நிலக்கிளி - அ .பாலமனோகரன் -இலங்கை - தொடர்நாவல் ( 11- 21 )





வெளியே முற்றத்தில் கோணாமலையர், கரடியர், மம்மதுக் காக்கா மற்றும் உமாபதியின் ஒன்றுவிட்ட சகோதரர் சிவசம்பு முதலியோர் கூடியிருந்து பேசிக்கொண்டிருந்தனர். பலதையும் சுற்றிச் சுழன்ற பேச்சு கடைசியில் பதஞ்சலியில் வந்து நின்றது.

அவளைக் கூட்டிக்கொண்டு போய் ஒரு கலியாணம் முடிச்சு வைச்சிட்டியளே எண்டால் உங்கடை கடமையும் முடிஞ்சுபோடும்!'. மலையர் உமாபதியின் தம்பி சிவசம்புவைப் பார்த்துக் கூறினார். அதற்குப் பதில் எதுவும் கூறாமலே சிவசம்பு வெளியே தெரிந்த இருளைப் பார்த்துக் கொண்டிருந்தார். 'என்ன ஒண்டும் பறையாமல் இருக்கிறியள்?' என்று மலையர் மீண்டும் கேட்டதும், 'அவரு என்னத்தை மலையர் பறையிறது? அவருதானே இந்தப் புள்ளையைக் கூட்டிக்கின்னு போவணும்! ஆனா அவரு... தம் பொண்டாட்டி என்ன சொல்லுவாவோ எண்டுதான் யோசிக்கிறாப்போலை கிடக்கு!'. மம்மது காக்கா வெற்றிலை பாக்கை உள்ளங்கையில் வைத்துப் பெருவிரலால் கசக்கிவாறே கூறினார். 'எட! நல்ல கதை சொன்னாய் மம்மது! மனிசிக்காறி வேண்டாம் எண்டாப்போலை அவளை இந்தக் காட்டுக்கை விட்டிட்டுப் போறதே!' சிறிது சூடேறிய குரலில் கேட்டார் கோணாமலையர். சிவசம்பு உடனே, அதுக்கில்லை கோணாமலையண்ணை, என்ரை பொண்சாதிக்கும் நான் பொட்டையைக் கூட்டிக்கொண்டு போறது விருப்பந்தான், ஆனா, இவளுக்கு நான் எங்கை மாப்பிளை தேடுறது? இவளை ஆர் முன்னுக்கு வந்து முடிக்கப் போறாங்கள்?.... உங்களுக்கு விசயமெல்லாமம் தெரியுந்தானே!' என இழுத்தவாறே கூறினார். 'அதுக்கென்ன செய்யிறது? இதென்ன ஊர் உலகத்திலை இண்டைக்கு நடக்காத விசயமே!' என்று மலையர் சொல்லவும், கரடியர் ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்தார். கரடியர் யாழ்ப்பாணத்திலிருந்து உத்தியோகம் பார்க்கத் தண்ணிமுறிப்புக்கு வந்தவர். அவருக்கு உமாபதியாரின் குடும்ப விஷயம் எதுவும் தெரியாது. அவருடைய சந்தேகத்தைக் கவனித்த மலையர், குரலைத் தணித்துக்கொண்டு, 'காடியரையா! உமாபதியின்ரை மோள் முத்தம்மாவுக்குத்தான் இந்தப் பொட்டை பிறந்தது.... ஆனல் தேப்பன் ஆரெண்டு தெரியாது' என்று கூறி, 'இதுதான் விசயம்!' என முடித்தார்.

கதிராமனுக்கு இந்தச் செய்தி புதுமையாக இருந்தது. இருபத்திமூன்று வயதைக் கடந்துவிட்ட அவன் இப்போ ஒரு சின்னப் பையன் அல்ல. வாழ்க்கையில் தெரியவேண்டிய விஷயங்கள் சில, எல்லோருக்குமே அந்தந்த வயதில்; எப்படியோ தெரியத்தான் செய்கின்றன. ஆனால் பதஞ்சலியின் தந்தை யாரென்று தெரியாத காரணத்தால் அவளை ஒருவரும் மணக்க முன்வரமாட்டார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. காட்டிலே வளர்ந்த அவனுக்குத் தெரியவேண்டியவை தெரிந்திருந்தாலும், தெரியக்கூடாத சில நாகரீகங்கள் இன்னமும் தெரியாமலேதான் இருந்தன. அவன் மெல்லத் திரும்பிக் குடிசையைக் கவனித்தான். பதஞ்சலி எந்தவித உணர்வுமின்றிப் பாயில் படுத்திருந்ததைக் கண்டதும், தன் தந்தை கூறிய அந்த விஷயம் அவளுக்குக் கேட்கவில்லை என்பது தெரிந்தது.

அன்று முழுவதும் கதிராமனும் ஒன்றுமே சாப்பிடவில்லை. இரண்டொரு தடவை தேநீர் மட்டுமே குடித்திருந்தான். அவ்வளவுதான்! பதஞ்சலியின் அனாதரவான நிலையும், அவளுடைய சிறிய தகப்பன் அவளை அழைத்துச் செல்ல மனதில்லாதிருப்பதையும் கண்ட கதிராமனுக்குச் சாப்பிடவே மனம் வரவில்லை. எனவே அவன் ஒன்றும் பேசாமல் குசினிக்குள் வந்து, மடிக்குள் வைத்திருந்த புகையிலையை எடுத்துச் சுருட்டு ஒன்றைச் சுற்றத் தொடங்கினான். சிறியதொரு சுருட்டைச் சுற்றி அதை நெருப்புக் கொள்ளியால் பற்ற வைத்துக் கொண்டவன், 'எனக்கும் கொஞ்சம் தேத்தண்ணி தாணை' என்று கேட்டான். அவன் எப்போதுமே அதிகமாகப் பேசாதவன். தான் எண்ணியதையே செய்வான். எனவேதான் பாலியார் அவனை மீண்டும் சாப்பிட வற்புறுத்தாமல் தேநீரை ஆற்றிக் கொடுத்தாள்.

அதேசமயம் பதஞ்சலியும் கதிராமனுடைய குரலைக் கேட்டு எழுந்து குசினிக்குள் வந்தாள். பெருமழையில் அகப்பட்ட செங்கீரைக் கன்றுபோல் அவள் கசங்கிக் காணப்பட்டாள். அடுப்படியில் பாலியாரின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அவள் கொடுத்த தேநீரை மெல்ல மெல்லக் குடிக்கத் தொடங்கினாள். இடையிடையே தன் அகன்ற விழிகளால் கதிராமனுடைய முகத்தை அளந்தவள், பாலியாரை நோக்கி, 'சிவசம்பர் என்னைக் கூட்டிக்கொண்டு போகவே வந்தவர் அம்மா?' என்று கரகரத்த குரலில் கேட்டாள். 'அப்பிடியெண்டுதான் புள்ளை கதைச்சினம். நீ அவரோடைதானே மோனை போகோணும்!' என்று பாலியார் பதில் கூறியபோது ஒருசில நிடங்கள் மௌனமாக இருந்த பதஞ்சலி, 'எங்கடை சொந்தக்காறரோடை போய் இருக்கிறதிலும் பாக்க எங்கையாவது ஆத்திலை குளத்திலை விழுந்து செத்துப் போறது நல்லது!' என்று குரல் தழுதழுக்கக் கூறினாள்.

அதன்பின்பு அங்கு ஒருவருமே பேசவில்லை. அவளுடைய அந்த வார்த்தைகள் அந்தச் சின்னக் குசினிக்குள் தங்கி நின்று மீண்டும் மீண்டும் ஒலிப்பதுபோல் கதிராமனுக்குத் தோன்றியது. அவன் வெளியே இருளை ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு தடவையும் அவன் வாயில் சுருட்டை வைத்து இழுக்கவும், அதன் தணல் பிரகாசமாக ஒளிர்ந்தது. அமைதியாக இருந்து இருளை வெறித்து நோக்கிய கதிராமனையும், தலையைக் குனிந்தவாறே அமர்ந்திருந்த பதஞ்சலியையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுத் தேநீரைக் குடித்தாள் பாலியார்.

கதிராமன் தங்களுடைய வீட்டுக்குச் சென்று குசினித் திண்ணையில் மான்தோலைப் போட்டுக்கொண்டு படுத்தான். அவனுக்கு நித்திரையே வரவில்லை. அமைதி நிறைந்த அந்த இரவில் காட்டிலிருந்து பழக்கமான பலவித ஓசைகள் கேட்டுக்கொண்டிருந்தன. சில்வண்டுகளின் இடையறாத ரீங்காரம். இடையிடையே மான்கள் குய்யிடும் ஒலி! இவற்றினிடையே இரவு முழுவதும் ஒற்றையாய்க் கூவிக்கொண்டிருந்த இராக்குருவியின் ஓசை, சோகம் நிறைந்ததாக அவனுடைய நெஞ்சை உருக்கியது. அதை அவன் வெகுநேரம் கேட்டுக் கொண்டேயிருந்தான். காட்டில் வாழும் விலங்குகளும், பறவைகளும் தத்தம் இனத்துடன் கூடி வாழும்போது, பதஞ்சலியை மட்டும் ஏன் அவளுடைய இனத்தவர்கள் சேர்த்துக்கொள்ள மறுக்கின்றார்கள் என அவன் சிந்தித்தான். தான் அவளை முரலிப்பழத்திற்குக் கூட்டிச் சென்றதையும், பின்னொரு நாள் அவள் துடுக்குத்தனமாகப் பரிசொன்று கேட்டதற்குத் தான் தேன் தறித்துக் கொடுத்ததையும், உமாபதியரின் சடலத்தைத் தூக்கிப் பாடைக்குள் வைக்கும்போது அவள் குலுங்கிக் குலுங்கி அழுததையும் எண்ணிக்கொண்டே அவன் உறங்கிப் போனான்.

பாலியாரின் அணைப்பில் படுத்திருந்த பதஞ்சலியின் விழிகள் இருட்டிலும் திறந்திருந்தன. அவள் தண்ணிமுறிப்புக்கு வந்த நாட்தொட்டு இன்பமாய்க் கழிந்த நாட்களையும், அவற்றின் இனிமையையும் நினைத்துக் கொண்டாள். தண்ணீருற்றில் இருக்கும் தன்னுடைய உறவினர்களை எண்ணுகையில் அவர்கள் தங்கள் வீட்டுக்கு வந்துபோகாமல் இருந்ததும், தன்னையும்ää உமாபதியாரையும் ஒதுக்கி நடத்தியதும் அவள் நினைவுக்கு வந்தன. அவள் பாடசாலைக்குச் சென்ற நாட்களில், ஒருநாள் யாருடைய புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டாள் என்பதற்காக இவளை, மற்றச் சிறுமி எதுவோ சொல்லி ஏசியதும், மற்றப் பிள்ளைகளெல்லாம் கைகொட்டிச் சிரித்துக் கேலி செய்ய, தான் அழுதுகொண்டே உமாபதியிடம் வந்ததும், அவர், 'நீ இந்தச் சனியன் புடிச்ச ஊரிலை இருக்கக்கூடாதம்மா! கொம்மாவைக் கொண்டதுபோலை இவங்கள் உன்னையும் கொல்லிப் போடுவாங்கள்!' என்று ஆத்திரத்துடன் பேசிவிட்டு மறுநாளே தன்னைத் தண்ணிமுறிப்புக்குக் கூட்டிவந்ததும், மங்கலாக நினைவில் தெரிந்தன. தண்ணிமுறிப்பில் முதலில் அவளைக் கண்ட பாலியார், வாஞ்சையுடன் அவளைக் கூட்டிச்சென்று தேனும், தயிருமாகச் சோறிட்டதையும் அவள் நினைத்துக் கொண்டாள்.

பாலியாரைப்பற்றி எண்ணுகையில் அவளுடைய நெஞ்சில் பாசம் பெருக்கெடுத்தது. நெஞ்சு விம்மியது. பதஞ்சலி இன்னும் நெருக்கமாகப் பாலியாருடன் அணைந்து ஒண்டிக்கொண்டாள். நாள்முழுவதும் பல வேலைகளைச் செய்த அலுப்பில் தூங்கிப்போன பாலியார், அந்த நித்திரையிலுங்கூட, 'அழாதையம்மா!' என்றவாறே பதஞ்சலியை அணைத்துக் கொண்டாள். அந்த அரவணைப்பில் மகளேயில்லாத ஒரு தாயும், தாயே இல்லாத ஒரு மகளும் பரஸ்பரம் நிம்மதியைக் கண்டவர்களாக உறங்கிப் போனார்கள்.

வளரும் 

00000000000000000000000000

நிக்கிலளி: அத்தியாயம் - 12

பொழுது விடிவதற்கு முன்பாகவே பாலியார் எழுந்து பதஞ்சலியையும் எழுப்பிவிட்டுத் தன் வீட்டுக் காரியங்களைக் கவனிக்கப் புறப்பட்டு விட்டாள். அந்த வைகறைப் பொழுதிலேயே கதிராமன் பல் துலக்கியவாறு வாய்க்கால் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தான். பாலியார் அவனைச் சமீபித்ததும் 'இஞ்சை நில்லணை ஒரு கதை' என்றவன் தொடர்ந்து 'பதஞ்சலியை சிவசம்பர் கூட்டிக்கொண்டுபோற எண்ணத்தைக் காணேல்லை. அப்பிடி அவர் கேட்டாலும் இவள் கூடிக்கொண்டு போவாள் எண்டு நான் நினைக்கேல்லை' என அமைதியாகக் கூறி நிறுத்தினான். பாலியாருக்குத் தன் மகனின் மனதில் உள்ளதும் அவன் என்ன சொல்லப் போகின்றான் என்பதும் நன்கு விளங்கின. இருப்பினும் அவள் எதுவும் பேசாது அவனுடைய முகத்தைப் பார்த்தாள். 'நீ என்ன நினைக்கிறாய்' எனக் கதிராமன் தாயைக் கேட்டபோது, 'கொப்பு என்ன சொல்லுறார் எண்டு தெரியாது மோனை! எதுக்கும் நான் அவருக்குச் சொல்லிப் பாக்கிறன்' என்று கூறிவிட்டு, அவள் தன்னுடைய அலுவல்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். அவள் பதில் கூறிய தோரணையில் பதஞ்சலியைத் தங்கள் வீட்டுக்குக் கூட்டிவரத் தாய்க்கும் விருப்பமிருக்கிறது தெரிந்தது. ஆனால் மலையர்தான் இதையிட்டு என்ன சொல்வாரோ என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை. 'முதலில் அம்மா கேக்கட்டும், பிறகு பாப்பம்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் நெஞ்சில், ஒருவேளை பதஞ்சலி எல்லோருடைய வற்புறுத்தல்களுக்கும் இணங்கி, சிவசம்பருடன் இன்றே போய்விடுவாளோ என்று ஒரு இனம்புரியாத ஏக்கமும் பிறந்தது. ஆனால் கடந்த இரவு அவள் கூறிய வார்த்தைகளை மறுபடியும் நினைத்துப் பார்க்கையில், என்னதான் நடந்தாலும் அவள் தண்ணீருற்றுக்குப் போகவே மாட்டாள் என அவனுடைய மனம் ஆறுதல் பட்டுக்கொண்டது. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் இங்கு நடக்கும்போது நான் இங்கிருக்கக் கூடாது என நினைத்துக் கொண்டவனாய் அன்றைக்குக் காட்டுக்குச் செல்வதற்குத் தன்னைத் தயார்ப் படுத்திக் கொண்டான்.

காலையில் பல அலுவல்களையும், ஓடியோடிச் செய்து கொண்டிருந்த பாலியாரின் நெஞ்சில், கதிராமன் கூறிய விஷயந்தான் மேலோங்கி நின்றது. நல்தொரு சமயமாகப் பார்த்துக் கணவனிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தவளுக்கு மலையரை எண்ணியதும் வயிற்றில் புளியைக் கரைத்தது. எந்த நேரம் எதைச் சொல்வார், எதைச் செய்வார் என்று அவரைப்பற்றி நிச்சயமாகக் கூறமுடியாது. இவ்வளவு காலத் தாம்பத்ய வாழ்க்கையிலும் அவளால் அவரைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் புரிந்துகொள்ளவும் முயற்சிக்கவில்லை. கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதும், நாளாந்தக் கருமங்களில் ஈடுபடுவதுமாக இருந்த அவளுக்கு, தனக்கொரு மகளில்லை என்ற கவலையைத் தவிர வேறு பிரச்சனைகளே இருந்ததில்லை. பதஞ்சலி தண்ணிமுறிப்புக்கு வந்தபின் அதுவும் நீங்கிவிட்டிருந்தது. இப்போதுதான் அவளுக்கென்று ஒரு ஆசை பிறந்திருந்தது. ஆனால் தன் கணவன் என்ன சொல்வாரோ என உள்ளுரப் பயந்துகொண்டே இருந்தாள் பாலியார்.

வேலைகளை முடித்துக்கொண்டு பதஞ்சலியின் வீட்டுக்குப் பாலியார் சென்றபோது, அங்கு சிவசம்பர், மம்மதுக் காக்கா, மலையர் முதலியோர் அமர்ந்திருக்க, பதஞ்சலி வீடுவாசலைப் பெருக்கிவிட்டு, அடுப்பைப் பற்றவைத்துக் கொண்டிருந்தாள். மனைவியைக் கண்ட மலையர், 'கெதியிலை பொட்டையை வெளிக்கிடச் சொல்லன்! சிவசம்புவோடை கூடிக்கொண்டு போகட்டும்!' என்று கூறிவிட்டு, சிவசம்பரைப் பார்த்து, 'என்ன? வண்டிலைப் பூட்டச் சொல்லட்டே?,' என்று கேட்டார்.

இதற்குள் குசினிக்குள்ளிருந்து வெளியே வந்த பதஞ்சலிää 'நான் ஒருதரோடும் போகேல்லையம்மா, இஞ்சை இந்த வளவிலைதான் இருக்கப் போறன்' எனக் கண்கள் கலங்கக் கூறினாள். 'நல்ல விளயாட்டு! ஒரு குமர் தனியச் சீவிக்கிறதெண்டால் முடிஞ்ச காரியமே? விசர்க் கதையை விட்டிட்டு வெளிக்கிடு புள்ளை!' என்று மலையர் கூறவும், பதஞ்சலி விக்கி விக்கி அழத்தொடங்கி விட்டாள். சிவசம்பரும் இதுதான் தருணமென, 'எனக்கு அப்பவே இவளைக் கூட்டிக்கொண்டு போக மனமில்லை. வரமாட்டன் எண்டு நாண்டுகொண்டு நிக்கிறவளை நான் என்னண்டு கூட்டிக்கொண்டு போறது? எல்லாம் உன்னாலை வந்த கரைச்சல்! வரமாட்டன் எண்ட என்னை இழுத்துக்கொண்டு வந்திட்டாய்!' என மம்மதுக் காக்காவைக் காரசாரமாக ஏசியவாறே சிவசம்பர் படலையைத் திறந்துகொண்டு குமுளமுனையை நோக்கி வேகமாக நடந்தார்.

மம்மதுக் காக்காவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மலையர் தெருவில் கோபமாகச் செல்லும் சிவசம்புவையும்ää குடிசைத் திண்ணையில் இருந்து அழும் பதஞ்சலியையும் பார்த்தார். பின் எழுந்து நின்றுகொண்டே தன் மனைவியைப் பார்த்துää 'நீதான் இந்தப் பொட்டைக்கு நல்ல புத்தியைச் சொல்லு! நாங்களெண்டாலும் இவளை நாளைக்குக் கூட்டிக்கொண்டு போய்த் தண்ணியூத்திலை விட்டிட்டு வருவம்' எனக் கூறிவிட்டு, 'நீயும் போய் சிவசம்பனுக்குச் சொல்லு. இரண்டொரு நாள் கழிச்சுக் கூட்டிக்கொண்டு வாறமெண்டு!' என மலையர் மம்மதுவுக்கு நிதானமாகக் கூறிவிட்டுத் தன் வளவை நோக்கி நடந்தார். மம்மது காக்காவும் தன்னுடைய சைக்கிளை எடுத்துக்கொண்டு குமுளமுனையை நோக்கிச் செல்லும் அந்தச் செம்மண் பாதையில் இறங்கினார்.

உமாபதி இறந்தபோது பதஞ்சலி அவரின் பிரிவைத் தாங்கமுடியாது குழறி அழுதாளேயொழியத் தன்னுடைய எதிர்காலம் என்ன? தான் இனி என்ன செய்யப் போகின்றேன்? என்பனவற்றையிட்டு அவள் அவ்வளவு ஆழமாகச் சிந்திக்கவில்லை. ஆனால் அந்தப் பிரச்சனை தற்போது உடனே பதில்காண வேண்டியதொரு வினாவாக இருக்கவே அவள் மனங் குழம்பிப் போனாள். அவளுக்குத் தன் இனத்தவர்களுடன் போய்த் தங்குவதை எண்ணிப் பார்க்கக்கூட வெறுப்பாக இருந்தது. இந்தச் சின்னக் குடிசையிலேயே தான் வாழ்ந்தால்தான் என்ன? பாலியாரின் துணை அவளுக்கு என்றும் இருக்குமல்லவா? என்றெல்லாம் குழந்தைத்தனமாக எண்ணினாள். மெல்ல மெல்ல அந்தக் குழந்தைத்தனமான நினைவே, ஆதாரம் எதுவுமில்லாமல் தத்தளித்த அவளுக்கு, ஆரம்பத்தில் ஒரு சிறிய பற்றுக்கோடாகிப் பின்னர் அதுவே அவளுடைய தீர்க்கமான முடிவாயும் போயிற்று.

பாலியாரின் நிலையோ பெரிய சங்கடத்துக்கு உள்ளாகிவிட்டது. பதஞ்சலியைத் தன் மருமகளாக்கித் தன்னுடனேயே வைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசை அவளுக்கு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ஆனால் இந்த ஆசை நிறைவேறுவதற்கு மலையரின் சம்மதம் கிடைக்குமோ என்பது பெரும் சந்தேகமாக இருந்தது. எனவே அவள் தன்னுடைய ஆசையை மனதுள் மூடிவைத்துக்கொண்டு, வயதான ஒரு தாய், இளம் பெண்ணொருத்திக்குச் சொல்லவேண்டிய புத்திமதிகளைப் பதஞ்சலிக்குக் கூறிக்கொண்டிருந்தாள். 'ஒரு குமர்ப்பெண்ää ஒருதற்றை துணையுமில்லாமல் தனிய இந்தக் காட்டுக்கை சீவிக்க முடியாதம்மா! நீ இப்போதைக்குக் கொஞ்ச நாளைக்கெண்டாலும் உன்ரை ஆக்களோடை இருக்கிறதுதான் மோனை நல்லது!' என அன்பொழுக அவள் சொன்னபோதுää 'என்ரை ஆக்களெண்டு ஆரம்மா எனக்கு இருக்கினம்? இஞ்சை இந்த வளவுக்கை நிக்கிற வாழையளும், பயிர் கொடியளுந்தானம்மா எனக்கு இப்ப சொந்தக்காறர்! நான் இஞ்சை இருக்காமல் வேறை எங்கையம்மா போவன்?' எனக் கல்லுங் கனியப் பதஞ்சலி கேட்டபோது, பாலியாருக்குக் கரகரவெனக் கண்ணில் நீர் வந்துவிட்டது. வாழ்க்கை அனுபவத்தை நிறையப் பெற்றிருந்த பாலியார், 'அதுசரி மோனை! நீ உன்ரை வயித்துப்பாட்டுக்கு என்ன செய்வாய்?' என்று பிரச்சனையைக் கிளப்பினாள். இதைக் கேட்ட பதஞ்சலியின் முகத்தில் தானாகவே ஒரு துணிவும், கம்பீரமும் ஏற்பட்டன. 'எங்கடை இந்த வளவுத் தோட்டம் என்ரை தேவைக்குக் காணும்! அதோடை களை புடுங்கவும், அருவி வெட்டவும் எனக்குத் தெரியதெண்டு நினைச்சியளே?'. பதஞ்சலி வீராப்புடன் பேசினாள். உண்மையிலேயே பதஞ்சலி இந்த வேலைகளிலெல்லாம் கெட்டிக்காரிதான். அவள் கைதொட்டது துலங்கும். அறுவடைக்கு வயலில் இறங்கினால் ஆண்களுக்குச் சமமாகவே அறுத்துக் குவிப்பாள். உமாபதியர் அவளை இந்த வேலைகளைச் செய்ய விடுவதில்லை அல்லாது அவளுக்கு இந்த வேலைகள் தெரியாது என்றல்ல. இது பாலியாருக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் தெரிந்த விஷயம்.

இவ்வாறே பாலியார் ஒவ்வொரு காரணத்தைக் கூற, பதஞ்சலி அதற்கு நியாயங்கள் காட்டித் தன் கட்சியைப் பலப்படுத்திக் கொண்டே வந்தாள். பாலியாருடைய மனதில், பதஞ்சலி தண்ணீருற்றுக்குப் போகவேண்டுமென்ற எண்ணம் திண்ணமாக இல்லாததால், அவள் பதஞ்சலியிடம் தோற்றுப்போனாள். ஆனால் அவள் இப்போதுங்கூடப் பதஞ்சலியிடம் 'நீ எங்கடை வீட்டிலை வந்திரு மோனை! என்று அழைக்கவில்லை. அவளுக்கு உண்மையிலேயே அந்த விருப்பம் இருந்தும், மலையர் என்ன சொல்வாரோ என்ற அச்சத்தில் அவள் அப்படிக் கேட்கவில்லை. மானஸ்தனான உமாபதி வளர்த்த பெண்ணாகையால், பதஞ்சலியும் தன்னுடைய குடிசையில் வாழவேண்டுமென்று நிளைத்தாளே அன்றி, வேறெங்கும் ஆதரவு தேடிப்போகும் எண்ணமே அவளுடைய இளநெஞ்சில் ஏற்படவில்லை. அவளுடைய முடிவை மாற்ற முடியாதெனக் கண்ட பாலியார், உண்மையில் மனதுக்குள் மகிழ்ச்சி நிறைந்தவளாகத்தான் தன்னுடைய வீட்டுக்குப் புறப்பட்டாள்.

இந்நேரம் தண்ணிமுறிப்புக் காட்டில் வெகுதூரம் சென்றுவிட்ட கதிராமன், என்றுமில்லாத வேகத்துடன் செடிகளையும்ää கொடிகளையும் விலக்கியவாறே காடேறிக் கொண்டிருந்தான். அவனுடைய நாய்கள் இரண்டும் மோப்பம் பிடித்தவாறே காடுலாவிச் செனறுகொண்டிருந்தன.

திடீரென்ற நாய்களின் குரைப்பும், ஏதோவொரு மிருகத்தை அவை பிடித்துவிட்ட அமளியும் கேட்கவே, கதிராமன் அந்தத் திக்கை நோக்கிக் கோடரியுடன் ஓடினான். அங்கே அவன் வழக்கத்துக்கு மாறான புதியதொரு காட்சியைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனான்.

வழக்கத்தில் மான்கள், நாய்கள் வருவதை அறிந்ததும் புகையென மறைந்துவிடும்! ஆனால் இன்றோ ஒரு பெண்மான் ஓட முயற்சிக்காமல், தன் முன்னங்கால்களை மடித்துக் கூர்மையான குளம்புகளால் நாய்களை எதிர்த்துக்கொண்டு நின்றது!

காட்டிலே கரடிகளைக்கூட மடக்கிவிடும் அந்த வேட்டை நாய்களுக்கு இந்தப் பெட்டைமான் எந்த மூலைக்கு? அவனைக் கண்டதும் அவை மீண்டும் ஆவேசத்துடன் மானின்மீது பாய்ந்தன. ஒன்று அதன் கழுத்தைக் கடித்துக் குதற, மற்றது அதன் பின்னங்கால் தொடையைக் கவ்விக் கிழித்தது. இரண்டு நாய்களினதும் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட மானுடைய உடல பிய்ந்து இரத்தம் பெருக்கெடுத்தது. மான் சோர்ந்துகொண்டே போவதை உணர்ந்த நாய்கள் மேலும் வேகுரத்துடன் பாய்ந்தன. மானின் தலையில் கோடரியால் அடித்ததும் அதன் வேதனைகளெல்லாம் சட்டென்று நின்று போனதுபோல் அடங்கி உயிரை விட்டது. அதனருகில் குந்திக்கொண்டு கவனித்தான் கதிராமன். மானுடைய மடி பெரிதாகக் காணப்பட்டது. ஒரு முலைக்காம்பைப் பிடித்துப் பிதுக்கியதும் பால் பீறிட்டு வெளிவந்து அவனுடைய விரல்களை நனைத்தது. 'அட! ஊட்டுக் குட்டிபோலை!" என்று சொல்லிக் கொண்டவன் எழுந்துநின்று நாய்களை, 'இரு பேசாமல்" என்று அதட்டினான்.

நாய்களை அடக்கி இருத்திய கதிராமன், மானுடைய காலடித் தடங்களைப் பின்பற்றிச் சென்றான். அவன் பாடசாலையில் எழுதப் படிக்கக் கற்றதில்லை. ஆனால் காட்டில் காணப்படும் ஒவ்வொரு காலடிச் சுவடும், தடயங்களும் அவனுக்கு அட்சரங்கள், சொற்கள் போன்றவைதான். அவற்றைப் பார்த்ததுமே அவற்றின் பொருள் அவனுக்குப் புரிந்துவிடும். இங்கே நிற்கும் போதுதான் மான், நாய்கள் வருவதை அறிந்திருந்கின்றது. இந்த இடத்தில்தான் அது நாய்களை நோக்கி ஓடியிருக்கிறது என்று பார்த்துக்கொண்டே சென்றவன், சற்றுத் தூரத்தில் தெரிந்த ஒரு அடர்ந்த புதரைக் கவனித்துவிட்டு, சந்தடி எதுவுமின்றிப் பதுங்கி முன்னேறினான். அந்த நிமிஷம் கதிராமனைப் பார்ப்பவர்கள், அவனை ஒரு காட்டு விலங்கு என்றே எண்ணுவார்கள். அவனுடைய கருமையான நிறமும், அங்க அசைவுகளும், அவனைக் காட்டோடு காடாகவே காட்டின. அந்தப் புதர் அருகிற் சென்று மெல்ல எட்டிப் பார்த்தவன், கவனமாகக் கைகளை நீட்டி அந்த மான்குட்டியைப் பிடித்தான்.

மான்குட்டியைக் கதிராமன் தூக்கியதும், வெளியுலகம் சரியாகத் தெரியாத அந்தச் சின்ஞ்சிறு மான்குட்டி, அவனைத் தன் நீண்ட விழிகளால் மருட்சியுடன் பார்த்து மலங்க மலங்க விழித்தது. அதைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்ட கதிராமனுக்கு அதன் நெஞ்சு படபடவென அடித்துக் கொள்வது கேட்டது. அந்தக் குட்டியின் கள்ளமற்ற தன்மையையும், ஆதரவற்ற நிலையையும் கண்ட அவனுக்குப் பதஞ்சலியின் நினைவுதான் சட்டென்று வந்தது. ஏதோ எண்ணியவனாக அதைத் தன் முகத்தோடு சேர்த்தணைத்துக் கொஞ்சினான். இரண்டொரு தடவை அங்குமிங்கும் பார்த்துவிட்டு அந்த மான்குட்டியும் அவனுடைய மார்போடு ஒண்டிக்கொண்டது.

கதிராமனுக்கு அப்போதே போய்ப் பதஞ்சலியைக் காணவேண்டும் தாயை இழந்த மான்குட்டியைப் போல நிர்க்கதியாய் நிற்கும் அவளைத் தன் கைக்குள் வைத்து நெஞ்சுடன் சேர்த்தணைத்துக் கொள்ளவேண்டும் என்ற வேகம் ஏற்படவே, மான்குட்டியுடன் புறப்பட்டான். நாய்களிரண்டும் அவனைப் பின்தொடர்ந்தன.

வளரும் 

00000000000000000000000000

நிலக்கிளி: அத்தியாயம் - 13-14-15

கோணாமலையர் தன் வீட்டு முற்றத்தில் உட்கார்ந்தவாறே, ஒரு கூர்மையான கத்தியினால் உரோமம் அகற்றிய மான் தோல்களை மெல்லிய நாடாக்களாக வார்ந்து கொண்டிருந்தார். இப்படி வார்ந்தெடுத்த தோல் நாடாக்களைக் கொண்டுதான் குழுமாடு பிடிப்பதற்குப் பயன்படுத்தும் வார்க்கயிற்றைத் திரிப்பார்கள். மலையரின் அனுபவமிக்க கைகள் கச்சிதமாகத் தோலை வார்ந்துகொண்டிருக்க, அவருடைய மனதுமட்டும் வேறு விஷயமொன்றைத் தீர்க்கமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தது.

தண்ணிமுறிப்பு இப்போ ஒரு சிறிய காட்டுக் கிராமம் அல்ல. குளக்கட்டு உயர்த்தப்பட்டுத் திருத்தி அமைக்கப்பட்டபோது, அதன் கீழ்க்கிடந்த காடுகள், அந்தக் காரியாதிகாரி பிரிவிலுள்ள கிராமத்தவர்கட்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்து காடுகள் மறைந்து கழனிகளாகி விட்டிருந்தன. சமுத்திரம்போல் நீரைத் தேக்கிக் கொண்டிருந்த அந்தக் குளத்திலிருந்து இடையறாது தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது. வளமான மண்ணும், நீர்வசதியும் நிறைய இருந்ததனால் வயல்களில் பொன் விளைந்திருந்தது. அந்தப் பொன்விளையும் பூமியை நோக்கிப் பலர் வந்தனர். வயல்களில் சதா ஒன்று மாற்றி ஒன்றாக வேலைகள் நடந்து கொண்டிருந்தன. உழவு, சூடடிப்பு, பலகையடிப்புப் போன்ற பல வேலைகளுக்கும் அதிகமானோர் உழவு இயந்திரங்களையே உபயோகித்தார்கள். மலையரிடம் உழவு முதலிய வேலைகள் எல்லாவற்றுக்கும் உதவும் எருமைக் கடாக்கள் இருந்தாலும், தானும் ஒரு உழவு இயந்திரம் வைத்திருக்க வேண்டுமென்று அவருக்கு வெகுநாட்களாகவே ஆசை ஏற்பட்டிருந்தது. அவரிடம் ஓரளவு மாடுகன்று செல்வம் இருந்தாலும், இப்போது பதினைந்தோ இருபதினாயிரமோ கொடுத்து ஒரு நல்ல உழவுயந்திரத்தை வாங்குவதற்கு அவரால் முடியவில்லை. இந்த ஆசை ஏற்பட்டிருந்த போதுதான் மம்மது காக்கா, குமுளமுனைச் சிதம்பரியரின் மகளைப் பற்றிய பேச்சுக்காலைப்பற்றிக் கூறியிருந்தார். சிதம்பரியரின் பெண்ணைவிட, அவர் சீதணமாகக் கொடுக்கவிருந்த உழவு இயந்திரத்தைத்தான் கோணாமலையர் கூடுதலாக விரும்பினார். கதிராமனுடைய சிறந்த குணங்களும், அயராத உழைப்பும் அக்கம் பக்கமெல்லாம் பரவியிருந்த காரணத்தினாற்றான், கொஞ்சம் பசையுள்ள குமுளமுனைச் சிதம்பரியரும் மலையரைச் சம்பந்தியாக்கிக் கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

சில நாட்களாகவே கதிராமனுடைய போக்கு மலையருக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது. அதற்குத் தூபம் போடுவது போலவே காடியரும், 'கதிராமனும் அந்தப் பெட்டையும் கண்டபடி காடுவழிய திரியிறது அவ்வளவு வடிவாயில்லை மலையர்' என்று பேச்சுவாக்கில் குறிப்பிட்டிருந்தார். இதற்கெல்லாம் சிகரம் வைப்பதுபோல், உமாபதிக்குப் பாம்பு கடித்தபோது, கதிராமன் விழுந்தடித்துக்கொண்டு ஒதியமலைக்கு ஓடியதும், அவன் அங்கிருந்து திரும்பியபோது பதஞ்சலி அவனுடைய காலைப் பிடித்துக்கொண்டு கதறியதும், மலையர் மனதில் ஏற்பட்டிருந்த எரிச்சலை அதிகமாக்கி இருந்தது. அதன் காரணமாகவே மலையர் மிகவும் முயற்சிசெய்து பதஞ்சலியை, சிவசம்பரோடு அனுப்ப முயன்றார். ஆனால் அந்த முயற்சி உடனடியாகப் பலனளிக்காது போகவே, அவருடைய எரிச்சல் சினமாக மாறிக் கொதித்துக் கொண்டிருந்தது.

கோணாமலையர் கோபமடைந்திருந்தால் அவருடைய முகம் விகாரப்பட்டுப் போகும். அவரின் முகம் விகாரம் அடைந்திருந்த ஒரு வேளையில்தான் பதஞ்சலியின் வீட்டில் இருந்து பாலியார் வந்தாள். அவளைக் கண்டதும், 'என்னவாம் சொல்லுறாள் அந்தப் பொட்டை?' என்று சற்றுச் சூடாகவே கேட்டார். பாலியார் மிகவும் வினயமாக, 'அவள் இப்ப அழுதுகொண்டு இருக்கிறாள், பின்னேரமாய்ச் சொல்லிப் பாக்கிறன்' என்று கூறிவிட்டுத் தன்னுடைய வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டாள். பதஞ்சலியின் பேச்சை எடுப்பதற்கு இந்த நேரத்தைவிடக் கூடாத வேளை வேறெதுவும் இல்லையென்பது அவளுக்குத் தெரிந்துவிட்டது. அவளுடைய பதிலைக் கேட்ட மலையர், 'உம்....' என்று உறுமிவிட்டு, மீண்டும் தோலை வாரத் தொடங்கினார்.

14.

பதஞ்சலியின் குடிசைக்குப் பின்புறமாக இருந்த காட்டினூடாக வந்து வெளிப்பட்ட கதிராமன், வேலியருகில் நின்று அவளின் குடிசையைக் கவனித்தான். அங்கு பதஞ்சலியைக் காணவில்லை. அடுப்புப் புகைகின்ற சிலமனில்லை. பதஞ்சலி தண்ணீருற்றுக்குப் போய்விட்டாளோ என நினைத்தபோது அவனுடைய மனம் சோர்ந்துவிட்டது. மான் குட்டியைக் கையில் அணைத்தவாறே அவன் வேலியை எட்டிக் கடந்து, பதஞ்சலியின் குடிசைக்கு முன்னால் வந்து நின்றான். குடிசையின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே நோக்கினான். பதஞ்சலி ஒரு மூலையில் படுத்திருந்ததைக் கண்டதும் அவனுடைய நெஞ்சு குளிர்ந்தது. 'பதஞ்சலி' என்று மெதுவாக அழைத்தான். மான்குட்டிபோல் சதா துள்ளித் திரிந்தவள் இன்று அடங்கிப் போயிருந்ததைக் காண்கையில் அவனுடைய மனம் வேதனைப்பட்டது. 'இந்தா பதஞ்சலி!' என்று தான் கொண்டுவந்த மான்குட்டியை அவளிடம் நீட்டினான். மான்குட்டியைக் கண்ட பதஞ்சலியின் விழிகள் அகன்றன. ஆசையுடன் அதனை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொஞ்சினாள். அவளின் இயல்பே அதுதான். தனக்கு நேரிட்ட பெருந்துன்பத்தையும் மறந்து மான் குட்டியை வருடிக் கொடுத்து, அதனுடன் செல்லமாகப் பேசவும் முற்பட்டாள். அவனுடைய மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்த கதிராமன், 'நான் வீட்டை போய் பால் எடுத்துவாறன் மான்குட்டிக்குப் பருக்க' என்று கூறிவிட்டு உற்சாகமாகத் தன் வீட்டை நோக்கி நடந்தான்.

15.

கோணாமலையர் எந்த விஷயத்தையிட்டு மனதில் கொதித்துக் கொண்டிருந்தாரோ, அதற்கு மேலும் தூபமிடுவதுபோலப் பதஞ்சலியின் குடிசையிலிருந்து கதிராமன் வெளியே வருவது, முற்றத்தில் உட்கார்ந்திருந்த அவருக்குத் தெரிந்தது. அவருக்குக் கோபம் பற்றிக்கொண்டு வந்தது. 'காட்டுக்குப் போனவன் நேரே இஞ்சை வாறதுக்கு ஏன் அந்த வம்பிலை பிறந்தவளிட்டைப் போட்டு வாறான்' என்று மலையர் மனம் புழுங்கினார். கதிராமன் எதிரில் வந்ததும், அவனுடைய முகத்திலே அடித்தாற்போல் எரிந்து விழுந்தார். மனதில் பதஞ்சலியைப் பற்றிய இன்ப நினைவுகளுடன் வந்தவனுக்கு, அவர் அவள்மேல் வீண்வசை சொல்லிப் பேசியது அவன் நெஞ்சில் என்றுமில்லாதவாறு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தந்தையை எதிர்த்து எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு வார்த்தை பேசாத கதிராமன், ஒன்றுமே கூறாது தலையைக் குனிந்துகொண்டே வீட்டுப் பக்கமாகப் போனான். 'நான் ஒருத்தன் கேக்கிறன்! அவர் பெரிய துரைமாதிரிப் போறார்! வாடா இஞ்சாலை பொறுக்கி!' என்று சினங் கொப்பளிக்கக் கோணாமலையர் கூறியதும், பாலியாருக்கு வயிற்றைப் பிசைந்தது. இருந்தும், 'விடிய வெள்ளணக் காட்டிலை போனவன் இப்பான் வாறான். அவனை ஏன் பேசிறியள்?' என்று மகன்மேல் சென்ற கோபத்தைத் தன்மேல் திசைதிருப்ப முயன்றாள் பாலியார். 'பொத்தடி வாயை! எனக்குப் படிப்பிக்க வெளிக்கிடுறியோ?' என்று பக்கத்தில் கிடந்த உழவன் கேட்டியையும் எடுத்துக்கொண்டு எழுந்து நின்றார் மலையர். சிறிது சிறிதாக மூண்டு தகித்துக்கொண்டிருந்த அவருடைய ஆத்திரம் இப்போது அவருடைய முகத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. நெடிதுயர்ந்த அவருடைய கரிய உடல் ஆத்திரத்தால் படபடத்தது. அவருக்குக் கோபம் வந்துவிட்டால், யாரையாவது அடித்து நொறுக்கினால்தான் அது அடங்கும். தோளுக்குமேல் வளர்ந்துவிட்ட மகனை அவர் அடிப்பதிலும் தன்னை அடித்து நொறுக்குவது எவ்வளவோ மேல் எனப் பாலியார் நினைத்தாலும், உருத்திரமூர்த்தியாய் நிற்கும் மலையரைக் காண அவளுடைய உடல் பயத்தால் நடுங்கியது. 'தாயும் மோனுமாய்ச் சேர்ந்துகொண்டு குடியைக் கெடுக்கப் பாக்கிறியள் என்ன!' என ஆவேசமாகக் கேட்டவாறு பாலியாரைத் துவரங்கேட்டியால் மூர்க்கத்தனமாக விளாசித் தள்ளிவிட்டார். தன் கண் முன்னாலேயே தாயைக் கொடுமையாக அடிப்பதைக் கதிராமனால் பொறுக்க முடியவில்லை. 'இப்ப அம்மா என்ன செய்ததுக்கு அவவைப் போட்டுக் கொல்லுறியள்?' என அவன் குறுக்கிட்டபோது, அவன்மேல் பாயமுற்பட்டார் மலையர். 'என்னை என்னண்டாலுஞ் செய்யுங்கோ! அவனை அடியாதையுங்கோ!' என்று கணவனுடைய காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு கதறினாள் பாலியார். ஆத்திரத்தில் படபடத்த நிலையில் பாலியாரின் பிடியை விலக்கிக்கொண்டு போகக் கோணமலையரினால் முடியவில்லை. உடல் பதற, இப்பவே இந்த வளவாலை வெளியிலை போடா நாயே! போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக்கொண்டு அவளோடை இருடா பொறுக்கி!' என்று சிங்கம்போலக் கர்ச்சித்தார் மலையர். அவர் இப்படிப் பேசியபோதும் கதிராமன் அந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவனுடைய மனதில் ஆத்திரமும் அவமானமும் குமுறிக்கொண்டு எழுந்தன. உணர்ச்சி வசப்பட்டதனால் அவனுடைய விழிகளிரண்டும் இரத்தம்போலச் சிவந்து காணப்பட்டன. நடப்பதையே பேசாமல் பார்த்துக்கொண்டு நின்ற கதிராமனின் முகத்தைக் கவனித்த மலையர், 'என்னடா ஒருமாதிரி முழுசிப் பாக்கிறாய்? இவனை இண்டைக்குக் கொண்டுபோட்டுத்தான் மற்ற வேலை!' என்று ஆக்ரோஷமாகக் கூறியவாறே கையிலிருந்த கேட்டியால், தன் கால்களைப் பற்றியிருந்த பாலியாரின் முதுகில் தாறுமாறாக வீசினார். உக்கிரமாக விழுந்த ஒவ்வொரு அடியையும் தாங்கமுடியாது பாலியார் துடித்துப் போனாள். அந்த நிலையிலும் அவள் தன் மகனைக் கோணாமலையரின் கோபத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, 'நீ ஏன்ரா வளவாலை வெளிக்கிடச் சொன்னதுக்குப் பிறகும் இஞ்சை நிக்கிறாய்? போடா வெளியிலை! இந்த வீட்டு முத்தம் நீ ஒருநாளும் மிதிக்கக்கூடாது!' என்று அழுகையும், ஆத்திரமுமாகக் கூவினாள். அவளுடைய வார்த்தைகளைக் கேட்கக் கதிராமனுடைய கண்களில் இரத்தம் வடிந்தது. இன்னமும் ஒரு வினாடி தான் அங்கு தாமதித்தாலும் அவர், தன் தாயைக் கொன்றே விடுவார் என்ற எண்ணத்தில் கதிராமன் அங்கிருந்து புறப்பட்டான்.

'இண்டைக்கு வெளிக்கிட்டவன் செத்துப் போனான் எண்டு நினைச்சுக் கொள்ளுங்கோ! இந்த வளவிலை உள்ள ஆரெண்டாலும் அவனோடை கதைபேச்சு உறவுகிறவு ஏதும் வைச்சியளோ நான் பிறகு மனிசனாய் இருக்கமாட்டன்!' என்று மலையர் பேசிவிட்டுச் சுருட்டைச் சுற்றவாரம்பித்தார். வெகுநேரம் வரையிலும் அவருடைய படபடப்பும் ஆத்திரமும் தீர்ந்தபாடில்லை.

அடியின் வேதனையால் முற்றத்தில் கிடந்து துடித்துப்போன பாலியார் மெல்ல எழுந்து குசினிக்குள் போய் இருந்துகொண்டாள். எத்தனையோ முறைகளில் சிறு விஷயங்களுக்கெல்லாம் தாறுமாறாகக் கணவனிடம் அடிவாங்கியிருந்த அவளுக்கு இந்த வேதனை புதியதல்ல. ஆனால் இன்று வீட்டைவிட்டுப் போய்விட்ட கதிராமன் மறுபடியும் இந்த வீட்டுமுற்றம் மிதிக்கமாட்டான் என எண்ணுகையில் அவளுடைய பெற்ற வயிறு எரிந்தது.

இங்கே பாலியாரின் நெஞ்சு ஒருவகை வேதனையில் துடிக்கையில்ää அங்கே பதஞ்சலியின் இளநெஞ்சு சுக்குநூறாக வெடித்துக் கொண்டிருந்தது.

குடிசையினுள் கதிராமன் கொண்டுவந்த மான்குட்டியுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்த பதஞ்சலி, பாலியார் வளவில் கூக்குரல் கேட்கவே, பதறியடித்து அங்கே சென்றாள். அவள் வந்ததை யாருமே கவனிக்கவில்லை. தன் பெயர் பேச்சில் அடிபடுவதைக் கேட்டபோது, அவள் தூரத்திலேயே நின்றுவிட்டாள். 'போடா நாயே! போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக்கொண்டு அவளோடை இருடா பொறுக்கி!' என்று கோணாமலையர் பேசியது அவளுடைய செவிகளில் நாராசமாக வீழ்ந்தது. அம்பு துளைத்த புறாப்போல துடிதுடித்து ஓடியவள் நேரே தன் குடிசையை அடைந்து அங்கே பாயில் விழுந்து குமுறியழுதாள். முன்பொரு நாள் அவள் பாடசாலைக்குச் சென்ற காலத்தில் அவள் ஏதோ செய்துவிட்டதற்காக அவளுடன் வகுப்பில் படித்த ஒரு சிறுமி, 'நீ வம்பிலை பிறந்தவள்தானேடி!' என்று பேசியது அவளுடைய நெஞ்சில் புதுக்காயம் போன்று எரிந்தது. உமாபதியிடம் சென்று, 'ஏனப்பு அவள் என்னை அப்பிடிப் பேசினவள்?' என்று கேட்டபோது, அவர் ஒன்றுமே பேசாது தன்னக் கட்டிக்கொண்டு கண்ணீர் பெருக்கியது இப்போ பதஞ்சலியின் ஞாபகத்திற்கு வந்தது.

ஆனால், எதற்காகத் தன்னை இப்படி 'வம்பிலை பிறந்தவள்' என்று பேசுகின்றார்கள் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை. எனினும், அது தன் வாழ்விலேற்பட்ட ஏதோ ஒரு கொடிய சங்கதி என்பதுமட்டும் அவளுடைய களங்கமற்ற உள்ளத்திற்கு விளங்கியது. காட்டுப் புறாப்போலக் கட்டுப்பாடின்றி வளர்ந்த அவள், இன்று தன்னைச் சூழ்ந்து நிற்கும் வசை இன்னதென்று அறியாமலே அது விளைத்த வேதனையின் காரணமாகக் கலங்கிக் கொண்டிருந்தாள்.

வளரும் 

000000000000000000000000000000000

நிலக்கிளி: அத்தியாயம் - 16

வீட்டைவிட்டு வெளியேறிய கதிராமனின் இதயம், பலவித உணர்ச்சிகளினால் கொந்தளித்துக் கொண்டிருந்தது. தண்ணிமுறிப்பின் இருண்ட காடுகளில் ஆங்காங்கே நீர் நிறைந்து காணப்படும் மடுக்களைப்போல் அமைதியும், ஆழமும, குளிர்ச்சியும் கொண்ட அவன் என்றுமே எல்லைமீறி உணர்ச்சிவசப்பட்டதில்லை. தந்தையின் சீற்றமும், தாயின் வேதனையும், பதஞ்சலியின் பரிதாபமான நிலையும் அவன் நெஞ்சைப் பிளந்தாலும் அவன் நிலை குலையவில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனி நடக்கவேண்டியதைக் கவனிப்போம் என்பதுபோல் அமைதியாக நடந்து கொண்டிருந்தான். அவனையுமறியாமல் கால்கள் பதஞ்சலியின் குடிசைக்கு அவனை அழைத்துச் சென்றன.

அங்கே பதஞ்சலி பாயில் முகங்குப்புறக் கிடந்து அழுதுகொண்டிருந்தாள். அருகிற் சென்று, 'பதஞ்சலி!' என்று ஆதரவாகக் கதிராமன் கூப்பிட்டான். அவன் குரல் கேட்ட மாத்திரத்தில், தாயின் குரல் கேட்ட கன்றுபோல அவள் எழுந்து, அவனைக் கட்டிக்கொண்டு கேவிக் கேவி அழத்தொடங்கினாள். தன்னோடு அவளைச் சேர்த்தணத்துக் கொண்டே பாயில் உட்கார்ந்து கொண்ட கதிராமனின் செவிகளில், 'போய் அந்த வம்பிலை பிறந்தவளைக் கலியாணம் முடிச்சுக் கொண்டிரு!' என்று மலையர் ஏசியது திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டேயிருந்தது.

ஆதரவற்று வாடும் பதஞ்சலியைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வரவேண்டுமென்று கதிராமன் தாயிடம் கூறியபோதும்ää அவன் மனதில், தான் அவளை மணக்கவேண்டும் என்ற நினைவு தோன்றவில்லை. அவள் தண்ணிமுறிப்பைவிட்டுப் போய்விடக் கூடாதென்ற ஒரு தவிப்பே அவனைப் பாலியரிடம் அப்படிக் கேட்கவைத்தது. காரணமும் நோக்கமும் தெரியாதிருந்த அவன் உணர்ச்சிகளுக்கு இப்போ ஒரு முழுமையான வடிவத்தைக் கோணாமலையரின் வார்த்தைகள் வலியுறுத்தி வளர்த்துக் கொண்டிருந்தன.

கதிராமனுடைய அணைப்பிலே பதஞ்சலிக்குத் தன் துயரமெல்லாம் விலகிவிட்டது போன்றதொரு உணர்வு ஏற்பட்டது. அவளுடைய அழுகை கொஞ்சங் கொஞ்சமாக அடங்கியது. தன்னை அன்புடன் அணைத்திருந்த அவனுடைய கைகளை அவள் விலக்கவில்லை. அந்த முரட்டுக் கரங்களின் பிடிக்குள்ளேயே அடங்கிப்போய் அமைதியாக இருந்தாள்.

கதிராமன் குனிந்து, அவளுடைய முகத்தை நிமிர்த்தி, 'பதஞ்சலி! உன்னை நான் கலியாணம் முடிக்கப்போறன். இனிமேல் இஞ்சை உனனோடைதான் இருக்கப்போறன்' என்று சொன்னான். பதினாறே வயதான பதஞ்சலிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இருப்பினும் அவள் முகத்தில் வெட்கமும், நாணமும் தோன்றவே செய்தன. அவள் ஒன்றுமே பேசாது தலையைக் குனிந்து கொண்டாள். அவளுடைய மௌனத்தை உணர்ந்த கதிராமன், 'என்ன பதஞ்சலி பேசாமலிருக்கிறாய்?' என்று கேட்டபோது, 'ஒண்டுமில்லை!' என்றுமட்டும் அவள் மெல்லச் சொன்னாள். சற்று நேரத்தின்பின் தன் முகத்தை நிமிர்த்திய பதஞ்சலி, அவனை நோக்கி, 'ஏன் என்னை எல்லாரும் வம்பிலை பிறந்தவள் எண்டு பேசுகினம்? அப்பிடி எண்டால் என்ன?' என்று குழந்தையைப் போலக் கேட்டாள். கதிராமன் உடனே அவளுக்குப் பதிலெதுவும் கூறவில்லை. சிறிதுநேர அமைதியின்பின் அவளைப் பார்த்து, 'உவையெல்லாம் சும்மா அப்பிடித்தான் கதைப்பினம்! ஆனா நீ ஒரு கலியாணம் முடிச்சு உனக்கொரு புருசன் வந்ததிட்டால் ஒருத்தரும் அப்பிடிப் பேசமாட்டினம்! அப்பிடிப் பேசுறதுக்கும் நான் விடன்!' என்று ஆதரவும், உறுதியும் நிறைந்த குரலில் கூறினான்.

அவன் கூறிய விளக்கம் தெளிவாக இல்லையென்பது பதஞ்சலிக்குப் தெரிந்தது. ஆனால், அந்த வேளையில் அவனுடைய இதமான அணைப்புத் தந்த பாதுகாப்பும், அவனுடைய உறுதியான மொழிகளும், அவளுடைய வேதனைகளையெல்லாம் போக்கும் அற்புத மருந்தைப் போன்றிருந்தன. அவனுடைய இறுக்கமான அணைப்பினுள் கட்டுண்டு கிடந்த அவளுக்குப் பெண்மையின் உணர்வுகளெல்லாம் மெல்ல விழித்தெழுந்துää விபரிக்க முடியாததொரு இன்பநிலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. அந்த நிலையிலேயே காலமெல்லாம இருக்கவேண்டும்போல் அவளுக்குத் தோன்றியது.

'ஏன் பதஞ்சலி பேசாமலிருக்கிறாய்?' என்று கதிராமன் திரும்பவும் கேட்டபோதும், அவள் எதுவும் கூறாது அவனுடைய மார்பிலே முகம் பதித்தவளாக இருந்தாள். 'உனக்கு என்னை முடிக்க விருப்பமில்லையோ?' என்று அவன் மீண்டும் கேட்டபோதுää 'சிச்சீ...' என்று சட்டென்று சொல்லிவிட்டு, நாணத்தால் முகம் சிவந்தவளாய் அவனுடைய அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டாள். சற்றுமுன் விம்மியழுத பதஞ்சலியின் முகத்தில், இதுவரை காணாத புத்தம்புதுக் கோலங்களைக் கண்டு வியந்தவனாய்க் கதிராமன் அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். 'ஏன் என்னை அப்பிடிப் பாக்கிறியள்?' என்று மீண்டும் தலையைக் குனிந்துகொண்ட பதஞ்சலி, அவர்களுக்கருகில் வேடிக்கை பார்த்தவாறே கிடந்த மான்குட்டியை எடுத்து முகத்தோடு முகம் சேர்த்துக் கொஞ்சினாள்.

இதன்பின் அவர்களுக்கிடையில் வெகுநேரம் மௌனம் நிலவியது. வெளியே தில்லம் புறாக்களின் சீட்டியோசை மிக இனிமையாகக் கேட்டது. அவனிடமிருந்து மெல்லத் தன்னை விடுவித்துக் கொண்ட பதஞ்சலிää குடிசை மூலையிலிருந்த ஒரு தகரப்பெட்டியைத் திறந்து ஒரு ஓலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு வந்து அவனருகில் அமர்ந்தாள். அற்குள் சில பணநோட்டுக்கள்ää உமாபதி அவளுக்குச் செய்வித்துக் கொடுத்த தங்கச் சங்கிலி முதலியவைகள் இருந்தன. துணியால் சுற்றப்பட்டுப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளை எடுத்து, சுற்றப்பட்டிருந்த துணியை அவிழ்த்தாள். அதனுள் ஒரு தாலி இருந்தது. அதை மிகவும் பயபக்தியுடன் வெளியே எடுத்த பதஞ்சலி, 'இதுதான் அம்மாவின்ரை தாய்க்கு அப்பு கட்டின தாலி! என்ரை அம்மாவுக்குத் தாலி கட்டக் குடுத்து வைக்கேல்லை எண்டு அடிக்கடி அப்பு சொல்லும்.... இந்தத் தாலியை என்ரை சங்கிலியிலை கோத்து எனக்குக் கட்டிவிடுங்கோ!....' என்றாள். அவளின் குரல் தழுதழுத்தது. கண்கள் குளமாகின. தாலியை நீட்டிய அவளுடைய இரு கைகளையும் ஆதரவுடன் பற்றிக்கொண்ட கதிராமன், 'இதைக் கொண்டுபோய் ஐயன் கோயிலடியிலை கட்டுவம்!' என உற்சாகத்துடன் கூறினான். அவள் மீண்டும் ஓலைப்பெட்டியைத் தகரப்பெட்டிக்குள் வைக்கும்போது, அதற்குள்ளிருந்த உமாபதியின் வேட்டி, சால்வை முதலியவற்றை எல்லையற்ற பாசப்பெருக்குடன் கண்களில் ஒற்றிக்கொண்டது, மறைந்துபோன உமாபதியின் கால்களில் விழுந்து மானசீகமாக ஆசீர்வாதம் வாங்கிக்கொள்வது போலிருந்தது.

துருவம் தெரியாத பருவம். எதை எப்படிச் செய்வதென்றே பதஞ்சலிக்குப் புரியவில்லை. கதிராமனும் கலியாணவீடுகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதன் நடைமுறைகளை அறியமாட்டான். அயல் கிராமங்களில் ஏழைகளின் வீட்டில் நடக்கும் 'சோறு குடுக்கும்' வழக்கம் அவன் நினைவுக்கு வந்தது. கணவனாகப் போகிறவனுக்கு முதன்முதலில் தன்கையால் சோறுபோட்டுக் கொடுத்துவிட்டு, அவன் விடுகின்ற மீதியை மணப்பெண் சாப்பிட்டு விட்டால் அவர்கள் இருவரும் கணவன் மனைவியாய்விட்டனர் என்பது சம்பிரதாயம். இது ஞாபகத்திற்கு வரவேää பதஞ்சலியை நோக்கி, 'கெதியிலை அரிசியைப் போட்டுவைச்சிட்டு ஒரு கறி காய்ச்சு. கோயிலடியிலை போய்த் தாலியைக் கடடிப்போட்டு வந்து சாப்பிடுவம்!' என்று தீர்மானத்துடன் சொன்னான். பதஞ்சலி நாணம் மேலிட்டவளாகக் குசினியை நோக்கிச் சென்றாள்.

கதிராமன் வெளியே வந்து குடிசைத் திண்ணையில் மான்குட்டியுடன் உட்கார்ந்துகொண்டு, மடிக்குள் கிடந்த புகையிலையை எடுத்துச் சுருட்டொன்று சுற்றிக் கொண்டான். 'கொஞ்ச நெருப்புக் கொண்டுவா பதஞ்சலி!' என்று அவன் கூப்பிட்டதும், அரிசியைக் களைந்து அடுப்பிலேற்றிய பதஞ்சலி, நெருப்புக் கொள்ளியொன்றைக் கொண்டுவந்து அவனிடம் கொடுத்துவிட்டு விருட்டென்று குசினிக்குள் நுழைந்துகொண்டாள். அவளுக்கு இப்போ அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கவே மிகவும் வெட்கமாகவிருந்தது. சுருட்டைப் பற்றிக்கொண்ட கதிராமன் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான். ஏதோ காலங்காலமாகவே தாங்களிருவரும் கணவனும் மனைவியுமாய் இருந்தது போன்றதொரு நினைவு. காடுகளிலே திரிந்து காட்டு விலங்குகளையே கவனித்தவனுக்கு, உரிய பருவத்தில் தனக்கொரு துணையைத் தேடிக்கொள்வது புதினமாகவோ, விசித்திரமானதாகவோ படவில்லைப்போலும்.

வளரும் 

00000000000000000000000000000000

நிலக்கிளி: அத்தியாயம் - 17

பதஞ்சலி பம்பரமாகச் சுழன்று வேலை செய்தாள். நொடிப் பொழுதுக்குள் பச்சரிசிச் சோறும், கத்தரிக்காய்க் குழம்பும், சொதியும் தயாராகிவிட்டன. அவனுக்குப் பிடிக்கும் என்றெண்ணி இறைச்சிக் கருவாட்டையும் எருமைநெய்யில் பொரித்திருந்தாள்.

குசினிப் படலை மறைவில் நின்றுகொண்டு 'சமையல் முடிஞ்சுது!" என்று சொன்ன பதஞ்சலியைப் பார்த்துச் சிரித்தான் கதிராமன். அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக் கொண்டாள். அவன் சிரித்துக் கொண்டே, 'மதியம் திரும்பீட்டுது. வாய்காலிலை முழுகிப்போட்டுவந்து கோயிலுக்குப் போவம்! வா!" என்று கூறிக்கொண்டு எழுந்தான். 'கொஞ்சம் பொறுங்கோ! கஞ்சி ஆத்திறன், மான்குட்டிக்குப் பருக்கிப் போட்டுப் போவம்" என்று கூறவும் மான்குட்டியை மறுபடியும் மடிமேல் வைத்துக் கொண்டான் கதிராமன். ஒரு பழந்துணியை எடுத்து, கஞ்சியில் நனைத்து வாயில் வைத்தபோது, முதலில் சுவைக்க மறுத்த மான்குட்டி, பின் ரசித்துக் குடித்தது. 'நீங்கள் இதைப் பருக்குங்கோ, நான் போய் முழுகீட்டு வாறன்" என்ற பதஞ்சலி, கொடியில் கிடந்த உடுத்தாடையை எடுத்துக்கொண்டு வளவை வளைத்துச் சென்ற வாய்க்காலை நோக்கிச் சென்றாள்.

மான்குட்டி கஞ்சியைக் குடித்து முடிக்கவும், பதஞ்சலி முழுகிவிட்டு ஈரப்புடவையுடன் வரவும் சரியாக இருந்தது. ஈரப்புடவையின் சலசலப்புச் சத்தம் கேட்டு நிமிர்ந்த கதிராமனின் விழிகள் வியப்பால் விரிந்தன. கரும்பச்சை நிறமான அந்த ஈரப்புடவையில் அவளுடைய சந்தணமேனி பளிச்சென்றிருந்தது. புத்தம் புதுரோஜாவின் இதழ்களில் தெளித்த பனித்துளிகள்போல அவளுடைய முகத்தில் நீர்த்திவலைகள் உருண்டு வடிந்தன. இளமையின் பூரிப்பு பூத்துக் குலுங்கும் அவளின் பருவ உடலை ஒளிவு மறைவில்லாத ரசனையுடன் பார்த்தான் கதிராமன். அவனுடைய பார்வையைத் தாங்கமுடியாத பதஞ்சலி, சட்டென்று குடிசைக்குள் நுழைந்து படலையைச் சாத்திக் கொண்டாள். 'நீங்களும் போய் முழுகிப்போட்டு வாருங்கோவன்!" என உள்ளேயிருந்து நாணத்துடன் அவள் கூறியபோது, அவளின் குரலில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு, நொடிக்கொரு துடுக்கு வார்த்தை பேசும் இவளா இப்படி வெட்கப்படுகின்றாள் என்று எண்ணி வியந்துகொண்டே வாய்க்காலை நோக்கிச் சென்றான் கதிராமன்.

இதற்குள் பதஞ்சலி தன்னுடைய ஒரேயொரு சேலையை உடுத்திக்கொண்டு தகரப் பெட்டிக்குள்ளிருந்த உமாபதியின் வேட்டியை எடுத்து ஆயத்தமாக வைத்திருந்தாள். ஈரம் துவட்டியபடி வரும் கதிராமனின் சுருண்ட கேசம் மாலை வெய்யிலில் பளபளத்தது. மழையில் நனைந்த காடுபோன்று அவனுடைய கருமேனி புதுக்கோலம் காட்டியது. வேட்டியை வாங்கி உடுத்திக்கொண்டு, சுரைக் குடுவைக்குள் இருந்த திருநீற்றையும் அள்ளிப் பூசிக்கொண்ட கதிராமன், 'தாலி, கைப்பூரம் எல்லாம் எடுத்துப் போட்டியே!" என்று கேட்டதற்குப் பதஞ்சலி தலையைக் குனிந்தவாறே உம் கொட்டினாள்.

'நட போவம்" என்று கூறிக்கொண்டே நடந்த அவனைத் தொடர்ந்து நிலத்தைப் பார்த்தவாறே நடந்தாள் பதஞ்சலி. தலைநிமிர்ந்து மலையர் வீட்டுப் பக்கம் பார்க்கவே அவளுக்குப் பயமாக இருந்தது. தேகம் இலேசாக நடுங்கியது. கதிராமனும் அவளுடைய தயக்கத்தை உணர்ந்தவன்போல், 'ஒண்டுக்கும் பயப்பிடாதை பதஞ்சலி! எல்லாத்துக்கும் நான் இருக்கிறன்!" என்று புன்னகை நிறைந்த முகத்துடன் அவளைத் தேற்றினான். 'இனிமேல் எல்லாத்துக்கும் என்ன, எல்லாமே நீங்கள்தான்" என்று மனதுக்குள் நினைத்தவாறே அவள், அவன் பின்னே சென்றுகொண்டிருந்தாள்.

முற்றத்தில் மாமரத்தின் கீழே உட்கார்ந்திருந்த மலையருக்கு, கதிராமனும் பதஞ்சலியும் சேர்ந்து போகும் காட்சி பளிச்சென்று தெரிந்தது. விழிகளை இடுக்கிக்கொண்டு கூர்ந்து கவனித்தவர், அவர்கள் இருவரும் தேரோடும் வீதியில் திரும்பி, குருந்தூர் ஐயன்கோவில் பக்கம் போவதைக் கண்டார். 'ஓகோ! மாப்பிளை பொம்பிளை ஐயன் கோயிலடிக்குப் போகினம்!" என்று கறுவிக் கொண்டார். இக்காட்சி, அணைந்துகொண்டு போகும் நெருப்பில் நெய்யை வார்த்ததுபோல் அவருடைய சினத்தை மீண்டும் கிளப்பியது. அவருக்கு வந்த ஆத்திரத்தில் கத்தியை எடுத்துக்கொண்டு போய், அவர்களுடைய தலகளைச் சீவி எறிந்திருப்பார். ஆனால் என்னதான் ஆத்திரம் ஏற்பட்டபோதும், அவர்கள் ஐயன் கோவிலுக்குப் போகிறார்கள் என்று அறிந்ததும் அடங்கிப் போனார்.

இந்தக் காட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஐயன் வெறும் காவல் தெய்வம் மட்டுமல்ல, கண்கூடாகக் காட்டும் தெய்வமாகவும் இருந்தது. காட்டில் வினை மிருகங்கள் தாக்க வருகையில், 'ஐயனே!" என்று கூவினால் போதும் அவை தூர விலகிப் போய்விடும். இப்பேர்ப்பட்ட ஐயனுடைய சக்தியில் கோணாமலையருக்கு அதிக நம்பிக்கை இருந்தது. எனவேதான் ஐயனிடம் செல்பவர்களுக்கு வில்லங்கம் விளைவிப்பது பாரதூரமானது என அடங்கிப் போனார்.

இருப்பினும் அவருடைய சுயகுணம் அவரைவிட்டு நீங்கிவிடுமா? 'இவையளுக்குப் படிப்பிக்கிறன் நல்லபாடம்!" என்று கறுவிக்கொண்டே, 'இஞ்சை வாடா மணியம்!" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கூப்பிட்டார் மலையர். 'போய் எருமையளைச் சாய்ச்சுக் கொண்டு வாடா!, இண்டைக்கு உமாபதியின்ரை வளவுக்கைதான் பட்டி அடைக்கிறது!" என்று அவர் சீறவும், மணியன் ராசுவையும் கூட்டிக்கொண்ட சென்று, குளக்கட்டின்கீழ் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகளை விரட்டிக்கொண்டு வந்தான்.

அவர்களுடன் கூடவே எழுந்துபோன மலையர், பதஞ்சலி வளவுப் படலையைப் பிடுங்கித் தூர வீசினார். 'நான் வெட்டிக் குடுத்த நிலம்! நான் கட்டிக் குடுத்த வீடு! எனக்குத் துரோகம் செய்யிறவை என்ரை வளவுக்கை இருக்கிறதோ!" என்று சினத்துடன் கர்ஜித்து, எருமைகளை ஓட்டிவந்து பதஞ்சலியின் வளவுக்குள் சாய்த்தார் மலையர். எருமையினம் மாலைவேளையில் மழைமேகம்போல உமாபதியின் வளவுக்குள் புகுந்தன. செழிப்புடன் காய்த்துக் குலுங்கிய, பதஞ்சலியின் அருமையான தோட்டம் எருமைகளின் கால்களின்கீழ் சிக்கித் துவம்சமாகின. மேலும், மலையர் கையில் வைத்திருந்த கேட்டியினால் மாடுகளை ஓங்கியடிக்கவும், அவை ஒன்றையொன்று முண்டியடித்துக் கொண்டு, குடிசையையும் குசினியையும் இடித்து விழுத்திக்கொண்டு இடறுப்பட்டன. அந்தக் குடிசைக்கு நெருப்பு வைப்பதற்குக்கூட மலையருக்கு மனதாயிருந்தும், தன்னுடைய எருமைகள் பாதிக்கப்பட்டு விடுமே என்ற காரணத்தினால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அந்தச் சின்னஞ்சிறு வளவு கணப்பொழுதுக்குள் சூறாவளியில் சிக்கிய சோலையைப் போன்று சிதைந்தது. அதன் பின்னர்தான் மலையரின் சினம் சற்றுத் தணிந்தது. 'இனிப் பாப்பம், மாப்பிளை பொம்பிளையவை என்ன செய்யினமெண்டு!" என்று கூறிக்கொண்டே தன்னுடைய வீட்டுக்குப் போனார்.

வளரும் 

0000000000000000000000000

நிலக்கிளி: அத்தியாயம் - 18

வண்ணாத்தி மோட்டை என்றழைக்கப்படும் பெரிய நீர்மடுவை வளைத்துச் சென்று, சிறியதொரு குன்றின்மேல் ஏறும் அந்தப் பாதையில், பதஞ்சலி கதிராமனின் அடிகளைப் பின்பற்றிச் சென்றாள்.

குன்றின் மேற்பகுதியில் ஒரு சிறிய வெளி. வெளியின் நடுவே ஒரு சூலம். அதன் முன்னே கற்பூரம் வைத்துக் கொளுத்தும் கல்லொன்று. இதுதான் குருந்தூர் ஐயன் கோவில்.

மடித்துக் கட்டியிருந்த வேட்டியைப் பயபக்தியுடன் அவிழ்த்துவிட்டு, பதஞ்சலியிடம் கற்பூரத்தையும், தீப்பெட்டியையும் வாங்கிய கதிராமன், அந்தக் கல்லின்மேல் கற்பூரத்தை வைத்துக் கொளுத்தினான். அடர்ந்த காட்டின் நடுவே கதிராமன் ஏற்றிய கற்பூரம் பிரகாசமாக எரிந்தது. அண்மையிலிருந்த மரங்களிலிருந்து காட்டுப்பறவைகள் பண்ணிசைத்துக் கொண்டிருந்தன. வண்ணாத்தி மோட்டையைத் தழுவிவந்த ஈரக்காற்று அவர்களைத் தழுவிச் செல்கையில் பதஞ்சலிக்கு ரோமங்கள் சிலிர்த்தன.

இரு கைகளினாலும், தாலிகோர்த்திருந்த சங்கிலியைக் கதிராமனிடம் கொடுத்துவிட்டு, கைகளைக் கூப்பித்தொழுத வண்ணம் பதஞ்சலி மண்டியிட்டு அமர்ந்து கொண்டாள். விழிகளை மூடித் தொழுதுநின்ற அந்தப் பதினாறு வயதுப் பதஞ்சலி, எப்போதோ இறந்துபோன தன் தாயையும், இரண்டு நாட்களுக்கு முன்புதான் மறைந்துபோன தன்னுடைய அப்புவையும், தன்மேல் பாசத்தைச் சொரிந்த பாலியாரையும் நினைத்துக் கொண்டாள்.

கதிராமன் 'ஐயனே!" என்று மனதுக்குள் நிதானமாக வேண்டிக்கொண்டு, பதஞ்சலியின் அழகான கழுத்தைச் சுற்றி தாலி கோர்த்த சங்கிலியைக் கட்டிவிட்டு, ஒருமுறை கரங்களைக் கூப்பிக் கும்பிட்டுக் கொண்டான். அந்நேரம் மெல்ல எழுந்துகொண்ட பதஞ்சலி, அவனை அணைந்தபடியே, பிரகாசமாக எரியும் கற்பூரத்தைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். கதிராமனுடைய கரம் அவளைச் சுற்றி ஆதரவாகப் படர்ந்திருந்தது. புனிதம் நிறைந்த அந்த மாலைப்பொழுதில் இரு இளம் உள்ளங்கள் ஒன்றையொன்று பற்றிப் பிணைந்து புனிதமான உறவில் திளைத்தன.

'பசிக்குது! வா வீட்டை போவம்!" என்று கதிராமன் அழைத்தபோது, அந்த இடத்தைவிட்டு அகல மனமில்லாதவளாய்ப் பதஞ்சலி அவனைப் பின்தொடர்ந்தாள். திரும்பி வீட்டுக்குப் போகாமலே இப்படியே நடுக்காட்டினுள் போய் ஒரு மடுக்கரையில் குடிசையைக் கடடிக்கொண்டு தானும் கதிராமனும் வாழ்ந்தாலென்ன என்று அவளுடைய பேதை மனம் ஆசைப்பட்டது. அமைதி நிறைந்த அந்தக் காட்டினுள்ளே கதிராமனின் துணையுடன் நிரந்தரமாகத் தங்கிவிடப் பதஞ்சலி விரும்பினாள். வீடு நெருங்க நெருங்க, மலையர் கோபத்தில் தங்களை என்ன செய்வாரோ என்ற பயம் பதஞ்சலியைப் பற்றிக் கொண்டது. அவனுடைய கையைப் பிடித்தவாறே நிலத்தை நோக்கிச் சிந்தனையில் ஆழ்ந்தவளாய் நடந்து கொண்டிருந்த பதஞ்சலி, தன்னுடன் கூடவே வந்துகொண்டிருந்த கதிராமனின் நடை திடீரென்று நின்றதும் துணுக்குற்றுப் போய் நிமிர்ந்து பார்த்தாள். அங்கு கண்ட காட்சி அவளை அதிரவைத்தது.

அவளும் உமாபதியும் வாழ்ந்த அந்தச் சின்னஞ்சிறு குடிசை சரிந்துபோய்க் கிடந்தது. அவள் ஆசையுடன் நட்டுவைத்த பயிர்கொடிகள் அலங்கோலமாகச் சிதைந்து கிடந்தன. அவள் அழகாகப் பெருக்கிச் சுத்தமாக வைதத்திருந்த வெண்மணல் பரவிய முற்றத்தில் எருமைகள் தாறுமாறாகத் திரிந்தன.

பதஞ்சலியின் கரத்தை விடுவித்துக்கொண்டு முன்னால் சென்ற கதிராமன் ஒருகணப் பொழுதுக்குள்ளே நடந்ததைப் புரிந்துகொண்டான். அந்தக் கிராமத்திலே வேறு எவருக்குமே ஈவிரக்கமின்றி இப்படியானதொரு செயலைச் செய்ய மனம் வராது. துணிவும் இராது. விக்கித்துப்போய் நின்ற பதஞ்சலியைத் திரும்பிப் பார்த்த கதிராமன், 'இதெல்லாம் அபபுவின்ரை அலுவல்தான். எங்களை இந்த ஊரைவிட்டே கலைக்கிறதுக்குத்தான் இந்த வேலை செய்திருக்கிறார்". என்று ஆத்திரத்துடன் கூறியவன், 'நீ ஒண்டுக்கும் பயப்பிடாதை பதஞ்சலி! வா உன்ரை சாமான்களை எடுத்துக்கொண்டு போவம்!" என்றவாறு வளவுக்குள் நுழைந்தான். பதஞ்சலி பேச்சு மூச்சற்றுக் கதிராமனைப் பின்தொடர்ந்தாள். குடிசை வாசலில் அவள் கண்ட காட்சி, இதயத்தை விம்ம வைத்தது. அன்று காலையில் காட்டிலிருந்து கொண்டுவந்த மான்குட்டி, எருமைகளின் குளம்புகளின் கீழ் அகப்பட்டு நசுங்கிச் செத்துக் கிடந்தது. பதஞ்சலி விம்மி விம்மி அழத்தொடங்கினாள். அவளுடைய கலங்கிய விழிகளையும், அந்த வளவு கிடந்த அலங்கோல நிலையையும் கண்ட கதிராமனின் இதயத்திலிருந்து இரத்தம் வடிந்தது.

அழுதுகொண்டு நிண்டு என்ன செய்யிறது பதஞ்சலி? உன்ரை சாமான்களை எடு! நாங்கள் போவம்!" என்றவாறே அங்கு கிடந்த ஒரு சாக்கை எடுத்துக் குசினிக்குள் இருந்த அரிசி, மா, மற்றும் பாத்திரங்கள், போத்தல்கள் முதலியவற்றை அதனுள் அடைந்தான். விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாகப் பாய, பதஞ்சலியும் சரிந்துகிடந்த குடிசைக்குள் நுழைந்து தன் உடைகளையும், தகரப்பெட்டியையும், பாயையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். கதிராமனின் விழிகளில் ஒரு தீவிரமான உறுதி பளிச்சிட்டது. 'வீடு வளவில்லாமல் செய்துபோட்டால் நாங்கள் செத்துபோவம் எண்டு நினைச்சாராக்கும்! நாளைக்கிடையிலை எங்களுக்கெண்டு ஒரு சின்னக்குடில் எண்டாலும் கட்டி முடிக்காமல் விட்டால் நான் கதிராமன் இல்லை!" என்று சபதஞ் செய்துகொண்ட கதிராமனைப் பார்த்துச் சிலையாய் நின்றாள் பதஞ்சலி. 'ஏன் பதஞ்சலி எல்லாத்துக்கும் பயந்து சாகிறாய்? இப்ப என்ன நடந்து போச்சுது? எங்களுக்கெண்டு ஒரு வீடு வளவு வேணும். அவ்வளவுதானே?" என்று சொல்லிவிட்டு, 'நீ உதுகளை ஒரு பக்கத்திலை வைச்சிட்டுக் குசினிக்கை பார். சோறு, கறியெல்லாம் அப்பிடியே கிடக்குது. அதைக் கவனமாய் ஒரு பாத்திரத்திலை எடு. எப்பிடியும் இண்டைக்கு நீதான் எனக்குச் சோறுபோட்டுத் தரரோணும்" என்று அவன் கூறியதும், பதஞ்சலி ஒன்றுமே பேசாது, விழுந்துகிடந்த அந்தக் குசினிக்குள் புகுந்து, தான் ஆசையோடு சமைத்து வைத்த உணவு வகைகளைப் பார்த்தாள். அவை ஒரு பக்கீஸ் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்ததால் பாதுகாப்பாக இருந்தன. இதற்குள் கதிராமன் உமாபதியின் கத்தி, மண்வெட்டி, கோடரி முதலிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். பதஞ்சலி சாப்பாட்டுப் பெட்டியைத் தலையில் பக்குவமாக வைத்துக்கொண்டு, பாயையும் ஈரமான உடைகளையும் ஒரு கையில் எடுத்துக் கொண்டாள். கதிராமன் 'நட! போவம்!" என்றான். அவன் எங்கு நட என்றாலும் அவள் நடப்பதற்குத் தயாராய் இருந்தாள். எந்த நிலையிலும் கலங்கிப்போகாத அவனுடைய ஆண்மை அவளுக்கு அளவற்ற ஆறுதலை அளித்தது. மிகவும் குறுகிய கால வேளைக்குள் அடுத்தடுத்துப் பல அவலங்களை அனுபவித்திருந்த அவளுக்கு, 'கவலைப்படாதை!" என்று அவன் கடிந்து கூறியத மிகவும் இதமாகவிருந்தது.

வளரும் 

0000000000000000000000000000000

நிலக்கிளி: அத்தியாயம் - 19

எருமைகளை மீண்டும் விலக்கிக் கொண்டு குமுளமுனைக்குச் செல்லும் பாதையில் அவர்கள் இறங்கும்போது, நன்றாக இருண்டு போயிருந்தது. வைகாசிமாத வளர்பிறை நாட்களாதலால் வானம் நிர்மலமாக இருந்தது. ஆங்காங்கு விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

ஏறக்குறைய அரைமைல் தூரம் அவர்கள் நடந்திருப்பார்கள். குளக்கட்டிலிருந்து ஆரம்பிக்கும் அந்தப் பாதையை ஒட்டியவாறே அந்த வாய்க்காலும் சென்றது. அந்த வாய்க்காலின் ஓரமாகச் சென்று, இடதுபுறமிருந்த காட்டைப் பார்த்தான் கதிராமன். வாய்க்காலுக்கும் பாதைக்கும் வலதுபுறத்தே வயல்வெளி விரிந்து கிடந்தது. இடப்பக்கத்தில், இருண்டகாடு வாய்க்காலின் ஓரம்வரை படர்ந்திருந்தது. 

எந்த இடம் குடியிருப்புக்குச் சிறந்தது, எது வயலாக்குவதற்கு ஏற்றது என்ற விஷயமெல்லாம் கதிராமனுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அவன் வாய்க்காலைக் கடந்து அப்பால் இருந்த காட்டை நோக்கிச் சென்றான். நிலவு காலித்துவிட்ட அவ்வேளையில் காடு சந்தடியற்றுக் கிடந்தது. வாய்க்காலில் குளத்துநீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. கதிராமன் காடடோரமாக இருந்த ஒரு மேட்டில் ஏறி, பெரியதொரு மரத்தின்கீழ் தலைச்சுமையை இறக்கிவிட்டு, பின்னாலேயே வந்த பதஞ்சலியின் தலைமேல் இருந்த பெட்டியையும் பக்குவமாக இறக்க உதவினான். பின் கைக்கத்தியின் உதவியுடன் அந்த மரத்தின் அருகிலிருந்த சிறு செடிகளையும், அண்மையிலிருந்த சிறு பற்றைகளையும் மளமளவென்று வெட்டி ஒதுக்கினான். பதஞ்சலி பட்டுப்போனதொரு மரக்கிளையை விளக்குமாறாக உபயோகித்து நிலத்திலிருந்த சருகுகளைக் கூட்டிச் சுத்தமாக்கினாள்.

இன்னமும் இரண்டொரு நாட்களில் முழு நிலாவாகப் போகும் வளர்பிறைச் சந்திரன் அந்தப் பிராந்தியத்தின் மேல்வரும் வேளையில், கதிராமன் அந்த மரத்திற்குச் சற்றுத்தள்ளி சுள்ளிகளைக் கொண்டு ஒரு தீவறை மூட்டினான். சடபுடவெனச் சத்தமிட்டுக்கொண்டு வளர்ந்த தீயின் ஒளியில் பதஞ்சலி தான் கூட்டித் துப்பரவுசெய்த இடத்தில் பாயை விரித்துவிட்டு, கொண்டுவந்த பொருட்களை ஒரு பக்கமாக எடுத்து வைத்தாள். நெருப்பை மூட்டிவிட்டு எழுந்து நின்று சுற்றுப்புறத்தை ஒருதடவை கூர்ந்து கவனித்த கதிராமன் திருப்தி அடைந்தவனாக வாய்க்காலுக்குப் போய்க் கைகாலைக் கழுவிக்கொண்டு வந்தான்.

முழுகிய கூந்தலை அள்ளிமுடிந்து அடக்கமாக உட்கார்ந்து பதஞ்சலி தனக்குப் பரிமாறுவதைக் கதிராமன் கண்கொட்டாமல் பார்த்தான். அடிக்கடி நாணத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்த அவளுடைய அகன்ற விழிகளில் அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பின் ஒளி பளபளத்தது. நீண்டு வளர்ந்து செழுமையாக இருந்த அவளுடைய விரல்களும், கைகளும் அவள் பரிமாறுகையில் ஏதோ அபிநயம் பிடிப்பதுபோற் தோன்றின. நேரம் ஒரு உணர்ச்சியைப் பிரதிபலித்த அவளுடைய முகத்தை ஆசையுடன் பார்த்திருந்த கதிராமனை நோக்கி, 'சாப்பிடுங்கோவன்!" என்று அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

கதிராமன் ஆசையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் உள்ள சின்ன விஷயங்களையும் சுவைத்து அனுபவிக்கத் தெரிந்த அவன் அந்நிலையிலும் அவள் படைத்த உணவை மிகவும் இரசித்துச் சாப்பிட்டான். அவனுடைய கருமையான கட்டுடலையும், முகத்தில் அரும்பியிருந்த இளந்தாடியையும் கள்ளமாகப் பார்த்தவாறே அவனுக்கு மேலும் பரிமாறினாள் பதஞ்சலி. அவன் சாப்பிட்டு முடிந்ததும்,தண்ணீரை எடுத்து அவன் கைகளுக்கு ஊற்றித் தானே அவன் கைகளைக் கழுவினாள். அவளுடைய மென்மையான விரல்களின் ஸ்பரிசம் அவனுள் புதுமையானதொரு ஒணர்வை ஏற்படுத்தியது. இறுகப்பற்றிய அவனுடைய விரல்களை மெல்ல விடுவித்துக் கொண்ட பதஞ்சலி அவன் சாப்பிட்ட தட்டிலேயே தானும் சாப்பிட்டுவிட்டு எழுந்தாள்.

கதிராமன் கைத்தாங்கலாகப் பாயில் படுத்தபடி பதஞ்சலியையே பார்த்துக் கொண்டிருந்தான். வாய்க்காலில் பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த அவள் அடிக்கொரு தடவை அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டாள். அவர்களிடையே வெகுநேரமாகப் பேச்சுவார்த்தை எதுவும் இல்லாமலிருந்தது. காட்டிலே தன்னிச்சையாக வாழும் மலைப்புறா ஜோடிகளைப்போல் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பார்வையிலேயே ஆயிரம் அர்த்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.

எல்லா அலுவல்களையும் முடித்துக்கொண்டு வந்த பதஞ்சலி, அவனருகில் உட்கார்ந்து புகையிலையை எடுத்துச் சுருட்டொன்று சுற்றி அவனுக்குக் கொடுத்தாள். இத்தனை பக்குவமான பணிவிடையைக் கதிராமன் என்றுமே அனுபவித்ததில்லை. அவளுடைய கரத்தை அவன் மெல்லப் பிடித்து இழுத்தபோது, அவனுடைய நெஞ்சோடு உரிமையுடன் சாய்ந்து கொண்டாள் பதஞ்சலி.

அவர்களுக்கு மேலே பெருமரம் நிலவுக்குக் குடை பிடித்தது. எங்கேயோ பிறந்த சின்ன நீரோடையொன்று கலகலவென்று சிரித்தபடியே ஆடிவந்து, இருண்ட காட்டின் மத்தியில் ஆழமும் அமைதியுமாய்க் கிடந்ததோர் நீர்மடுவில் விழுந்து தழுவிச் சங்கமித்தது.

வளரும் 

000000000000000000000000000000

நிலக்கிளி: அத்தியாயம் - 20-21 

புத்தம் புதிய அனுபவங்களைக் கண்டு வியப்பும், மயக்கமும், மகிழ்ச்சியும் வேதனையும் கலந்ததோர் உணர்ச்சிக் கதம்பமாள் மணம் பரப்பிய பதஞ்சலி, கதிராமனின் அணைப்பிலே பச்சைக் குழந்தையாய் உறங்கிக் கொண்டிருந்தாள். கீழ்வானம் சிவக்கும் வைகறைப் பொழுதிலேயே விழித்துக்கொண்ட கதிராமன் பதஞ்சலியின் அணைப்பிலிருந்து தன்னை மெல்ல விடுவித்துக்கொண்டு எழுந்தான்.

அன்று பகலுக்குள் எத்தனையோ வேலைகளைச் செய்துமுடிக்க வேண்டியிருந்தது. உமாபதியரின் மண்வெட்டி, கோடரி முதலியவற்றை அவன் எடுத்து ஒவ்வொன்றாகக் கவனித்தான். ஆயுதங்கள்தான் ஒரு தொழிலாளியினுடைய உற்ற நண்பர்கள். உறுதியும், கூர்மையுமாய் விளங்கிய ஆயுதங்களைக் கண்டதும் கதிராமனுடைய தேகத்தில் புதுத்தெம்பு பாய்ந்தது.

வாழ்வதற்கு ஒரு குடிசை வேண்டும். அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய ஒரு காய்கறித் தோட்டம் வேண்டும். இவற்றைவிட முக்கியமாக, கமஞ்செய்ய விளைநிலம் வேண்டும்.

அவன் எதிரே அவனைப் பேணிவளர்த்த செவிலித் தாயான முல்லையன்னை, வளமிக்க மண்ணைத் தன்னகத்தே கொண்டவளாய், 'வா! வந்து என்னைப் பயன்படுத்தி வாழ்ந்துகொள்!" என்று அழைப்பது போன்றிருந்தது. கையிலே சிறந்த ஆயுதங்கள், உடலிலே வினைமுடிக்கும் திறமை, நெஞ்சிலே வாழவேண்டுமென்ற வேட்கை என்பனவற்றைக் கொண்டிருந்த கதிராமன் சுருதியாகக் காரியத்தில் இறங்கினான்.

தன்னை மறந்து, அயர்ந்து உறங்கிய பதஞ்சலி, அவன் காட்டிலே வெட்டிய கம்பு தடிகளைச் சுமந்துவந்து நிலத்தில் போட்ட ஓசையில் திடுக்குற்று விழித்துக் கொண்டாள். அதிகாலைப் பொழுதில் தனக்கு முன்னரே எழுந்து வேலையில் மூழ்கிச் சிரித்தபடியே நிற்கும் கணவனைப் பார்த்தபோது பதஞ்சலியை வெட்கம் பிடுங்கித்தின்றது. சரேலென்று எழுந்துகொண்ட அவள் வாய்க்காலண்டைக்கு ஓடினாள். 'இண்டைக்கு விளையாடிக்கொண்டு நிக்க நேரமில்லை! கெதியிலை தேத்தண்ணியை வை! வெய்யில் ஏறமுதல் குடிலைக் கட்டிப்போட்டு குமுளமுனைக்கு கிடுகு வாங்கப் போகோணும்!" என்ற கதிராமன், அந்தச் சுற்றாடலில் வசதியானதொரு மேட்டுநிலத்தைத் தேர்ந்தெடுத்துத் துப்பரவு செய்வதில் முனைந்தான். மண்ணும், மண்வெட்டியும் அவன் எண்ணப்படியெல்லாம் இசைந்து கொடுத்தன. மண்ணைத் தோண்டி ஆழமான குழி பறித்தான். அவற்றில் உறுதியான கப்புக்களை நாட்டினான். அவனருகே தேநீர் கொண்டுவந்த பதஞ்சலியிடம், 'எப்பிடி எங்கடை வீடு?" என்று கூறியபோது, அவள் கண்களில் பெருமை பொங்கி வழிந்தது.

'இதிலைதான் வீடும் தோட்டமும். பங்கை அதிலை பள்ளக் காணியாய்க் கிடக்குது காடு, அதை வெட்டி எரிச்சுத்தான் வயலாக்கப் போறன்!". தேநீரை உறிஞ்சிக் குடித்தவாறே அவன் தன் திட்டங்களைத் தனக்கேயுரிய எளிமையான முறையில் விளக்கிக் கொண்டிருந்தான்.

பதஞ்சலிக்கும் அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது. அருகே சலசலத்தோடும் வாய்க்கால், அதற்கப்பால் விரிந்து கிடக்கும் வயல்வெளி, இவற்றைச் சூழ்ந்து கிடக்கும் இருண்ட காடு, இவையெல்லாமே அவளுக்குச் சந்தோஷத்தை அளித்தன. இவை எல்லாவற்றிற்கும் மேலாகக் கதிராமன் இனி என்றும் தன்னுடனேயே இருப்பான், அவன் துணையொன்றே தனக்குப் போதும் என்ற எண்ணங்களே அவளுடைய உவகைக்கும் திருப்திக்கும் காரணங்களாய் இருந்தன.

21.

எளிமை நிறைந்த வாழ்விலே ஆசைகள் மிகக் குறைவு. மிகச் சிலவான அந்த ஆசைகளும் எளிமையாகவே இருப்பதனால் அவை இலகுவில் நிறைவேறி விடுகின்றன! அவை நிறைவேறிய ஆத்மதிருப்தியுடன் வாழும் எளிமையான மக்களின் மனங்களில் நிராசைகளோ, ஏமாற்றங்களோ நிரந்தரமாகத் தங்கியிருந்து சினம், பொறாமை, கவலை முதலியவற்றைப் பெரிய அளவிலே பிறப்பித்து அவர்களை அலைக்கழிப்பதில்லை.

தண்ணிமுறிப்பு காடாகக் கிடந்த காலத்தில் அங்குவந்து முதலில் குடியேறிய கோணாமலையர் தனக்கும், தன் குடும்பத்துக்கும் வேண்டியவற்றைத் தாமே விளைவித்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்திருந்தார். அப்போதெல்லாம் அவருக்கு அதிகமாக ஆசைப்படத் தெரியவில்லை. ஆனால் கதிராமனும் மணியனும் வளர்ந்து ஆளாகி அவருடைய வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டபோது, அவர் வீட்டில் மாடுகன்று பெருகியது. வயல்வரப்பு விளைந்தது. தேவைக்கு அதிகமாக இச் செல்வங்கள் பெருகியிருந்த காலத்திற்றான் குளம் திருத்தப்பட்டு, அதன் கீழ்க் கிடந்த காணிகள் கழனிகளாக மாறின. அதன் காரணமாக அயற்கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அங்கு தம் வயல்களுக்கு அடிக்கடி வந்துபோகத் தொடங்கினர். ஒரு கணிசமான தொகையினர் ஆங்காங்கு தங்கள் வயல்களை அண்டிய இடங்களில் குடியேறவும் செய்தனர்.

கதிராமன், பாலியார் இவர்களை இந்த மாற்றங்கள் அதிகம் பாதிக்கவில்லை. ஆனால் மலையரோ காலக்கிரமத்தில் குறிப்பிடக்கூடிய அளவுக்கு மாறிப் போயிருந்தார். உத்தியோக நிமித்தமாக அங்குவந்து குடியேறிய காடியரும், அடிக்கடி வந்துபோகும் மம்மதுக் காக்காவும் இந்த மாற்றத்திற்குப் பெரிதும் காரணமாயிருந்தார்கள். 'என்ன மலையர், நெடுக எருமையளை வைச்சுக்கொண்டு மாரடிக்கிறியள்? ஒரு உழவு மிசின் எடுத்தாலென்ன?" என்று அடிக்கடி காடியர் சொல்வதும், 'கதிராமனுக்கு உழவு மிசினோடை பொம்பிளை தரக் குமுளமுனைச் சிதம்பரியர் காத்திருக்கிறார்" என்று மம்மதுக் காக்கா கூறுவதையும் கேட்ட கோணாமலையர் மனதில், தன்னிடமும் ஒரு உழவு இயந்திரம் இருந்தால் இன்னும் அதிக அளவில் கமஞ் செய்யலாம், பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசைகள் தளிர் விட்டிருந்தன. அவை மெல்ல மெல்ல வளர்ந்து மனதின் அடித்தளம்வரை வேர்பரப்பி விசாலித்து நின்றன! அவரது ஆசை விருட்சத்தைக் கதிராமனின் செயல் புயலின் வேகத்துடன் உலுப்பிச் சரித்துவிடவே, இதுவரை அதிகம் வேதனைப்பட்டறியாத மலையர் வெகுண்டெழுந்தார். அவருக்கு ஏற்பட்ட அசாத்திய சினத்தில் எதையோவெல்லாம் செய்து தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்திருப்பார். ஆனால் உலக அனுபவமும், பேச்சுச் சாதுரியமும் மிக்க காடியரின் முயற்சியினாலேயே ஓரளவு அடங்கிப்போனார். கதிராமன் காடுவெட்டிக் குடிசை போடுகிறான் என்று அறிந்ததுமே மலையர் பொங்கி எழுந்தார். 'உவையள் இரண்டுபேரும் இஞ்சை தண்ணிமுறிப்பிலை இருக்க நான் விடுவனோ?" என்று சீறினார். யாருடைய நல்ல வேளையோ அச்சமயம் காடியரும் மலையரின் பக்கத்தில் இருந்ததால் அவரை ஒருவாறு சாந்தப்படுத்த முடிந்தது. 'இங்கை பாருங்கோ மலையர்! அவன் பொடியன் அவளை முடிச்சுக்கொண்டு போட்டான். இனி நீங்கள் அதுகளை அடிச்சுக் கொல்லுறன், வெட்டிப் புதைக்கிறன் எண்டெல்லாம் வெளிக்கிடுறது அவ்வளவு வடிவாய் இல்லைப் பாருங்கோ! இனி வருங்காலத்திலை உங்களுக்கு நல்ல செல்வாக்கு சீர் எல்லாம் வரப்போகுது. தண்ணிமுறிப்பு இப்ப சின்ன ஊர் இல்லை. இதைச் செம்மலைக் கிராமச் சங்கத்திலை ஒரு வட்டாரமாக்கிறதுக்கு சேமன் பொன்னம்பலம் வேலை செய்யிறாராம். அப்பிடி வந்திட்டுதே எண்டால் இங்கை நீங்கள்தான் போட்டியில்லாமல் மெம்பராய்ப் போவியள்! இப்ப கண்டபடி கிறிமினல் வேலையளிலை இறங்கினியளோ, அது உங்கடை வருங்காலத்துக்குக் கூடாது! அவன் போனவன் போகட்டுமெண்டு தலைமுழுகிப் போட்டு மற்ற விஷயங்களைக் கவனியுங்கோவன்!" என்று அடுக்கிக் கொண்டுபோன காடியர் தொடர்ந்து, 'ஏன் உங்கடை மணியனுக்கு இப்ப என்ன வயசு? இருவத்தொண்டு இருக்குமெல்லே? ஏன் மணியனுக்கு அந்தக் குமுளமுனைச் சம்பந்தத்தைச் செய்தால் என்ன?" என்று வினயமாகப் பேசி மலையரின் மனதை மாற்றிவிட்டார்.

புதியதொரு வழியில் காடியர் மலையரின் மனதைத் திருப்பவே, அத் திட்டத்தின் கவர்ச்சியில் எடுபட்டுப் போய்விட்டார் அவர். எனவே தற்போதைக்குக் கதிராமனையும், பதஞ்சலியையும் வெட்டிப் புதைக்கும் முயற்சியைக் கைவிட்டிருந்தார். இருப்பினும் அடிக்கடி கொதித்துக் குமுறத்தான் செய்தார். அந்தச் சமயங்களில் தன் கோபத்தையெல்லாம் பாலியரின்மேல் கொட்டித் தீர்த்துக்கொள்வது வழக்கமாயப் போயிற்று. ஓசையின்றி, ஒப்பாரியின்றி ஒரு சுமைதாங்கியைப் போல அவருடைய கோபத்தையும், தன்னுடைய கவலைகளையும் சுமந்துகொண்டே வாழ்ந்தாள் பாலியார்.

கதிராமன் புறப்பட்டுப்போன இந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மலையரின் வளவு தன் களையையும், கலகலப்பையும் இழந்திருந்தது. இயல்பாகவே சற்று விளையாட்டுத்தனம் கொண்ட மணியன், கதிராமனுடைய துணையும் மேற்பார்வையும் இல்லாத காரணத்தினால் அசிரத்தையாக இருக்கத் தலைப்பட்டான். கடைக்குட்டி ராசுவிற்கோ இவ்வளவு நாட்களும் பதஞ்சலியைக் காணாதது சப்பென்றிருந்தது. அவனுடன் சண்டைபிடித்து விளயாடுவதற்கு யாருமேயில்லை. பாலியார் நிலையோ வேறு!

பகலெல்லாம் மௌனமாக நின்று பங்குனிமாத வெய்யிலில் வெந்து, இரவின் தனிமையில் நீர்சிந்தி இரங்கும் காட்டு மரங்களைப் போன்று பாலியாரும் பகல்முழுவதும் மனதுக்குள்ளேயே தன் மகனை எண்ணிப் புழுங்கி, இரவெல்லாம் கண்ணீர் நிறைந்த நினைவுகளுடன் காலத்தைக் கழித்து வந்தாள். சற்று வெளிப்படையாகத் தெரியும் வகையில் அவள் எப்போதாவது சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாற் போதும் எரிந்து விழுவார் மலையர். 'என்னடி விடியாத முகத்தோடை திரியிறாய் மூதேவி!" என்று சினப்பார். கவலைப்படுதற்குக்கூடச் சுதந்திரம் இல்லாதவளாக நெஞ்சுக்குள் பொருமிக் கொள்வாள் அவள்.

வளரும் 

நன்றி : http://www.appaal-tamil.com




Comments