தெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர் - பாகம் 23- பெற்றோர்களுக்கான 10 யோசனைகள்.







01 உண்மையை ஒப்புக் கொள்ளுவோம் :

அனேக பெற்றோர் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் என்று தெரிந்தும், அப்படியெல்லாம் இல்லை. என் பிள்ளைக்கு வெறும் ஹைப்பர்தான், லேர்னிங் டிசபிலிட்டி மட்டுந்தான் என்றெல்லாம் பிறரிடமும், தம் மனதுக்குமே கூட நிறுவ முயற்சிப்பது வேண்டாம்.

02 உரக்கச் சொல்வோம்:

நாமே முன்வந்து பிள்ளையின் குறைபாட்டை வெளிப்படையாக பேசுவது நல்லது. அக்கம் பக்கத்தவர் தொடங்கி, ரயில் ஸ்நேகம் வரை அனைவரிடமும் நம் பிள்ளைக்கு இருக்கும் வளர்ச்சிக் குறைபாட்டினை நாமே முன் வந்து சொல்லிவிடுவது சரியாக இருக்கும்.

3. அஞ்சிச் சுருங்காதிருப்போம்:

பிள்ளைக்கு இருக்கும் குறைபாட்டினை குறித்த தாழ்வுணர்ச்சியிலிருந்து நாம் வெளிவந்தால் மட்டுமே பொது இடங்களில் பிள்ளையின் செயல்பாடுகள் குறித்து அவமான உணர்வு அடையாதிருக்க முடியும்.


04 போராடத் தயாராவோம்:

இப்படி ஒரு நிலை வந்துவிட்டதேஎன்று மருகாமல் இருப்பது அவசியம். அதுபோலவே, அடுத்தவர்கள் நமக்காக பேச வேண்டும் என்று நினைக்காமல், பள்ளி தொடங்கி எல்லா இடத்திலும் நாமே நமக்காகப் பேச முயற்சிப்போம். இப்போராட்டங்களில் சக சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்களையும் ஒருங்கிணைக்க முயற்சி செய்வது என்பது சமூக மாற்றத்திற்கான குரலுக்கு வலு சேர்க்கும் என்பதை உணர்ந்துகொள்வோம்.

05 பகிர்ந்து கொள்வோம்:

நம் பிள்ளைக்கு நாம் கொடுத்துவரும் பயிற்சிகளின் வழி, நமக்கு பயனளிக்கும் ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும் மற்ற பெற்றோருக்கும் தயக்கமின்றி பகிர்வது நமக்கும் கூட நன்மையையே தரும். பிறரின் அனுபவங்களை நாமும் முயற்சித்துப்பார்க்கலாம்.


6. ஒப்பிடாதிருப்போம்:

இப்பிரச்சனை இங்கே கொஞ்சம் அதிகம் தான். ஆட்டிசநிலையின் தன்மை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். இதனை பல பெற்றோர் உணர்ந்துகொள்வதில்லை. அந்த பிள்ளை பேசுதே, இந்த பிள்ளை எழுதுகிறதே என ஓர் ஆட்டிசநிலைக்குழந்தையை தனது பிள்ளையோடு ஒப்பிடாமலிருப்பதும், இப்படி ஒப்பிட்டு தெரப்பிஸ்டிடம் போய் மல்லுகட்டாமலிருப்பது அவசியம்.

07 டைரி எழுதுவது:

டயட் தொடங்கி, பிள்ளைகளின் நடத்தைப் (பிகேவியர்) பிரச்சனைகள், நம்முடைய மன அழுத்தங்கள், குழந்தையின் முன்னேற்றங்கள் (ரொம்ப சிறு விஷயமா இருந்தாலும் கூட) முதலியவற்றை பதிந்து வைப்பது நமக்கும், மற்றவருக்கும் பயனுள்ளது.


8. சிறிய மனிதர்களை அங்கீகரித்தல்:

நம் பிள்ளைகளின் பள்ளி ஆயா, ஆட்டோக்காரர், சலூனில் குழந்தைக்கு முடி திருத்துவோர் போன்ற ஆட்களில் சிலரேனும் நம் குழந்தைகளை புரிந்து, அவர்களுக்கு மதிப்பளித்து சேவை செய்திருப்பர். அவர்களை வாய்ப்பு கிடைக்கையில் எல்லாம் பாராட்டவும், உதவவும் முயற்சியுங்கள். இவர்களின் ஆதரவும், அரவணைப்புமே நம் குழந்தைகளுக்கு அவசியம்.

09 பயணங்களுக்குத் தயங்காதீர்கள்:

பொதுவாகவே பயணம் என்பது எல்லா மனிதர்களுக்குமே மகிழ்வளிக்கக்கூடியதுதான். அதிலும் குறிப்பாக பல ஆட்டிச நிலையாளர்கள் பயணங்களை விரும்புகிறவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் நமக்குத்தான் இவர்களை வைத்துக் கொண்டு பயணிப்பது மலையைக் கெல்லுவது போன்ற முயற்சி. ஆனால் மலையைக் கெல்லி எலி பிடிப்பது போல் பலன் சிறியதல்ல; மாறாக, மலையைக் கெல்லி நதியை திருப்புவது போல் முயற்சியைப் போலவே பலனும் பெரிது. பயணங்களின் வழி புதிய புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேபோனால், அவர்களும் உள்வாங்கியபடியே இருப்பார்கள். பயணங்கள் வாயிலாக பெருகும் குழந்தைகளின் அறிதலும், மகிழ்ச்சியும் அலாதி.


10 அன்பின் எல்லைகளை விஸ்தரிப்போம்:

நிறைய ஆட்டிச நிலைச்சிறார்களின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை (குழந்தையின் நிலை பொறுத்து) சிறப்பு பள்ளிகளுக்கு அனுப்ப மறுப்பதின் காரணமே அங்கிருக்கும் பிற குழந்தைகளிடம் இருந்து எதையாவது கற்றுக்கொண்டு விடுவானோ என்ற அச்சம் தான் முக்கியமானதாக இருக்கிறது. அப்படிக்கற்றுக்கொள்ளக்கூடிய குழந்தையாக இருக்கும் பட்சத்தில் எளிதாக ஆட்டிச நிலையில் இருந்து அக்குழந்தை வெளியே வந்துவிடும் என்பதை உணரவேண்டும். மேலும் ஆட்டிசத்தினை விட மற்றவகை மனநலம் பாதிப்புள்ள குழந்தைகள் மோசம் என்று நினைக்காமல் இருப்பது அவசியம். நாம் மற்ற மனநலக் குறைபாடுள்ள குழந்தைகளிடம் காட்டும் இதே மனநிலையைத்தான் பிற குழந்தைகளின் பெற்றோர் நம்மிடமும் காட்டுகிறார்கள். அங்கே அந்த புறக்கணிப்பின் வலியை உணரும் நாமே, பிறிதொரு இடத்தில் பிள்ளைகளின் குறைபாட்டில் உயர்வு தாழ்வு காணலாகாது. அன்பின் எல்லைகளை விரிவடையச்செய்வோம். எல்லா சிறப்பியல்புக் குழந்தைகளிடமும் ஒரே மாதிரியான அன்பு செலுத்துவோம்.

0000000000000000000000000

நன்றி:- கட்டுரையில் இடம்பெற்ற படங்கள் : http:// pixabay . com தளத்தில் இருந்து எடுக்கப்பட்டவை.

நன்றி:- http://blog.balabharathi.net/?p=1608

Comments