இந்து மதம் எங்கே போகிறது?- மெய்யியல் - இறுதிப்பாகம்.



வணக்கம் வாசகர்களே !! இத்துடன் இந்த நீண்ட தொடரை நிறைவுக்கு கொண்டுவருகின்றேன். இறை எதிர்ப்புக்கு நான் ஆதரவானவனா ? என்றால் "இல்லை" என்பதே எனது பதில். அடிப்படையில் நான் இறைபக்தி உடையவன் . ஆனால் எதையும் கண்ணை மூடிக்கொண்டு இறைவனை வழிபடுவதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இங்கு இறைவன் என்பதை "காலம்" என்றும் பொருள் கொள்ளலாம் . சமயம் , இறைவன் என்ற எனது தேடலில் தாத்தாச்சாரியார் ஐயாவின் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எனக்குக் கைகொடுத்தன. இந்த தொடரில் தாத்தாச்சாரியார் சொல்கின்ற எல்லா கருதுத்துக்களிலும் நான் உடன் படவில்லை . ஆனால் அவர் இந்துசமயத்தில் கூறுகின்ற வர்ணாசிரமத்தையும் , பெண்ணடிமையையும் , பூராணக் கதைகள் கூறுகின்ற ஆபாசச் செய்திகளிலும் , கடல் கோளினால் உள்வாங்கப்பட்ட லெமூரியா கண்டத்தின் ஆதிக் குடிகளான திராவிடர்களின் (சைவர்களின்) முழுமுதல் கடவுளான சிவன் எப்படி வடக்கிற்கு ஆரியர்களால் மாற்றப்பட்டார் என்பதிலும் முற்றுமுழுதாகவே உடன் படுகின்றேன் . அவர் கூறிய ஏனைய கருத்துக்களை அவர் வாழ்ந்த கட்டங்களில் இருந்த சமய அரசியலில் விட்டு விடுகின்றேன். இந்த தொடருக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வந்த வாசகர்காகிய உங்களுக்கு மிக்க நன்றிகள்.

நேசமுடன் கோமகன்

000000000000000000000000000

பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம்.

பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லை யென்றால்... அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால்... அவளுடைய ‘பஹிஷ்டை’யில் (மாதவில‌க்கில்) வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும்.

"குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது." - உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்.

இப்போது இன்னொரு விஷயம். நம் நாட்டுக்கு சுயராஜ்யம் (சுதந்திரம்) கொடுக்கலாம் என ஆலோசித்தபோது... தஞ்சாவூர் ஜில்லா ஆடுதுறைப் பக்கமுள்ள ஒரு சின்ன கிராமத்தில்...ஒரு ரகஸ்ய கூட்டம் எப்போதென்றால் ராத்திரி 10 மணிக்கும்மேல்.
அர்த்தஜாமத்தை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ராத்திரி தேவதை.

இந்தக் காலத்திலேயே கிராமங்கள் ராத்திரியில் அடர்த்தியான அமைதியில் கிடக்கும். சுமார் 60 வருடங்களுக்கு முன்?காடா விளக்குகள்... தீப்பந்தங்கள் ஏற்றப்பட்ட அந்த மீட்டிங்கிற்கு தலைமை வகித்தவர் மகாப் பெரியவர். ஏன்? எதற்கு?

ஆடுதுறை பக்கமுள்ள அந்த கிராமத்தில் ராத்திரி நேரத்தில் மகா பெரியவர் சங்கராச்சாரியார் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார் என்பதாக சொன்னேனல்லவா?

அவர்கள் என்ன விவாதிக்கப் போகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் நான் உள்ளே செல்லவில்லை.

எனக்குத் தெரிந்த விஷயம் உங்களுக்கு தெரிய வேண்டாமா?... ‘ஹிந்து’ என்ற பெயர் வந்த காரணம் பற்றி விளக்கினேன் இல்லையா?... அந்த சனாதன தர்மத்தை... வர்ணாஸ்ரம மநு தர்மத்தை... காப்பாற்றியாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்தக் கூட்டம்.

ஏன் அப்படி என்ன ஆபத்து வந்தது?....அதாவது... பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லை யென்றால்... அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால்... அவளுடைய ‘பஹிஷ்டை’யில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும் என்ற அருவருக்கத்தக்க கட்டளையை மநு போட்டிருப்பதை

‘அஷ்டா வருஷா பலேத் கன்யா...’ 8 வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் நடத்த வேண்டும்... என்ற இந்த ஸ்மிருதி விதி, இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை நம் தேசத்தில் ரொம்ப சிரத்தையாக நடைமுறைப்படுத்தப் பட்டு வந்தது. அதாவது என்னுடைய இளம்பிராயங்களில் நான் இப்படிப்பட்ட பால்ய விவாஹங்களை நிறைய பார்த்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் கல்யாண மஹால்களில் பார்த்தால்... சின்னக் குழந்தைகள் ஓடியாடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காலத்திலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டுதான் இருப்பார்கள். என்ன?... ஒரே ஒரு வித்தியாசம்.

அந்த குழந்தைகளைப் போலவே உள்ள இரண்டு குழந்தைகள் தான் மண மேடையிலும் உட்கார்ந்திருப்பார்கள். இதுபோல எக்கச்சக்க பால்ய விவாஹங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போது தான்... இந்த பால்ய விவாஹத்தையெல்லாம் எதிர்த்து நிறைய போராட்டங்கள் கிளம்பின.

நம் தேசத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதிகளே... இந்த பால்ய விவாஹ முறையை கடுமையாக எதிர்த்தனர். ஏனென்றால்... பால்யத்திலேயே விவாஹம் செய்து வைத்து... சிலநேரம் அந்தப் பையன் மரணித்து விட்டால்... வாழ்க்கை முழுதும் அந்த சிறுமி விதவையாகவே வாழ வேண்டிய நிர்பந்தத்தை மநு ஸ்மிருதி ஏற்பாடு செய்து வைத்திருந்தது.

இந்தக் கொடுமையையும்... இதன் கொடுமையான விளைவுகளையும் புரிந்து கொண்ட பிரிட்டிஷ்காரர்கள் 1929-ல் சட்டம் கொண்டு வந்தார்கள். அதாவது... குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது. அப்படி செய்து வைத்தால்... தண்டனைதான், ஜெயில் தண்டனைதான்.

இப்போது மகாபெரியவரின் மீட்டிங்குக்கு வருவோம். இப்படியாக ஏற்கெனவே பிரிட்டிஷ் ஆட்சியில் மநு, வர்ணாஸ்ரம தர்மங்களை சற்று தலை தட்டி வைப்பது போன்ற சட்டங்கள் போடப்பட்டிருந்தன.

நம் தேசம் ஸ்வராஜ்யம் (சுதந்திரம்) அடைய இருந்த நேரத்தில்... பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Parliamentary deligation ஒன்று நமது தேசத்துக்கு வந்தது.

அதாவது... நமது தேஸத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பு அது பற்றிய விவாதங்கள் நடத்துவதற்காக... எப்படி கொடுக்கலாம் என்று முடிவு பண்ணுவதற்காக... பிரிட்டிஷ் பார்லிமெண்ட் உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று இங்கே வந்தது. அதுதான் Parliamentary deligation இந்த குழு வந்த காலகட்டத்தில்தான் அந்த ஆடுதுறை கூட்டம்.

“ஏற்கெனவே பால்ய விவாஹத்துக்கு தடை பண்ணிட்டா... இன்னும் என்னெல்லாம் நம்ம சம்ப்ரதாயத்து மேல அட்டாக் பண்ணப் போறாளோ... அதனால... இப்ப வந்திருக்குற அந்த டெலிகேஷன்கிட்ட... சனாதன வர்ணாஸ்ரம தர்மத்துக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு நாம சொல்லியாகணும்... என்ன சொல்றேள்?....”-என மகாபெரியவர் கேட்க...

சிஷ்யாளோ... ‘ஸ்வாமி... இப்படியெல்லாம் அவாளை கேட்கறது எங்களுக்கு என்னமோ உசிதமா படல. அவா செய்தா செய்யட்டும்... சில விஷயங்களை மாத்தறது நல்லதுதானே...’ என்றனர்.

ஆனால்... சங்கராச்சாரியார் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் வெளியே வந்தார். உட்கார்ந்திருந்த என்னிடம்... `தாத்தாச்சாரீ... நீரும் நானும் தான் மிச்சம்’ என்றார்.என்ன ஸ்வாமீ?... என்றேன்.

“நான் சொன்னதை யாரும் ஏத்துக்கல. ஆனா இதை விடக்கூடாது. நம் சம்ப்ரதாயத்தை காப்பாத்தணும். இதுக்காக அந்த பிரிட்டிஷ் டெலிகேஷனுக்கு மெமோரண்டம் கொடுக்கப் போறோம். அதுக்காக உம்மைதான் செலக்ட் பண்ணியிருக்கேன்...” என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை... `நீர் இதுக்காக டெல்லிவரை போக வேண்டியிருக்கும்...’ அதுக்கு முன்னால... டெலிகேஷனுக்கு நம் அபிப்பிராயத்தை தந்தி அடிக்கணும். அந்த ராத்திரி 11 மணிப்பொழுதில் தந்தி வாசகங்களை தயார் பண்ணினோம். ஒன்றா... இரண்டா?..

மடாதிபதிகள் ராஜபோகம் அனுபவிக்கிறார்கள்.ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை .மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள்,

ஒன்றா? இரண்டா? நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றால், ரொம்ப கஷ்டம். ஏனென்றால், பெரிய பெரிய நகரங்களில் தான் தந்தி ஆபீஸ் இருக்கும்.

ஒரு தந்தி என்றால் அடித்து விடலாம். நூறு தந்திகள். ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக் கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்பவேண்டும்.

`பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாது’ என்பதுதான் தந்தி வாசகம்.

இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம். 100 தந்திகள்... அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக் கொண்டார். நான் உதவி செய்தேன்.

தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த மகாபெரியவர், `நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும்... அதை நீர்தான் பண்ணணும்’ என்றார்.

அப்போது... `பார்லிமெண்ட் டெலிகேஷன்’ மெம்பர்கள் பத்திரிகைக் கார்யாலயங்களுக்கெல்லாம் விஜயம் செய்து... ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பல பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன.

அந்த வகையில்... சென்னைக்கு வந்தது பார்லிமெண்ட் டெலிகேஷன். அன்று தேஸத்தின் மிக முக்கிய பத்திரிகையான `தி ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது.இதையறிந்த மகாபெரியவர்... உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார்.

நானும் `ஹிண்டு’ பத்திரிகை ஆபீசுக்குப் போனேன்.அப்போது... `ஹிண்டு’வின் எடிட்டராக இருந்த சிறீ.கே. சீனிவாஸன் என்னை பார்லிமெண்டரி டெலிகேஷனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால் `இவர் மதாச்சாரியார்களின் பிரதிநிதி’ என்று.

டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரியாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம்.

நான் முதலில் 100 தந்தி விடயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். 'oh’ என ஞாபகப்படுத்திக் கொண்ட சோரன்சன்... ‘We meet tonight’ என்றார்.

அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சன்னை சந்தித்தேன். பத்து மணி ராத்திரிப் பொழுதில் எனக்கும், சோரன்சன்னுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன்.

சோரன்சன்: Welcome. What do you want?

நான்: We lives in India. But havings not any rights to follow our religion. We must need freedom to follow our “Dharma”. 

சோரன்சன்: Oh... it is very serious matter... give me a memorandam and meet me in Delhi என்றார். 

நான் உடனே கும்பகோணம் விரைந்து மகாபெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள் சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு... ``வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’’ என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம். டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம். அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன்... மெமோரண்டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்து விட்டோம். பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீடு, பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன்.

`வர்ணாசிரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தைப் பார்லிமெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். இதன் பிறகு... பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித்தோம். மெமோரண்டம் கொடுத்தோம்.

அவர்களோ ``உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’’ என சொல்லி விட்டார்கள்.

சரி... என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். அவர்... மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு... `` சனாதன மதத்தைப்பற்றியும் மடங்களைப்பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப் பணிக்கோ அவர்கள் முன்வரவில்லை.

முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்...’’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல்.

நான்... `பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரத தேசம் உருவாவதால் அவர்கள் பொதுப் பணிகளை நிறைவேற்றுவார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்... பட்டேல் ஒப்புக் கொள்ளவில்லை.

இதை மகாபெரியவரிடம் சொன்னபோது... `ஆமாம் இது முழுவதும் உண்மைதான்’ என்றார். அடுத்து பண்டிட் நேருஜியை பார்த்தேன்.

தொடரும்...

000000000000000000000000

நேருவின் கோபம்

இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்... இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ என கடுமையாகச் சொல்லிவிட்டார் நேரு.

மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா?

சனாதன மதானுஷ்டானங்களுக்கு இம்மிளவும் பாதிப்பு வரக்கூடாது. வர்ணாஸ்ரம வரையறைகள் மாறக்கூடாது என பட்டேலிடம் சங்கராச்சாரியாரின் விண்ணப்பத்தை கேட்கப்போய்...

‘மடாதிபதிகளை திருத்த முடியாது. அவர்களை நம்பி நீங்கள் வராதீர்கள்’ என கடுமையாகவே சொல்லி என்னை அனுப்பிவிட்டதைச் சொன்னேன். இதை சங்கராச்சாரியாரிடம் சொன்னபோது... ‘இதுவும் உண்மைதான்’ என ஒத்துக் கொண்டதையும் குறிப்பிட்டேன்.

இதன் பிறகுதான் பண்டிட் நேருஜியை இதே விண்ணப்பத்துடன் பார்க்கப் போனேன்.

அதற்கு முன்னதாக பல ஆச்சாரியார்களிடம் ஆலோசனை பண்ணி... லௌகீகர்கள் சிலரையும் சேர்த்துக் கொண்டு பிறகு பண்டிட் நேருஜியை பார்க்கப் போனேன்.

என்ன விஷயம்? என்றார் நேருஜி. நாங்கள் மெமோரண்டத்தின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்ததுமே... கொஞ்ச நேரம் கேட்டு விட்டுப் பிறகு மெமோரண்டத்தையும் பார்த்தார்.

உடனே... நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து “If you want to talk about religion, You should go to outside from this nation. We don’t allow speciality to any religion. Here all are equal...Dont’ talk me about religion... understand?” என்றார் ரோஜாவின் ராஜா. நான் அதிர்ந்து விட்டேன். அவர் என்ன சொன்னார் என்று புரிகிறதா?

“நீங்கள் மதத்தைப் பற்றி மதத்தின் தனியுரிமையைப் பற்றி பேச வேண்டுமென்றால் இங்கு... பேசாதீர்கள். இங்கு எந்த மதத்திற்கும் தனிப்பட்ட உரிமையோ, ஸ்பெஷாலிட்டியோ கிடையாது. எல்லா மதங்களும் சமம்தான். All are equal.

மீண்டும் நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்... இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ என கடுமையாகச் சொல்லிவிட்டார் நேரு.

இவ்வளவு நடந்தும் சங்கராச்சாரியார் அலட்டிக் கொள்ளவில்லை. மதத்துக்குத்தான் தனியுரிமை சிறப்புரிமை கிடைக்கவில்லை. மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா என்று பார்ப்போம் என சொல்லி களத்தில் இறங்கிவிட்டார்.

‘பட்டேல் சொன்ன மாதிரி மதங்களின் பிரதிநிதிகளான மடங்கள் மக்கள் சேவைக்கு வரவேண்டும். மடாதிபதிகள் ராஜபோகங்களில் துயில்கிறார்கள், மிதக்கிறார்கள் என்ற தத்துவத்தை தகர்க்க வேண்டும். அதனால் தேஸத்தின் எல்லா மடங்களையும் இதற்காக நாம் வலியுறுத்த வேண்டும். எனவே பாரதிய மடங்களின் சபையை நாம் கூட்ட வேண்டும்.

பாரதிய மடங்களின் சபையை கூட்டுவதற்கு முன்... அவரவர்கள் மடத்துக்குப் போய் ‘புது அரசியல் மூலம் ஸ்வதந்திர தேசமாகப் போகிறோம். இதுவரை இருந்த நிலை வேறு. இனிமேல் நான் இருக்கப் போகும் நிலை வேறு. ஆகவே நம் மடங்களுக்கும் ஜீவாதார உரிமை பெற முயற்சிக்க வேண்டும்’ என்று சொல்லச் சொன்னார். அதன்படி அகில பாரதிய மடங்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டச் சொன்னார்.

அதற்குப் பட்டபாடு அப்பப்பா...! இந்த மாநாட்டைக் கூட்ட குளித்தலை அண்ணாதுரை அய்யங்கார் என்ற உத்தமமான புருஷன் முன் வந்தார். இவர் சங்கராச்சாரியாரிடம் அபார பக்தி கொண்டவர். மடங்களைப் பார்த்து பேசுவதற்காக மோட்டார் காரில் திருச்சியில் இருந்து புறப்பட்டு உடுப்பி, அதைத் தொடர்ந்துள்ள சிருங்கேரி மடம் ஆகிய மடங்களை நேருக்கு நேராய் போய்ப் பார்த்து விஷயங்களை விக்ஞாபித்தோம். உடுப்பியில் மாத்வ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த 8 மடங்கள் உள்ளன. இவை தவிர உத்தராதி மடம், சோதன மடம். சுமுதிர்த்த மடம். மந்த்ராலய மடம் எல்லாரையும் சந்தித்தோம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் கடைசியில் உள்ள ‘சுப்ரமண்யம்’ என்ற மடத்துக்குப் போனோம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். சிருங்கேரி மடத்துக்குப் போன போது, மடாதிபதி நவராத்திரி உற்சவத்துக்கு வெளியே எழுந்தருளியிருந்தார். மாஜி ஜில்லா ஜட்ஜ் ஒருத்தர், இன்னொரு ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருத்தர் என முக்கியஸ்தர்களுடன் சிருங்கேரி மடாதிபதியை பார்த்தபோது...” பெரியவர் சுத்தமான தமிழில் பேசினார். பெரியவாளின் கர்மானுஷ்டத்துக்கு நேருக்கு நேராக உதவி செய்ய முடியாதே என்று சொல்லிவிட்டார்.

பின், அங்கிருந்து பாலேஹி என்னும் மடத்தின் மடாதிபதியை கடும் மழைக்கிடையே பார்த்து, மடங்களின் மாநாட்டுக்கு அழைத்தோம். சகடபுரம், அரிஹரப்பூர் மடங்களுக்கு அலைந்துவிட்டு ஷிமோகா வந்து சங்கமேஸ்வர மடாதிபதியையும் பார்த்தாச்சு. அப்படியே மைசூர் போய் வைஷ்ணவ மடமான பரக்கால மடத்தைப் பார்த்து விஷயத்தை விளக்கிவிட்டு கிழக்கு கர்நாடகாவில் வீர சைவ மடங்கள், வடக்கு கர்நாடகாவில் கோதே, தும்கூர் இப்படியாக பாரதம் முழுதும் சுற்றி பூரிஜெகன்னாத் போனோம்.

அங்குள்ள பல வைஷ்ணவ மடங்களின் பிரதான மடத்தின் தலைவரான கிரிதாரிதாஸ் ராமானுஜர், அவரது வித்வான் துர்பலாச்சாரி மூலம் பல மடங்களை பார்த்தோம் பின் அயோத்திக்குப் போனேன்.

அங்குள்ள மடங்களைப் பார்த்து புது அரசியல் சாசனத்தில் மடங்களுக்கு சுதந்திரம் வேண்டி மகா பெரியவர் எடுத்து வரும் முயற்சிகளை விளக்கினோம்.

பின்... இன்றைய பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சிந்து நகரத்தின் மடத்தையும் சென்றடைந்தோம். செட்டி நாட்டு குன்னக்குடி மடம், திருநெல்வேலி செங்கோல் மடம் முதல் சிந்து நகர மடம்வரை... எல்லோரும் நாங்கள் பார்த்தபோது எங்களுக்கு ஆட்சேபணையே தெரிவிக்கவில்லை சரி...டெல்லியில் மட மாநாடு நடந்ததா ??

0000000000000000000000000000000

பகுதி 100 – 1.

மத உரிமைகளுக்காக.. அவற்றை நிறைவேற்றுவதற்காக கன்னியாகுமரி முதல் கராச்சி வரை, அலைந்து... பல்வேறு மடங்களையும் நேரில் அடைந்து, மடாதிபதிகளையும் மாநாட்டுக்கு அழைத்த கஷ்டமான காரியத்தை விளக்கினேன். டெல்லியில் இந்துமகாசபை என்ற இடத்தில் மாநாடு நடந்தது. யார் யார் கலந்து கொண்டனர்?

கல், காடு, மலை, வெயில் என கடந்துபோய் நாங்கள் சந்தித்த பாரதத்தின் நூற்றுக்கணக்கான மடங்களிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை. கராச்சி சிந்துநகர மடப்ரதிநிதியை தவிர.

சின்ன வருத்தம்தான் அதற்காக என்ன செய்வது? பேருக்குக் கூடிய அந்த மாநாட்டில்.‘Freedom of religion and maintaining religious institutions...’ வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கலைந்தோம் எங்கே?

கலைவதற்குக்கூட ஆட்கள் இல்லை. இதன் பிறகும் சளைக்காமல் மடங்களுக்கான தனியுரிமை குறித்து... Parliament Bill கொண்டுவர ஏற்பாடு செய்தோம். புது பார்லிமென்ட் வந்த பிறகு அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஸ்வதந்த்ரம் பெற்று பாகிஸ்தான் - இந்தியா என தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவான நமது தேசத்தில் ‘All are equal... All religions are equal...’ என்று பிரகடனப்படுத்தப் பட்டது. அதாவது Secular State என அரசமைப்பு சாசனம் அறிவித்தது.அதாவது எத்தனை மதங்கள் எத்தனை தர்மங்களை பின்பற்றினாலும் இந்த தேசத்தின் பொதுதர்மம் All are equal என்பதுதான்.

நமது மதாசாரப்படி... தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் அரசனும் தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும். ஏன் பகவானே கூட தர்மத்துக்கு, தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக்கலாச்சாரம் கற்றுத்தருகிறது. இதனைத்தான் ‘தர்மவிகிக்ரமம்’ என்கிறோம்.

தொடரும்

00000000000000000000000000

பக்தையை சூறையாடிய விஷ்ணு

அதாவது தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான். யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை உண்டு. இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?

இந்த காட்சி நிகழும் இடம் இன்றைய பஞ்சாப் மாநிலத்தில் Jalandhar, Punjab ஜலந்தர் ஓர் இடம் கதையைப் படிக்கும் போதே அந்த ஊரின் பெயர்க்காரணம் உங்களுக்கு விளங்கும்.

அந்த ஊரில் ஜலந்தர்-பிருந்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இவர்களுடையே ஒரேயொரு விஷயத்தில் மட்டும் கருத்து வேறுபாடு என்ன விஷயத்தில் என்றால் கடவுள் விஷயத்தில்.

அப்படி என்ன கருத்து வேறுபாடு? பிருந்தா விஷ்ணுவை தவிர வேறு கடவுளே இல்லை என்னும் அளவுக்கு விஷ்ணு பக்தை. அவளது ஆம்படையான் ஜலந்தருக்கோ சிவன் மீது அபார நாட்டம்.

இந்த விசித்திரமான விஷயத்தை கேள்விப்பட்ட நாரதர், அந்த குடும்பத்தில் சிறிது விளையாடிப் பார்க்க நினைத்தார். ஒருநாள் ஜலந்தர் தனியாக இருக்கும் போது அவனை சந்தித்தார்.

என்ன ஜலந்தர்?... நீயோ சிவனை வழிபாடு செய்கிறாய். உன் மனைவியோ விஷ்ணுவை வழிபடுகிறாள். நீ பின்பற்றும் சிவபக்தியால் சிவனுடைய மனைவி பார்வதி தேவியையே நீ அடையலாமே... எதற்கு இந்த பிருந்தாவுடன் போராடிக் கொண்டிருக்கிறாய். இந்த பிருந்தாவை விட அந்த பார்வதி எவ்வளவு அழகு தெரியுமோ?... என ஜலந்தரின் மனதில் பற்றவைத்து விடுகிறார் நாரதர்.

உடனே ஜலந்தரும்... ‘நான் பார்வதி தேவியை அடைய முடியுமா?’...எப்படி? என கேட்கிறான். அதற்கு நாரதரே யோசனையும் கொடுக்கிறார். “சிவனுக்கு சாமவேதம் என்றால் உயிர். எங்கே சாமவேதம் ஒலித்தாலும் மயங்கி அந்தப் பக்கம் போய்விடுவார். நீ என்ன பண்ணு... சாமவேதம் பாராயணம் செய்பவர்களை பிடித்து நல்ல சத்தமாக சாமவேதம் ஒலிக்கச் செய்.

அதனைக் கேட்டு சிவபெருமான் மயங்கியிருக்கும் வேளையில் கைலாயத்துக்கு சென்று காரியத்தை முடித்துவிடு ” சிந்திக்கத் தெரியாத ஜடமாகிவிட்ட ஜலந்தரும் நாரதரின் கலக யோசனையை காது கொடுத்து கேட்ட பின், அப்படியே... சாமகானம் பாட ஏற்பாடு பண்ணினான்.

இதைக் கேட்டு சிவன் லயித்திருக்க... அவர் இல்லாத நேரமாய்ப் பார்த்து கைலாயத்துக்குள் காலடி எடுத்து வைத்தான். அங்கே பார்வதி தேவி தனிமை அழகில் தத்தளித்துக் கொண்டிருக்க, நாரதர் கொடுத்த யோசனைப்படி பார்வதியை போய் கட்டிப்பிடித்து விட்டான் ஜலந்தர்,

பார்வதி... தன் மேல் சிவன் அல்லாத ஒருவன் சில்மிஷம் செய்கிறான் என்பதை அறிந்து ‘ஸ்வாமீ’ என ஏழுகடல் கொந்தளிக்க கத்துகிறாள். கைலாயத்தில் இப்படி...

ஜலந்தரின் வீட்டுத்தோட்டத்தில்?... கணவனைக் காணாது மனைவி பிருந்தா தனித்துத் தவித்திருக்கிறாள். தனது பரம தெய்வமான விஷ்ணுவிடம் தன் கணவன் எங்கே என வேண்டுகிறாள்.

இதைப் பார்த்த விஷ்ணு... ‘நமது பக்தைக்கு நாம் ஏன் சந்தோஷம் தரக்கூடாது? தன் கணவனை காணோமே என பாவம் தேடிக்கொண்டிருக்கிறாள். நாமே ஜலந்தராக உருவெடுத்து அவளை மகிழ்ச்சிப்படுத்துவோம் என முடிவெடுத்து... கணவன் ஜலந்தர் போலவே உருவம் எடுத்து பிருந்தாவை நெருங்கினார் விஷ்ணு.

‘ஆஹா... என் கணவர் வந்துவிட்டார்’ என சந்தோஷம் பொங்கிய பிருந்தா... தன் கணவர் ரூபத்தில் வந்திருந்த விஷ்ணுவை கட்டிப்பிடித்துக் கொண்டாடினாள் இருவரும் தோட்டத்தில் ரொம்ப இஷ்டமாக இழைந்து கொண்டிருக்கும் நேரத்தில்...‘நெருக்கமாக இருக்கும் அவர்களுக்கு நெருக்கமாக வந்து பொத்’தென வந்து விழுந்தது ஒரு தலை. ரத்தம் கொட்ட கழுத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட அந்தத்தலை, ஜலந்தரின் தலை.

ஆமாம்... சாமவேதத்தில் சிவனை மயக்கிய ஜலந்தர்... பார்வதியை கட்டிப் பிடிக்க இதனால் பார்வதி ஏழுகடல் அதிர சத்தம் போட்டாள் இல்லையா?

வேதத்தின் மயக்கத்தை... பார்வதியின் கூக்குரல் கலைக்க, ஓடிப்போய் பார்த்தார் சிவன். தன் மனைவியை இன்னொருவன் பலாத்காரப்படுத்துவதா?... என ஜலந்தரின் தலையை சீவியெறிந்தார்.

அந்த ஜலந்தரின் தலைதான்... பிருந்தாவும் ஜலந்தர் போல் ரூபம் எடுத்து வந்த விஷ்ணுவும் இழைந்து கொண்டிருந்தபோது இடையில் வந்து விழுந்தது.

பார்த்தாள் பிருந்தா... உடலோடு விழுந்தவன் கணவனா? இல்லை தலைமட்டும் விழுந்தவன் கணவனா? சந்தேகம் அதிகரிக்க...அப்போது திடுக்கென உடலோடு கூடிய ஜலந்தர் மறைந்து விஷ்ணுவாகிறார். ‘நான்தான் பக்தையே...’ என அறிமுகம் கொடுக்கிறார்.

இதைக்கேட்டு பொங்கியெழுந்த பிருந்தா...’அடப்பாவி... பக்தையை இப்படி பண்ணிவிட்டாயே? என் கணவன் ரூபத்தில் வர நீ யார்? தவறு செய்துவிட்டாய். பகவானாக இருந்தாலும் தவறு தவறுதான். உனக்கு சாபமிடுகிறேன்.

கடவுளாக இருந்தாலும் நீ கல்லாய் போவாயாக’ பிருந்தாவின் சாபம்தான் பகவானை சாலக்ராமம் என்ற சிலையாக்கிவிட்டது என்பது புராணம்

அதாவது கடவுளே தர்மத்தை மீறி தவறு செய்திருந்தாலும் தண்டனை உண்டு என்பதுதான் இக்கதை சொல்லும் நீதி.

தொடரும்

0000000000000000000000000

பிராமணிசம் தேசதர்மத்துக்கு புறம்பானது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

மதமென்ற‌ பெயரால் அழியாதே.

மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பிராமணத்துவத்தை (இந்துதுவம்) பின்பற்றினால் அதில் சூத்திரர் , பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணத்துவம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.

இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகமரீதியாக இன்னமும் இது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So, according to constituion Bhraminism is antilaw. பிராமணிசத்தை பின்பற்றினால் அதில் சூத்திரர், பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணிசம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.

அதனால்... மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.நான் சொல்வது கொள்கை தத்துவத்தை ) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு மட்டும் அப்பாற்பட்டது.

அதனால் All are equal என்ற தர்மம்தான் இப்போது நம் மதத்தை காப்பாற்ற ஒரே வழி.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் ஹிந்து தர்மத்தைப் பற்றி பேசிப் புகழ் சேர்த்துவிட்டு... சென்னை வந்தபோது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

“இளைஞர்களே... இதை நினைவில் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மிகச் சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்லவேண்டும். ஆன்மிகச் சிந்தனைகள் என்று நான் கூறியது... உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர...நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல.

கண்ட கண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த மூடநம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகிவிடுங்கள் இது உங்களுக்கும் நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது...’ என்று மதராஸ் ராஜதானியில் பேசினார் விவேகானந்தர்.

இது ‘இளையபாரதமே எழுக’ என்று ராமகிருஷ்ணா மடம் விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகளை வெளியிட்டுள்ள புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதம் வகுத்த இயற்கை வழிபாட்டு நெறிமுறைகள் லோகசேமத்துக்கே

‘இந்தா பால் இதைக் குடித்து வளமோடு வாழு...’ என்கிறது வேதம். மதம் என்னும் கோப்பையில் நல்லபாலை ஊற்றி அருந்துங்கள்... லோக சேமம் பெறுங்கள்!.

முற்றும் .

நன்றி : http://thathachariyar.blogspot.fr/


Comments