மன் ப்ராஜபதிக்கும் ப்ராஜபதி மநுவுக்கும், மநு பிரஜைகளுக்கும் உபதேசித்தாராம்.

அப்படி என்ன இருக்கின்றன அந்த வித்யைகளில்?

ஆத்மாவை அறிபவன் மோட்சம் பெறுகிறான் இதுதான் இந்த ONE LINE உபநிஷது.

இந்த ப்ராஜபதிக்கு தேவர்களும், அசுரர்களும் பிள்ளைகள் ஆத்மாவை அதன் எட்டு குணங்களோடு அறிந்தவனுக்கே மோட்சம் என வாக்கியமொன்றை உலகமெங்கும் பரவவிட்டார்.

உடனே. தேவர்களின் தலைவன் இந்திரனும், அசுரர்களின் பிரதிநிதியாக விரோசனனும் தங்கள் அப்பாவான ப்ராஜபதியிடம் 'மோட்சம் பெறுவது எப்படி? என கற்பதற்காக 32 வருஷம் ப்ரம்மச்சர்யம் இருந்து வந்தார்கள் அப்போது அப்பா சொன்னார்

ஒரு மடக்கில் ஜலம் வார்த்து நன்றாகப் பாருங்கள் நல்ல அலங்காரங்களை செய்துகொண்டு பாருங்கள் ஏதும் தெரியாமல் இருந்தால் கேளுங்கள் என்றார்.

அசுரர் தலைவர் விரோசனன் பார்த்தான் அவன் ரூபமே மடக்கு தண்ணீரில் தெரிந்தது ஓ இதுதான் ஆத்மா என தீர்மானித்து தன் அசுரர்களுக்கு இதையே உபதேசித்தான் இதனால் அசுர குலமே தேஹாத்மவாதிகளாகி விட்டார்கள் அதாவது தேகத்தை தான் ஆத்மா என தப்பாக நினைத்தவர்களாகி விட்டார்கள்

ஆனால், தேவர் தலைவர் இந்திரன் இது நமது முகம் மாதிரியே இருக்கிறதே என யோசித்து மறுபடியும் தன் அப்பாவிடமே வந்தான். அவர் மறுபடியும் இந்திரனை 101 வருஷங்கள் காக்க வைத்து உபதேசம் செய்து மோட்சத்துக்கு அனுப்பினாராம்.

அதாவது அசுராளுக்கு மோட்சம் இல்லை தேவர்களுக்கு தான் மோட்சம் என்ற பாகுபாட்டை நிரூபிப்பதற்காக இந்தக் கதை நினைத்திருந்தால் அன்றே அந்த ப்ராஜபதி அசுராளுக்கும், ஆத்மாவைப்பற்றி சரியாக உபதேசித்திருக்க முடியுமல்லவா?

இதை உபநிஷது பண்ணிய ரிஷிகள் நினைக்கவில்லை அவ்வளவு தான்.

அதே உபநிஷதுகளில் இன்னொரு வித்யை.

அருணமகரிஷியின் பிள்ளை உத்தாலகர் உத்தாலகரின் மகன் ச்வேதகேது அந்த ச்வேதகேது வேதம், சம்பிரதாயம் எதுவும் கற்க விருப்பமில்லாமல் சுதந்திரமாய் திரிந்தான்.

இதைக் கண்ட அவன் அப்பா உத்தாலகர் 'டேய் இதுமாதிரி வேத அத்யயனம் பண்ணாத பிராம்மணனாய் இருந்து என்ன பயன்? வெளியே போய் குருகுல வாசம் செய்து கற்றுக்கொண்டு வாடான்னு அனுப்பி வைத்தார்.

அப்பா பேச்சால் உணர்ச்சி வசப்பட்ட ச்வேதகேது வெளியே போனான் எல்லா வேதங்களையும் ஸாங்கோபாங்கமாகக் கற்று இனி நாம் கற்க எதுவும் இல்லையென்று வீட்டுக்கு வந்துவிட்டான்.

அப்பா உத்தாலகர், 'என்னடா திரும்பி வந்துவிட்டாய்? என்றார்.

'12 ஆண்டுகளாகப் படித்து விட்டேன் இனிமேல் நான் படிக்க ஒன்றுமில்லை. என்றான் அந்த 24 வயது இளைஞன். 'எதைக் கேட்டு சிந்தித்தால் உலகத்தில் எல்லாம் கேட்டு சிந்தித்த பயன் வருமோ அது என்னவென்று உன் ஆச்சார்யனிடம் கேட்டாயா? என்றார் அப்பா.

'என்னப்பா சொல்கிறீர் உலகம் எவ்வளவு பெரியது ஒன்றையறிந்தால் உலகெல்லாம் அறிய முடியுமா?. அப்படியொரு வஸ்துவெல்லாம் இல்லையப்பா.’

அப்பா உத்தாலகர் அவனுக்கு என்னென்னவோ உபதேசம் செய்தார்

இன்னொரு காட்சி ச்வேதகேது பாஞ்சால தேசத்திலே ஸதஸ்க்கு சென்றான். ஸதஸ் என்றால் மன்றம் பல அறிஞர்கள் விவாதிக்கும் இடம் அங்கே ப்ரவாஹணன் என்ற ராஜரிஷியை சந்தித்தான்.

ராஜரிஷி கேட்டார் 'பிள்ளாய் உனக்கு தகப்பனார் உபதேசங்களை செய்தருளினாரா? ’'ஆம்.’'. அப்படியானால் ப்ரஜைகள் மரணமடைந்த பின்னால் போகும் இடம் எது தெரியுமா?'தெரியாது’. திரும்பி வரும்போதுள்ள வழி தெரியுமா? ’'தெரியாது’' சரி மேலுலகம் போய்ச் சேர்ந்த ப்ராணிகளாவது யார் தெரியுமா? ’'தெரியாது ’' சரி தேவயாந மார்க்கம், பித்ருயாண மார்க்கம் என்றவையின் வேறுபாடு தெரியுமா? ’'தெரியாது’'

அப்படியென்றால் நீ உபதேசம் பெற்றது என்ன? இவைகளை அறியவில்லையென்றால், உபதேசம் பெற்றதாக எங்கனம் கூறுவது?

’ச்வேதகேது தன் தகப்பனார் இருக்கும் இடத்துக்கு ஓடிவந்து தான் பட்ட மானபங்கத்தைச் சொல்லி வருத்தப்பட்டான் பின்னர் தன் அப்பாவிடம் அந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னப்பா பதில்? என கேட்டான்.

அதற்குத் தகப்பனார் உத்தாலகர். 'குமாரனே எனக்குத் தெரிந்திருந்தால் சொல்லாமல் இருப்பேனா? என்கிறார். இப்படித்தான் இருக்கின்றன மோட்சம் பற்றிய விசாரணைகள். 

00000000000000000000000000

பகுதி – 91- 1.

மோட்சம் பற்றிய விசாரணைகளை விரிவாகவே பார்த்தோம். வ்யாஸர் - ஜெய்மினி உரையாடல், உத்தாலகர் - ச்வேதகேது - வ்ராஷ்ணன் உரையாடல் என உதாரணங்களும் பார்த்தோம்.

என்ன விளங்கினோம் அதாவது இந்த உலகத்தில் நீ நல்லவனாக வாழவேண்டும் வாழ்ந்தால் இதைவிட இன்பம் மிகுந்த உலகம் உனக்கென இருக்கிறது என ஆசை காட்டும் வேலை தான் மோட்சம்.

பெண்களுக்கு மோட்சம் கிடையாது அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம் என முன்னர் நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படியென்றால்.. மோட்சலோகத்தில் ஸ்த்ரிகள் நிறைய பேரை அங்கு போனவன் படைத்துக் கொள்வான் என்றும் பார்த்தோம். அப்படியென்றால் அங்கு கடவுளுக்கு வேலை என்ன என்று கேள்வி வருகிறது.

அங்கே கடவுளுக்கு வேலை மகாலட்சுமியுடன் இருந்து சந்தோஷிப்பதுதான் அதாவது மோட்சலோகம் என்பது இதே போன்றதொரு இன்னொரு ஆனந்த மயமான லோகம்தான் அதை அடைவதற்குப் பல கடுமையான நிபந்தனைகள் இருக்கிறது என்பது நம்மை நெறிப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட விஷயம் வேறொன்றும் அல்ல.

சரி.. 'குழந்தாய் இந்தா பால் இதைக் குடித்து நன்றாக வளர்வாயாக என பிறந்த சிறு குழந்தைகளுக்கு வேதம் சொன்னதிலிருந்து இறப்புக்குப் பிறகான மோட்சம்பற்றி உபநிஷது சொல்லியவரை அனேக விஷயங்களை அலசி விட்டோம்.

தொடரும்

நன்றி : http://thathachariyar.blogspot.fr/

Comments

  1. எனக்கு மத நம்பிக்கை இல்லை. என்றாலும் என் சொந்தக் கருத்து.. மதப்தை இறுக்கிப் பிடித்திருக்கும் மதவாதிகளைப் போன்றுதான் ஓவராக மதத்தை எதிர்க்கும் குழுவினரும். அவர்களும் அரசியல் வேலைதான் பார்க்கிறார்கள். அத்தோடு எல்லா மதங்களிலும் அழுக்கு உண்டு. ஆனால் இந்து மதத்தை மட்டும் போட்டுத் தாக்குவது ஒரு agenda இல்லாமல் என்று நம்ப முடியவில்லை. அம்பேத்கார், பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் சொல்லுவதைக் கேட்கலாம். ஆனால் இக்காலங்கலிள் போலிகள் கூடி விட்டன.

    மதப் பற்றில் ஓவராகப் போகாமல் இருப்பது நல்லது என்ற மாதிரி மற்றப் பக்கத்திலும் ஓவராகப் போகாமல் இருப்பதுதான் சரியாகப் படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சக்திவேல் .முதலில் உங்கள் வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் மிக்க நன்றிகள் . எனக்கும் தாத்தாச்சாரியாரின் கருத்துக்களில் முழுமையான உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் , ஒரு சிலவிடயங்களில் உடன்படவே முடிகின்றது . அதாவது திராவிடர்களின் முழுமுதல் கடவுளான சிவனை வடக்கிற்கு மாற்றிய ஆரியத்தின் தந்திரம் . இந்து சமயத்தின் பெரும் அழுக்கான வர்ணாச்சிரம கொள்கை போன்றவையை தோலுரிப்பதில் இவரின் கட்டுரைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன . அதே வேளையில் திராவிடர்கள் அடிப்படையில் சைவசமையிகளே . அவர்களை எவ்வாறு ஆரியர்கள் முட்டாள்கள் ஆக்கினார்கள் என்பதில் உங்களுக்கு கருத்து வேறுபாடு இருக்காது என்றே நினைக்கின்றேன். அதே வேளையில் வெறும் காம கண்ணோட்டத்தில் புனைவுகளை ஏற்படுத்திய மதம் இந்து மதமாகவே இருக்க முடியும். இந்து மதத்தில் உள்ள பெரிய ஓட்டையான வர்ணாச்சிரம கொள்கைகளை எதிர்த்தே அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவினார் என்பது வரலாறு. எனவே தாத்தாச்சாரியாரின் இந்த கட்டுரயை கவ்வைக்கு உதவாது என்று மேலோட்டமாக பார்க்க முடியவில்லை என்பது எனது கருத்தாகும் . மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி .

      Delete

Post a Comment