காணாமல் போகும் குருவிகள் - தைலஞ்சிட்டுகள்-கட்டுரை.



பருவ மழையால் இந்தியாவே, குறிப்பாக நம் தமிழகம் தற்போது நனைந்து நடுங்குகிறது. தெருவெல்லாம் தண்ணீர் ஓட, குறுகிய உடலும் குடையுமாய் இல்லம் நோக்கி விரைகின்றனர். ஒழுகும் வீட்டையும், ஒடிந்து போன மரக்கிளைகளையும், அறுந்து விழுந்த மின்சார வயரின் மறு இணைப்புக்காக மின்வாரிய ஊழியரை வேண்டிய வண்ணம் சலிப்புடன் காத்திருக்கின்றனர்.

தாய்மார்கள் ஈரத்துணியைக் காய வைக்க முடியவில்லை என்ற கோரிக்கையில் துவங்கி இன்னும் ஏதேதோ பட்டியலிடுகின்றனர். மழையே காரணமாய் அமைந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்ற இனிய செய்தி தொடர் செய்தியாய் காதுகளுக்குள் பாயாதா என ஏங்கிய வண்ணம் குழந்தைகள்.

என்னைப்போல் வெகுசிலரே கொட்டும் மழையிலும், உடைந்து ஓடும் கண்மாய்க் கரையோரமும், கம்பீரமாய் நுங்கும் நுரையுமாய் வெளியேறும் மறுகா வாயிலிலும் கால்களை நனைத்தவாறு உள்ளோம். கூட்டமும், குடும்பமும் விநோதமாய் பார்க்கிறது...........

எங்களைப்போலவே புள்ளினங்களும் என் வீட்டுக் கூரை மீது மகிழ்வுடன் பறந்து போகின்றன. ஏதேதோ பெயர் தெரியாத செடி கொடிகள் மிக அழகாய் பூத்துக் குலுங்கின்றன.

தீபாவளி தினத்தன்று குன்னூர் பாலம் கீழே ஓடும் வைகை ஆற்றைப் பார்ப்பதற்குச் சென்றேன். நூற்றுக்கும் மேற்பட்ட தைலஞ்சிட்டுகள்.ஆனந்தமாய் பாட்டுப்பாடி நடனமாடி பறந்தவாறு இருந்தன. இது போல 4,5 கும்பல்களை என்னால் காண முடிந்தது. மழைக்கால குளிர் வேளையில் இதனைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு குருவிகளை நான் கண்டு பத்து வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது...!


ஆங்கிலத்தில் swallows என அழைக்கப்படும் இச்சிட்டுகள் பல பிராந்திய பெயர்களைச் சுமந்துள்ளன. தகைவில்லான், தலையில்லாக் குருவி, தம்பாடி என பல பெயர்கள் சூட்டி அழைக்கப்பட்ட இவ்வினம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளதாய் சிவப்பு எழுத்துக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குருவிகளைப்பற்றிய தகவல் சேமிப்புகளும், புத்தக வெளியீடுகளும் மிகக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றது.

1789ல் டாக்டர் கில்பர்ட் ஒயிட் இக்குருவிகள் தொடர்பாக ஆய்வு நடத்தி வெளியிட்ட கட்டுரையே இன்றளவும் ஆகச்சிறந்த குறிப்பாக பறவையியல் வல்லுநர்களால் வாசிக்கப்படுகிறது. இக்கட்டுரைத் தொகுப்பில் இவர் பல பறவைகள் ,சிறு பூச்சியினங்கள் குறித்தும் எழுதியுள்ளார். தகைவிலான் குருவிக்காக இவர் 21 பக்கங்களை ஒதுக்கியுள்ளார்.

உலகம் முழுதும் 89 உள் வகுப்பு இவ்வினத்தில் உண்டு. தென்னிந்தியாவில் மிக அதிக அளவு வாழ்ந்த இவை இளைப்பிற்கான மருந்து தயாரிக்க, குழந்தைகளின் நெஞ்சுச் சளி தீர்ப்பானாக பாவிக்கப்பட்டும், இதன் கறிக்காவும் கும்பல் கும்பலாக கொல்லப்பட்டுவிட்டன.

ஒரு நபர் இப்பறவைகள் வேட்டையில் 25 குருவிகளைக் கொல்லுவதை நானே பார்த்திருக்கிறேன். மிக வேகமாவும், வளைந்து நெளிந்து, மேல் கீழ் என, பறக்கும். அலைவரிசையை அடிக்கடி மாற்றிக் கொள்ளும். இப்பறவைகளைக் கொல்வதற்கு என்றே நேர்த்தியான கவை கொண்ட தேர்ச்சி பெற்ற கொலையாளிகள் காட்டிற்கு அனுப்பப்படுவர். 1970களில் தேவாரம் நகர் முழுதும் நிறைந்து காணப்பட்ட இவை இன்று முற்றிலும் அழிந்தே போனது.


கூட்டம் கூட்டமாக வாழும் தம்பாடிகளில் ஆணே தலைவனாக முன்னின்று ,அனைத்து செயல்பாடுகளையும் நடத்துகிறது. பெண் துணை புரிகிறது. இளம் வயதினர், கும்பலின் உறுப்பினர்களையும், சிறு உதவிகள் செய்பவராகவும் உள்ளனர். உணவிற்காக இக்கும்பல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும். ஆதலால் இடம்விட்டு இடம் பெயருதல் நடைபெறும். அப்போது குழுக்களுக்கு இடையே பெரும் போர் நிகழும். ஒரு குழு மற்றொரு குழுவால் விரட்டியடிக்கப்படும் வரை போர் நிகழும். தவிர பிற பறவைகள் இவைகளை வெகு எளிதில் வேட்டையாடும். குறிப்பாக கழுகு, ராஜாளி, வல்லூறு, சில சமயம் காக்கை போன்றவையும் மூர்க்கத்தோடு,இக்கும்பலைத் தாக்கி ,துவம்சம் செய்கின்றன. இவை உணவைப் பங்கிட்டு கொள்ளும் இயல்பு கொண்டவை. 

புழுக்களையும், பூச்சி,வண்டினங்களையும் தின்பதால் விவசாய சேதாரத்தை ஓரளவு குறைக்கின்றன. ஆனாலும் விவசாயிகள், வலை விரித்து பிடித்துக் கொல்லும் அவலம் இன்றும் நடந்தவாறு உள்ளது.

இதன் காதல் வாழ்க்கை ரொமாண்டிக்கானது. பெண்ணை மயக்க ஆண் பல உத்திகளைக் கையாள்கிறது. குறிப்பாக இக்குருவிகளின் சிறப்பே இவைகளின் நீண்ட இரட்டைவால் அமைப்புதான். ஆணிற்கு மிக நீண்ட வாலும், பெண்ணிற்கு சற்று குட்டையானதாகவும் இருக்கும். நீண்ட வாலைக் கொண்ட ஆணின் மீதே பெண் காமம் கொள்கிறது. இக்குருவிகள் பழுப்பு, கறுப்பு வண்ண இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் அவ்வப்போது அதைக் கோதி விட்டபடி நேர்த்தி செய்தவாறே இருக்கும். 

1 வருடத்திற்கு ஒரு ஜோடி என்ற விகிதாசார அமைப்புபடி சேர்ந்து வாழும். காமம் கொள்ளும் சமயங்களில் இவை அடிக்கடி பாரம்பரிய முறைப்படியே உறவு கொள்கின்றன. அப்போது பெண், தன் இரு கன்னக் கதுப்புகள் உப்பியவாறும், நெஞ்சின் முன்பாகம் லேசான வௌ்ளை அல்லது நீலநிறம் ,பளபளக்கும் பச்சை நிறம் படர மேலெழும்பி, தான் காமம் கொண்டிருப்பதை ஆணிற்கு சமிக்ஞை செய்யும். இதைப் புரிந்த ஆண் உறவுக்குத் தயாராகும். அப்போது அது, பலவித ஸ்வரங்களில் குரலெழுப்பி ,மேலும் கீழும் பறந்தவாறு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். இந்த தருணங்களில் மற்ற இளம் ஆண் பெண் பறவைகள் ,பிற பறவையினங்கள் இந்த ஜோடியைத் தாக்காதவாறு அரண் போல் நின்று காவல் செய்யும். இது இப்பறவைகளுக்கே உரித்தான சிறப்பு குணம் என்கிறார் கில்பர்ட்.


உறவுக்குப்பின் பெண் :

கருவுற்ற 18 நாட்களுக்குப்பின் 2 முதல் 5 முட்டைகளை இட, அவை பிற பறவைகளின் கூடுகளை,மரப்பொந்துகளைப் பயன்படுத்துகின்றன. ஆப்பிரிக்க தேசத்திலுள்ளவைகளில் ஆண், மண்ணால் குளவிகளைப் போல கூடமைத்து தருகிறது. ஐரோப்பிய தேசங்களில் நகர முனிசிபல் நிர்வாகம் இப்பறவைகளுக்கென செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட கூடுகளை,கம்பம் அமைத்து, நீள வாக்கில் கயிறுகளைக் கட்டித் தொங்க விடுகின்றன. இம்முட்டைகளின் மேல் சிவப்பு புள்ளிகள் இருக்கும். 21நாள் அடைகாத்தலுக்குப்பின் குஞ்சு பொரிகின்றன. அடைகாப்பு, குஞ்சுகளுக்கான உணவு வேட்டை போன்ற பணிகளை பெண்களே ஏற்று செய்கின்றன. இக்குருவிகள் அத்தகு காலங்களில் தண்ணீர் அருந்துவதில்லை. 

இதனை ஐசோடோப் சோதனை மூலம் கண்டறிந்தனர். ஒரு வருட பெற்றோரின் கவனிப்புக்குப் பின் குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியேறுகின்றன. இருப்பினும், அவை கொல்லப்படாமல் இருப்பின் சில வருடங்கள் வரை தங்கள் பெற்றோரைக் காண வருகை புரிகின்றன. தாங்கள் பருவம் எய்யும்போது,தங்கள் பெற்றோரின் கூட்டைக் கைப்பற்ற தயங்குவதில்லை.

எதிரிகளைத் தாக்குவதில் இவை ஒற்றுமையாகச் செயல்படுகின்றன. அப்போது சில தந்திரங்களைக் கையாளுகின்றன. கும்பலாக எதிரிகளைத் தாக்குவதும், முக்கோண வடிவில் வியூகம் வகுத்து மிக விரைவாக பறந்து வருவதும் இவைகளின் சிறப்பியல்பு.இப்பறவைகளின் பறக்கும் திறன் மிகச் சாதரண தருணங்களில் 30 கி.மீட்டரும், விரைவாகச் செயல்பட வேண்டிய தருணங்களில் 60கி.மீட்டராகவும் உள்ளன. பாம்பு, கீரி, பிற மாமிசம் உண்ணும் பறவை உயிரிகள் கூட்டில் உள்ள முட்டைகளை, குஞ்சுகளையே தாக்குகின்றன.


அரிஸ்டாட்டில், ஷேக்ஸ்பியர், ஜான் கீட்ஸ் போன்ற பேரிலக்கியவாதிகள் முதல் மருதகாசி, கண்ணதாசன், பாரதி என நம் தமிழ் பாடலாசிரியர்கள் வரை தங்கள் பாடல்களில் இக்குருவியைத் தூது விட்டவர்களாகவும், இதன் வட்டமைத்த இசையில் மயங்கியவர்களாகவும் உள்ளனர். எஸ்டோனியா நாடு தங்கள் தேசியப் பறவையாக இதனை மரியாதை செய்கிறது. 

ஐரோப்பிய தேசம் முழுதும் "தங்கள் பறவை"(our bird) என யாரேனும் அழைத்தால் அது இக்குருவியையே அழைக்கின்றனர் என்பதை நாம் அறிய வேண்டும். 

ஆனால் நம் மக்கள்......இக்குருவியை பற்றிப் பேசும்போது, இதன் "மாமிச சுவையின் அலாதி"க்குத் தான் மதிப்பளிப்பதை இன்றும் கைவிடவில்லை.......?

கட்டுரை : எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா.

நன்றி : http://www.kadaitheru.blogspot.ug/2015/10/blog-post_31.html

Comments

Post a Comment